Saturday, December 18, 2010

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

காயகல்பம் என்பது மருந்தல்ல, ஒரு பயிற்சி என்று குறிப்பிட்டும்,பல மின்னஞ்சல்கள் மெஸ் விஸ்வாதனிடம் முள்ளங்கி சாம்பார் வைக்க வழிமுறைக் கேட்பது போல காயகல்பம் எப்படி தயாரிப்பது,எந்தக் கடையில் சுத்தமான காயகல்பம் கிடைக்கும். எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு காயகல்பமும் தங்கப் பஸ்பமும் தான் காரணமாமே என்று வருகின்றன.

எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு என்ன காரணம் என்று அவரின் ஒப்பனைக் கலைஞரை தான் கேட்கவேண்டும். மேலும் எம்.ஜி.ஆர் இறக்கும்போது நான் ரொம்பச் சின்னப் பையன், அவ்வளவு தெளிவாக அவர் நிஜ முகம் நினைவில் இல்லை.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று சொல்லலாமா ? வேண்டாமா ? என்று தெரியவில்லை..?!

2003 ல் சாத்தான்குளம் இடைத் தேர்தல்.ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது செய்தி சேகரிக்க சென்றிருந்தேன்.ஒரு கிராமத்து மக்கள், அம்மு மட்டும்தான் வருதா...வாத்தியார் வரலையா ? என்று கேட்க யாரு வாத்தியார் ? எம்.ஜி.ஆரா ? அவர் எப்போழுதோ செத்துட்டாரே என்று , சொல்லப் போக அங்கிருந்த வயதானப் பெண்கள் துடப்பகட்டையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள் அடிக்க.

எம்.ஜி.ஆர் முகத்தின் பளபளப்பை விடுங்கள். காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முகம் பளபளக்கும்,முக ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார் திருநெல்வேலி மனவளக் கலை மன்றத்தின் பேராசிரியர் திரு பி.ஆர்.சந்திரன். காயகல்பம் ஆயுள் காக்கும் ஒரு அற்புதப் பயிற்சி. நம்மை என்றும் இளமையுடன் வைத்து இருப்பதுடன், நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. சித்தர்கள் சொல்வார்களே மரணமில்லா பெருவாழ்வு,காயகல்ப பயிற்சியினை கர்மமே கண்ணாக செய்தால் சாத்தியம் என்கிறார் பி.ஆர்.சந்திரன்.

இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி...கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள்.

கல்யாணம் ஆகாதவர்களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிக்கோள்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை, ( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது.

பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும்.அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்.

காயகல்பம் என்பது எல்லோரும் மருந்தென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது மருந்து அல்ல,ஒரு உடற்பயிற்சி. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து,தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின் அற்புத பயிற்சி.

இதன் அடிப்படை என்ன ?

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது.

வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும்.அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும். இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன் படுத்தவேண்டும்.

எப்படி ?

மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும்.வாசிக்க வாசிக்க நார்களில் தளர்ச்சி ஏற்படும்.அப்போது என்ன செய்வார்கள், அந்த நார்களை இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக வரும்.

மிருதங்கம் போன்று நம் நாடி நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்றவேண்டும்.அது இயற்கையாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களையும்,சீறும் பாம்பின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்த போது,அவர்களுக்கு ஒரு சூட்சுமம் புலப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை வடிவமைத்தனர்.

இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது.நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில் போட்டனர்.

பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து எளிமைபடுத்தினார். அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள் இதனை தனியே பழகி,இதில் உள்ள உண்மை நிலை உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. கண்கள் ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும்ஒரு பிரகாசம் வரத்தொடங்கியது.அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார்.எழுபது முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க பறந்திருக்கிறார்.தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை. மனவளக்கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.

சமாதி அடையும் முன் குறிப்பால் கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். அதாவது அவர் வந்த கடமையை அவர் முடிக்கும்வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம் மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.

இப்பயிற்சியை ஆராய்ந்த செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் க.ஆனந்த நாராயணன், இதன் இயக்க கூறுகளை அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொண்டு முன்மொழிந்துள்ளார்.

காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி.

நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை,மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம்.அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம்.இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர்.இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.

காயக்கல்பத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்பூக்கப் பயிற்சி,இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. இதனை காலையில் மூன்று நிலைகளில்.மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம் தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீட்டிப்பு சாத்தியம்.

சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம்.

இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு.எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில் முடியும். இதனால இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.

இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம். சில பெண்களுக்கு காப்பர் – டி உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கருத்தடை மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரும் வாய்ப்புகளும் தவிர்க்கப் படுகின்றது.

இல்லற வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature edaculation போன்ற பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் ( Polysis Ovarian Syndrome ) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது.
கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.

எல்லாருக்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது முதல் இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.

வித்து அணு நீர்ம நிலையில் இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.

அடுத்ததாக இயற்கையான குழந்தைப் பேறு. எப்படி ஹிப்னோபர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன் தவிர்க்கப்படுகிறது.

சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும் என்ன நன்மை.?

எங்களுக்கு தானே தோழர், நிறையப் பிரச்சனை என்கிறீர்களா ?

உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல்.

சுய இன்பம் . அண்ணன் மிஷ்கின் புண்ணியத்தால் இதுபற்றி நிறையவே பேசிவிட்டோம் தேவைபடுபவர்கள் இந்த முகவரிக்கு சென்று அப்டேட் செய்துகொள்ளலாம் ( http://rajmohanfourthestate.blogspot.com/2010/12/blog-post_08.html )

திருமணத்தை ஆகும்வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.

காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. நமீதாவும் நயன்தாரவும் கனவில் வந்து டான்ஸ் ஆட கூப்பிட்டாலும் தைரியமாக போய் ஆடலாம்.

கனவில் ஆடும் நாட்டியத்திற்கெல்லாம் நிஜத்தில் உள்ளாடை நனையாது.யாருக்கு ஐ லவ் யூ சொல்லலாம் ? யார் ஐ லவ் யூ சொன்னாலும் பட்டாம் பூச்சி பறக்காது. அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது.

உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு தூண்டுதல் தராது.

ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.

வாரம் ஒருமுறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.

நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும்.
இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.

இப்பயிற்சியின் யுக்திகள் மிக மிக எளிமையானது. எனினும் நேரில ஒரு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மட்டுமே பழகவேண்டும். நீங்கள் காயகல்பம் கற்க விரும்பினால் உங்கள் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின் முகவரி அறிய ( www.vethathiri.org ) தொடர்பு கொள்ளவும்.

காயகல்பம் பற்றி மேலும் அறிந்துகொள்ள பி.ஆர்.சந்திரன் ( SKYPE : yogirajravi / SKYPE : prchanthiren ) அல்லது ( prchanthiren@gmail.com ) என்ற முகவரியில் தொந்தரவு செய்யலாம்.

பி.ஆர் சந்திரன் ஒரு கர்மயோகி. உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதில் மகிழ்வார். அவரிடம் ஜல்லியடிக்கும் முன்பு உங்கள் செய்தியை தட்டிவிட்டால், அவரே ஸ்கைப் பில் கதைப்பார்.

தேவைப்படுபவர்கள் தட்டுங்கள். திறக்கப்படும்.

நான் சொல்லவில்லை பைபிளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

எனக்கு எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்ற உண்மையைச் சொன்னதால் துடப்பத்தால் அடிக்க வந்த பெண்கள்தான் நினைவுக்கு வந்தனர். பாவம் அவர்கள் ! எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றினால் அவர் இறந்தும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தங்கப் பஸ்பம் சாப்பிட்டதை விட இந்த காயகல்ப கலையை அறிந்திருந்தால் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருப்பாரோ என்னவோ ?

Saturday, December 11, 2010

சபரிகிரியும் சதுரகிரியும்

அதிகாலையில் சரணகோஷம் ஒலிக்கிறது.

சபரிமலைக்கான பருவம் ஆரம்பித்துவிட்டது.சின்ன சின்ன கடைகள் முதல் பெரிய சந்தைகள் வரை கருப்பு,காவி,பச்சை, நீல நிற உடைகளும்,விதவிதமான மாலைகளின் வியாபாரங்களும் களைக் கட்டத் தொடங்கிவிட்டன.

இந்த வருடம் சுமார் 40 மில்லியன் யாத்ரீகர்கள் எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு பக்தர் 100 ரூபாய் வழங்கினாலும் குறைந்தபட்சமாக 400 கோடி ரூபாய் வருமானம்.சுமார் நான்கு கோடி பக்தர்களை ஈர்க்கும் விதமாக அங்கு என்ன இருக்கிறது ?

சபரிமலை பக்தி மார்க்கத்தின் அடையாளம். பக்தி மார்க்கத்தில் நம்பிக்கை மட்டுமே வலிமையாக செயல்படுகிறது.நம்பிக்கை என்பது எண்ணத்தின் அடிப்படையானது. சபரிமலை சென்றால் இன்னது நடக்கும் என்ற நம்பிக்கை.சபரிமலை சக்தி வாய்ந்த தளம் என்ற நம்பிக்கை !

ஒரே சமயத்தில் இத்தனை கோடி மக்கள் நினைக்கும் போது எழும் எண்ண ஆற்றல். இவைதான் சபரிமலையின் சக்திக்கு காரணம். இது இல்லாமல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதனை இக்கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

எண்ணத்தினால் எதையும் உருவேற்றி ஈர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதற்காகவே கோயில்களில் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்ற சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. ரஜினி என்ற பெயரிலும் அப்படிதான் நுணுக்கமான சந்தைப் படுத்துதலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் பரவலாக்கி, திரும்ப திரும்ப உச்சரிக்கப்பட்டு இன்று ஈர்ப்பு சக்தியுடன் நிற்கின்றன.

சபரிமலையும் சந்தைப் படுத்துதலின் வெற்றிதான். நான்கு கோடி பேர் நேரிடையாக சென்று ஒரு இடத்தில் குழுமி ஒருப் பெயரை உச்சரித்தால் அங்கு எத்தகைய ஆற்றல் நிகழும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூட்டம் இல்லை. எம்.என்.நம்பியார் தமிழகத்தில் இதனைப் பிரபலப்படுத்தினார். பல சினிமாப் பிரபலங்களை அழைத்து வந்து தரிசனம் செய்யவைத்தார். அய்யப்பனின் படங்களில் சூப்பர் ஸ்டார்கள் காசு வாங்காமல் நடித்தார்கள்.சபரிமலை பிரபலமானது. இது இன்னும் பிரபலமாகும். மக்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க இது நிகழும்.ஆனால் அவர்களின் எண்ணங்கள் ஒழுக்கமுடன் இருக்கவேண்டும். இல்லையென்றால் புதுப்புது சர்சைகள் தான் நிகழும்.ஏற்கனவே மேல் சாந்தி என்ற தலைமைப் பூசாரி நியமனத்தில் பல்வேறு தகிடுத்தத்தங்கள் !

எது எப்படி இருந்தாலும் சபரிமலை தரிசனம் என்பதில் வாழ்வை மாற்றும் சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றன.என்ன முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சபரிமலைக்கென்று கடுமையான கட்டுபாடுகள் இருக்கின்றன. நாற்பத்தெட்டு நாட்கள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். காட்டு பாதையில் உடல் குளிரைத் தாங்க தயாராகுதல்.நெற்றியில் திருநீறு ,சந்தனம் குங்குமம் அணிந்து அருகில் உள்ள கோயிலுக்கு செல்லவேண்டும். காலையில் குளிர் நீரில் குளிக்கும் போது தலையில் நீர் சேரும், திருநீறு அதனை உறிந்துவிடும். காலையில் 108 ஐயப்ப மந்திரங்கள் சொல்லவேண்டும். திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது உடலில் உள்ள ஏழு சுரப்பிகளில் அதிர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்றும். பயண வழியில் எந்த தட்பவெட்ப நிலையையும் தாங்குவதற்கு உடலைத் தயார்படுத்தும்.மாலையிலும் இதுபோல குளியல்,மந்திரம் கோயில் தரிசனம்.
இரண்டு வேளை மட்டும் உணவு. காலில் செருப்பு அணியக் கூடாது. பெண்களைப் பார்க்க கூடாது.அசைவம்,மது,புகைப் பக்கம் எட்டிப் பார்க்க கூடாது.குருசாமியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். .இந்த கட்டுப்பாடுகளை 48 நாட்கள் கடைபிடிக்கவேண்டும்.பின்னர் பயணம் தொடங்கும்.

