Monday, January 31, 2022

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

 



மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கிடைக்காத நிலையில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. பாரம்பர்ய ஊடகங்கள் இதனை சீரியஸாக வெளியிட்டுகொண்டிருக்க மக்கள் ஊடகங்கள் வரிந்துகட்டிக்கொண்டு கேலி செய்ய தொடங்கின.

        இனி நோட்டாவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி  என்று பலர் கிண்டலடிக்க, சிலர் தற்கொலை முயற்சியில் பாஜக என்று  உச்சுக்க்கொட்ட தொடங்கினர். உண்மையில் பாஜக தனித்து நிற்பது என்பது அந்த கட்சிக்கு நல்லது என்பதுதான் உண்மை.  பாஜக தனது உண்மையான வாக்கு வங்கியை தெரிந்துகொள்ள இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அது மட்டுமல்ல எங்கிருந்து தொடங்க வேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த தனித்த போட்டியின் முடிவுகள் வழிகாட்ட கூடும்.

    தேசிய அரசியலில் சுமார் எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாநிலம் ஒன்று உண்டென்றால் அது தமிழ்நாடுதான். சமீபத்தில்  பஞ்சாப்பிற்கு சென்ற பிரதமர் கதறலுடன் திரும்பினார். இந்த கதறலை தமிழ்நாடு 2018 லேயே செய்து பார்த்துவிட்டது. தமிழில் பேசினார், திருக்குறளையும், ஒளையாரையும் ஒப்புவித்தார். வரலாற்று சிறப்புமிக்க சீன அதிபர் சந்திப்பை கூட தமிழ்நாட்டில் வைத்துகொண்டார் . எனினும் பாஜகவுக்கும் தமிழ்நாட்டிற்குமான ஏழாம் பொருத்தம் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன ?

நிச்சயமாக பாஜகவின் தவறான அணுகுமுறைதான். தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தலைவராக இருந்தபோது  இருந்த பாஜகவும் இப்போதையை பாஜகவும் வேறு வேறு. இன்னும் ஆழமாக சென்றால் வாஜ்பாய் காலத்து பாஜகவும் இன்றைய பாஜகவும் வேறுவேறு. 

அன்றைய பாஜகவுக்கு கொள்கை இருந்தது. அரசியலை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இருந்தன. மூத்த அனுபவம் வாய்ந்தவர்களை தலைவர்களாகவும் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள்.

கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது பாஜகவின் தலைவராக இருந்தார் கிருபாநிதி. அதிர்ந்து பேசாதவர். சூழலுக்கு ஏற்ப நிலைமை அறிந்து பேசக்கூடியவர். தொடர்ந்து இல கணேசன், பொன் ராதகிருஷ்ணன், கோவை ராதாகிருஷ்ணன் என்று பலர் தலைமை பொறுப்புக்கு வந்தனர். ஒவ்வொருவரும் தனி ரகம். ஆனால் எல்லோரிடமும் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருந்தது. தொடர்ந்து பாஜகவின் தலைவர் ஆனார் திருமதி தமிழிசை செளந்தரராஜன். உண்மையில் அந்த நேரம் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடத்தை நோக்கி நகரும் நேரம். ஓடியாடி அரசியல் செய்ய முடியாமல் கலைஞரும், ஜெயலலிதாவும் உடல் ரீதியாக சோர்ந்து இருந்த நேரம்,  திராவிட கொள்கைகளுக்கு எதிரான குழப்பங்களும், இரண்டு கட்சிகளும் மாறி மாறி செய்த ஊழல்களும் பொதுவெளியில் சிரித்துகொண்டிருந்த நேரம். அப்பொழுது பாஜக நினைத்திருந்தால் மிகவும் வலிமையாக கால் ஊன்றியிருக்கலாம். ஆனால் பாஜகவின் சித்தாந்தம் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு பொருந்தாத ஒன்றாக இருந்ததினால் அதனால் ஒரு இம்மியளவு கூட வளரமுடியவில்லை. இருப்பினும்  மத்திய அரசு ஆட்சியில் இருக்கும் தைரியத்தோடு முடிந்த அளவு ஈடுகொடுத்துப் பார்த்தார் தமிழிசை செளந்தராஜன். முளைக்கவே வாய்ப்பில்லாத சூழலிலும் கூட " தாமரை மலர்ந்தே தீரும்" என்று பாசிடிவ் பஞ்ச் வசனத்தை பிரபலமாக்கினார்.

    தமிமிசையால் முடியாது என்று நினைத்தோ அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவரை தலைவராக்கினால் அந்த சமூக வாக்குகளை கவரலாம் என்று யார் சொன்ன யோசனையோ தமிழிசை அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு எல். முருகன் பாஜகவின் தலைவரானார்.

