Friday, February 19, 2016

மொழி வழி !



மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்டுகாலமாக உயிர்துடிப்புடன் இருக்கிறது. ஹிந்தி மொழி திணிப்பை பற்றி சொல்லத்தான் கேட்டிருக்கிறேன். அப்பொழுது பிறக்கவில்லை என்பதால் அதை பற்றி முழுமையாக கருத்து சொல்லமுடியாது. கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய் ! என்று சொல்வார்கள்.     
ஹிந்தி மொழி திணிப்பு பற்றி மூத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வதும், நூல்களை புரட்டினால் அதில் சொல்லப்பட்டு இருப்பதும் மாறுபட்டு நிற்கிறது. வரலாறு கொஞ்சம் திரிபுகள் கொண்டதுதான். தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பை காண்பித்த அதே வேளையில் ஒவ்வொருவரும் கட்டாயம் ஹிந்தி படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். 

இந்தி மட்டுமல்ல பிறமொழி கற்கும் ஆர்வம் நம் மக்களிடையே இல்லாதது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் கூடுதல் மொழியாக பிரெஞ்சு, இந்தி, ஜெர்மன், ஜப்பனீஸ் போன்றவை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராம குழந்தைகளுக்கு ஆங்கிலமே தகினத்தோம் தான்.

ஒருவனுக்கு எத்தனை மொழிகள் தெரியுமோ அவன் அத்தனை மனிதனுக்கு சமம் என்றார் பாரதிதாசன். தமிழை உயிராக பாடிய பாட்டன் பாரதிகூட வங்கமொழி கற்று பல பாடல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளான்.
இந்தி எதிர்ப்பு என்ற ஒரு நிகழ்வால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ தமிழனின் தேசிய அளவிலான வளர்ச்சி மிகவும் குறைந்துவிட்டது.மத்திய அரசுப்பணிகளின் தமிழர்களின் பங்கேற்பு அருகி வருகிறது.

நமது மொழியின் சிறப்புகளை பிற மொழியில் பரப்ப வேண்டுமெனில் அம்மொழி தெரிந்திருக்கவேண்டும். ஒன்றை செயலிழக்க செய்ய வேண்டுமெனில் அதனுள் ஊடுருவ வேண்டும். ஊடுருவி நின்று பின்னர் நம் எதிர்ப்பு அலையை காண்பிக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு அங்கமாகதான் தமிழ்நாடு இருக்கிறது. முடிந்தவரை பிற மாநில மொழிகளை நாம் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்வது அவசியம்.நாம் சுலபமாக நம் மொழியினை அவர்களுக்கு  போதிக்க, சிறப்புகளை சொல்ல முடியும். நான் பெங்களூரில் வசித்த சமயம். அங்கே திருவள்ளுவர் சிலையையும் இங்கே சர்வக்ஞார் சிலையையும் நிறுவ இருமாநில அரசியல்வாதிகளும் செயல்பட்டனர். இதன் பின்புலத்தில் பெரும் அரசியல் இருந்தது. அப்பொழுது கர்னாடாகவில் மூத்த செய்தியாளராக இருந்த ராஜாராவ் என்பவர் என்னை அழைத்தார். மூத்த என்றால் மிகவும் மூத்தவர். இதில் என்ன காமெடி என்றால்  ராஜா ராவ் தீவிர கன்னட மொழி வெறியர். பல மொழி போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் என்னிடம் தமிழில்தான் பேசுவார். அவர் தமிழர்களிடம் தமிழில்தான் பேசுவார்.அப்பொழுதுதான் நான் கன்னடம் பேச கற்றுக்கொண்டிருந்தேன். நான் ராஜாராவிடம் கன்னடததில் தான் பேசுவேன். என் மழலை கன்னடத்தை மிகவும் ரசிப்பார். அவ்வப்பொழுது திருக்குறள் பற்றி கேட்பார். நான் அவருக்கு முடிந்தவரை கன்னடத்தில்  விளக்கம் சொல்வேன். திருக்குறள் கன்னடத்தில் இருக்கிறது. ஆங்கிலத்திலும் படிக்க முடியும். இருந்தாலும் அந்த ஊர்க்காரன் சொல்ல கேட்கணும் அதில் ஒரு உண்மை இருக்கும் என்பார்.
      இன்று நம்ம ஊர் ஊடகத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. நல்ல திறமையான ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்தி மொழி பிரச்சனையாக இருப்பதால் சென்னையை தாண்டி போகமுடியவில்லை. திரைப்பட துறையில் ஒளிப்பதிவு, எடிட்டிங் என பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.  ஊடகப் பணி மட்டுமல்ல இன்னும் பல பணிகளில் நம் மக்களால் ஊடுருவ முடியவில்லை. ஆனால் ஹிந்தி படித்த  கேரள, கன்னட, தெலுங்கு பேசும் மக்கள் இத்தகைய பணிகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளனர்.