ஏன் நாற்பதெட்டு நாட்கள் ? அறிவியல் பூர்வமாக, உடலியல் ரீதியாக ஒரு செயலை உடல் முழுவதும் ஏற்றுக்கொள்ள 48 நாட்கள் ஆகும். இன்று நீங்கள் சாப்பிடும் உணவு பல்வேறு நிலைகளாக மாறி சுக்கிலம் என்ற சக்தி வாய்ந்த வித்தாக மாற 48 நாட்களாகின்றன. சுக்கிலத்தில் ஆரோக்கியமான மாற்றம் நிகழும் போது உங்களின் கருமையத்தில் ( Genetic Centre ) மாற்றம் வரும். இதனாலேயே சித்த மருந்துகள் கூட ஒரு மண்டலம்,அதாவது 48 நாட்கள் தரப்படுகின்றன.

ஒரு ஒழக்கத்தை நாற்பத்தெட்டு நாட்கள் கடைபிடித்தால் பின்னர் அது பழகி இயல்பாகவே தினசரி செயலுக்கு வந்துவிடும்.

சபரிமலைக்கான கட்டுபாடுகள் அழகான ஒழுக்கம். ஒரு முறையான வாழ்வியல் முறை. ஒருவன் உடலாலோ, மனதாலோ கெட்டுப் போய் இருந்தாலும் இந்த ஒழுக்கத்தை பின்பற்றும் போது 48 நாட்களில் அவனுள் ஒரு ஆரோக்கியமான மாற்றம் உடல்,மனம்,வாழ்வியல் அளவில் ஏற்பட சபரிமலை விரதங்கள் வ்ழி செய்கின்றன. சபரிமலைக்கு போய் வந்தால் மாற்றம் நிச்சயம் என்றிருந்தது. ஆம் ! இருந்தது ? ஆனால் இன்று நிலமை எப்படி இருக்கிறது ?

நான் ஒரு ஐந்து முறை சபரிமலை சென்று இருக்கிறேன். 2002 ஆம் ஆண்டில் என் முதல் பயணம்.

அப்போது நான் ஒரு வெத்து வெட்டு. உருப்படியான வேலை இல்லை. திரைப்பட இயக்குனர் ஆகும் முயற்சியில் வாழ்க்கை. அண்ணன் பிரசன்னாவும்,மகேஷும் தான் படியளக்கும் பகவானகள்.
எனது உணவு, உடை, செலவு, யமஹா பைக்,பெட்ரோல் எல்லாம் பிரசன்னா அண்ணன் தான்.அவரைப் போலவே என்னையும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக பார்த்துக்கொண்டார் .

மகேஷ் அண்ணன் அப்போது இந்தியாவின் முன்னனித் தொலைக்காட்சியில் தென்னிந்தியாவின் தலைமை அதிகாரியாக இருந்தார். சென்னைக்கு வந்தால் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவார். அவர் வரும் போதெல்லாம் எனக்கும் அங்கு தான் ஜாகை.

பாருங்கள் ! இயற்கையின் விளையாட்டை. பாக்கெட்டில் பத்து காசு இல்லாத காலத்திலும் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறேன். யார் யாருக்கு எங்கெங்கு யார் மூலமாக என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவை கண்டிப்பாக வந்து சேரும்.இயற்கை ஒன்றும் நம்மை இங்கு சும்மா அனுப்பவில்லை !

அப்போது நான் கடவுளைப் பற்றிய குழப்பங்களில் இருந்தேன்.

கடவுள் உண்டா ? இல்லையா ? ஒன்றா ? பலவா ? இப்படி....

பிரசன்னா அண்ணன் மாலை போடுங்கள் என்றார்.

மறுபேச்சில்லை ! ஒரே இரவில் சாமியாகிப் போனேன்.

என்னைக் கன்னி சாமி என்றார்கள். எனக்கு அந்த உலகம் புதியதாக தோன்றியது. உண்மையில் உடலில் ஒரு புது விதமான அதிர்வுகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டன.அதிகாலையில் எழுந்து குளிப்பது ஒரு அலாதியான சுகம். முழுக்க முழுக்க சைவ உணவுதான். அதுவும் கன்னி சாமி என்றவுடன் தினந்தோறும் மூத்த சாமிகள் வீட்டில் இருந்து அழைப்பு இருக்கும்.

சுண்ட்ல, பாயாசம்,வித விதமான மரக்கறியுடன் உணவு. ஆஹா...அது ஒரு மாறுபட்ட அனுபவம்.
மாலை போட்டுக்கொண்டு ஆனந்த் திரையரங்கில் சர்வதேச திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன் . “ சம்ஸார ” என்றொரு திபெத்திய படம்.பத்து நிமிடத்திற்கு ஒரு பலான காட்சி வர...சாமி இதெல்லாம் பார்க்கலாமா ? கூடாதா என்ற குழ்ப்பம் வந்தது.

போதாக்குறைக்கு அத்தகைய காட்சி வரும்போதெல்லாம் பின்பக்கம் அமர்ந்திருந்த எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி பெண்கள் விசிலடித்து “ஏய் அய்யப்ப சாமி ! வெளியிலே போ !” என்று கத்தினார்கள். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது.

அதற்கு பிறகு திரை அரங்கம் பக்கம் போகவில்லை. ஒரு குருசாமி நீ சினிமாக்காரன்,படம் பார்க்கலாம். பக்தி வேறு தொழில் வேறு என்றார். என்னால் அப்படி பார்க்க முடியவில்லை.

ஒரு பக்கம் மாலை போட்ட அனுபவம் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தந்திருந்தாலும். திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முடியாதது ஒருவித வருத்தத்தை தந்தது. இன்னொரு உறுத்தலும் சூழந்து கொண்டது.அது இருமுடிக் கட்டும் நாளில் நிகழ்ந்தது.

நாம் மதிக்கும், போற்றும் பெரியவர்கள் எல்லாம் சடாரென்று நம் காலில் வந்து விழுவார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். என்னதான் மாலை போட்டுக் கொண்டு இருந்தாலும், பெரியவர்களை நாம் காலில் விழச் செய்யலாமா ?

சரி,அய்யப்பன் அவதாரமாக நம்மை பார்க்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும்,உண்மையிலேயே நாம் பரிசுத்தமாக இருக்கிறோமா ?

இது ஒரு பெரியக் கேள்வி ?ஆமாம் ! இன்றைக்கு சபரிமலைக்கான கடுமையான விரதங்கள் பின்பற்றப் படுகிறதா என்றால், இல்லை என்று சொல்லலாம்.

பத்தில் எட்டு சாமி உதட்டில் சிகரெட்டோடு தான் திரிகிறது...??!!!!

சிகரேட் சாமி !???!!!!..

ஷீ போட்டு கொண்டு நடந்துவிட்டு என்ன செய்வது அலுவலகக் கட்டுப்பாடு என்கிறார்கள். சபரிமலை கட்டுப்பாடுகள் பழங்கதையாகி வருகிறது.

என்ன ?... மாலை போட்டுக் கொண்டால் சாமி என்ற ஒரு அடைமொழி கிடைக்கும். அவ்வளவுதான. வாழ்க்கையில் வேறெந்த மாற்றமும் இல்லை. சபரிமலை யாத்திரை கோவா பிக்னிக் போல மாறிவிட்டது.

சில உதாரணங்கள்.

நான் விகடன் பேப்பரில் பணிபுரிந்தபோது ரெட் ஹில்ஸ்சில் ஒரு மதுக்கடையில் “ இங்கு அய்யப்ப பக்தர்களுக்கு தனி கிளாஸ்” என்று அறிவிப்பு பலகையைத் மாட்டியிருந்தார்கள்.

புரசைவாக்கத்தில் இருமுடியெல்லாம் கட்டி நூற்றுக்கும் அதிகமான சாமிகள் புறப்பட தயாரான நிலையில் குருசாமியைக் காணவில்லை. அத்தனை நபர்களின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஆள் தலைமறைவாகிவிட்டார்.

வீரப்பன் அதிரடி விஜயக்குமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்தபோது ஒரு பெரிய விபச்சார கும்பலை பிடித்தார். அத்தனை பேரும் பயபக்தியோடு மாலைப் போட்டிருந்தனர்.

ஹூம் அதான் தொழில் வேறு ! பக்தி வேறல்லாவா ?

அப்போது விஜயகுமாரும் மாலை போட்டிருந்தார் என்பது தான் உச்சக் கட்ட நகைச்சுவை !

கோபத்தில் திட்டும் போது கூட என்ன சாமி....ம...யி.......!!! சாமி !...பு...டு...ங் !!! சாமி என்று திட்டுகிறார்கள்.

கறி வெட்டுகிறவர் மாலை போட்டு வெட்டுகிறார். காரணம் கேட்டால் இதுதான் என் தொழில். தொழிலுக்கும் பக்திக்கு சம்மந்தமில்லை. இதைவிட்டால் சோத்துக்கு என்ன வழி என்கிறார்.
சோத்துக்கு வழியில்லாத சூழலில் இது போன்ற பக்தி என்ன சாதிக்கப்போகிறது. சரி ஒரு மாதம் விரதம்.தொழிலை விட்டுவிட்டு விரதம் இருந்தால் அவனை அந்த சாமி பார்த்துக் கொள்ளாவிட்டால் என்ன சாமி ?

கேரளாவில் நுழைந்துவிட்டால் இன்னொரு கொடுமை. எடுத்ததெற்கெல்லாம் காசு தான். நான் தான் அன்றாடம் காய்ச்சியாக இருந்தபோது சென்றேன் அல்லவா. எரிமேலியில் இறங்கினோம். அவசரத்திற்கு கழிவறைக்கு சென்றேன். அவர்களின் நுழைவுக் கட்டணத்தைப் பார்த்தவுடன். எனக்கு வரவேண்டியது வரவில்லை. என் நண்பருக்கு வந்தது நிற்கவில்லை !

எரிமேலியில் இந்து – இஸ்லாமிய நட்புக்கு ஒரு அழகிய உதாரணம்.

பாபர் சாமி என்பவர் ஐயப்பனின் பால்ய கால நண்பராம்.அவரின் மசூதி இருக்கிறது. இதைப் பார்த்தவுடன் எனக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம் வந்தது.

சுமார் 400 கோடி சம்பாதிக்கும் ஒரு யாத்திரை தளத்தின் சுத்தம் சுகாதாரம் பற்றி யாரும் கண்டுக் கொள்ளவில்லை.

மலைபாதையின் பயணம் எனக்கு பரவசம் தரும். நான் மட்டும் மந்தையில் இருந்து பிரிந்த ஆட்டுக் குட்டியைப் போல தனியே சென்றுவிடுவேன். பெரும்பாலும் அமைதிதான். வழி எங்கும் கப்பா கஞ்சி. கட்டன் சாய் போதும். எங்கேயாவது பசித்தால் ஏதாவது ஒரு குழு கஞ்சி ஊத்தி கொண்டிருக்கும். பரதேசி வாழ்க்கை. உண்மையில் இன்பம் ஊட்டக் கூடிய அனுபவம்.

ஆனால் நாளடைவில் வழியோரக் கடைகள் அதிகரித்து மலைப்பாதையின் அனுபவத்தை கெடுத்துவிட்டன. உணவுக்கு நீருக்கென அனுமதி பெற்று சகலத்தையும் வழங்குகிறது நடைப் பாதை கடைகள்.எல்லாம் யானை விலை குதிரை விலை. தரை மட்டத்தில் இருந்து 30000 அடி உயரத்தில் இருக்கும் பத்ரிநாத்தில் கூட பத்து ரூபாய்க்கு மூன்று ரொட்டி கிடைக்கிறது. ஒரு சிகரேட் கடையை மதுக் கடையைப் பார்க்க முடியாது.

ஆனால் இங்கு எல்லாம் தலை கீழ் . பணம் ! பணம் ! பணம் !.

சிகரெட் ,பான் பராக் ,பீடி, கஞ்சா, சுருட்டு இன்னும் என்னனென்ன வேண்டுமோ அதெல்லாம் இங்கு கிடைக்கிறது. சாமிகள் பிடிக்க கூடாது என்பதைவிட, புகை காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கு தொந்தரவுதானே.

மேலும் அய்யப்ப சாமிகள் எதைக் கொண்டு இந்த லெளகீகத்தை வாங்குவார்கள். வழிச் செலவுக்கென காலில் விழுந்து கொடுத்தனுப்புவார்களே அந்தப் பணம்தான்.

பக்தி நெறிக்குரிய வழிமுறைகளை, கட்டுப் பாடுகளை கடைபிடிக்காமல், சும்மா ஒரு அனுபவம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அன்றாடம் காய்ச்சிகள் தங்கள் பணத்தை அங்கு சென்று கொட்டிவிட்டு வருகிறார்கள். அதே நேரம் குறைந்தது 400 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தேவஸ்தானம் இத்தகைய பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. அவ்வளவு தூரம் நடந்து சென்று வழியில், அல்லது சாலை ஓரங்களில் தான் ஓய்வெடுக்கவேண்டும்.