    தமிழ்நாடு பாஜக உச்சகட்ட கேலிக்கு உள்ளான காலம் ஒன்றென்றால் இதுதான்.   இந்துத்துவா சார்ந்த அமைப்புகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த எல் முருகன் பாஜகவை ஒரு இந்துக்கள் கட்சியாக முன்வைத்தார். அதுமட்டுமல்ல இவரின் காலத்தில் தான் கிரிமினல்களும், குற்றபின்னனி உள்ளவர்களும் அணிஅணியாக கட்சியில் சேர்ந்தனர். பாரம்பர்ய ஊடகங்களை மத்திய அரசு எனும் ஆயுதத்தை வைத்து வளைக்கப்பார்த்தாலும் சமூக ஊடகங்கள் மக்கள் கையில் இருப்பதினால் பாஜகவிற்கு கேலியும் கிண்டலும் பரிசாக கிடைத்தன. இந்துக்கள் இந்துக்கள் என்று அவர் கத்த  பகுத்தறிவு பாசறையாக தன்னை காட்டிகொண்டு வந்த திமுக இந்துக்கள் இந்துக்கள் என்று நீங்கள் கத்தினால் அப்போ நாங்கள் யார் ? என்று கேட்பது போல் நடந்துகொண்டது. 

    இதே திமுகவின் தலைமைதான் கலைஞர் காலத்தில்  இந்து என்றால் திருடன் என்றொரு அர்த்தம் உண்டு என்று தைரியமாக இறங்கி அடித்தது. இருப்பினும் எல் முருகன் காலத்தில் நாங்களும் இந்துக்கள் தான் என்று சொல்லதொடங்கியது. இது காலத்தின் கொடுங்கோலம் எனினும் எல். முருகன் வீசிய பந்து அவரை நோக்கியே திரும்பியது.  

    வட இந்தியாவில் இந்து மத உணர்வை தூண்டி எரியவிட்டு அதில் குளிர் காயும் கட்சியாக பாஜக இருக்கிறது. அதேவியூகத்தினை வேல் யாத்திரை மூலம் தொடங்கினார். அது ஒரு கேலியாத்திரையாக மாறிப்போனது. இப்படி  ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாமல் அடையாள அரசியல் செய்ய போய் அதிமுக கூட்டணி அமைத்து அதன் செல்வாக்கையும் பதம் பார்த்து எடப்பாடி பழனிச்சாமியின் முதலமைச்சர் கனவை தகர்த்தது  பாஜக.

    எல் முருகன் போய் அடுத்து அண்ணாமலை வந்தார். ஏற்கனவே பல கிண்டல்களுக்கு உள்ளாகி வந்த ஒருவரை எதன் அடிப்படையில்  தலைவராக்கியது பாஜக தலைமை என்று தெரியவில்லை. சீனியர்கள் மன கொந்தளிப்பில் அண்ணாமலை காமெடி சேட்டைகளை தொடர்ந்தார். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் என்னவோ கட்சியின் சூப்பர் சீனியரான இல கணேசன் கவர்னர் பதவி வாங்கிகொண்டு சென்றுவிட்டார். மற்ற சீனியர்கள் எல்லாம் அடக்கி வாசிக்க தொடங்கினர். எச். ராஜா மட்டும் என்ன செய்வது களத்தில் இறங்கிவிட்டோமே எதாவது செய்யவேண்டும் என்று அவ்வப்போது எதையாவது பேசி வருகிறார். 

இது தவிர அண்ணாமலை பொறுப்பேற்ற  இந்த ஆறு மாதங்களில்  எல் முருகன் காலத்தைவிட அதிக விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது பாஜக . இடையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெற்றது. ஏற்கனவே அதிமுகவின் தயவில் நான்கு எம் எல் ஏக்களை கொண்டுள்ளது.  இவர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதின் மூலம் ஓரளவு நம்பிக்கையை உருவாக்க முடியும். எனினும் ஒன். மேன் ஷோவாக தன்னை முன்னிலைப்படுத்திகொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார் அண்ணாமலை.

சென்னை வெள்ளத்தின் போது போட் ஷூட் முதல் சமீபத்தில் சிறுமி லாவண்யா மரணம் வரை அவர் வீசிய செய்த அரசியல் அனைத்தும் அவரின் மதிப்பை மட்டுமல்ல பாஜகவின் மதிப்பையும் காவு வாங்கி வருகின்றன.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறத்தொடங்கின. அதே அதிமுகவின் முதுகில் ஏறி இரண்டு மூன்று மேயர் தொகுதிகளையும் நகராட்சி தொகுதிகளையும் பெற்றுவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் மீது மண்ணை வாரி போட்டுவிட்டது அதிமுக.