யார் எல்லாம் இந்தி தமிழை அழிக்கும் என்று போராடினார்களோ அவர்கள் எல்லோரும் தங்கள் வாரிசுகளை ஹிந்தியில் படிக்க வைத்துவிட்டார்கள். தயாநிதி மாறனுக்கு ஏன் டில்லியில் இந்த பிரதிநிதித்துவம் என்று கருணாநிதியிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான் “ …..ஏனென்றால் தயாநிதிக்கு ஹிந்தி தெரியும் ! “

ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்கள் இந்தியா முழுவதும் ஊடுருவும் வாய்ப்பை முற்றிலும் தடுத்துவிட்டனர். திணிப்பை தடுப்பது வேறு மொழியை கற்றுக்கொள்வது வேறு.  இச்செயல் முற்றிலும் நம் மக்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பை குறைத்துவிட்டது. அங்கொன்று இங்கொன்றுமாக இருக்கும் சிலர் கூட  பிராமணர்கள். அவர்களின் வலிமை சமஸ்கிருதம். எனவே சுலபமாக அவர்களால் இப்பணிகளில் சேரமுடிகிறது.
நாட்டில் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்கவர்கள் அரசு பணியில் இருப்பவர்கள்தான். மத்திய அரசுப் பணியில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு  கால் ஊன்றி நிற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் நம் மண்ணிற்கு தொண்டாற்ற முடியும். காமராஜர் காலத்தில் மத்திய அரசியல் தமிழன் கையில் இருந்தது. சுயநலம் இல்லாத சூழலில் எல்லா நன்மைகளையும் செய்ய முடிந்தது. இன்று மத்திய அரசியல் தமிழன் கையில் வந்தாலும் சுயநலமிகு அரசியலால் தமிழ்நாட்டிற்கு பலன் ஏதுமில்லை. தமிழ்நாட்டை முன்னேற்ற இன்னொரு வழி தமிழர்கள் மத்திய ஆட்சிப்பணிகளில் அதிகரிக்கவேண்டும். அரசு பணிகுறித்து உயரிய விழிப்புணர்வும் ஆர்வமும் மக்களிடையே பரவ வேண்டும். அரைகாசு உத்யோகம் என்றாலும் அரசு உத்யோகம் என்பார்கள். அரைகாசு இல்ல அரசாட்சியின் இதய துடிப்பே அரசு உத்தியோகம்தான்.


Wednesday, February 17, 2016

மனம் நிறைய மகிழ்ச்சி !