வசதி செய்து தந்தால் ஐதீகம் மாறிவிடுமாம் ! திருட்டுத் தனமாக சிகரேட், பான் பராக் விற்க அனுமதி தரும் ஐதீகம், யாத்ரீகர்களுக்கு நல்ல வசதி செய்து தர அனுமதிக்காது என்பது நகைச்சுவைதான்.
பக்தி நெறி கூடாது என்பதில்லை. அது முறையாக இருக்கவேண்டும். இந்தியாவின் அடையாளமே ஆன்மிகம் தான். அது எந்த விதத்திலும் மாசுபடக் கூடாது. நாம் முன்பே பார்த்தோம் எண்ணம் தான் வான் காந்தத்தில் பதிவாகி செயல் படுகிறது என்று. சபரிமலை யாத்திரையில் வழிமுறைகளை வலிமையாக கடைபிடிக்கும் போது நல்ல எண்ணங்களே எழும்.

நல்ல எண்ணங்கள் வலிமையாக வான் காந்தத்தில் பதிந்து நல்லப் பலன்களைத் தரும்.
இப்படி தில்லாங்கடி செயல்கள் அதிகரிக்கும்போது அதற்குரிய பதிவுகளே வான் காந்தத்தில் பதிந்து அங்கு வரும் ஒழுக்கமான பக்தர்களின் கருமையத்திலும் இதுவே பிரதிபலிக்கும்.

சபரிமலையின் ஆற்றலுக்கு குழுமும் பக்தர்களின் எண்ண ஆற்றல் மட்டுமே காரணமா?

இன்னொன்றும் இருக்கிறது. அது தான் சதுரகிரி மலை.

திரு வில்லிப்புத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர். வத்தியிராப்பு என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர். வற்றாயிருப்பு என்றால் பேராற்றல், பேரறறிவு என்று அர்த்தம்.வற்றாயிருப்பு தான் வத்தியாரப்பு என்றாகியதோ என்னவோ. இது உணர்ந்தால் பெரும் ஆற்றல் களம். முழுக்க முழுக்க மூலிகை மணம் கமழும் மலை. தென் கைலாயம் என்று வரலாறு போற்றும் இங்கு அகத்தியர் முதல் பதினென் சித்தர்கள் வாசம் புரிந்துள்ளனர். இங்கு ஆற்றல் மிகு சித்தர்களின் ஜீவ சமாதிகள் நிரம்பி கிடக்கின்றன.இங்கிருந்த அளப்பரிய ஆற்றல் கிளர்ந்தெழுந்து வான் காந்தம் முழுவதும் பரவுவதாக ,இங்கு தரிசித்த யோகிகளும், ஆன்மிகப் பயிற்சியாளர்களும் சொல்கின்றனர்.

சரி சபரிமலைக்கும் சதுரகிரிக்கும் என்ன சம்மந்தம்.

சதுரகிரி மலையின் நேர் பின்புறம் கேரளா எல்லையில் தான் சபரிகிரி அமைந்துள்ளது. சபரிகிரி மேல ஏறிப் பார்த்தால் அந்த பக்கம் சதுரகிரி தெரியும்.சதுரகிரி மேலிருந்துப் பார்த்தால் சபரிகிரி தெரியும்.

இங்கு கயாஸ் தியரியை வைத்து பாருங்கள் ! என்ன சம்மந்தம் என்று உங்களுக்கே விளங்கும்.

ஹரியும் சிவனும் ஒண்ணு ! இத அறியாதவன் வாயில மண்ணு. சிவகாமியின் சபதத்தில் கல்கியின் வரிகள் நினைவுக்கு வருகிறதா ?
சாமியே சரணம் ஐயப்பா !

Thursday, December 9, 2010

ரஜினியின் சிவாஜியும் : உபேந்திராவின் சூப்பரும்.

கன்னடத் திரையுலக அதிர்ந்துகொண்டிருக்கிறது.

காரணம் ஒரு படம்.

“சூப்பர் ” என்ற தலைப்பு. பேருக்கேற்ப சூப்பர் வெற்றி.

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா பத்தாண்டுகளுக்கு பின்பு இயக்கி நடித்திருக்கும் படம். தமிழுக்கு பரிட்சையமான அதிரடி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் படைப்பு.

வெளியாகி ஐந்து நாட்கள் ஆகவில்லை. கர்னாடாகாவே அதன் வெற்றியில் அதகளப்படுகிறது. கன்னடத் திரைத்துறை ஒரு காலத்தில் இயல்பான படங்களுக்காக சர்வதேச தரத்தில் நின்றது.

கன்னடத்தில் படம் பண்ணுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. புட்டண்ணா கனகல் என்று ஒரு இயக்குனர்,நம்ம ஊரில பாலசந்தர் உட்பட பலரையும் பாதிக்கச் செய்தவர். பாலச்சந்தரின் பல படங்களில் புட்டண்ணா கனகலின் பாதிப்பு இருக்கும். பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர் கன்னட பிரவேசம் செய்தவர்களே.பாரதிராஜா கன்னடப் படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்றவர்.

ஆனால் இன்றைய கன்னட சினிமாவின் நிலை கொஞ்சம் பரிதாபகரமானது.வேற்று மொழிப் படங்கள் வியூகம் அமைத்து தாக்க கன்னடத் திரையுலகம் கலங்கி போய் நிற்கிறது.

பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் ஏதோ கன்னட திரையுலகம் மாற்றுமொழிப் படங்களுக்கு குறிப்பாக தமிழ்படங்களுக்கு எதிரிப் போல தோன்றும். ஆனால் உண்மையில் ஒரு மரணப் போராட்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. பெயருக்கு தான் கர்னாடகாவே தவிர இது ஒரு கலவையான மாநிலம்.

பெங்களூர் தொடங்கி மைசூர் தொடர்ந்து மண்டியா போன்ற மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகம். அதனால் இங்கு தமிழ்படங்களே ரெக்கை கட்டிப் பறக்கும்.பெல்லாரி உட்பட அதன் சுற்றுபுறங்களில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிப்பதால் சிரஞ்சிவிக்கும், பாலகிருஷ்ண்வுக்கு தான் பால் குடம் தூக்குவார்கள்.பிஜாப்பூர்,பீதர், கோகாக் போன்ற மாவட்டங்களில் மராத்தி மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் அதிகம். அங்கு அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,சல்மான் கான் காய்ச்சல் தான் அதிகம்.சரி மங்களூர்,குந்தாப்பூரில் என்ன நடக்கிறது. பாதி கொங்கணி அல்லது துளு மீதி மலையாளம் சம்சாரிக்கும் சேட்டன்களும் , ஹிந்தி பேசும் ஷெட்டிகளும், தமிழ் நாட்டில் உடுப்பி உணவு விடுதிகள் நடத்தி தமிழ் படங்கள் சுவைத்த ”பட்” வகை பிராமாணர்களும் வசிக்கின்றனர். அப்படியென்றால் அங்கு துளு மற்றும் மலையாளபடங்கள்,ஹிந்தி,தமிழ் படங்களுக்கு நோக்கித் தானே காற்று வீசும்.

இப்படி சுற்றமும் நட்பும் வேற்று மொழி சுவாசிக்க, கன்னடபடங்கள் ஓடுவது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. பெங்களுர் நகரில் மட்டும் நம்ம ஊர் முன்னனி நடிகர்கள் நடித்த படங்கள் என்றால் ஒரே நேரத்தில் நாற்பது ஐம்பது அரங்குகளில் வெளியாகும்.ஆனால் இங்கு ஒரு கன்னட முன்னனி நடிகரின் படம் மொத்த கர்னாடாகவிற்கே நாற்பது ஐம்பது பிரதிகள் வெளியானால அது பெரும் சாதனை.

பார்த்துக் கொள்ளுங்கள் ! பரிதாபகரமான நிலையை.

இப்போது புரிகிறதா ? ஏன் இவர்கள் கோபம் கொள்கிறார்கள் என்று. டார்வின் கோட்பாடு ( Darwin Theory – Survival of the fittest) சரி என்றால் இவர்களின் கோபமும் சரியே !

இந்த சூழலில் புனித் ராஜ்குமார், சிவராஜ் குமார், சுதிப் (இரத்த சரித்திரா–2 ல் உதவிப் போலிஸ் கமிஷனராக சூர்யாவுக்கு உதவுபவராக நடித்திருக்கிறார் ) இவர்கள் படம் கொஞ்சம் ரசிகர்கள் பலத்தால் ஓடும்.

ஒரு காலத்தில் கிரேசி ஸ்டார் என்ற பட்டத்துடன் கன்னட சினிமாவில் ராஜ்குமார் காலத்திலும் கூட முடிசூடா மன்னனாக திகழ்ந்த தமிழர் ( கன்னடத் தமிழர்னு சொல்லுங்க என்கிறார் ) ரவிச்சந்திரன் கூட கற்பனை பற்றாக் குறையினால் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய சிரமமான களத்தில் “சூப்பர்” என்ற இந்த புதிய படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.கதை ஏறக்குறைய நம்ம ரஜினி நடித்த சிவாஜி போன்றதுதான்.ஆனால் சிவாஜியை விட வலிமையாக மனதை தொடுகிறது.

2030 ஆம் ஆண்டு பெங்களூரில் கதை தொடங்குகிறது.அது ஒரு சொர்க்கபுரி. இருபது ஆண்டுகளில் எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஆராய ஒரு வெளிநாட்டுக்காரர் வருகிறார். சாலையெங்கும் இந்தியர்கள் ராஜாக்களாக வெளிநாட்டினர், குப்பை பொறுக்கி கொண்டு. நம் இனப் பெண்களுக்கு கால் அமுக்கி கொண்டு சேவகம் புரிகின்றனர்.நாம் அந்த அளவிற்கு முன்னேறிவிட்டதாக ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க செய்கிறார் உபேந்திரா. அந்த வெளிநாட்டுகாரர் ஒரு பார்க்கில் மிக சாதாரணமாக உட்கார்ந்து இருக்கும் இளைஞனிடம் டாக்ஸி பிடிக்க உதவி கேட்க ஒரு வினாடியில் டாக்ஸி வருகிறது. அந்த இளைஞனுக்கு நன்றி சொல்லி வண்டியில் ஏறும் போது நீங்கள் யார் என்று அந்த இளைஞனிடம் கேட்க,அதற்கு அந்த இளைஞன் “ நேனு இத்தேச முக்ய மந்ரி” என்கிறார். அதாவது அவர்தான் முதலமைச்சர். சொல்லிக்கொண்டே அவர் ஒரு பாதுகாப்பின்றி சக பிரஜையாக நடந்து செல்லும் காட்சியில் அரங்கில் விசில் பறக்கிறது. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது.

சிவாஜி மாதிரி ஒரு வெளிநாட்டு இந்தியர் தாய் நாடு திரும்பி நாட்டை திருத்தும் வேலைதான். ஆனால் சிவாஜியை மிஞ்சும் தெளிவான புதிய காட்சிகள், அரசியலை நேரிடையாக கிண்டலடிக்கும் நையாண்டி என்று குலுங்க குலுங்க குஷியாக போகிறது திரைக்கதை.

கர்னாடாகாவின் குதிரைப் பேர அரசியலை சந்தி சிரிக்க வைக்கிறார் உபேந்திரா. செட்டி பிரதர்ஸ் என்று இரண்டு பாத்திரங்களை வைத்து கனிமச் சுரங்க கொள்ளை அடித்து அமைச்சரவையில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டி கருணாகர ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்.நம்ம ஊர் என்றால் சென்சார் கத்தரி மொக்கையாகிவிடும் !

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவர் ஒரே இரவில் முதலைமச்சர் ஆகும் விதம், கடந்த இரண்டாண்டுகளாக கர்னாடாக அரசியல் குதிரை பேரங்களை அப்படியே அச்சு அசல் பிரதிபலிக்கிறது.

கார்பரேட் ரவுடியிசம் என்று பிரமாணட கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட், கடன் வசூல், மிரட்டல் என்று மாத சம்பளத்திற்கு ரவுடிகளை கோட் சூட்டுடன் உலவச் செய்தல். அவர்களை மீட்க வெள்ளைக்கார வக்கீல்கள என்று கற்பனையில் ஒரு நிஜத்தை நிறுத்துகிறார்.பன்னாட்டு நிறுவன வருகையினால் நில-பல பேரங்கள் செய்யும் இத்தகைய குட்டி தாவுத்துக்கள் கர்னாடாகாவில் அதிகம். அரசாங்கத்திடம் பணம் கட்டி மிஷின் கன் பாதுகாப்புடன் பந்தா பண்ணும் ”தா(சோ)தாக்கள்” இவர்கள்.

