Friday, September 16, 2011

தலை நிமிரும் தமிழ் சினிமா : எங்கேயும் எப்போதும்


நேற்று ஒரு சினிமா நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “தமிழ்நாட்ல நாளையோட சினிமா காலி தோழர் ! இந்த அம்மா திடீர்னு கேளிக்கை வரியை 30 சதவீதம் உயர்த்திடுச்சி.....ஏற்கனவே பெப்சி பிரச்சனை வேற....”

கடந்த இரண்டு நாட்களாக அவரின் வார்த்தைகள் மனதை குடைந்து கொண்டிருந்தது.ஆனால் எங்கேயும் எப்போதும் பார்த்தபின்பு அந்த அச்சம் தேவையற்றது என்பது உண்மையிலும் உண்மை.

எங்கேயும் எப்போதும் ! தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.

ஹீரோக்கள் தான் சினிமாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்ற விதியை உடைத்து, சினிமா என்றும் இயக்குனர்களின் ஊடகம் என்பதை நிருபித்து இருக்கும் தோழர் இயக்குனர் சரவணனுக்கு ஒரு பூங்கொத்து.

கதையின் களத்திற்கு அவருக்கு இன்னொரு பூங்கொத்து தரலாம்.



நாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது விபத்துக்களை பார்க்கிறோம். ஒரு “உச்” அல்லது ஒரு சின்ன வருத்ததோடு அதனை மறந்து விடுகிறோம்.அப்படி ஒரு விபத்து, அதன் பாதிப்பு, அதில் சிக்குண்டவர்களின் நிலை, வாழ்ந்த வாழ்க்கையை, எப்படி இந்த விபத்து புரட்டிப் போடுகிறது என்பது தான் ஒருவரிக்கதை.திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டர்வியுக்கு வருகிறார் அமுதா ( அனன்யா ) எதிர்பாரத விதமாக அவரை வரவேற்க வேண்டிய அவரின் அக்கா வராத சூழலில், நண்பனை வழியனுப்ப வரும் சரவ்விடம் உதவி கேட்க, அவர் அமுதாவுடன் இண்டர்வியூக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும் அழகான பயணம் ஒரு கதை. முன் பின் அறிமுக இல்லாத அமுதா வழி கேட்கும் போது , சலனமின்றி அப்பாவியாக அவரை 15B , 37G பேருந்து, ஷேர் ஆட்டோ என மாறி மாறி ( உற்சாகமான கதை சொல்லும் உத்தி )அழைத்து செல்லும் சுவரஸ்யமான பயணம் தமிழ் திரைக்கதையில் புதுசு.பயணத்தின் முடிவில் அந்த இளைஞன் மீது அமுதாவிற்கு காதல் வருகிறது.

திருச்சியில் ஒரு பட்டறையில் வேலை செய்யும் ஜெய் தூரத்தில் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் உலவும் அஞ்சலியை ரூட் விட, அடாவடியாக அஞ்சலி ஜெய்யை மடக்கி நிகழும் இன்னொரு காதல். அஞ்சலி பல்வேறு பரிசோதனைகளில் ( புதுமையான காட்சிகள் ) ஜெய் தேர்ச்சி பெற அஞ்சலி – ஜெய் காதல் றெக்கை கட்டுகிறது.

திருச்சி வந்த அமுதா, அந்த இளைஞனின் நினைவிலேயே தவிக்க,அவனை சந்திக்கும் பொருட்டு மீண்டும் சென்னைக்கு வருகிறார்.விழுப்புரம் அருகே அரசூரில் வசிக்கும் ஜெய்யின் பெற்றோரை பார்க்க ஜெய்யும் – அஞ்சலியும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வருகின்றனர்.அதே நேரத்தில் சென்னையில் இருந்து நாயகி அனன்யா மற்றொரு தனியார் பேருந்தில் திருச்சி நோக்கி பயணிக்கின்றார்.

சென்னையில் இருந்து வரும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து வரும் அரசு பேருந்திற்கும்
வழியில் ஏற்படும் எதிர்பாராத அந்த நிகழ்வு அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.அதன் பாதிப்பு, அந்த கொடூர நிகழ்வு சொல்லும் நீதி தான் கதை.

