Sunday, December 13, 2015

குப்பையும் குன்றிய மனநிலையும்



சீரியஸுக்கும் காமெடிக்கும் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது.
இங்கிருந்து தாண்டினால் சீரியஸ் காமெடியாகிவிடும்.காமெடி சீரியஸாகிவிடும்.  பீப் பாடல் என்ற வஸ்து நல்லவேளை சிம்புவோடு போயிற்று. சிம்புவின் எல்லா செயல்களுக்கும் சொம்பு தூக்கும் அவரின் அப்பாவும் இதில் இணைந்து தந்தையும் மகனும் மாறி மாறி பாடியிருந்தால் என்ன ஆகியிருக்கும் . யோசித்துப் பாருங்கள் !
ஐந்து இந்திரியங்களின் பணி அதனால் சில இன்பங்களை  துய்த்து முழுமை பெறுவதே.
நல்ல செயல்களை பார்க்க கண்கள்.
நல்லதை நுகர நாசி
நல்லதை பேச வாய்
நல்லதை சுவைக்க நாக்கு
இப்படியிருக்க …எப்பொழுதும் மனித மனதை சுழன்றடிக்கும்  ஒன்று.
செக்ஸ் ! செக்ஸ் ! செக்ஸ் !
எங்கும் எதிலும் செக்ஸ்.
அதிலிருந்து வந்ததின் காரணமோ என்னவோ அதையே பற்றி தொங்கிகொண்டிருக்கிறது இந்த சமூகம். மிருகங்கள் கூட உணர்வுக்கு உட்படும் போது மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சதா நேரமும் இதுதான் சிந்தனையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
முப்பத்தியிரண்டு வயது பையனும். இருபத்தியொரு வயது பையனும் இணைந்து ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பீப் சாங்க்  (Beep Song )  என்று அதற்கு பெயரிட்டுள்ளார்கள். பீப் ( Beep ) என்ற ஓசை வருவதால் அதற்கு பீப் சாங் என்ற பெயரா அல்லது மேனாடுகளில் நிகழும் பீப் ஷோ ( Peep Show ) எனப்படும் பாலியல் நேரிடைக்காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட ( Peep ) என்ற வார்த்தையா என்று விளங்கவில்லை.
 வெள்ளம் மழை சோகம் என வதங்கிக்கொண்டிருந்த கூட்டத்தின்  சிந்தனையை திசைதிருப்பும்  அவலாக அமைந்திருக்கிறது இந்த பாட்டு.
அடுத்த முதல்வர் சகாயம் என்று கூக்குரலிட்ட இளைய கூட்டத்தின் ஒரு பிரிவினர் கூட இரண்டாக பிரிந்து ஒன்று இந்த பாடலுக்கு ஒத்திசையும் இன்னொன்று எதிர்ப்பு தாரணியும் பாடிக்கொண்டிருக்கிறது.
பாலுணர்வை மிக  உயர்வாக சொன்ன சமயம் நம்முடையது. இதில் பிறந்த நாம் தான் அந்த போற்றுதலுக்குரிய  பாலியலை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தனிமனித ஒழுங்கீனம். சமுதாயத்தை  புற்றாக பீடித்துள்ளது.
தனிமனித அழுத்தத்தின் வெளிப்பாடு இன்றுதான் வெளிப்படுகிறதா ?
அப்பொழுது நான் ஒரு பள்ளி மாணவன். தூர்தர்ஷன் மட்டும்தான் தொலைகாட்சி. எங்கள் வீட்டின் அருகே மணியக்கார தாத்தா வீட்டில் ஒரு டிவி இருந்தது. பள்ளியில் இருந்து திரும்பியவுடன் மாலை வேலையில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது பொழுதுபோக்கு. சூடேற்றும் கிரிக்கெட் மேட்ச் இடையே ஒரு விளம்பரம் ஒளிபரப்பப் படும்.
அது ஷேவிங் லோஷன் விளம்பரம். கடலில் ஒரு பாய்மரம் விடும் அழகன். ஒரு குறிப்பிட்ட ஷேவிங் லோஷனை பூசி ஷேவ் செய்துக்கொள்கிறான். அடுத்த வினாடி வட்டுடையில் ஒரு அழகான இளம்பெண் அவனுடன் ஜல்லியடிக்கிறாள். ஒரு சூழலில் கிரிகெட்டை விட அந்த விளம்பரம் எப்பொழுது போடுவார்கள் என்ற ஆர்வம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அப்பொழுது தோணவில்லை ஷேவிங் கிரிமிற்கும் பெண்ணிற்கும் என்ன சம்மந்தம் என்று.
இப்படி விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள் என பாலுணர்வை திணித்து ஒரு கிளுகிளுப்பாக்கி அதன் மூலம் லாபம் பார்க்கும் போக்கு தொன்று தொட்டே வருகின்றது.