இடையே நயனுக்கும் அவருக்கும் நடக்கும் போட்டி விறுவிறுப்பு. ஒரு ஆழமான வலிமிகுந்த பின்னனியில் நயனுக்கு ஒரு நல்ல பாத்திரம். ஆனால் கொஞ்சம் படையப்பா நீலாம்பரியை நினைவு படுத்துகிறார்.

நம்ம ரஜினிக்கு கச்சிதமாக பொருந்தும் திரைக்கதை. சிவாஜியில் நிறைய சம்பிரதாயங்கள். ஒரிரு நகைச்சுவை காட்சிகள் தவிர மற்ற எல்லாம் ஏதோ ரஜினிக்காக புனையப்பட்ட உணர்வை தரும்.
ஆனால் உபேந்திரா வெகு இயல்பாக அனைத்தையும் செய்கிறார்.கொஞ்சம் பார்த்திபன் கலந்த நக்கல். ரஜினியை போன்றே ஸ்டைல் என காட்சிக்கு காட்சி ரசிகர்களை கட்டிப் போடுகிறார்.

சூப்பர், சிவாஜி போன்ற ஒரு கதை. ஆனால் பிரமாண்ட என்பதில் கதை தொடங்கி இறுதிக் காட்சி வரை ரஜினியை மிஞ்சும் அசத்தல் அதகளம் தான்.சிவாஜியை 60 கோடி செலவில் தயாரித்ததாக விளம்பரம் செய்து முதல் வாரங்களில் 500 ரூபாய் முதல் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.சூப்பர், சிவாஜியை விட பிரமாண்டமாக வெறும் பதிமூன்று கோடியில் தயாரிக்கப்பட்டு 10 ரூபாய் முதல் 300 ரூபாய் ( ஐநாக்ஸ் போன்ற மால்களில் மட்டும் ) வரைதான் டிக்கெட் விற்கப் படுகிறது.

சமூகப் படமெடுத்து சமூகத்தை கொள்ளை அடிக்கும் செயல் இல்லை !

கலை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சமூக அவலங்களையும் தோலுரிக்க வேண்டும்.

சூப்பர் இதனை கச்சிதமாக செய்கிறது.

இன்றைய தமிழக சமூக அரசியல் நிலையில் இப்படம் தமிழில் வந்தால் பெரும் வரவேற்பை பெறும்.ஆனால் ரஜினி மட்டுமெ பண்ணமுடியும்.

ஆப்தமித்ரா பார்த்து அப்படியே சந்திரமுகி செய்தார் ரஜினிகாந்த். சூப்பர் பார்த்து கண்டிப்பாக தமிழில் செய்யலாம்.

உபேந்திராவிற்கும் ரஜினியை இயக்கும் ஆசை இருக்கிறது.

ரஜினிக்கு அடுத்த கதை ரெடி ! ஆனால் ரஜினி ரெடியா ?

Wednesday, December 8, 2010

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !

சுய இன்பம் பற்றி உங்கள் கருத்து என்ன ?

சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?

மிஷ்கின் என்றொரு படைப்பாளி.

மூன்று படங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஒன்று சித்திரம் பேசுதடி
இரண்டு அஞ்சாதே
மூன்றாவதாக நந்தலாலா.

நந்தலாலாவை இணையத்தளங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.சில விமர்சனங்கள் நந்தலாலா, ஜப்பானின் டகேஷி கிட்டானோவின் கிகுஞ்ஜிரோ என்ற படத்தின் தழுவல் என்றும்,பாதிப்பு என்றும் சொல்லித் திரிகின்றன.

பாரதிராஜாவின் வருகைக்கு பின்னர் மண்ணின் மனம் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கால்,வரப்பு,வெள்ளைப் புடவை,தாலி,வேப்பிலை அம்மன் டான்ஸ்,ஆலமரம்,பஞ்சாயத்து, பஞ்சாயத்து சொம்பு, இல்லாத படங்கள் இல்லை.

பாரதிராஜாவின் படைப்புகள் வேறு : இமயத்திற்கு நிகர் இமயமே !

ஆனால் அவரின் பாதிப்பில் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுப்பவர்கள் ஆட்டுக் கொட்டடியில் கதாநாயகியை கதறக் கதற கற்பழித்தல், தக்காளியை தாவணி மீது உருளச்செய்தல், தொப்புளில் பம்பரம்,ஆம்லெட் இத்தியாதிகளை விடுதல்,வயது பெண்ணின் வயிற்றைத் தொடுவதின் மூலம் வயசுக்கு வரச்செய்தல் போன்ற அரிய செயல்களை ஏற்றுகொண்ட நாம் கண்டிப்பாக நந்தலாலா, கிகுஞ்ஜிரோவின் தழுவல் என்றாலும் எற்றுக் கொள்ளவேண்டும்.

யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். நந்தலாலா தமிழ் திரையில் ஒரு முக்கியம் வாய்ந்தப் படம்.

நாம் விவாதிக்கப் போகும் செய்தி அதுவல்ல.

மிஷ்கின் பற்றி. இப்போது கொண்டாடும் இதே ஊடகங்கள் ஒரு மாதம் முன்பு மிஷ்கினை உரித்து ஊறுகாய் போட்டன.நான் மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் என் பிரத்யோக கைப்பேசி எண்ணைக் கூட கண்டுபிடித்து மிஷ்கினுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க குறுஞ்செய்தி விடுத்திருந்தனர்.
காரணம். மிஷ்கின் ஒரு ஊடகத்தின் மூலமாக உதவி இயக்குனர்களை திட்டினார்.

அப்படி என்ன திட்டினார் ?

இன்றைக்கு திரைப்பட ஆசையில் ஓடிவருகிறவர்களுக்கு என்ன தெரியும். நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை. நல்லப் படங்களைப் பார்ப்பதில்லை. வாழ்க்கை அனுபவம் என்ன இருக்கிறது. என்ன ஒரு ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்து இருப்பான். இதை தவிர அவனுக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது . இதுதான் மிஷ்கின் விடுத்த வார்த்தைகளின் சாரம்சம்.

மிஷ்கின் சொல்வதில் ஒரளவு உண்மை இருக்கிறது.

இன்னொரு கோணத்தில் தமிழகத்தில் திரைப்பட உதவி இயக்குனர்களின் அவல நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கிராமத்தில் இருந்து திரைப்பட கனவுடன் வரும் யாரையும் குடும்பம் ஆசிர்வதித்து அனுப்புவதில்லை.அந்தச் சூழலில் சென்னையில் வாழ்வாதாரத்திற்கே பிரச்சனையாக இருக்கும் நிலையில் புத்தகங்கள் வாங்கிப் படிக்க அல்லது திரைப்படங்கள் பார்க்க உதவி இயக்குனர்களுக்கு எப்படிப் பொருளாதாரம் இடம் கொடுக்கும்.இந்த கொடுமையான சூழலிலும் பொது நூலகங்கள், இருப்பவர்களிடம் கடன்வாங்கிப் படித்தல், புத்தகம் வாங்குவது போல் பாசங்கு செய்தபடி புத்தகவிற்பனை நிலையங்களில் நின்றபடி படித்தல் ( ஹி..ஹி..சொந்த அனுபவம் ! ) , தினம் நூறுபக்கம் என்ற கணக்கில் மூன்று நாட்களில் ஒரு புத்தகத்தை படித்துவிடலாம், புத்தகக் கடைகளில் நண்பர்கள் பிடித்துகொண்டு ( ....நான் அடுத்த வருடம் இயக்குனராகி விடுவேன்........ கடைக்காரனை ஒரு கனவில் மிதக்க செய்வது...( உங்களுக்கு தெரியுமா இந்த பையன் நம்ம கடை கஸ்டமர் தான் ...இப்ப பெரிய டைரக்டரா ஆயிட்டான்...!! ) ) என பல்வேறு வழிமுறைகளில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது இயக்குனர்கள் தங்களது உதவியாளர்களின் சம்பளம் பற்றி கண்டுகொள்வதில்லை. இயக்குனர்கள் துறைத் தவிர்த்து பிறத்துறைப் பணியாளர்கள் வேலை முடித்தவுடன் இவ்வளவு ரூபாய் என்று வாங்கிச் செல்கிறார்,ஆனால் உதவி இயக்குனர்கள் ஒரு ஐம்பது ரூபாய் வழிச்செலவு பெற தலை சொறிந்து நிற்கவேண்டிய நிலை.

இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

அண்ணன் மிஷ்கின் போன்ற வெற்றி பெற்ற இயக்குனர்கள் இணைந்து நல்ல புத்தகங்கள் மற்றும் உலகத் திரைப்பட குறுந்தகடுகள் கொண்ட ஒரு நூலகத்தை வருங்கால இயக்குனர்களுக்கு அமைத்து கொடுக்கலாம்.

திரைப்படம் சார்ந்த மற்ற சங்கம் போன்று ஒரு படத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு சம்பளத்தை வாங்கித் தருவதில் கடுமை காட்டவேண்டும். இயக்குனர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு முறையாக சம்பளம் தரவேண்டும்.

இதையெல்லாம் செய்துவிட்டு,மிஷ்கின் போன்றவர்கள் தேடும் உதவி இயக்குனர்கள் கிடைக்கவில்லையெனில் கண்டிப்பாக மேடைப் போட்டு கோபத்தை வெளிப்படுத்தலாம்.

படைப்பாளி உணர்ச்சி வசப்படலாம். ஆனால் அவனை படைப்பாளியாகவே அந்த உணர்ச்சி வைத்திருக்கவேண்டும். மிஷ்கின் விவகாரம் ஏதோ அரசியல் கட்சி மேடைப் போல மாறிவிட்டது.

சரி இன்னொன்றையும் மிஷ்கின் கூறினார். அது சுய இன்பம் பற்றி.

ஆமாம் சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?

நவீன மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள். அது ஒரு இயல்பான விஷயம். அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.வித்து சக்தி எவ்வளவுதான் வெளியானாலும் மீண்டும் இரத்தம் போல் சுரந்துவிடும்.

எந்தத் தொலைக்காட்சியை திருப்பினாலும் கண்டிப்பான சித்தப்பா மனோபாவத்தில் பளபளப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒப்பனையோடு இருட்டு விவகாரங்களைத் திட்டும் இந்த சித்த வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்.

சுய இன்பம் தவறு !

சரி அறிவியல் மற்றும் உளவியல் என்ன சொல்கிறது.

நான் யோக பயிற்சி தர சென்றாலும் உளவியல் பயிற்சிக்குச் சென்றாலும் அங்கு வரும் பெரும்பாலானவர்களின் ( பெண்களும் தான் ) என்னிடம் கேட்கும் சந்தேகம் சுய இன்பம் பற்றியோ அல்லது பாலுணர்வு குறித்தோ இருக்கும். நேரிடையாக கேட்கமுடியாவிட்டாலும் கேள்வி ஒரு துண்டு சீட்டில் வந்து சேரும்.அவர்களின் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கு சுய இன்பம் தான் காரணம் என்ற குழப்பத்துடன் பேசுவார்கள்.

சரி சுய இன்பம் சரியா ? தவறா ?

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது வித்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது. ஆமாம்...! வித்து சக்தி என்றால் என்ன ? அது எப்படி உருவாகிறது ?

நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம்,இரத்தம்,மாமிசம்,கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும்போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.

தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். நீலப்படம் பார்க்க தூண்டும். பாடப் புத்தகங்களின் அட்டையில் நமீதாவையோ நயன்தாராவையோ ஒட்டச்சொல்லும். பெண்களுக்கு சூர்யாவுடனோ அல்லது ஆரியாவுடனோ கனவுக் காட்சியில் ஆடச் சொல்லும். ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து,எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில் ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர்கொண்ட ஒரு அனுபவம் தான். இதில் யோகிகளும் விதிவிலக்கல்ல. இது இயல்பானது.

சரி ! இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம்தான் சுய இன்பம்.

நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று !

ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக்குழம்பை வெளியேற்றும் அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவதுதான். !

ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது,புகை போன்ற பழக்கம் இருந்தால், சாப்பிடும் உணவில் உற்பத்தியாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது,புகையால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே சரியாகும். மீது உயிர்சக்தி என்னதான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்துபோன தன்மையிலேயே இருக்கும்.

வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மனவலிமைக் கூடும்.வித்து குழம்புதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும்.உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.