என்னை யார் சந்தித்தாலும் உடனே வெளிப்படுத்தும் விருப்பம் “ எனக்கும் யோகா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, ஆனா டைம் இல்லை “. நான் பெரும்பாலும் இத்தகைய மனிதர்களுக்கு புன்னகையதான் பரிசளிப்பேன். அடுத்து எதற்கு யோகா கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் சரியான பதில் இருக்காது. அவர்கள் யோகா கற்றுக்கொள்ள விரும்பும் காரணம்
ஒன்று அதிக வேலை பளு அல்லது மன அழுத்தம் என்றிருக்கும்.
நான் செய்கின்ற வேலையில் திருப்தி இல்லை என்பதாக இருக்கும்.
அல்லது யோகா கற்றுக்கொண்டால் செல்வமும் , வசதியும் வந்து குவியும் என்ற நம்பிக்கை.
மூன்றுமே மனம் சம்மந்தமான பிரச்சனைதான். மனதிற்கும் உடலுக்கும் தொடர்பிருக்கிறது. நீங்கள் உடலை உற்சாகப்படுத்த செய்யும் பயிற்சி மனதை உற்சாகமூட்டும். அதற்கு யோகா உதவுகிறது. ஆனால் எனக்கு நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே யோகா கற்றுக்கொள்ள விரும்புவர்களை என்ன செய்ய முடியும்.
உண்மை இதுதான் ! யோகம் என்று தனியே எதுவுமில்லை. அந்த காலத்தில் வாழ்வில் உயரிய நிலையான ஞானமார்க்கத்தை தேடி அலைந்த யோகிகள் யோகம் மட்டுமே கதியென கிடந்தார்கள். ஆனால் மன்னர்களும், வணிகர்களும், இயல்பான குடிமக்களும் தங்கள் வேலையை மட்டுமே செய்துகொண்டே இருந்தனர். ஏனெனில் நமக்கு பணிக்கபட்ட பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பதும் சிறந்த யோகமே !

ஒரு அழகான கதை சொல்வதுண்டு.

சிவனை வேண்டி ஒரு சிவனடியாரும் அதே நேரமும் மீன்காரனும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். சிவனடியார் சிவாய நமஹ ! எனும் போதெல்லாம் புத்தியை எங்கோ வைத்துக்கொள்வார். மீன்காரன் மீனை வெட்டும் போதெல்லாம் மிகவும் லயித்து சிவாய நமஹ என்பான். இறுதியில் மீன்காரனுக்கு சிவனின் கிருபை கிடைத்தது.

தமக்கு விதிக்கப்பட்ட, தாம் செய்கின்ற செயலை யாரெல்லாம் விருப்பமுடன் உயிர்கலப்பு பெற்று செய்கின்றனரோ அவர்கள் எல்லாம் பொருள்துறையிலும், தொழில்துறையிலும், அருள்துறையிலும் உயர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

யோகா என்பது இப்பொழுது ஒரு வியாபாரபொருளாகி விளம்பரபடுத்தப்பட்டு வருவதால், இதன் மூலம் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்றால் நிச்சயம் நிகழும்.

உண்மையில் மற்றவர்களின் யோகா விருப்பம், திடீரென ஏற்படும் பணிச்சுமையும் மன அழுத்தமும்தான். அதற்கு காரணம் நமது மன அலைச்சூழலில் ஏற்படும் மாற்றம். அதாவது பீட்டா நிலைக்கு மனம் தள்ளப்படுவது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் மன அலைச்சூழல் 13 CPS க்கு மேல் போகும் போது இந்த பதட்டம், விரக்தி, பயம், வருத்தம், கவலை, பொறாமை, எல்லாம் வரும். நீங்கள் மன அலைச்சூழலை 8 க்கு கீழே அதாவது ஆல்பா நிலைக்கு கொண்டுவந்தால் போது போயே போய்விடும். அதற்கு மிக சுலபமான வழி யோகம். யோகம் செய்ய நேரம் இல்லை என்பவர்களுக்கு சுலபமான சில பயிற்சிகள்

பயிற்சி : 1

உங்களுக்கு பிடித்தமான பாடலை ஒரு பத்து நிமிடம் கேளுங்கள். அப்பொழுது வாழ்வில் நிகழ்ந்த மகிழ்ச்சியான சம்பவங்களை அசைப்போடுங்கள். பாடலை கேளுங்கள் என்பது எல்லோரும் சொல்வதுதானே இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? அவ்வாறு கேட்கும் போது உங்கள் உடலோடு அதன் அதிர்வுகளை கலந்து உணருங்கள். தடாலடியான இசையாக இல்லாமல் கொஞ்சம் மென்மையான இசையாக இருந்தால் சிறப்பு.