மிகவும் வலிமையான திரைக்கதை.

இது மட்டுமின்றி பேருந்து பயணத்தில் இதயத்தை மொபைல் எண்கள் மூலம் பறிமாறிக்கொள்ளும் டீன் ஏஜ் காதல். ஐந்து வருடத்திற்கு பிறகு தன் குழந்தையைப் பார்க்க வரும் அப்பா, அவரின் மழலைப் பேசும் ரிங் டோன். புதுப் பொண்டாட்டியை ஊருக்கு வழியனுப்பி பிரிய மனமின்றி அவருடன் பயணிக்கும் இளம் கணவன் என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சிரத்தை எடுத்து செதுக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.

புதிய களம், புதுமையான விறுவிறு திரைக்கதை, தெளிவான படமாக்கம் என்று முதல் படத்திலேயே நம்பிக்கை ஏற்படுத்துகிறார் இயக்குனர் எம்.சரவணன்.வழக்கமான கிளிஷேக்களை உடைத்து கதை சொல்லும் அழகில் தனித்து நிற்கிறார் சரவணன்.

வாங்க பாஸூ..! உங்களுக்காக தான் காத்திருந்தோம்.

துறுதுறு அனன்யா இதில் பாந்தமான பெண்ணாகவும், அமைதியான கதாபாத்திரங்களில் நடித்த அஞ்சலி துறுதுறுப்பாகவும் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். இயக்குனரின் இந்த கதாபாத்திரத் தேர்வில் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஜெய் நடிப்பில் ஜெய்’யித்து இருக்கிறார்.

வேல்ராஜின் கேமராவுக்கு ஒரு பூங்கொத்து.புதிய கோணங்களில் அசத்துகிறார்.

அரங்கங்கள், வெளிநாட்டு பாடல்கள் இல்லாமல் இயல்பான இடங்களை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கிஷோரின் படத்தொகுப்பும் நம்மை ஆழமாக களத்தில் ஊடுருவ செய்கின்றன.

சத்யாவின் பாடல்கள் இருக்கையில் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. பின்னனி இசையும் காட்சிக்கு காட்சி உயிர் சேர்க்கிறது

விபத்தை தத்ருபமாக பதிவு செய்திருக்கும் தொழில்நுட்பத்திற்கு நாம் பெருமையுடன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, அந்த நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் ஒரு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார். அதற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு பூங்கொத்து தரலாம்.

தெலுங்கின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ் தயாரிப்பில் சித்தார்த் – சுருதி கமல் நடிக்க “ அங்க ஒக்கன தீரடு “ படத்தின் தோல்வி மூலம் கசப்பான அனுபவம் பெற்ற பின் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இந்திய சந்தை குறித்து கொஞ்சம் தயக்கமுடன் தான் இருந்தது.

ஏ.ஆர். முருகதாஸ் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அந்த தயக்கத்தை தவிடு பொடியாக்கிவிட்டார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இனி தென்னிந்திய சினிமாவில் தன்னம்பிக்கையுடன் பாய்ச்சல் காட்டும்.

நேற்று தமிழ் சினிமா அவ்வளவுதான் என்று நெகடிவாக பேசிய நண்பர் எனக்கு நினைவுக்கு வந்தார்.
மேலோட்டமான கருத்து என்றாலும் கேட்ட நிமிடம் முதல் மனதை ஏதோ பிசைந்து கொண்டிருந்த்து.

எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, முடக்கவோ முடியாது !

முடியவே முடியாது !

Wednesday, September 14, 2011

இதயத்தை திருடிய “பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை” புத்தக வெளியீட்டு விழா.