வித்து சக்திக் குறையும் போது சோம்பல்,அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி,உடல் நடுக்கம்,நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும், ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும்.இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.

தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும் போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும்.ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும் போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும்.ஹி..ஹி...!

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?.

அடடா ! உடனே குழம்பி போய் கவலையுடன் நிற்கவேண்டாம்.

இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர்,மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. அதனால் தான் ஆண்-பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத்தார்கள். அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற,இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம்.

பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமையிழந்தால் பொண்டாட்டியை கூட ஆளமுடியாது !

அது எப்படி?என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது.அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது?

நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகிவிடுகிறதே என்ன செய்வது ? உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது.

கவலைவேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. வீரத்துறவி விவேகானந்தருக்கே இது பிரச்சனையாக இருந்திருக்கிறது.பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கிவிட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது. விவேகானந்தரை விடுங்கள், நம்ம நித்யானந்தா ரஞ்சிதா சமாச்சாரம் உலகிற்கே தெரியுமே. கேரளாவின் கன்னியஸ்திரிகள் கதைகள் இப்பொது நாவலாகவும் கிடைக்கின்றது.

இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும்.

பாலுணர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக்கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமைப்படும்.

உணவுமுறையில் ஒழுக்கம்.உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம்.(Alcohol Increase the Sexual Desire: But not the pleasure).முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப்படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும்.விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார்.மீன் உணவிலும் பிரியம் கொண்டிருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்திருக்கலாம்.

உணவிற்கு அடுத்தபடியாக தனிமையை தவிருங்கள்.பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும். முக்கியமாக கிளர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பதை தவிர்க்கலாம்.

எது என்னவென்றாலும், எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்?
ஒரு சங்கல்பத்தை “இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல் ; இதில் இருந்து விடுபடுவேன்,என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன்” என்று தினந்தோறும் விழிக்கும்போது எடுத்துக்கொள்ளலாம். இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளையாகவே பதிந்து உங்களைக் காக்கும்.

இன்னொன்றும் இருக்கிறது. அது தான் காயகல்பம் என்றொரு யோகமுறை.

காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக்காப்பதில் உறுதுணைப்புரிகிறது.

சிவவாக்கியர் என்னும் சித்தர் காயகல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.

“உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே “


காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும்போது மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது அதன் சாரம்சம்.

காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி,வித்துசக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். உடலில் வித்து சக்தி மிகும்போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வரமுடியும். இதன் மூலம் வித்தில் நீர்ப்புத் தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும்.

காயகல்பம் என்பது மருந்துகடைகளில் கிடைக்கும் மருந்தல்ல அது ஒரு பயிற்சி. எனக்குத் தெரிந்து உலகில் ஒரே ஒரு யோக மையத்தில் மட்டுமே அது பயிற்றுவிக்கப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள். அதுதான் வேதாத்ரி மகரிஷி குண்டலிணி யோக ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை. இணையம் : www.vethathiri.org.

தமிழ் படைப்பாளிகள் ஒரு வெற்றிக்கு பின்பு தங்களை உலகை காக்க வந்த ஆபத்பாந்தவனாக காட்டிக்கொள்ளும் மோகம் அதிகரித்துவருகிறது.தயிப் லவுச்சிச்சி ( Taib Louchichi ) என்றொரு துனிஷிய இயக்குனரை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைத் திரைப்பட விழாவில் சந்தித்தேன். WIND DANCE என்ற அற்புதமான படத்தை கொடுத்தவர்.அவரிடம் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் நணபர்கள் மத்தியில் உரையாற்ற கேட்டபோது,அவரின் பதில் இது “ நீ ஒரு நல்ல படைப்பாளி என்றால் பேசாதே ! செய் ! படைப்பாளி பேசக்கூடாது. அவன் படம் மட்டும்தான் பேசவேண்டும். பேசும் நேரத்தில் இன்னொரு படம் பற்றி சிந்திக்கலாம்” என்றார்.

அண்ணன் மிஷ்கின் நந்தலாலா மூலம் பேசப்படும் படத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் பேசும் போதே இப்படி என்றால், பேசாமல் படைத்தால் எப்படி இருக்கும் ? அண்ணன் மிஷ்கின் அவர்களே உங்கள் மீதான விமர்சனங்களுக்கு நந்தலாலா நல்ல பதில்.

இனி நீங்கள் பேசாதீர்கள். உங்கள் படைப்புகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.

Tuesday, December 7, 2010

கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் ! (கண்டிப்பாக )

கல்யாணமானவர்களுக்கான சமாச்சாரங்களை கல்யாணம் ஆகாதவன் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான செயல்தான், இருந்தாலும் சில தகவல்களை அறிந்துகொண்டு தெரிவிக்க கல்யாணம் ஆகியிருக்க தேவையில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

கைப்பேசியில் ஜல்லி அடிப்பதென்றால் எனக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது மாதிரி.அதுவும் என் தாய்த்தமிழ் இளம்பெண்களிடம் வறுபடுவது என்றால் எனக்கு திகட்ட திகட்ட கொண்டாட்டம்தான்.

நான் அதிகம் வம்பளப்பது என்னைவிட புத்திசாலிப் பெண்களிடம்..ஹி..ஹி..காரணம் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்கும் என்பதில் நம்பிக்கை.பொது அறிவை வளர்க்க என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எனது பள்ளிப் பருவத் தோழி ப்ரியா.மருத்துவக்கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படித்துகொண்டே ஒரு சிறிய தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகிறார்.வாரம் ஒருமுறையாவது தொலைபேசி விடுவார். சமீபகாலமாக அவ்வளவு பேசுவதில்லை.நம்மிடம் பேசாமல் அவருக்கு அப்படியென்ன வேலை. ஒரு பரபரப்பான காலையில் ப்ரியாவை தொந்தரவு செய்தேன்.

“இல்லை ராஜ் ! இப்ப என்னை Maternity Ward - ல போட்டுட்டாங்க அதனால நேரம் காலம் பார்க்காம வேலை செய்யவேண்டியதா இருக்கு. ஒருநாளைக்கு குறைந்தது பத்து சிசேரியன் நடக்கிறது, இதில் எங்கிருந்து நேரம் இருக்கிறது உன்னிடம் கதைக்க” என்றார்.

“ பத்து சிசேரியனா ? அப்படினா உங்கள் மருத்துவமனையில் தினம் எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றன” ஆவலுடன் கேட்டேன்.

“என்ன பத்தில் இருந்து பதினைந்து வரை...”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறக்கும் மொத்தக் குழந்தைகளிலோ, அல்லது ஒரு எழுபது சதவீதம் குழந்தைகளோ சிசேரியன் என்றால் குழந்தைப் பிறப்பு அவ்வளவு சிரமமா ?

“இல்லை ரொம்ப ஈசி ? கொஞ்சம் மயக்கமருந்து கொடுத்து அம்மாவை தூங்கசொல்லிவிட்டு ,பத்து ரூபாய் பிளேடில் கீறினால் போதும் ! வயிற்றில் உதைத்து கொண்டிருந்த பாப்பா கைகளில் உதைக்கும்” என்று பிரியா சொன்ன விதம் ஏதோ பிளேடு பக்கிரி தான் பிக்பாக்கெட் அடித்த கதையை சொல்வதுபோல் தோன்றியது “

“ஹூம்...! என்ன செய்வது குழந்தைபிறப்பு இயற்கையாக நடந்துவிட்டால், வெறும் மூன்று நாட்களில் வீட்டிற்கு திரும்பலாம். மருத்துவமனை செலவு இரண்டாயிரமோ அல்லது மூன்றாயிரமோ தான் வரும், சிசேரியன் என்றால் குறைந்தது இருபத்தைந்தாயிரமாவது மொய் எழுதவேண்டியிருக்கும்....பத்து சிசேரியன் என்றால் குறைந்தது ஒருநாளைக்கு இரண்டரை லட்சம்....அட நல்லாதான் யாவாராம் பண்றீக” என்று நக்கலடித்தேன்.
பிரியாவுக்கு மூக்கு மேல் கோபம் வந்தது.

“ ஹலோ மிஸ்டர்....என்னம்மோ நாங்க துட்டுக்காக Cut and Paste பண்ணுவது போல Build up செய்யறீங்க...இப்ப பாதி பொம்ளைங்க Condition சிசேரியன் பண்ற அளவுல தான் இருக்கு....இல்லை மீதி பேரு....வலிக்கு பயந்துட்டு சிசேரியன்ல குழந்தைப் பெத்துக்கவே விரும்பறாங்க…” ( 10.10.10 தேதியன்று உலகின் 80% பிறப்பு சிசேரியனாம் ) என்று போனில் பொறிந்த பிரியாவின் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்துபார்க்க என் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

சிசேரியன் என்கிற சி செக்‌ஷன்,இயற்கையான பிள்ளைபேறு தடையாகி, ஆபத்தான சூழலில் கைகொடுக்கும் ஒரு நவீன மருத்துவமுறை. ஆனால் அது இப்போது ஒரு நாகரீகமாகவே மாறிவருகிறது. ஆம் ! எனக்கு சர்க்கரை இருக்கிறது ! இரத்தகொதிப்பு இருக்கிறது ! நேத்துதான் பைபாஸ் பண்ணி பழம் கொடுத்து அனுப்பினார்கள், என்று பேசுவது எப்படி பெருமையோ, அதே போல எனக்கு சிசேரியன் என்று சொல்லிக் கொள்வதும் பெருமையான விஷயமாகிவிட்டது.

இந்தியாவில் சுமார் 18- 25% பிறப்புகள் சிசேரியன் என்றாலும்,சில நாடுகளில் 50 -50% பிஸ்கேட் அளவிற்கு சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை எப்படிக் குறைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். மார்கரெட் சேன்.

சிசேரியன் தேவைப்பாடாத சூழலில் வலுக்கட்டாயமாக செய்வது இரண்டு விதத்தில் பாதிக்கும். ஒன்று தாயின் ஆரோக்கியம் கெடும். இரண்டு பிறக்கும் பிள்ளையின் உளவியலை பாதிக்கும். அதாவது குழந்தை பிறக்கும் காலம் நெருங்கும்போது உள்ளுணர்வாக அதன் வெளியேறும் பாதையை பற்றி உணர்ந்து,நாம் இப்படி தான் வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்,திடீரென பிளேடு போட்டு பாதையை மாற்றினால் வயிற்றில் இருக்கும் பச்சைபிள்ளைக் குழம்பிபோகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற முரண்பட்ட எண்ணம் அங்கே உருவாகும். மேலும் பிரசவ காலத்தில் தாயின் வேதனைகள் ஒரு அலை இயக்கமாக குழந்தைகள் மனதில் பதியும்.மேலும் C-Section பண்ணும்போது பயன்படுத்தபடும் ஆயுதங்கள், பூ போல வர வேண்டிய குழந்தைக்கு ஒரு மிரட்சியான உணர்வை தந்து மிரட்டும். இப்போது சொல்லுங்கள் உங்கள் செல்லக் குழந்தை உளவியல் ரீதியாக பயப்பட உங்கள் தாய்மை உணர்வு அனுமதிக்குமா?

“..........................................?!!!!! ”

கவலைபடாதீர்கள் ! என்னிளம் தாய்மார்களே....உங்களை இந்த கவலையில் இருந்து மீட்க வருகிறது ஹிப்னோபர்த்திங் என்றொரு உளவியல் பயிற்சி.

அதென்ன ஹிப்னோபர்த்திங்....?.

“ஹய்யா பிள்ளை இனி நாங்க பெத்துக்க தேவலையா? ”என்று குதிக்கும் இளம் தோழிகளே ஒரு நிமிடம்...!..நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளையை நீங்கள்தான் பெற்றுதரவேண்டும்..! ஆனால் குறைந்த வலியோடு நிறைந்த ஜாலியான அனுபவமாக,அதாவது பிள்ளையார் கோயிலுக்கு சென்று சுண்டல் வாங்கி சாப்பிடுவது எப்படி சுலபமோ அத்தனை சுலமாக....? இல்லை ! இல்லை! சுகமாக அத்தனை சுலமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் நுட்பம்தான் ஹிப்னோபர்த்திங்.

அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும். நாலைந்து பிள்ளை பெற்ற பெரிய மனுஷிகள் நாலு பேர் இருப்பார்கள்.அதைவிட பழம் தின்று கொட்டை போட்ட பாட்டி என்ற ஒரு உறவு இருக்கும்.கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது,இந்த சொந்த பந்தங்கள் சூழ்ந்தகொண்டு சொந்த கதை சோகக் கதையோட பத்து பிள்ளை பெத்த கதையும் சொல்லி திரியும். புதிதாக கருத்தரித்த பெண்கள் இந்த கதைகளை அதில் உள்ள சவால்களை கேட்டுகொண்டு வரும்போது உளவியல் ரீதியாக பிள்ளை பேறுக்கு தயாராகிவிடுவார்கள். அந்த பரவசமான அனுபவத்தை உணரவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும். மேலும் பிரசவங்கள் பெண்கள் பிறந்த வீட்டில் நிகழ்ந்தன.ஏனெனில் முன்பின் தெரியாத மருத்துவமனை சூழலில், பிள்ளை பெற்றுக் கொள்வதை விட வீட்டில் பெண்களின் மனோநிலை மிக இளகுவாக இருக்கும். குழந்தை எந்தவிதமான சிரமும் இன்றி வெளியேறி விடும் காலப்போக்கில் வீட்டில் நிகழும் பிரசவங்களில் சரியான அனுபவமின்றி அணுகியதால் உயிரழப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்பு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பு என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டுக் குடும்ப உறவுகள் முறிந்தபின் பெரும்பாலும் தனிமைதான்.இறுக்கமான மனநிலை,மற்றும் தேவையற்ற தகவல்களை மனதில் போட்டு உளைத்துகொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வர, பிள்ளைப்பேறு கடினமான ஒன்றாகிவிட்டது.

சரி இது வர்த்தக உலகம். இதில் என்ன செய்யமுடியும் !

எளிதான பிள்ளைப்பேறுக்கு யோகாவெல்லாம் இருக்கிறதே என்கிறீர்களா ? அதைவிட மிகவும் சுலபமான உளவியல் முறைதான் ஹிப்னோபர்த்திங்.

பிரசவங்களின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம், பிரசவத்தை பற்றிய தேவையற்ற அச்சம்,தவறான தகவல்களை ஆழ்மனதில் பதிந்து கொள்வது. தேவையற்ற குழப்பங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் மன அழுத்தம்தான்.

சரி...! ஹிப்னோபர்த்திங்கில் என்ன நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிப்னோபர்த்திங் பயிற்சி தருவதில் முன்னனி வகிக்கும் உளவியல் சிகிச்சை நிபுணர் திருமதி.அனுராதா ஜெயச்சந்தர் ( info@basixinc.org ) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல் மனம், இதனை (Conscious Mind ) என்றும், இரண்டாவது ஆழ்மனம் (Sub Conscious Mind ).மேல் மனம் எப்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல் படும்.எது செய்தாலும் நூறு கேள்வி கேட்கும். இப்படி கேள்வி கேட்பதும் அதீத எச்சரிக்கை உணர்வும் சில நேரங்களில் இயல்பான பிள்ளை பேறுக்கு தடையாகிவிடும். அதாவது குழந்தை வெளியேறும் போது அதன் பாதை இலகுவாகி வழி விட வேண்டும்.மனம் இறுக்கமாகும் போது பாதை இறுக பிள்ளை பேறு சிரமமாகிவிடுகிறது.

ஏன் எனில் காலம் காலமாக பிள்ளை பேறு பற்றி கேள்விப் படும் தகவல்கள், பார்த்த அனுபவங்கள் உங்கள் மேல் மனதில் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்கி அதனை ஆழ் மனதில் பதிய செய்கிறது. ஆழ்மனதில் பதியபட்ட அச்சம் தான் இத்தகைய வலிமிகு பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் காரணம்.

ஆனால் ஆழ்மனதின் ஒரு ஆச்சர்யதக்க இயல்பு என்னவெனில் அதில் நீங்கள் ஒரு நம்பிக்கையான பதிவை ஏற்படுத்திவிட்டீர்கள் எனில், அது கேள்வி கேட்காமல் சொன்னதை செய்யும்.
உதாரணமாக ஹிப்னோ பர்த்திங் பயிற்சியின் போது இந்த ஆழ்மனதில் குழந்தை பேறு, குழந்தை , உறவுகள் பற்றி மகிழ்ச்சியான மற்றும் மென்மையான தகவல்கள் பதியப்படும். தொடர் பயிற்சியில் வயிற்றில் உள்ள குழந்தையோடு தாய் பேசவும், அதற்கு குழந்தை ஒத்துழைப்பதையும் அனுபவப்பூர்வமாக உணரமுடியும் பிரசவகாலத்தில் அதே உணர்வோடு குழந்தையோ மானசீகமாக உரையாடி வலியின்றி,சிரமமின்றி வெளியே கொண்டு வரமுடியும்.

ஹிப்னோபர்த்திங் உளவியல்ரீதியான ஒரு அணுகுமுறை.இப்பயிற்சி பல்வேறு நிலைகளில் மனோவசிய நுட்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

முதல் நிலை : தேவையற்ற எண்ணங்களை போக்குவது ( De Conditioning the Mind ).கருவுற்ற தம்பதிகளிடம் பேசி அவர்கள் மனதில் கர்ப்பம் பிள்ளைபேறு பற்றிய அச்சம் மற்றும் சந்தேகங்களை ஹிப்னோஸிஸ் மூலம் நீக்குவது.

இரண்டாவது நிலை : எண்ணத்தை நெறிப்படுத்துவது ( Re Conditioning the Mind ) கர்ப்பம் குறித்து ஆரோக்கியமான எண்ணங்களை மனதில் பதியசெய்வது.

மூன்றாவது நிலை : மூச்சு பயிற்சி உட்பட எளியமுறையில் உடல்வலிமை காக்கும் பயிற்சிகள்.

நான்காவது நிலை : வயிற்றில் உள்ள குழந்தையுடன் மானசிகமாக பேசுவது. நாம் புராணக்கதைகளில், அபிமன்யூ சக்கரவியூகம் பற்றி அறிந்த கதை படித்துள்ளோம் அல்லவா அதுபோலதான் இதுவும். ஆச்சர்யத்தக்க செய்தி என்னவெனில் நீங்கள் மானசீகமாக பேசத்தொடங்கிய சில நாட்களில் உங்கள் செல்லபிள்ளை நீங்கள் சொல்வதை கேட்பதை அசைவின் மூலம் உணரமுடியம். கதையல்ல நிஜம்...உங்கள் குரல் அல்லது உங்கள் கணவரின் குரலை கேட்கும்போது வயிற்றில் குழந்தையின் அசைவின் மூலம் அதன் செயல்பாட்டை உணரமுடியும்.

ஐந்தாவது நிலை : மனோவசியகலையில் சுயவசியம் என்று ஒரு நுட்பம் உள்ளது. குறிபிட்ட முறையில் உங்கள் ஆழ்மனதை அறிந்து உங்களுக்கு தேவையான கட்டளைகளை தரமுடியும். ஏறக்குறைய நாம் தியானம் செய்து சங்கல்பம் மேற்க்கொள்வது போலதான். சுயவசிய முறையில் ஒரு கற்பனை பிள்ளை பேற்றை நீங்களே பாவனையில் அனுபவிக்கவேண்டும். அவ்வாறு அணுகும்போது அது எத்தனை சுலமாக அமையவேண்டுமோ அத்தனை சுலபமான நிகழ்வாக பாவனை செய்யுங்கள். நீங்கள் தரும் கட்டளைதான் உங்கள் ஆழ்மனம் செயல்படுத்தும்.

கவலைவேண்டாம் மேற்கண்ட நான்கு பயிற்சிக்கு பின் உங்கள் மனம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் என்பதால்,பாவனையான பிள்ளைபேற்றில் ஆழ்மனதில் ஆரோக்கியமான பதிவை மட்டுமே செய்யும்.

ஒரு குழந்தை வெளிவரும் போது சிரமமின்றி ஒரு இணக்கமான சூழலில் தாயின் மனம் இருக்கும்போது, குழந்தை இயல்பாகவே மனவலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.ஹிப்னோபர்த்திங் மூலம் பிறக்கும் குழந்தைகள், சாதாரணமான முறையில் பிறக்கும் குழந்தைகளைவிட கூடுதல் அறிவுக் கூர்மையுடன் இருக்கும்.வயிற்றில் இருக்கும்போதே தாய் தன் குழந்தையுடன் உரையாட தொடங்கிவிடுவதால்,குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் சமர்த்தாக இருக்கிறது என்கிறார்கள் பிள்ளைப் பெற்றவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த ஹிப்னோ பர்த்திங் முறை இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நுட்பத்துடன் இந்தியாவின் பாரம்பர்யமான யோகமுறைகளையும் இணைத்து பயிற்சி தருவதால் வெளிநாட்டினரும் இங்கே படையெடுக்கின்றனர்.

குழந்தைகள் உலகின் எதிர்கால நட்சத்திரங்கள்.குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு திட்டமிடல் வேண்டும். “SUNDAY- னா ரெண்டு” என்ற அலைபாய்ந்துவிட்டு MONDAY வில் இருந்து ஓய்ந்துவிடக்கூடாது. குடும்பவாழ்க்கையை தேர்ந்தெடுத்தபின் எதிர்கால ஆரோக்கியமான நிர்மாணிக்கும் பொறுப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

நீங்கள் உங்கள் வாரிசை உருவாக்கவில்லை, தேசத்தின் ஏன் உலகின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் !

Friday, November 26, 2010

நிற்கையில் நிமிர்ந்து நில் !

எண்ணத்தின் ஆற்றல் என்ன ?

நெல்லை அருகே பத்தமடையில் பிறந்து இமயம் வரை ஆன்மிக கோலோச்சியவர் சுவாமி சிவானந்தர்.சுவாமி என்பது அடையாளம் அல்ல. அது ஒரு அடைமொழி அன்பின் மிகுதியால், ஆன்மிக வலிமைப் பெற்றவர்களுக்கு தரும் அடைமொழி.

சிவானந்தர் எண்ணம் என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்."எண்ணம்தான் உலகின் வலிமையான ஆயுதம். எண்ணம் வினாடிக்கு சுமார் 1,36,000 மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. உதாரணத்திற்கு இந்த பூமி பந்தை எடுத்துக்கொள்வோம். சுமார் 25000 மைல் விட்டம் உடையது. ஒரு எண்ணத்தை விதைக்கிறீர்கள் எனில்,நீங்கள் நினைக்கும் எண்ணம் ஒரு வினாடியில் இந்த பூமியை சுமார் ஆறு முறை சுற்றி வரும்".

எண்ணத்தைவிட வேகமாக பாயும் துப்பாக்கித் தோட்டாக்கள் இருக்கிறதா ?

எண்ணத்தின் வேகத்தை விஞ்சும் ஏவுகணை இருக்கிறதா ?

எண்ணத்தை விட உறுதியாக தாக்கும் ஆர்டிலறிகள் இருக்கிறதா ?

இன்றைய உலக நிகழ்வுகளுக்கெல்லாம் அடிப்படை எண்ணம்.

அது தனிமனித எண்ணமாக இருக்கலாம்.

ஒரு குழுவின் எண்ணமாக இருக்கலாம்.

எண்ணம் தான் உலகை ஆட்டிப் படைக்கின்றது.

இன்று தமிழீழ மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது.

தமிழர்கள் மீதும் தமிழீழத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடிக் கணக்கான மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது.

நவம்பர் 26

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈழமே கொண்டாடி மகிழ்ந்த திருநாள்.

ஆனால் இன்று?

ஈழத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நெஞ்சில என்ன இருக்கிறது.

எல்லோரின் மனதிலும் ஒரு வேதனை.

ஒரு வலி !

ஒரு விரக்தி !

ஒரு இனம் புரியாத அழுத்தம் !

கண்ணுக்கு முன்னே ஒரு இருள்.

மொழி தெரியாத தேசத்தில் வழித் தெரியாமல் மாட்டி கொண்ட பயணிபோல் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்றது அனைவரின் எண்ணமும.

யார் எத்தகைய ஞானம் பெற்று இருந்தாலும், வலிமையான மனம் படைத்தவராயினும் இந்த ஒரு நிகழ்வில் கலங்கிதான் போய் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்படி நினைத்து பாருங்கள்.எண்ணம் சற்று தடுமாறி தான் போயிருக்கிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்.

யார் சொல்வதை நம்புவது..?

நம்பிக்கைக்கு உரியவர்களாக தோன்றியவர்கள் இன்று துரோகிகளாக மாறிவிட்டனர்.

நிமிடத்திற்கு ஒரு மாறுபட்ட செய்தி வருகிறது.

மனம் எதை நம்புவது.

மனம் நம்புவதை தான் எண்ணம் செயல்வடிவம் கொடுக்கும்.

மனம் விரக்தியில் குழப்பத்தில் பல்வேறு சிந்தனைகளுடன் இருக்கும் போது எதற்கு செயல்வடிவம் தருவது ?