பயிற்சி : 2

முடிந்தவரை நீலவானத்தை தினம் ஒரு பத்து நிமிடமாவது பார்க்க பழகுங்கள். வானிற்கு அதீத ஆற்றல் உண்டு, நாம் வானத்தை உற்றுப்பார்க்கும் போது நமக்கும் வானத்திற்குமிடையே ஒரு இணைப்பு ஏற்படும். நம் உடலில் உள்ள அழுத்தங்கள் கரைந்து கரைந்து உடலும் மனமும் மென்மையாய மாறும். விண்ணின் காந்த ஆற்றல் அப்படி.

பயிற்சி : 3

எதுவும் இல்லையெனில் கண்களை மூடி மூச்சையே இயல்பாக எந்தவித அழுத்தமும் தராமல் கவனியுங்கள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து உடலில் ஒவ்வொரு அங்கமாக நினைவுக்கு கொண்டு வாருங்கள். அவ்வாறு செய்யும் போது மூச்சையும் சீராக இழுத்தபடி நினைவில் கொண்டபடி செய்யுங்கள்.

இது எதுவுமே  ஒர்க் அவுட் ஆகவில்லையா பைக்கை எடுத்துகொண்டோ அல்லது ஒரு பத்து நிமிட நடை பழகுங்கள்.  நாம் அலுவலகம் என்ற பெயரில் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அழுந்திகிடப்பதும் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாகிறது. எதை செய்தாலும் விருப்பமுடன் செய்யும்போது மன அலைச்சூழல் குறையும். ஈர்ப்பு சக்தி மேம்படும். திறன் அதிகமாக வெளிப்படும். அப்புறம் என்ன உயர்வும் பாராட்டுக்களும்தான். உயர்வு என்றால் பொருளாதாரத்தையும் சேர்த்துதான்.


.

Sunday, February 14, 2016

மக்கள் நல கூட்டணி ?