    எந்தவித நிபந்தனைக்கும் ஒப்புகொள்ளாமல் தனித்து போட்டியிடும்படி செய்திருக்கிறது. இப்பொழுது பாஜக களத்தில் தனித்து நிற்கிறது. இது தான் உண்மையான சூழல் . இதுவரை என்ன செய்திருந்தாலும் அதன் பலன் என்ன என்பதை இப்பொழுது தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாடு அரசியல் என்பது வேறு. மக்களின் சிந்தனைதிறன் வேறு. சமூக நீதியில் இந்தியாவில் முன்னனி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மத அரசியல் ஒருபோதும் எடுபடாது என்பதை இப்பொழுது இந்த தேர்தல் மூலம் நிச்சயம் பாஜக புரிந்துகொள்ளும்.

இந்த தேர்தலில் அவர்கல் பெறப்போகும் வாக்குகள் மிகவும் குறைவானதாக இருக்கலாம். ஆனால் அது அவர்களின் வளர்ச்சியை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணாடியாக திகழும். இதன் மூலம் எப்படி கட்சியை வளர்க்கலாம். எதை செய்தால் நல்லது ? எதை பேசவேண்டும் ?எதை பேசக்கூடாது ? என்பதை தெளிவாக தமிழ்நாடு பாஜகவும் தேசிய தலைமையையும் உணர்ந்துகொள்ளும். இந்த தேர்தலுக்கு பிறகு ஏற்பட போகும் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை மாற்றப்படலாம். ஆனால் அடுத்து  அமரவைக்கப்படும் தலைவர் பொறுமையானவராகவும், பொறுப்புள்ளவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே 2024 தேர்தலில் தமிழ்நாட்டின் கூட்டணியில் பாஜகவுக்கு சில சீட்டுகள் பெற்று தரப்போகும் கூட்டணிகள் உருவாகலாம். இல்லை 2024 ல் பாஜக தமிழ்நாட்டில் தனித்துவிடப்படலாம்.  குடியரசு தின உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள தேசம் தழுவிய  சமூகநீதிக்கான அமைப்பு பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல தேசிய அளவில் தலைவலியை ஏற்படுத்தும்.

  அதற்கு உதவும் வகையில் தனித்து போட்டு என்ற தற்கொலை முயற்சியை தான் தமிழ்நாடு பாஜக எடுத்துள்ளது. கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது பழமொழி. மதவாத அரசியலில் பிழைப்பு நடத்தலாம் என்று நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறது !

Sunday, July 4, 2021

தமிழும் ஓகமும் !


தமிழ் தேசியத்தின் மூலம் மட்டுமே தமிழினத்தை காப்பாற்றமுடியுமா ?  தமிழ் போன்ற வாழ்வியலோடு பின்னி பிணைந்த ஒரு மொழிக்கு அது அவசியமானது கூட அல்ல. மிக சுலபமாக உலகின் எல்லா மனிதர்களிடமும் ஊடுருவி நிற்க தமிழர் சார்ந்த வாழ்வியலை பரப்பினாலே போதும். உலகின் பெரும்பான்மையான மக்கள் தமிழை தாங்கிகொண்டு செல்வார்கள். தேசியத்தை உருவாக்க செய்யும் முயற்சியைவிட இது மிக மிக சுலபமானது. எளிமையானது.

 

மனித வாழ்க்கை மூன்று கூறுகள் அடிப்படையில் அமைகிறது

 

உடல்

உயிர்

மனம்

 

இந்த மூன்று கூறுகளையும் செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட மொழிகளில் முதன்மையானது தமிழ்.இன்னொரு கோணத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்த வரை பழமையான மொழிகளாக வரிசைப்படுத்தப்படும் சீனம்,லத்தீன்கிரேக்கம்,அரபிஹீப்ரு என்று தனித்துவமிக்க பழமையான  இனங்களில் கூட இல்லாத நுட்பங்கள் தமிழின வாழ்வியலில் இருக்கின்றன. மேற்கண்ட பழமையான மொழிகளில் ஒருவேளை இந்த நுட்பம் இருக்கிறது எனில் அதுவும் தமிழின் வழியே சென்றதாக தான் இருக்க கூடும்

 

உடல் என்று எடுத்துகொண்டால் எப்படி உடல்நலனை பாதுகாத்துகொள்வது என்கிற இயற்கைவழி வாழ்வியல் நமது தமிழினத்தின் ஆகப்பெரும் சொத்து. உடல்நலன் மட்டுமல்ல உடல்உயிர்மனம் இம்மூன்று செம்மைப்படும் வழிமுறைகள் தமிழர்கள் வாழ்வியல் மட்டுமே முன்வைக்கின்றன. இதனை காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தி உலகிற்கு பரப்பினாலே தமிழின் வளர்ச்சி வலிமையாக பரவாலாகும்.