சமான்யனையும் சரித்திர புருஷனாக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. அவர்களின் ஆற்றலால் வேடிக்கை பார்க்க போன இடத்தில் நாயகனாகும் அதிர்ஷ்டம் மிக சாதரணமான மனிதனுக்கு ஏற்படும்.பார்வையாளனாக இருக்கையில் நெருக்கி உட்கார்ந்து கொள்ள இடம் தேடும் ஒருவன் திடீரென மேடையை அலங்கரிக்கும் “முக்கிய பிரமுகராக” மாற்றப்படுவான். அந்த வகையில் சாதாரண வாசகனான என்னை தனது புத்தக வெளியீட்டில் இடம்பெற செய்து அவரது வரலாற்றில் சிறு இடம் கிடைக்க செய்த அசாத்திய அன்புமிக்கவராகி நிற்கிறார் அண்ணன் அஜயன் பாலா.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னைக்கு வந்த புதிது. சினிமா ஆவலில் புத்தகங்களையும். திரையரங்குகளையும், திரைப்பட விழாக்களையும் தேடி அலைந்துகொண்டிருந்த காலம், டான்பாஸ்கோவில் ஒரு குறும்பட விழா. இரண்டு நாள் விழா முடிவில் திரையிடப்பட்டது “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைப்படம். இன்றைய திரைதொழில்நுட்பத்தின் பிதாமகனாக திகழும் பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் தரிசனம் அங்குதான் முதன் முதலாக கிடைத்தது. அந்த தரிசனம் பெற சிலம்பு 2002 என்ற குறும்பட விழாவின் மூலமாக என்னைப் போன்ற ”பொடியன்களுக்கு” வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் அஜயன் பாலா. அதற்கு முன்பாக பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் திரைக்கதை, எனது தாய்மொழியில் புத்தக வடிவில் வெளியாகி சக்கைப் போடு போட காரணமாக இருந்தவரும் அஜயன் பாலா தான். இப்போது பாரதி புத்தகாலயத்தின் புதிய கோணம் சார்பாக மூன்றாம் பதிப்பாக வெளியாகியுள்ளது.

இன்று திரைப்படங்களின் திரைக்கதை வடிவங்கள் எத்தனையோ சந்தைகளில் கிடைக்கிறது, நான் அறிந்த வகையில் தமிழில் திரைக்கதை வடிவம் பெற்று வந்த முதல் புத்தகம் அஜயன் பாலாவின் “ பை சைக்கிள் தீவ்ஸாக” தான் இருக்கும்.

இன்று மாலை பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா மறக்காமல் வந்துவிடுங்கள் என்றார் அண்ணன் அஜயன்.

ஆடுகளம் படத்தில் முரட்டுகண்கள் கொண்டு மிரட்டிய “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது “ ரொமன்ஸ் ராஜா வ.ஐ.ச. அவர்கள் வருகிறார்கள் என்றவுடன், ஏனோ தரை டிக்கெட் ரசிகன் தனது அபிமான நாயகனை தரிசிக்கும் மனோபாவத்துடன் வ.ஐ.ச.ஜெயபாலனை கண்டு, கதைத்து மகிழ மனம் அடித்துகொண்டது.ஏன் எனில் வ.ஐ.ச ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், போராளி மட்டுமல்ல, பத்து நிமிடம் கதைப்பதின் மூலமே உங்களுக்குள் பத்து வருடத்திற்காக சுறுசுறுப்பை பாய்ச்சி அனுப்பும் உற்சாக வல்லுனர்.

ஆடுகளத்தில் அபரிதமான நடிப்பில், ஆச்சர்யத்தக்கவகையில் முதல் முயற்சியிலேயே தேசிய விருது பெற்ற, அவரின் தொகுப்பான “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது” புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பு என்னுள் இன்றும் மாறாமல் இருக்கிறது. இவர் மீசையை பார்க்கும் போது, இவரா நெடுந்தீவில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் றோசி ரீச்சர் (டீச்சர்..?!!), ஜெயமங்களம், இந்திரா ,மீனாட்சி ( அவர் தொகுப்பில் இவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார், இன்னும் குறிப்பிடாத பெயர்கள் இருக்க கூடும், அதை தனியாக ஒருநாள் கேட்கவேண்டும் ) என ஒரே நேரத்தில் நான்கு காதல்கள் செய்தவர் என்று ஆச்சர்யமூட்டியது.

இலங்கையின் கலாச்சார வாழ்வியல், அரசியல் மாற்றம், சூழலை " அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது " மிகவும் சுவரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் வெளிப்படுத்துகிறது. அந்த உணர்வை தொகுப்பைப் படித்தால் மட்டும் அனுபவிக்க முடியும்.