மக்கள் நல கூட்டணி உருவான போது அதைப்பற்றிய ஒரு கருத்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை திமுகவின் பக்கம் போகாமல் திசைதிருப்ப உருவாக்கப்பட்ட அணிதான் மக்கள் நலக் கூட்டணி என்பதுதான் அது.
அதற்கு வைகோ ஒரு மறுப்பு தெரிவித்தார். அதிமுகவும் திமுகவும் தங்கள் பொது எதிரி என்றார். சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அதிமுக என்பது தலித்துக்கள் வாக்கு வங்கி நிறைந்த கட்சி. மக்கள் நலக்கூட்டணியில் தானிருப்பதால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் எனவே அதிமுகவுக்கு தான் பாதிப்பு என்றார். கம்புயூனிஸ்டுகள் கொஞ்சம் மழுப்பலாகவே பதிலளித்தார்கள். தங்கள் அணி வலிமையானது என்று செல்பி எடுத்து    நல்கினாலும்,வலுசேர்க்க கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் விஜயகாந்த வந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பம் இருப்பது தெரிகிறது.
அரசியல் அரிச்சுவடி பழகாத ஒருவனுக்கு கூட தெளிவாக தெரியும் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் வலிமையான ஒரு அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பது. அப்படி இருக்க மக்கள் நலக்கூட்டணியால அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியுமே தவிர அதனால் புதிய அலையெல்லாம் உருவாகாது. இதனை வலிமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான வைகோவின் பேட்டி அமைகிறது.
எதற்குமே ஒரு மையபுள்ளி ( Centre Point )  அவசியம். மக்கள் நல கூட்டணின் மையப்புள்ளியாக அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றான ஒரு அரசியல் களம் முன்வைக்கப்பட்டது. தற்போது வைகோ பேட்டியில் அதிமுக – திமுக அரசியல் ரீதியாக போட்டியிட்டு முட்டி மோதிக்கொள்ளுங்கள் ஆனால் திராவிட அரசியலை கைவிட்டுவிடாதீர்கள் என்று கிளைதாவி இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பதில் இருந்து இறங்கி, யார் ஆண்டால் எனக்கென்ன இங்கு தேவை திராவிட அரசியல் என்பதாகும். தமிழ் தேசியம் பேசி வரும் சீமானுக்கு எதிரான பதிலாக அவர் சீமானை ஒரு வலிமையான தமிழ் தேசியவாதியாக அடையாளப்படுத்தியிருக்கிறார். இந்த வகையில் வைகோவிற்கு சீமான் நன்றி சொல்லவேண்டும். இதுவும் ஒருவகையில் திசை திருப்பல்தான். சீமானுக்கு நன்றாக தெரியும் தன்னால் தனித்து நின்று ஆட்சியைப்பிடிக்க முடியாது என்பது. மேலும் அவர் உடனடியாக அதற்கு அவசரப்படுவதாகவும் தெரியவில்லை. துணிந்து 234 தொகுதிகளிலும் தன் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். அவரின் வாக்குறுதிகள் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளன. இந்த தேர்தலில் தனது தனிப்பட்ட அரசியல் வலிமையை சோதிக்க பயன்படுத்திகொள்வார். இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படபோகும் ஒரு வெற்றிடத்தை நோக்கி இருக்கிறது அவர் பயணம்.மேலும் வைகோவின் பேட்டி சீமானுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துவிட்டது.
அதிமுக திமுக இரண்டிற்கும் இடையேயான அரசியல் சூடு பிடிக்கதொடங்கிய நிலையில் அதன் எதிர்ப்பு வாக்குகள் மக்கள் நல கூட்டணி, பாமக,நாம் தமிழர் என திசை திரும்பி நீர்மூலமாகிவிடும். பாமக் கொஞ்சம் நாள் காத்திருந்து பார்த்து தன் இலக்கை 2021 ஆக மாற்றிக்கொள்ளகூடும். திருமாவளவனுக்கு உட்சபட்ச எதிர்ப்பார்ப்பு மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தான் அறிவிக்கபட்டால் போதும் என்பதே. இத்தனை கால அரசியல் களத்தில் இதுவரை ஒரு தலித் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதில்லை. அவ்வாறு முன்னிறுத்தினால் பாமகவிற்கு எதிரான வெற்றியாகவும், அவ்வாறு முன்னிறுத்தப்படுதலே தலித்திற்கான வெற்றியாகவும் அவர் கருத கூடும். ஆனால் அத்தகைய திறந்த மனது மக்கள்நல கூட்டணிக்கு உள்ளதா என்பதை யாரும் வெளிப்படுத்தவில்லை.

திடீரென குலாம் நபி ஆசாத் கலைஞரை சந்திக்க காங்கிரஸுடன் கூட்டணி உருவாகிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலாவுகின்றன. கலைஞர் அவ்வளவு சாதாரணமானவர் அல்ல. நின்று விளையாடுவதில் வல்லவர். குலாம் நபி ஆசாத் சந்திப்பை பரபரப்பாக்கி கூர்ந்து கவனிக்க தொடங்கியிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு அவர் எத்தகைய முக்கியத்துவம் தருகிறார் என்பதற்கு முகநூலி உலக வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக நேரலை செய்தது. இப்பொழுது காங்கிரஸுடன் நெருங்கினால் பாஜக சுலபமாக அதிமுகவுடன் நெருங்கிவிடும். அப்புறம் கலைஞரை இறுக்குவது அவர்களுக்கு ஒன்று கடினமல்ல. உண்மையில்  அரசியல் சதுரங்கத்தின் முதல் நகர்வு இப்பொழுதுதான் துவங்கியுள்ளது.  