 

உதாரணமாக யோகா- அது யோகம் அல்ல. ஓகம் என்கிற சொல்லின் திரிபு என்கின்றனர் அறிஞர்கள். “ யோ” என்ற உச்சரிப்பை விட “ ஓ” என்று  உச்சரித்து பாருங்கள். அடிவயிற்றில் இருந்து காற்று மேலெழுந்து வெளிப்படும். நீங்கள் ஓ என்று உச்சரிக்கும் போது உங்கள் தொப்புள் முதல் நெற்றிவரை உள்ள 4 சுரப்பிகள் அதாவது சக்கரங்கள் எனப்படும் மையங்கள்  ஆற்றல் பெறும்.

 

ஆனால் இந்த ஓகம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது எத்தனை தமிழர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு பத்துநிமிடமாவது இந்த பயிற்சியை செய்கிறீர்கள். ஆனால் இணையத்தை கிளறுங்கள் எத்தனை வெள்ளைக்காரிகள் இதனை ஆங்கிலத்தில் உச்சரித்து பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா இந்த ஓகப்பயிற்சிகளை தமிழில் உச்சரித்து பயிலும் போது மட்டுமே 100% பலன் தரும். தமிழின் சில உச்சரிப்புகளுக்கு மட்டுமே உடலில் உள்ள சுரப்பிகளையும்சக்கரங்களையும் ஆற்றல்படுத்தும் தன்மை இருக்கிறது. இந்த தொடர்பை வலிமைப்படுத்தி அதிகம் பரப்பவேண்டும்.

 

அதே போன்று வாழ்வியலில் உணவும். இயற்கை மருத்துவமுறைகளும் தமிழர்கள் கொண்டாடிய அளவிற்கு உலகம் முன்னேறவில்லை. உலகின் உணவுப்பட்டியல் எல்லாம் ருசிக்காகவும்பசிக்காகவும் மட்டுமே. ஆனால் ருசிபசி அதனை தாண்டி ஆரோக்கியமான உணவு முறை தமிழர்கள் உணவில் மட்டுமே இருக்கிறது. அறுசுவை உணவிற்கும் உடலின் பஞ்சபூத தன்மையை சரியாக பராமரித்துகொள்வதற்கும் தொடர்பு இருக்கிறது. அதே போன்று மனவள மேம்பாட்டினையும் தமிழ்வழியே மட்டுமே சிந்திக்க முடியும்.

 

இப்படி வாழ்வியலின் அடிப்படையாக இருக்க கூடிய முக்கிய மூன்று கூறுகள் தமிழில் மட்டுமே சாத்தியம். ஆனால் இவை அனைத்தும் சாத்தியமற்ற பலமொழிகள் எடுத்து தங்கள் மொழி வழியே கையாண்டுகொண்டிருக்கின்றன.

 

தமிழ் வழியே ஓகம் பயில்வோரை விட ஆங்கில வழியில் பயில்வோர் அதிகம். அதுவும் ஆசிரியர் நேரடியாக இல்லாமல். இணையவழி அதிகம்.

 

தமிழுக்கும் வாழ்வியலுக்கும் இடையே உள்ள உயிர்தொடர்பு குறித்து ஆய்ந்து தமிழ்வழியே இதனை பயில்வதால் ஏற்படும் உண்மையான பலனை திரும்ப திரும்ப எடுத்து சொன்னால் போதும் தமிழ் மொழி தானே எங்கும் நிலைத்து நிற்கும். இது  ஒரு உதாரணம்தான். இது போன்று தமிழுக்குள் ஆயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.


அவற்றை உணர்ந்து அனுபவித்து பின்னர் பரப்புரை செய்யவேண்டும்.

 

இதில் இருந்து மாறுபட்டு தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படுபவை எப்பொழுது சாத்தியமாகும் என்று கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. 339 சாதிகள் உள்ளடக்கிய இந்த இந்த மாநிலத்தில் இத்தனைபேரும் ஒற்றுமையாகி ஒரு தேசியத்தை நோக்கி நகர்வதைவிட மிக சுலபமானது தமிழர்தன் வாழ்வியல் செழுமியங்களை உலகம் முழுவதும் பரப்புவது. அதற்கு முக்கிய தகுதி நீங்கள் இதனை அனுபவித்து மகிழவேண்டும். 


அதற்கு பெரும் முயற்சி தேவை. அந்த முயற்சி செய்வது அத்தனை சுலபமானது.  குறிப்பாக சமூக ஊடகத்தில் ஒரு ஸ்டேடஸ் போடுவது போன்று எளிமையானது அல்ல. அதற்கு உடலும் மனமும் வணங்கவேண்டும்.