வ.ஐ.ச. மட்டும் தான் புத்தகத்தை வெளியிடபோகிறார் என்று நினைத்து கொண்டு சென்றால், என்னையும் அந்த மேடையில் ஏற்றி பூக்களோடு மணக்கும் நாருக்கும் கிடைக்கும் மோட்ச கதியை தந்துவிட்டார் அஜயன்.

ஒரு நல்லவனோட சேர்ந்தால் பல நல்லவர்கள் பரிச்சயமாவர்கள் என்பது மெய்பிப்பது போல, பாரதி புத்தகாலயம் மற்றும் புதிய கோணம் பதிப்பகத்தின் நாகராஜன், படப்பெட்டி திரை இலக்கிய இதழின் சிவசெந்தில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், இயக்கும் லிங்கம், இயக்குனரும் “பிலிம் காட்டுகிறார்கள் “ தொகுப்பை எழுதியவருமான யோகானந்த் என்று மாபெரும் படைப்பாளிகளோடு என்னையும் நிற்க வைத்தது ஏனோ என்று தெரியவில்லை. ஆனால் அதில் கலந்துகொண்டு வந்தபின் உடனடியாக எழுத்துலகில் ஏதேனும் செய்யவேண்டும் என்று மூளை பரபரக்கிறது. ஒரு வேளை ஒரு அண்ணனாக இந்த தூண்டுதலை செய்யக்கூட அஜயன் என்னை உயர்த்தி இருக்கலாம்.

மூன்றாம் பதிப்புக் காணும் “பை சைக்கிள் தீவ்ஸ்ஸை” புதிய கோணம் பதிப்பகத்தின் முதல் பதிப்பு என்ற அறிவிப்புடன் வெளியிடுவதின் மூலம் இந்த புத்தகத்தின் பெருமையை உணரமுடியும்.. இதுவே இந்த நூலுக்கு கிடைத்த முதல் மரியாதை.

அஜயனின் திரைக்கதை வடிவமே ஒரு புதுமையாக இருக்கிறது. வழக்கமாக திரைக்கதை நூல் என்றால் அதில் ஷாட் பிரிப்பு, மற்றும் குறிப்புகள் என குறுக்கிட்டு படிக்கும் சுவரஸ்யத்தை கொஞ்சம் தொந்தரவு செய்யும். ஆனால் அஜயன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் அந்த குறுக்கீடு இல்லாமல் விறுவிறுப்பாக படிக்கும் வகையில் திரைக்கதையை படிவமெடுத்துள்ளார். இதுவே இந்த புத்தகத்திற்கு கிடைத்திருக்கும் அதீத வரவேற்புக்கு காரணமாக இருக்க கூடும்.

திரைக்கதை வடிவம் என்று அப்படியே படிவிறக்கம் செய்யாமல், தமிழ் வாசகர்களின் சுவையறிந்து, அவர்களின் உளவியலுக்கு ஏற்ப, அதே நேரம் மூல படைப்பின் அர்த்தம் மாறாமல் வெளிவந்துள்ள தரமான நூல் “ பை சைக்கிள் தீவ்ஸ்”. அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது அந்த படத்தை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது.

திரைக்கல்வி குறித்த ஆர்வம் பெருகிவரும் சூழலில், திரைப்பட்டறைகளுக்கு ஒரு சிறந்த பாட நூலாக திகழும் தகுதி “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதை புத்தகத்திற்கு இருப்பதாகவே கருதுகிறேன்.
இனி வரும் சந்ததியினர் “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதைப் புத்தகத்தை படிக்காமல் அவர்களின் சினிமா குறித்த புரிதல்கள் எளிமையாகாது.பல வருடங்கள் செலவு செய்து கற்றுக்கொள்ளும் சிரமத்தை குறைத்து எளிதாக திரைக்கதை குறித்த அறிவை வழங்கும் சிறந்த வழிகாட்டியாகவும் “ பை சைக்கிள் தீவ்ஸ்” திரைக்கதை புத்தகத்தை பெருமையுடன் குறிப்பிடலாம்.

கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம் :- 044-24332424 / 24332924 / 24339024
இணையம் : www.thamizhbook.com

Wednesday, September 7, 2011

பிள்ளையார் சதுர்த்தி ! - கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் !


விண் + நாயகன் = வினாயகன். அதாவது விண்ணுலகம் என்று போற்றப்படுகின்ற இந்த பிரபஞ்சத்திற்கே நாயகன். விண்ணுலகம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இந்த பஞ்சபூதங்களுக்கு நாயகனாக விளங்கும் இயற்கையைப் போற்றுவோம் !

கணம் ( பஞ்ச பூத கணங்கள் ) + அதிபதி = கணபதி !

ஐந்து ( பஞ்ச பூதங்கள் ஐந்து ) + கரத்தன் = ஐந்துகரத்தன்.

கணம் ( பஞ்சபூதங்கள் ) + ஆகாஷ் = கணேஷ்

இவையெல்லாம் மிஸ்டர் பிள்ளையாருக்கு நாம் கொடுத்துள்ள வேறு பெயர்கள். பிள்ளையார் என்பது ஒரு செல்லப்பெயர்.

நமது வாழ்வியல் இயற்கையோடு இணைந்தது. இயற்கைய போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற உண்மை தான் ஒவ்வொரு கடவுளின் பின்னும் ஒளிந்துள்ளது.

கடவுளை நோக்கும்போது கருத்தினை உற்றுப்பார் ! அங்கு கடவுளின் உருவம் மறைந்து கருத்தே நிலைத்து நிற்கும் என்பார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி.

ஆனால் இதனையெல்லாம் எடுத்து சொல்ல அறிவியல்புலம் கொண்ட ஆன்மிக பெரியோர்கள் இல்லாததால் இதுபோன்ற விழாக்கள் வெறும் சடங்காக மாறிவிட்டது வருத்ததுக்குரியது.

அதுமட்டுமின்றி கோலாகலமாக எல்லோரும் இணைந்து கொண்டாடவேண்டிய இதுபோன்ற விழாக்கள், இத்தகைய அடையாளம் திணிக்கப்பட்டதின் விளைவாக ஒரு குறிப்பிட்ட மத சடங்காக மாறிவிட்டது.

இன்று அதிகாலை எனது நகர்வலத்தில் நான் கண்ட காட்சி.தெருக்களில் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகள் வைத்து அதற்கு மின்விளக்கு அலங்காரங்களால் பட்டையைக்கிளப்பி கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே மின் தட்டுப்பாட்டில் திணறும் தமிழகத்தி இப்படி கடவுளின் பெயரால் மின்விரயம் தேவையா ?

பாதுகாப்பிற்கு இயந்திரதுப்பாக்கியுடன் காவலர்கள். பாவம் இந்த காவலர்கள், இந்தப் பணிக்கு வரும்போது இப்படி ஒரு சிலைக்கு காவல் காக்க வேண்டிய சூழல் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.இதிலும் சில வயதான காவலர்கள் கொசுக்கடியில் திணறிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருந்தது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் கடலில் கரைக்கப்படும் பிள்ளையார் சிலைகள், பெங்களூரில் அங்குள்ள அழகிய ஏரிகளில் தான் நிகழும்.குறிப்பாக அழகிற்கு பெயர் போன அல்சூர் ஏரி இப்படி வீசப்பட்ட பிள்ளையார் சிலைகளுக்கு பிறகு சகதியாக காட்சி அளிக்கும்.

விழாக்கள் மக்களை ஒன்றுபடுத்த, மகிழ்விக்க பிறந்தவை.

ஆனால் இன்று ?

மின்விரயம்.

மாசுபடுதல்

அச்சம்.

போக்குவரத்து இடைஞ்சல்.

என்று பலவிதங்களில் இடையூறாக மாறிவருகிறது. இதனை காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.

கடவுளை நோக்கும் போது, கருத்தினை உற்றுப்பார். அங்கு கடவுள் மறைந்து கருத்துக்களே நிலைத்து நிற்கும். இன்னொரு முறை சொல்லிக்கொள்வோம்.

இந்த உலகை அறிவால் மட்டுமே நிர்மாணிப்போம் !

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...