Saturday, February 13, 2016

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


இது இந்தியா !
சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வந்த ஒலி ஒளிக் காட்சி. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. நடுவில் பெரும் சாலை. புகையைக் கக்கிகொண்டு ஒரு கார் அந்த சாலையில் விரைகிறது. திடீரென்று விர்ரென்று ஒரு சத்தம். காரின் பின்புலத்தில்  இருந்து புகை காற்றில் கரைய அந்த காட்சி நம் இதயத்தில் இரத்த ஓட்டத்தை உறைய செய்கிறது.
பிறந்து சில வாரங்களே ஆன பால்மனம் மாற சிறிய குரங்கு குட்டி. மூக்கில் இருந்து இரத்தம்  கசிய கண்கள் விண்ணை நோக்கி அசைவற்று நிற்க சிறிது சிறிதாக அடங்கிகொண்டிருந்தது. அதன் பார்வை என்னை ஏன் இந்த மண்ணில் படைத்தாய் இறைவா என்று பார்ப்பது போல் ஒரு பாவனை.
ஒரு சில வினாடிதான் தாய் குரங்கு எங்கிருந்தோ குதித்தது. சிறிதுசிறிதாக அடங்கிகொண்டிருந்த பிள்ளைக்குரங்கினை இரு கைகளால் அணைத்து இதயத்தோடு இதயமாக தன் இதய துடிப்பை அதனுடன் பாய்ச்ச முயன்றுகொண்டிருந்தது. பாவம் அது ஒன்றும் தெய்வபிறவியில்லையே. கேவலம்  ஒரு குரங்கு ! அதனால் தன் இதயத்துடிப்பை தந்து தன் பிள்ளையின் இதயத்துடிப்பை உயிர்ப்பிக்க முடியவில்லை.  சினம் கொண்டு எழமுடியவில்லை.  கும்பல் சேர்த்து அடுத்து வரும் வாகனத்தின் மீது கல் எறியவோ, கொளுத்தவோ தெரியவில்லை.
குந்தி தேவி தன் மகன் கர்ணனின் உடலை மடியில் கிடத்தி கதறுவதை போல, அந்த குரங்கும் தன் மடியில் உயிர்துறக்கும் பிள்ளையை கையாலாக தாயாக கண்களில் நீர் துளிர்க்க சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் பார்க்க தூரத்தில் விரைந்த வாகனம்  எதைப்பற்றியும் கவலையின்றி கார் ஜன்னல் வழியாக குடித்து முடித்த பீர் பாட்டில்களை இரைத்தபடி அகோரமான ஓசையுடன் விரைந்து மறைந்தது.
இதுதான் நாம் நம்முடன் வாழும் விலங்குகளுக்கு தரும் மரியாதை.