உடலையும் மனதையும் ஒழுங்குசெய்யும் ஒருவனால் மட்டுமே தமிழ் வாழ்வியலில் இருப்பவனாக இருக்க முடியும்.

 

 

Monday, June 15, 2020

#LetsWinChennaiPandemic

கொரோனா தமிழ்நாட்டில் சுமார் 1.75 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
நாளொன்றுக்கு 18 ஆயிரம் டெஸ்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. அதுவும் சென்னையை மையமாக வைத்து.
இது சென்னை அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தபட்டால் பெரும் பாதிப்புகள் தவிர்க்கபடும்.
சென்னையில் இரண்டாவது லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் ஒரு நகர்வு சென்னையை விட்டு சொந்த ஊரை நோக்கி நிகழ்கிறது. இது கொஞ்சம் ஆபத்தான ஒன்று. இங்கிருந்து செல்லும் Carrier கள் மாவட்டங்களில் மீண்டும் நோய் தொற்றை பரப்பும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.
அதனால் சென்னைக்குள் இருப்பவர்கள் சென்னையிலேயே இருக்கவேண்டும்.
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்
உடல்தூய்மை
இருப்பிட தூய்மை
சமூக இடைவெளி
தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது
தனித்திருத்தல்
வெளியே சென்றால் முகவுறை அணிவது
இவற்றை பின்பற்றினால் போதும் சென்னையிலேயே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அடுத்து நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒன்று இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவி. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதின் மூலம் அவர்களின் ந்கர
நம்மில் மூன்று நிலையில் பொருளாதார சூழ்நிலை கொண்டவர்கள் இருக்கிறோம்.
முதல் நிலை
என்னுடைய தேவையை என்னால் பார்த்துகொள்ள முடியும். என்னால் இன்னொருவருக்கும் உதவி செய்ய முடியும்.
இரண்டாம் நிலை
என்னுடைய தேவையை மட்டுமே என்னால் பார்த்துகொள்ள முடியும். பிறர் தேவைகளை பார்த்துகொள்ளும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை
மூன்றாம் நிலை
இன்று பணிக்கு சென்றால் தான் எனக்கு என் தேவையை பார்த்துகொள்ள முடியும் 
இந்த மூன்றாம் நிலை மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு நகர்வை மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கான தேவைகளை இரண்டாம் நிலை மனிதர்கள் செய்யும் போது இவர்கள் நகர்வு தடுக்கப்படும். 
ஒரு நான்கு வாரங்களுக்கு சென்னையில் தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் உதவி வீட்டிலேயே இருக்க செய்வோம்.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு 500 மீட்டர் சுற்றளவில் நமது கண்காணிப்பை தொடர்வோம். அங்கு கொரோனா பரவல் இருந்தால் விரைவில் சரியாக உறுதுணைபுரிவது
மீண்டும் கொரோனா பரவாமல் நகர்வுகளை தடுப்பது
உதவி தேவைப்படுவோருக்கு என்னவிதமான உதவி என்பதை கண்டுபிடித்து அதனை உதவி செய்யும் நிலையில் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ளவர்களிடம் பெற்று செய்வது . இந்த மூன்று செயல்களை செய்தாலே முற்றிலும் கொரோனா பரவலை கட்டுபடுத்திவிடலாம்.
இப்படி ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் பொறுப்பேற்றுகொண்டால் கொரோனாவை துல்லியமாக ஒழிக்கமுடியும்.
கொரோனா எதிர்ப்பு மக்கள் இயக்கமாக உருவெடுக்கவேண்டும். இதனை கட்டுப்படுத்துவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
நான் கொரோனா தாக்குதலில் இருந்து என்னை தற்காத்துகொள்வேன் . கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வென் என்ற உறுதிமொழியை எடுப்போம். இந்த நோய் தொற்றை முற்றிலும் ஒழிப்போம்

Sunday, June 14, 2020

உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா ராஜ் ?


உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா ராஜ் ?

இப்படி ஒரு கேள்வி என் இன்பாக்ஸில் எட்டிப்பார்த்தது. இந்த கேள்வியை பார்த்தவுடன் எனக்கு சின்ன அதிர்ச்சிதான். ஏன் எனில் இப்படியொரு கேள்வி கேட்பவரை நாம் கவனமாக ஆராயவேண்டும்
ஏன் இப்ப்டி ஒரு கேள்வியை எழுப்பினார்
அவரின் ஆழ்மனதில் இருந்து வந்த உந்துதலா
இல்லை சமூக நிகழ்வின் பிரதிபலிப்பா ? என்பதை ஆராயவேண்டும்
கேள்வி கேட்பவர் எதற்காக கேட்கிறார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்துகொள்வது நல்லது.