மேதகு பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? இதுதான் இன்று பெரிய கேள்வி.

இன்றைய நிலையில் பிரபாகரன் திடீரென்று தோன்றினால் அவரால் முன் போல் உடனடியாக ஒரு போராளிக் குழுவை கட்டமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

இது மற்றொரு கேளவி ?

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை பிறகு பார்க்கலாம்.

அவரின் இலக்கு, இலட்சியம்,சிந்தனை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த சிந்தனை வான் காந்தத்தில் எண்ணற்ற மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் வரும் போது வரட்டும். அதுவரை நம் இலக்கான தமிழீழம் என்பதில் இருந்து மனம் சற்றும் குழப்பமாக சிந்திக்க கூடாது.

எண்ணம் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் அந்த ஆயுதத்தை பயன்படுத்தி தமிழீழம் காண்போம்.

எட்டு கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இவ்வுலகில், 150-ற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் முழக்கம் நடைபெறும இன்றைய நிலையில் இந்த மக்களின் எண்ணத்தை ஒருங்கிணத்தாலே போதும் கத்தியின்றி இரத்தமின்றி தமிழீழம் மலரும்.

இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது.

மகாத்மா காந்தி அகிம்சையை நம்பினார்.

சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதத்தை நம்பினார்.

ஆனால் மகாகவி சுப்ரமண்ய பாரதி எண்ணத்தை நம்பினார்.

1947 ஆகஸ்ட் 15 - ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அதற்கு முன்பு சரியாக பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாடினார்.

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”

அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இந்த பாடல் ஒரு கிளர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கியது.

இந்த பாடலை உச்சரிக்கும்போதெல்லாம் மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாகவே கற்பனையில் சஞ்சரித்தனர்.உண்மையிலும் நம்பினர்.இப்பாடல் எண்ணற்ற தமிழர்கள் இந்திய விடுதலை வேள்வியில் பங்கேற்க உறுதுணை புரிந்தது.

காரணம் எண்ணம்.

எண்ணத்திற்கு எதுவும் தெரியாது.

அது ஒரு கிளிப்பிள்ளை. அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதை செயல்படுத்தும்.

எண்ணத்தினால் முடியாதது எதுவுமில்லை எண்ணத்திற்கு அப்பாலும் எதுவுமில்லை.

தமிழீழத்திற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றுதான்.

நம் எண்ணத்தை நம்ப வைப்போம். எண்ணத்திடம் வலிமையாக சொல்வோம் நாம் தமிழீழம் பெற்றுவிட்டோம் என்ற ஆனந்தமானச் செய்தியை.

சரி எண்ணத்தை எப்படி நம்பவைப்பது.

மிக சுலபம்.

உங்கள் எண்ணம் நீங்க சொல்வதை நம்பாதா என்ன ?

ஒரு சிறு உளவியல் பயிற்சி அல்லது தவம் அல்லது தவத்தின் மூலம் இது சாத்தியம்.

தவம் என்றே சொல்லுவோம்.

ஆம்..! தமிழீழ தவம்.

எப்படி செய்யலாம் தமிழீழ தவம்.

சத்தமில்லாத ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.அறையில் மெல்லிய வெளிச்சம் இருக்கட்டும்.நல்ல காற்றோட்டம் பரவட்டும். குளிர்சாதன இயந்திர ஓசை, ஏன் மின் விசிறியின் ஓசையைக் கூட நிறுத்திவிடுங்கள்.

அறைக்குள் ஒரு நிசப்தம் பரவுவதை உணருங்கள்.

இப்போது ஒரு அமைதி பரவுகிறது.

உங்கள் உடல் முழுவதும் கவனியுங்கள்.

அமைதி.!..அமைதி.!..எங்கும் ஒரு அமைதி பரவுகிறதை நாம் உணர்கிறோம்.

இப்போது மெதுவாக கண்களை மூடிக்கொள்கிறோம்.


நம்மை சுற்றி ஒரு இருள் பரவுகிறது.

உடலையையும் சுற்று சுழலையும் கவனிக்கிறோம்.

அமைதி ! எங்கும் அமைதி !

கொஞ்சம் நேரம் நம்மைச் சுற்றியுள்ள அமைதியையே கவனிக்கிறோம்.

ஆஹா என்ன அமைதி ! என்ன ஒரு ஆனந்தம். அந்த அமைதியின் ஆனந்தத்தை கொஞ்ச நேரம் அனுபவிப்போம்.

அப்படியே உங்கள் கண்களை மூடிக்கொண்டே இருப்போம்.

நாம் இப்போது தமிழீழ தவம் செய்கிறோம்.

தேவையற்ற எந்த சிந்தனை வந்தாலும் அதனை ஒரு புன்னகை மூலம் வழியனுப்புவோம்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம் !
வெல்க தமிழீழம் !

இதோ “ நான் தமிழீழ தவம் செய்கிறேன்...தவம் தவிர வேறு எதுவும் இப்போது எனக்கு தேவையில்லை...நீங்கள் செல்லுங்கள்....வாழ்க வளமுடன் “

சிந்தனையை தமிழீழ தவத்தின் மீதே செலுத்துகிறோம்.

கவனத்தை நம் மூச்சின் மீது செலுத்துகிறோம்.

நம் மூச்சையே கவனிக்கிறோம்.

வாழ்க வளமுடன் !
வெல்க தமிழீழம் !

மெல்ல மெல்ல.....


நமது எண்ணத்தால் கற்பனையில் ஒரு பாவனையில் நாம் விரும்பும் தமிழீழத்தை வடிவமைக்கிறோம்.

நம் தமிழீழத்தில் என்ன வேண்டும்..நாம் விரும்பும் தமிழீழம் எப்படி இருக்கவேண்டும் ?

இதோ....தமிழீத்தில் நாம் இருக்கிறோம் !

காதலும் வீரமும் விளையும்....

தமிழர்தம் பெருமை பேசும்...

தேமதுர தமிழோசை ஒலிக்கும் தமிழீழம்.

உலகின் முழுமையான தமிழ் பேசும் ஒரே நாடு.

தேசியத் தலைவரின் பிறந்த நாள் இன்று.

தமிழீழம் முழுவதும் கோலாகலப்படுகிறது.

சாலையெங்கும் மாவிலைத் தோரணங்கள்.

மா பலா வாழை என முக்கனிகளில் சாரங்கள்.

அரிசி மாவுக் கோலங்கள் வீதியெங்கும் அலங்கரிக்கின்றன.

கொஞ்சும் தமிழ் இளம் பெண்கள் பாரம்பரிய தேசிய உடைகளில், தாவணிகளில், சேலைகளில், வளையோசை குலுங்க குலுங்க...வலையோசையின் இன்னிசையை மிஞ்சும் குதுகலமுடன், சலசலக்கும் குயிலோசை சிரிப்பில் வீதியெங்கும் வளம் வருகின்றனர்.

வலிமைமிகு கட்டிளங் காளைகள் நிமிர்ந்த நன்நடையுடன், தோள்களை உயர்த்தி, தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கம்பீர பார்வையுடன் வீர நடைப் போட்டு வருகின்றனர்.
சங்கே முழங்கு...! என வீரமிகு தமிழிசை பாடல்கள் வீதியெங்கும் ஒலிக்கின்றன.

எம் தமிழர் பாரம்பர்யம் பருக, உலக நாகரிகத்தின் தொன்மை உணர இதோ பன்னாட்டு மக்களும் மகிழ்வுடன் உலா வருகின்றனர்.

விருந்தொம்பல் பண்பின் அழகாம் எம் மக்கள் இதோ பன்னாட்டு குடிகளை போட்டி போட்டு கொண்டு தத்தம் வீடுகளுக்கு வரவேற்று பண்பாடு போற்றுகின்றனர்.

வானொலிகளும், தொலைகாட்சிகளும்,ஊடகங்களும் தமிழிசைய நற்றமிழ் உரைகளை காற்றில் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

உலகின் ஒரே முழுமையான தமிழ் தேசமான தமிழீழம் உலக வரைபடத்தில் ஒரு மணி மகுடமாக திகழ்கிறது.

எம் மக்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

எம் மக்கள் தொழில்நுட்பத்தில் முடிசூடுகின்றனர்.

எம் மக்கள் அன்பில் விருந்தோம்பலில் மகிழ்கின்றனர்.

எம் மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, துன்பங்கள் இன்றி இதோ மகிழ்ச்சியுடன் வாழுகின்றனர்.

காணும் இடமெல்லாம் பசுமைச் சோலைகள்.

உலகின் ஒரு முன்னனி தேசத்தில் இருக்கிறோம்.

சூற்றுச் சுழல்களுக்கு கேடு செய்யாத கட்டிடங்கள்.

காவல்துறை கட்டாயத்துறை அல்ல மக்களின் வழிகாட்டி.

தமிழீக வங்கிகள் தமிழினத்தின் செல்வ செழிப்பை உணர்த்துகின்றன.

உலகவரைபடத்தில் தமிழிர்களின் முழுமையான நாடு தமிழீழம் இதோ உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது.

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெல்க !

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெல்க !

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெலக் !


ஆஹா! இந்த ஆனந்தமயமான காட்சிகளை சில நிமிடங்கள் அனுபவிப்போம்.

கண்முன்னே எத்தகைய தடை வந்தாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோம்.

வாழ்க தமிழீழம்
வெல்க தமிழீழம்

உணர்ச்சி வசப்படாமல் ஒரு மென்மையான புன்னகையுடன் வழியனுப்புவோம்

வாழ்க தமிழீழம்
வெலக தமிழீழம்


நம் சிந்தனை முழுவதும் மிக ஆழமாக மிக ஆழமாக தமிழீழத்தின் மீது இருக்கிறது.


எத்தகைய எதிரி வந்தாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோம்.


“ பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே” என்றான் பாரதி.

பகைவனே நீ எனக்கு துன்பம் இழைத்தாய் நான் உன்னை வாழ்த்துகிறேன் சென்று வா !

எத்தகைய துன்பமான காட்சிகள் வந்தாலும் அதனை வழி அனுப்புவோம்.

“துன்பமே போ..இனி உனக்கு இங்கு இடமில்லை...எங்கள் நெஞ்சுறுதி கண்டாய் அல்லவா” இனி உனக்கிடமில்லை போ....”

துன்பமே போ..

இன்பமே வா...

அமைதி பரவட்டும் ....! எங்கும் அமைதி பரவட்டும் ! தமிழீழத்தில் நாம் இருக்கிறோம் !

ஒரு ஆனந்தமயமான சூழலில் இருக்கிறோம்.

மனதில் எத்தகைய் சஞ்சலமும் இல்லை ! அமைதி ! அமைதி ! அமைதி !


நாம் தமிழீழத்தில் இருக்கிறோம்.தமிழீழம் மலர்ந்திருக்கிறது.

மனக்கோயில் கண்ட மாணிக்கவாசக நாயனார் போல் நமது இதயத்தில் தமிழீழம் மலர்ந்திருக்கிறது.

நமது எண்ணத்தில் மலர்ந்த தமிழீழத்தின் வெற்றியை உலகெங்கும் பரப்புவோம்.

இந்த வலிமயான எண்ணத்தை பிரபஞ்சமெங்கும் விரிவாக பரவ விடுவோம்.

மெதுவாக எண்ணத்தால் விரிவடைந்து...விரிவடைந்து மேலே மேலே செல்கிறோம்.

விண்ணில் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களின் ஊடே தமிழீத்தை பாருங்கள்.

பிரபஞ்சத்தில் பூமி ஒரு அங்கம்.

பூமியில் வெற்றி முரசு கொட்டும் தமிழீழம் ஒரு அங்கம்.

மேலே விண் கூட்டம்.

கீழே விண்மீனாய் மின்னும் தமிழீழம்.

தமிழீழத்தை வாழ்த்துவோம்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

நமது எண்ணத்தை மெதுவாக உலக நாடுகளின் மீது செலுத்துவோம்.
உலகின் பலவேறு மக்கள் மீது செலுத்துவோம்.

இப்பூமியில் பிறந்த அனைவரும் நம்மை போன்ற சக மனிதர்களே.
எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

ஒவ்வொரு தேசத்தின் மக்களும் தமிழீழத்தை வாழ்த்துகிறார்கள்.

நிறம்,மொழி,இன வேறுபாடுகளின்றி தமிழீழத்தை வாழ்த்துகிறார்கள்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

உலகமே தமிழீழத்தை வாழ்த்துகிறது.

எண்ணத்தால் பயணித்துகொண்டே செல்கிறோம்.

எல்லோரும் ஒரு மனதுடன் வாழ்த்துகிறார்கள்

எதிரிகள் கூட மனம் திருந்தி நம்மை வாழ்த்துகிறார்கள.