பெண்ணின் பெருமைகளை ஆயிரம்தான் பேசினாலும் இன்னும் அவர்களை போக பொருளாகவே பார்க்கும் குரூர போக்கில் மாற்றமில்லை.

இவையெல்லாம் இணைந்து ஒரு சீர்பிடித்த சமூக எண்ணத்தை ஆழமாக ஊன்றிவிட்டன.
எண்ணத்திற்கும் உடலுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான உடலே ஆரோக்கியமான மனம். ஆரோக்கியமான உடல் என்பது இரத்த ஓட்டம்,வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீர்பட்ட ஜீவகாந்தம் எனும் ஆற்றல் எப்போழுது உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலை.
உடலில் ஜீவகாந்தம் நிரம்பியிருந்தால் மனதில் ஆரோக்கியமான உற்சாகம் எப்பொழுதும் நிரம்பியிருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் உருவாக்கிகொள்வதல்ல. உடலை மிதமாக்கும் காற்றை போன்று மென்மையாக்கும் யோகா போன்ற அப்பியாசங்கள்.
தம் பிள்ளையை டோனி போன்று கிரிக்கெட்டர் ஆக்கவேண்டும் அல்லது சானியா மிர்சா போன்று டென்னிஸ் வீரராக மாற்றவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களில் எத்தனை பெற்றோர்கள் இயற்கையான முறையில் தம் பிள்ளைகள் ஆரோக்கியம் பெறவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சூப்பர் சிங்கர்களுக்கும், மானாட மயிலாடவிற்கு தயார் செய்யும் ஆர்வம் உண்மையான ஆரோக்கியமான உடல்வாகிற்கு தயார் செய்ய விரும்புவதில்லை.
உடல்தான் இப்படி என்றால் மனம் ஒரே குப்பை. இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக சேர்ந்த குப்பையெல்லாம் தங்கள் மனதில் சுமந்து பின்னர் தங்கள் பிள்ளைகள் மனதிற்கு கடத்துகிறார்கள்.
திருமணம் பொருத்தம் பார்ப்பதில் இருந்து சாந்தி முகூர்த்தம் பிள்ளைப் பேறு என எல்லாவற்றிற்கு அறிவியல் பூர்வமாக நேரம் வகுத்து கொடுத்தது சித்தர் பாரம்பர்யம். ஏன் ? வாழையடி வாழையாய் சமூகம் ஒரு ஆரோக்கியமான கட்டுக்குள் அமையவேண்டும் என்பதால்தான். ஆனால் அதனை மூட சடங்காக்கிவிட்டு வீடு, கார், சம்பளம் இது பொருந்தினால் போதும் என்ற மனநிலையில் முதல் பிழை.
நேரம் காலம் பார்க்காமல் சல்லாபித்து அதனால் உருவாகும் கருவும் கூட களங்கமான மனோபாவமுடன் அமையும் என்பதை அறிந்துகொள்ள எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆண் பெண் இணையும் முன்பு தங்களுக்குள் உள்ள அனைத்து கெட்ட பதிவுகளையும் அழித்து பின்னர் இணையும் போது  உருவாகும் கரு  வளமான எதிர்காலத்திற்கு உரமாகும்.
கல்விமுறை இன்னொரு சீர்கேடு. வாழ்வியலை தவிர மலிவான வியாபார யுக்திமட்டும்தான் இன்றைய கல்வியின் வடிவம்.
இயல்பாக சென்று கொண்டிருந்த திரையுலகில் டி.ராஜேந்திரின் பிரவேசம் கொஞ்சம் நகைச்சுவையாகதான் தெரிகிறது. நான் நாயகிகளை கட்டி பிடிக்க மாட்டேன். ஆபசமாக படமெடுக்கமாட்டேன் என்று ஊருக்கு  உபதேசம் செய்து ஒரு குப்பையை பெற்றிருக்கிறார். நிச்சயம் சிம்புவிடம் வெளிப்படுவது டி.ராஜேந்தர் என்ற உத்தம கலைஞனின் பதிவுகள்தான்.
என் பாத்ரூமில் நிகழ்ந்தது என்று சிம்பு என்ன சொன்னாலும் பாத்ரூமிற்கு கதவு போடாமல் போனது அவரின் தவறல்லவா. பாத்ரூம் என்பது உடலை சுத்திகரித்துகொள்ளும் இடம். அங்கு அவர் மீண்டும் அழுக்கையல்லவா பூசிக்கொண்டிருந்திருக்கிறார்.