அந்த சுவரஸ்ய மனிதருடன் சிறிய உரையாடல் நிகழ்த்தினேன் . பார்ட்டி படு ஸ்மார்ட்.
இரண்டு மூன்று முறை தோன்றியிருக்கிறது சார். ஆனால் வினாடியில் அதை தாண்டிவிட்டேன்
//ஆனால் இந்த பிரபலமானவர்கள் பொசுக்கென்று இப்படி செய்யும் போது மனதில் இந்த கேள்வி அடிக்கடி எழுகிறது.//  
உங்கள் மனதில் அப்படி எழுந்திருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன் என்றார்.

நான் மிகவும் சிம்பிளாக பதில் அளித்தேன்.

எனக்கு தற்கொலை எண்ணம் எல்லாம் வந்தததில்லை. ஆனால் கொலை செய்யும் எண்ணம் நிறைய முறை வந்திருக்கிறது. தற்கொலையைவிட இது டேஞ்சர் அல்லவா ? என்றேன். அவர் சாட்டிங்கில் ஒரு ஸ்மைலியை விட்டெரிந்தார் . பார்ட்டி சிரித்துகொண்டிருக்கிறாராம்…….!!!!!

ஆம் ! இது எனக்கு அல்ல இயல்பாக கொஞ்சம்  உணர்ச்சிவசப்படும் நிலையில் உள்ள அதிமேதாவிகள் அனைவருக்கும் ஏற்படும் மனநிலைதான்

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்துடுவோம் !” என்றான் நம் பாட்டன்.
வழக்கமாக ஒருவனுக்கு சோறு கிடைக்கவில்லையெனில் அவனுக்கு சோறு போட ஏற்பாடு செய்யவேண்டும். உலகை அழித்து என்ன நடக்க போகுது தாத்தா என்று அவரிடம் கேட்கவேண்டும் என்பது என் ஆசை. மனுஷனுக்கு சோறு இல்லையென்று நீங்கள் உலகை அழித்தால், உலகின் பிற உயிர்களும் அல்லவா அழிந்துவிடும் ? பாவம் அவை இயல்பூக்க விதியின் படி சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிறது. ஒரு காக்கையோ அல்லது குருவியோ அல்லது வேறு எந்த மிருகமோ தனது தேவைக்கு போக இன்னொன்றில் எப்பொழுதும் ஆசைப்படுவதில்லை . ஆனால் மனிதன் மட்டுமே ஆசையில் வீழ்ந்து இன்னொருவனுக்கு கிடைக்கவேண்டியவற்றை பதுக்கிகொள்கிறான். நியாயப்படி அழிக்கவேண்டியது உலகை அல்ல அவனைதான். இப்படி தான் தோன்றும் எனக்கு கொலை செய்யும் எண்ணம். அதற்காக என்னை கைது கியிது செய்து விடாதீர்கள் யுவர் ஹானர் !

சரி ! இந்த தற்கொலை எண்ணத்திற்கு வருவோம்,
எனக்கு தெரிந்து அப்படியொரு எண்ணம் எழுந்ததில்லை.
மரணத்தின் விளிம்புவரை கூட அழைத்து சென்றிருக்கிறது இந்த மன அழுத்தம்
எனினும் அதிலிருந்து துளிர்த்து எழ எங்கோ ஒரு மூலையில் ஒரு நம்பிக்கை சிறு பசும் துளிபோல் கைகொடுத்திருக்கிறது.

இந்த தற்கொலை எண்ணம் என்பது  மூளையில் ஏற்படும் வேதியல் குளறுபடி.
இன்னொரு கோணத்தில் மெல்லிதான மனநோய்

தனித்திருத்தலால் ஏற்படும் குழப்பம். இப்படி எல்லாம் வாழ்ந்து என்ன செய்துவிடப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்படுத்தும் மாயவிகாரம். ஆனால் உண்மை என்னவெனில் எப்படியும் வாழலாம் இந்த உலகில்
வாழ வேண்டும் !
வாழ்ந்துதான் தீர்க்கவேண்டும் !

நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம்
நம்பி ஏமாறுவது
அதீத அன்பு வைத்து அதில் ஏற்படும் ஏமாற்றம்
நம் பிரியமானவர்கள் நம்மை விட்டு பிரியும் போது ஏற்படும் ஏமாற்றம்
திடீரென்று ஏற்படும் மனசோர்வு
இப்படி பட்டியலிட்டுகொண்டே போகலாம்

ஆனால் உளவியல் ரீதியாக  ஒரே ஒரு மாற்றம் தான்.
உங்கள் மனம் பீட்டா நிலையில் ( Beta Waves )  இருக்கும் போது தான் எல்லா நெகடிவ் எண்ணங்களும் ஏற்படுகின்றன. அதாவது மன அலைச்சூழல்  வினாடிக்கு 14 க்கு மேற்பட்ட சுழற்சியில் இருக்கும் போது எல்லா விபரீத எண்ணங்களும் ஏற்படும். ஒருவர் அடிக்கடி இந்த பீட்டா நிலைக்கு சென்று வரும் போது மூளை செல்கள் இதனை Capture செய்துவைத்துகொண்டு வேதியல் மாற்றத்திற்கு தயாராகும். இதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படி. இதனை Alpha Wave ஆக மாற்ற வேண்டும். அதாவது வினாடிக்கு 13க்கும் குறைவாக 10 அல்லது  8 என்ற நிலையில் மாற்றவேண்டும் . அப்பொழுது  உலகின் எந்த பிரச்சனையும் ஜுஜுபி தான்.

நெப்போலியன் போனபெட் பாபிலோனா சிறையில் சொன்ன வாசகம் தான்
என் கை 
  எனது கால்கள் 
  எனது கண்கள்
 எதைவேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள். என் தன்னம்பிக்கையை மட்டும் விட்டு வையுங்கள். மீண்டும் இந்த உலகை பிடித்துக்காட்டுகிறேன்என்றானாம்

அதே ! அதே  !திமிரும் தெனாவட்டும் நம்பிக்கையும் தரும் ஆல்பா அலைச்சுழல்கள்.


எல்லா நெகடிவ் செயல்களுக்கும் ஒரு பாசிடிவ் பக்கம் உண்டு

நினைத்தது நடக்கவில்லை எனில் 
அமைதியாக அமர்ந்து நடப்பதை பாருங்கள்
நீங்கள் நினைத்த ஒன்றை விட ஒரு பெரும் அற்புதம் உங்களுக்கு காத்திருக்கும்
இது சத்தியம் !!!

நம்பி ஏமாந்தால்
அதனை கேவலமாகவும் வெட்கப்படும் விஷயமாகவும் நினைக்கவேண்டாம்
அது ஒரு பாடம்
நாம் நமது செயலில் நியாயமாக இருந்திருக்கிறோம்
நம்பிக்கைதுரோகம் செய்தவன்
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களை ஏமாற்றுபவம்
இவர்கள் எல்லாம் ஒரு பதிவை உருவாக்கிகொள்கிறார்கள்
நீங்கள் ஏமாற்றப்படுவது என்பது உங்களுக்கு எந்த பாவப்பதிவையும் உருவாக்காது
ஆனால் உங்கள் சூழலை பயன்படுத்தி ஏமாற்றுபவன் நிச்சயம் ஒரு பதிவை தனக்குள் ஏற்படுத்திகொள்கிறான். உங்களிடம் ஏமாற்றி பெறும் ஒவ்வொன்றிற்கும் அவன் பதில் சொல்லியாகவேண்டும். காலம் அதனை நிகழ்த்தும். அதனால் ஏமாறுவது என்பது இழுக்கல்ல.
உங்களுக்கு பாடம் ! அவனுக்கு பாவம் !

அதீத அன்புவைத்து அதில் ஏற்படும் ஏமாற்றம்
அன்பு என்பது Unconditional வடிவம்
அன்பு உண்மையானது எனில் அதில் ஏமாற்றம் ஏற்படுவதே இல்லை
உங்களை கட்டிகொள்கிறேன் என்று சொல்லி சிரித்து பழகியவள் யாரையோ கட்டுகொண்டு வாழ்ந்துகொண்டிருந்தால் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தால் உங்கள் அன்பின் வெளிப்பாடு தான் அவளுக்கு அதீதமான வாழ்க்கையை உருவாக்கி தந்திருக்கிறது என்பதை உணர்ந்தால் போதும் உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அவளின் பிரிவு பெரும்வலி.அங்கு எப்படி இருப்பாளோ ? என்ற பயம்கூட காரணமாக இருக்கலாம். அங்கு வாழ்க்கை இயல்பாக அன்பான வாழ்க்கை அமைந்துவிட்டால். அதைதானே நீங்கள் கொடுக்கவிரும்பினீர்கள் ? அதை தானே அவள் அனுபவித்துகொண்டிருக்கிறாள். அதற்காக மகிழ்வதுதானே நமது இயல்பு. இங்கு நீங்கள் அது குறித்து வருத்தப்பட்டால் நீங்கள் வில்லனாக அல்லவா மாறி நிற்கிறீர்கள். அவள் மகிழ்ச்சியாக வாழ்வதை நீங்கள் கொண்டாடும் போது என்று நாயகர்தான். அன்பு உடல்ரீதியான ஈர்ப்பு அல்ல. அது ஒரே நிலைதான். அப்படி அவளின் வாழ்க்கை அங்கு சரியாக இல்லை எனில் அவள் உங்களுடன் இருக்கும் போதும் சரியாக இருந்திருக்காது. இயல்பூக்க நியதி அதுதான். அவளுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களிடம் இருக்கும் போது அவளுக்கு ஏற்படவில்லை என்பதும் ஆறுதல் தரும் ஒன்றுதான். Take it easy. எப்பொழுதும் அன்பில் வெற்றிடம் என்று ஒன்றில்லை. நிச்சயம் உங்களுக்குள் ஏற்படும் வெற்றிடம் இன்னொரு பேரன்பால் நிரப்பப்படும்.அதனால் பிரிந்த உறவாக இருந்தால் அதனை எப்பொழுதும் கொண்டாடிகொண்டிருங்கள்.