நம் இலக்கு தமிழீழம். நமது தேசத்தில் இருக்கிறோம். முரண்பட்ட கருத்து உடையோர் கூட மனம் திருந்தி வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

உலகம் நம்மை வாழ்த்துகிறது.

உலக மக்களின் வாழ்த்துக்கள் செயல்படுகிறது. எல்லோருடைய எண்ணமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

எல்லாம் வல்ல இறைநிலையான இயற்கையிடம் இதை வலிமையாக பதிவு செய்வோம்.


“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

அப்படியே கண்கள் மூடிய நிலையில் ஆழமாக வாழ்த்துவோம்.

தமிழீழத்தை அக காட்சியாக காண்கிறோம்.

அப்படியே மெல்ல மெல்ல எண்ணத்தில் உறுதியேற்றுவோம்.

தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !


வலிமையான அந்த தமிழீழத்தை பிரபஞ்சத்தில் வான் காந்தத்தில் பதிவுசெய்தபடி இயல்பு நிலைக்கு திரும்புகிறோம்.

மெதுவாக இரண்டு கைகளை மேலே உயர்த்தி இருகரங்களின் உள்ளங்கைளையும் மென்மையாக மூன்று முறை உரசி,இரண்டு கண்களையும் பொத்தி, அந்த உஷ்ணத்தை சிறிது நேரம் உணருகிறோம்.

தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !


பின்னர் கண்களை மெதுவாக திறந்து வெளியுலகை பாருங்கள்.

இதுதான் தமிழீழ தவம். இப்போது எப்படி இருக்கிறது உங்கள் மனம் ?

உங்கள் மனதிலும் எண்ணத்திலும் ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

இது ஒரு உளவியல் பயிற்சி அல்லது போர் எனலாம். எண்ணத்தை கொண்டு ஒரு போர்.

போர் என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தவேண்டாம்.

தவம் எனலாம்.

தமிழீழ தவம்...!

இந்த தமிழீழ தவம் ஏனைய தவம் போன்றது தான். தினமும் ஒரு 30 நிமிடம் செய்வோம்.

தமிழீழத்திற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும். எண்ணத்தால் நாம அதற்கு வலிமை சேர்ப்போம்.இது ஒரு பிரார்த்தனைப் போன்றது. பிரார்த்தனையில் எண்ணம்தான் செய்ல்படும்.இங்கு தெளிவான வழிமுறையின்படி செய்யும் போது எண்ணம் விரைவில் நிறைவேறும்.

இந்த பயிற்சியின் போது எத்தகைய கோபமான எண்ணங்கள் வந்தாலும்,அதனை மென்மையான அணுகுமுறையின் மூலம் தவிர்க்கவேண்டும்.

எண்ணம் மென்மையாகும்போது தான் வலிமையடையும்.

எண்ணம் மோதுதல்,பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுருவல் என்று நான்கு தன்மைகள் உடையது.

இதில் ஊடுருவல் நிகழும்போது எண்ணங்கள் நிறைவேறும்.

நினைத்தது நடக்கும்! கேட்பது கிடைக்கும்!

அதற்கு எப்போதும் மென்மையான சாந்தமான ஒரு கத்தி போன்ற கூர்மையான மனநிலை அவசியம்.

இதே போல் எண்ணத்தின் அலைகள் நான்கு வகைப்படுகிறது.

ஆல்பா
பீட்டா
தீட்டா
டெல்டா

பொதுவாக உணர்ச்சிவசமான நிலையில் மனம் பீட்டா அலைவரிசையில் இருக்கும்.
அப்போது எண்ணம் எங்கும் பிரதிபலிக்காது.

அதனால் பேராசை,கடுஞ்சினம்,கவலை,வருத்தம் உட்பட உணர்ச்சி மயமான எண்ணத்தை எப்போதும் தவிர்ப்போம்.

நினைத்தது நடக்க எப்போது ஆல்பா, தீட்டா அல்லது டெல்டா அலைவரிசையில் இருப்போம்.
அதற்கு தான் வாழ்த்து.இந்த தவம் துணை நிற்கும்.

நீங்கள் இத்தகைய உளவியல் பயிற்சி செய்யும்போது விரும்பத் தகாதவர், எதிரியின் உருவமே முன்னே வந்தாலும் ஒரு புன்னகை ஒரு வாழ்த்தில் அவரை வழி அனுப்புங்கள். எண்ணம் எப்பொழுதும் கூர்மையாக இருக்கும்.

ஒரு கதிர் வீச்சைப் போல் எண்ணம் எப்போதும் கூர்மையாக இருக்கட்டும்.

எண்ணம் அதி சக்திவாய்ந்த ஆயுதம்.

எண்ணத்திற்கு நிகர் எண்ணமே.

உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ஒரு பத்து சதவீதம் பேர் இந்த பயிற்சியை தினமும் ஒருமுறை செய்தாலே போதும் வான் காந்தம்,ஏன் இந்த பிரபஞ்சம் முழுவதும் தமிழீழ அலையே நிரம்பி வழியும்.

இது வலிமைபெற வலிமைபெற தானே தமிழீழக் மலரும்.

இனி எந்த ஒரு சுழலிலும் வேதனையான,விரக்தியான வெளிப்பாடுகள் வேண்டாம்.

நீங்கள் உங்கள் வேதனைகளை இறக்கிவைக்க செய்யும் பதிவுகள் ஒரு பத்து நபர்கள் படித்து, பத்து நூறாகி பல்கிப் பெருகி மீண்டும் அந்த வலி மிகுந்த அனுபவத்தையே வான்காந்தத்தில் அதிகரிக்கச் செய்யும்.வான் காந்தத்தில் துன்பமே பதியும்.

இனி எந்த ஒரு பதிவும் வெற்றிகரமான நம்பிக்கையூட்ட கூடிய பதிவாக இருக்கவேண்டும். நீங்கள் தரும் நம்பிக்கையை படிக்கும்போது பத்து நூறாகி பல்கிப் பெருகி தமிழீழம் மலரச் செய்யும்.

எண்ணம் ஒரு வலிமையான ஆயுதம்.எண்ணமே வாழ்க்கை.

நமது எண்ணத்தில் எப்போதும் வெற்றி முழக்கத்தையே முழங்கச் செய்வோம்.

பாவேந்தர் பாரதிதாசன் உணர்ச்சிப் பாடலில் ஒரு வரி

“நிற்கையில் நிமிர்ந்து நில் ! “

ஆம் நிற்போம் நிமிர்ந்து.எந்த ஒரு சூழலிலும் வளையாமல்.

மலர்ந்தது தமிழீழம் !

வாழ்க தமிழீழம்.

வளர்க தமிழீழம்.

Sunday, August 1, 2010

நட்பைக்கொண்டாடுவோம் !

நட்பு…!


இந்த ஒரு வார்த்தை பரவசமானது.

இந்த ஒரு வட்டம் நம் வசம் உண்மையாக இருந்தால்,உலகம் நம் வசமாகும்.

உலகின் முதல் உறவு நட்பாகதான் இருக்கவேண்டும்.

ஆதாம் ஏவால் முதல் சந்திப்பே நட்புதான். முதல் பார்வையே சினேகப்பார்வைதான்.

உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிதான் நட்புக்கு உயிர்கொடுத்தது.

அது உடல் கவர்ச்சி ஆனபோது காமம் வழிந்தது.

காமம் தணிந்து காதல் நின்றது.

காதல் என்று சொல்லும்போது.அது நட்பின் கொஞ்சம் கலப்பட நிலைதான்.

இன்றும் காதலுக்கு போடப்படும் தூண்டில் நட்பில்தான் ஆரம்பிக்கிறது.

முன் காமத்தில் நிறைந்து காதலில் முடிந்தது.

இன்று காதலில் நிரம்பி காமத்தில் முடிகிறது.

மற்ற உறவுகளை அந்த அந்த நிலையில் தான் நின்று பார்க்க முடியும்.

ஆனால் நட்பு மற்றும் எல்லா நிலைகளிலும் நின்று, வென்று பார்க்க உதவும்.

மற்ற உறவுகளை ஒரே கோணத்தில் தான் பார்க்கவேண்டும்.

ஆனால் நட்பின் பரிமாணம் அளப்பரியது,அளவில்லாதது.எல்லா கோணத்திலும் பார்க்கமுடியும்.

நீங்கள் தாயுடனும் தந்தையுடனும் மனைவியுடனும் நட்பாக நின்று பார்க்கலாம்.

நீங்கள் இங்கெல்லாம் நட்பாக நிற்கும்போது உங்களின் உயரம் சமன்படுகிறது. உள்ளம் மேலே மேலே செல்கிறது.

உங்களின் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஒரு நண்பனின் நிலையில் இருந்து பேசிப் பாருங்கள். பாசத்தின் வலிமை புரியும்.

உங்கள் மனைவியுடன் ஒரு தோழனைப்போல் உறவாடிப் பாருங்கள்,உரசல்கள்,விரிசல்கள் இல்லாத விரசமில்லாத காதல் பொங்கி வழியும்.

சாயுங்காலத்தில் நட்புதான் கை கொடுக்கும்.

பொக்கை வாய் சிரிப்புடன் ஒரு தாத்தனும் பாட்டியும் உறவாடும் காட்சியைப்பார்த்து இருக்கிறோம்.அங்கே அவர்கள் சாயும்காலத்தில் நிலைத்து நிற்பது நட்புதான்.

இன்றைய இயந்திர உலகில் குடும்ப உறவில் நிற்க வேண்டியது நட்புதான்.

ஆணுக்கு பெண் சமமாக கற்கிறாள் – உழைகிறாள் – சாதிக்கிறாள்.

இங்கே பாரம்பர்யமான கணவன் – மனைவி உறவு கை கொடுக்காது.

நட்பு கை கொடுக்கும்.

உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும் உள்ள நட்பு வீட்டை அழகாக்கும்.

நீங்கள் நட்போடு இருந்த நாளை எண்ணிப்பாருங்கள்,அன்று உங்கள் வீடே ரம்மியமாக இருந்திருக்கும்.

நட்பில் நிற்கும்போது தான் நாடுகள் வளம்பெற்று இருக்கின்றன.

நட்பில் நிலைத்து நிற்கும் போதுதான் உலகமே வளம் கொழிக்கும்.

மற்ற உறவுகளுக்கு பலவீனங்கள் உண்டு.

நட்புக்கு பலம் தவிர வேறில்லை.

மற்ற உறவுகள் சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுவது. நட்பின் கலவை அதில் குறைந்து போவதால்தான்.

எந்த பரிசும் அள்ள அள்ள குறைந்து வரும்.

நட்புதான் கொடுக்க கொடுக்க குறையாது! அமுதசுரபி!

உலகில் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் உறவுகள்.

ஆனால் பிரச்சனைக்களுக்கெல்லாம் தீர்வு நட்புதான்.

உறவுகள் மேம்பட ஒரு வழி நட்பு.

உலகம் அமைதி பெற ஒரே வழியும் நட்புதான்.

உங்கள் நட்பை உங்கள் எதிரிக்கு பரிசளியுங்கள் வஞ்சம்,சினமில்லா உலகம் உங்களை வரவேற்கும்.

நட்பின் நிலையில் என்றும் வளர்ச்சி கூடாது.

ஒரு குழந்தையின் மனநிலையிலேயே நட்பு இருக்கவேண்டும்.

நட்பில் உங்கள் மேதாவி தருணங்கள் எடுபடாது.

நட்புக்கு தகுதி தேவையில்லை ! நட்பே பெரும் தகுதிதான் !

அது என்றும் ஒரு குழந்தையைப் போல இருப்பது.

குழந்தையின் நட்புதான் கள்ளம் கபடமில்லாதது.

முதல் வினாடி ஒரு பென்சிலுக்காக சண்டை போடும்.

மறுவினாடி பல்லி மிட்டாயை டவுசர் நுனியில் வைத்து, பல்லில் கடித்து பசையாக்கி திகட்ட திகட்ட ஊட்டி மகிழும்.

உங்களின் குழந்தைகால நட்பை நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் இப்போதும் குழந்தையாகவே மாறிவிடுவீர்கள்.

நட்பில் மட்டும் முதிர்ச்சிக்கூடாது.

இப்பொழுதும் எப்பொழுதும் நாம் குழந்தையாகவே இருக்கவேண்டும்.

இதே குழந்தை மனோபாவத்தோடு எப்போதும் நட்பைக்கொண்டாடவேண்டும்.

நட்பு…!

இந்த ஒரு வார்த்தை பரவசமானது. இந்த ஒரு வட்டம் நம் வசம் உண்மையாக இருந்தால்,உலகம் நம் வசமாகும்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...