எதிர்பார்ப்புகளில் தோல்விகள் சகஜம்.

உடனே அதிலிருந்து மீளத்தெரிந்திருக்கவேண்டும். காதல் என்பது வெறும் உடல்கவர்ச்சி என்ற சித்தாந்தம் என்றும் நிலைப்பெற்றதில்லை. சிம்புவும் – அனிருத்தும் பிஞ்சியில் பழுத்த பழம் என்பதை நான் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

பள்ளிக்கு சென்று ஒழுக்க நெறி கற்கவேண்டிய வயதில் குழந்தை நட்சத்திரமாக ஆடவிட்டு அழகு பார்த்த டி.ரஜேந்தரின் வளர்ப்பு பிழையே சிம்பு. 

இருபத்தியொரு வயதில் தான் ஏ.ஆர்.ரகுமானும்  அறிமுகமானார். முதல் படத்திலேயே தேசப்பற்றும், அன்பையும் பறிமாறியது அவரின் இசை. 

கொலைவெறி எனும் குப்பையுடன் அறிமுகமான அனிருத் மேலும் மேலும் குப்பையை கிளறிக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் மீது வழக்கு போடலாம். நீதிமன்றத்திற்கு அலைகழிக்கலாம். அதனால் இவர்களின் மன அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர மாற்றம் இராது.

சிம்புவுக்கு அனிருத்திற்கும் தேவை உடனடி உளவியல் சிகிச்சை. இவர்கள் போகவேண்டியது நீதிமன்றம் அல்ல. மனநல மருத்துவமனை.

இது சிம்புவுக்கும் அனிருத்திற்கும் மட்டுமல்ல. முறையற்ற நிலையில் எந்த ஒரு எழுச்சிநிலை ஏற்பட்டாலும் அகத்தாய்ந்து நீக்கும் மனோநிலை எல்லோருக்கும் வரவேண்டும். தேவைப்பட்டால் மன நல ஆலோசகரை அணுகுவது கூட தவறில்லை.

பரஞ்சோதி மகான் எனும் ஒரு ஞானி. வில்லிபுத்தூரில் பிறந்து பர்மாவில் வாழ்ந்தவர். பிறப்பால் இசுலாமியர்.  ஆன்மிக ஈடுபாட்டில் உயர்ந்து குண்டலினி யோகத்தை எளிமைப்படுத்தி  உலக சமாதான ஆலயம் எனும் அமைப்பை தோற்றுவித்து எல்லோருக்கும் போதித்து வந்தார்.  வேதாத்திரி மகரிஷியின் குரு இந்த ஞானவள்ளலதான். மிக சாமனிய மனிதர்களுக்கு எல்லாம் உயரிய உபதேசங்களை எந்த எதிர்பார்ப்புமின்றி கற்றுத் தந்தார். ஒருநாள் மிக சாமனியன் ஒருவன் தீட்சை பெரும் போது சுவாமி  தவநிலையில் நீங்கள் சொல்லும்  உச்சநிலை எப்படியிருக்கும் என்று கேட்டார். அந்த எளியவனுக்கு எளியமுறையில் விளக்க முயன்ற பரஞ்சோதி மகான் “ நீ உன் மனைவியுடன் சல்லாபிக்கும் போது உச்சநிலையை அடையும் போது உனக்குள்  ஒரு உணர்வு வெளிப்படும் அல்லவா அதுவே தவத்தின் உச்சநிலை “
”அப்படின்னா ! ரெண்டும் ஒண்ணா சாமி “ என்று சாமனியன் வினவ
“ஆமாம்பா ! சல்லாபத்தில்  உன்னிடம் ஒரு சிலவினாடி மட்டுமே நிற்கும்…தவத்தில் நீ விரும்பும் வரை அந்த உணர்வை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம் அதனால் தான் அது சிற்றின்பம்….இதற்கு பேரு பேரின்பம் “ என்றார்.
செக்ஸை தெய்வீகமாக பார்த்த மண்ணில் அதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்க செய்கிறது இத்தகைய செயல்கள்.

உடனடி தேவை தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் மனநிலை சிகிச்சை.




பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...