திடீரென்று மனசோர்வு என்பது எல்லோருக்கும் உண்டு
ஏன் மிருகங்களுக்கு கூட உண்டு
நம்ம வீட்டு செல்ல நாய் ஜிம்மி ஆக இருக்கட்டும்
JimCorbet National Park புலி  விக்ரம் ஆகட்டும்
மிருகங்களுக்கு கூட மனசோர்வு உண்டு என்கிறது ஆராய்ச்சி
அப்படி வந்தால் என்ன செய்யும் ?
கொஞ்சம் வினோதமாக எதையாவது செய்யும் ?
ஊளையிடும்
ஓடும்
ஆடும்
வெகு தீவிரமாக வேட்டையாடும்
நாமும் மிருகத்தின் முன்னேறிய நிலை. நமக்குள் இருக்கும் மிருகத்தை Activate செய்வோம்
ஓடுவோம் - ஓடுவது மனசோர்வை விரட்டும்
ஆடுவோம் - ஆடுவது மனதிற்கும் உடலிற்கும் உற்சாகம் ஊட்டும்
பாடுவோம்  - முயற்சி பண்ணி பார்ப்போம். தற்கொலை முயற்சியில் நாம் சாவதைவிட பாடி நாலு பேரை கொல்வது ஒன்றும் பாவமல்ல !!!!

வாழ்க்கையில் ஒரு Lifeline தேவை 
மன சோர்வு ஏற்படும் நேரத்தில் உங்களை சார்ஜ் செய்துகொள்ள ஒரு Life Line உருவாக்கிகொள்ளுங்கள். எனது Lifeline பயணங்கள்
இலக்கற்ற பயணங்கள். எப்பொழுது சோர்வடைகிறேனோ அப்பொழுது பயணப்பட்டுவிடுவேன்.
எங்கு செல்வது என்ற இலக்கு எல்லாம் இல்லை. நாட்கணக்கில் ரயிலில், பேரூந்தில் இல்லை மலைகளில் நடந்திருக்கிறேன். எனக்கு அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. இந்த உலகில் உற்சாகப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த சின்ன மனசோர்வை  தாண்டுவது என்பது பெரிய வித்தையெல்லாம் இல்லை. அப்படியே இயல்பாக இருந்தால் அது வந்தது போல் சென்றுவிடும்.
அப்படி போகவில்லையெனில் இந்த  lifeline activate செய்யலாம்
நிச்சயம் ஒரு போன்கால் போதும் உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத ஒருவனுக்கு கூட ஒரு போன் கால் போதும். பிடித்தவன் நம்பிக்கை ஊட்டுவான். பிடிக்காதவன் ரோஷத்தை கிளறிவிடுவான்.
இரண்டுமே  மந்திரயுக்திதான்.

பிரபலமானவர்கள் இறக்கும் போது அதாவது இயல்ப்புக்கு மாறாக இறக்கும் போது அதே மனநிலையில் இருக்கும் பலருக்கு இது போன்ற மனநிலை ஏற்படுவது இயல்புதான். ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்களை தாண்டிய எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் உற்றுப்பார்த்தால் அந்த ஒரு வினாடி எண்ணத்தை தாண்டியதால் அவர்கள் இத்தனை உயரத்தில் நிற்கிறார்கள்.

எனவே மீண்டும் மீண்டும் மனசோர்வு தரும் ஒன்றை நினைத்து நினைத்து மூளையில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திகொள்வது வேண்டாம்
மனம் சோர்வு வந்தால் கொலை செய்வோம்
அதாவது அப்படி ஏற்படும் எண்ணத்தை கொல்வோம்
அதில் இருந்து விடுபட ஆயிரம் வழி இருக்கிறது
ஜன்னலை திறந்து பாருங்கள் தெரியும்
பிடித்தமானவருக்கு போன் செய்யுங்கள் தெரியும்
இல்லை கதவை திறந்து தெருவில் நடந்து செல்லுங்கள் வழி தெரியும்……

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...