இது சிங்கப்பூர்
சிங்கப்பூர் மத்திய வனப்பகுதியையும் புக்கிட் திமா வனப்பகுதியையும் இணைக்கும் விரைவு சாலை.  சாலையில்   அதிவேகமாக வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க சாலையின் மேற்பகுதியில் இயற்கையோடு இயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் பசுமைபாலம். அதன் மீது எந்தவித அச்சமும் இன்றி இயல்புவாழ்க்கை பாதிக்காத வகையில் விலங்கினங்கள் விளையாடி செல்கின்றன. சாலை விபத்தில் ஒரு விலங்கும் இறந்ததாக குறிப்புகள் இல்லை.
சீனர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் அசைவ உணவு என்பது மிக சாதாரணம். உணவுக்காக உயிரைகொல்பவர்களாக இருப்பினும் பிற உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாதலால் சுமார் 17  மில்லியன் டாலர் மதிப்பில் அதாவது நூற்றி இருபது கோடி செலவில் இப்படி அற்புதமான ஏற்பாட்டை செய்துள்ளனர்.
சிங்கப்பூர் மட்டுமல்ல ஐரோப்பா ,அமெரிக்கா போன்ற மேனாடுகளில் இத்தகைய பாலங்களை அதிகம் காணலாம். ஆனால் இந்த நாடுகளை விட  இந்தியாவிற்கு பல சிறப்புகள். உலகிலேயே அரிய விலங்கினங்களும், பறவைகளும் நிறைந்த நாடு. ஆனால் இதனை எப்படி பாதுகாப்பது என்பது நமக்கு தெரியாமல் இருப்பதுதான் நம் பலவீனம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு தினமணியில் வந்த ஒரு செய்தி. அதாவது 2013 ல் மட்டும் சுமார் 1600 விலங்குகள் திருச்சியை சுற்றிய  பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  இது திருச்சிக்கு மட்டுமேயான புள்ளிவிவரம் இந்த மூன்றாண்டுகளில் மாநிலம் முழுவதும் ஏன் நாடு முழுவதும் கணக்கிட்டு பாருங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு பார்க்க கூட நம் ஊரில் நாதியில்லை.
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் ஆற்றுக்கு குறுக்கே ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ஏரிகள் இருக்க, பாம்போ ,பல்லியோ, தவளையோம்ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகவேண்டுமெனில் இந்த சாலையை தான் கடக்க வேணும். அதிகாலையில் நீங்கள் இங்கு பயணித்தால் எத்தனை உயிர்கள் இங்கு அடிப்பட்டு கிடக்கின்றன என்பதை காணமுடியும்.
தவளையும் பாம்பும் இறந்தால் நமக்கென்ன என்று நினைக்கவேண்டாம். இவை எல்லாம் சுற்றுசூழலின் பாதுகாவலர்கள். இவற்றின் எண்ணிக்கை குறைய குறைய மனிதனின் ஆயுள் நிலையும் குறைந்துகொண்டே வரும். ஏன் இந்த பூமியின் தட்பவெட்பநிலையும் கூட மாறும்.
இவற்றை மாற்றி அமைக்க ஒரே வழி. நமக்குள் நாமே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். முடிந்தவரை காடுகளில் ஊடே பயணிக்கும் போது மிகவும் கவனமாக பயணிப்பது. வாய்ப்புள்ள பெருநகரங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பெரும் கார்பரேட் நிறுவனங்கள் மனசு வைத்தால் இத்தகைய பாதைகளில் சிங்கப்பூரிலும் ஐரோப்பாவில் இருப்பதை போன்று நம்மூரிலும் பாலம் அமைத்து விலங்குகளுக்கு உதவலாம்.
பள்ளிக்கரணை பகுதியை சுற்றி எத்தனையோ மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. அந்த பகுதி நிறுவனங்களும், ஏன் மென்பொறியாளர்களும் மனது வைத்தால் இயற்கையை துண்டாடி  உயிரனங்களை துண்டாடிக்கொண்டிருக்கும் அந்த சாலையின் மத்தியில் ஒரு இயற்கை பாலம் அமைக்க முடியும்.
இத்தகைய விடயங்களை முன்னிறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்ய கோவையை சேர்ந்த Environmental Conservation Group  முகம்மது சலீம் என்பவரின் தலைமையில் நாடெங்கும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல். காடுகளில் விளம்பர தட்டிகள் வைத்தல் என தொடர்கிறது இவர்களின் பயணம். இது ஒரு சிறு தீப்பொறிதான். இது மேலும் மேலும் பரவி வெளிச்சமாக வேண்டும் அந்த வெளிச்சம் நாம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும்  ஒளிரவேண்டும்.




பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...