Saturday, September 15, 2012

பரவசவெளியில் பதினான்கு நாட்கள் – 2




ஒரு (LIVE ) தொடர்

எப்போது உறங்கினேன். எப்போது விழித்தேன் என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் இரண்டு நொடிகள் போல பறந்துவிட்டன.நேற்று  சென்னையில் விமானம் பிடித்து, டில்லி வந்து அங்கிருந்து பேருந்தின் மூலம் இன்று காலை ரிஷிகேஷில்  காலடி எடுத்து வைத்தாயிற்று.

சென்னையில் இருந்து ரிஷிகேஷ் சுமார் 2380 கிலோ மீட்டர் .  வீட்டை விட்டு புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் பயண செய்ததோ கொஞ்ச நேரம்தான்.

சென்னையில் இருந்து டில்லி இரண்டரை மணி நேர விமானப் பயணம். டில்லியில் இருந்து ரிஷிகேஷ் எட்டு மணிநேர பேருந்து பயணம்.

சுமார் பத்து மணி நேரத்தில் என் வீட்டில் இருந்து ரிஷிகேஷை என்னால் தரிசிக்க முடிகிறது.
என்னே அறிவியலின் அற்புதம் !

இது அறிவியலின் அற்புதம் மட்டுமல்ல மனித அறிவின் அற்புதம் தான் !

இந்த அறிவியல் அற்புதமும்,அறிவின் வெளிப்பாடும் நமக்கு முன்பு இங்கு தரிசித்த எண்ணற்ற ஞானியர்கள் நமக்களித்த பிச்சை ! விமான வசதியும், பிற வாகன வசதியும் இருப்பதால் நம்மால் சில மணி நேரத்தில் இங்கு வர முடிகிறது. இத்தகைய வசதியில்லாத காலத்தில் இங்கு நம் முன்னோர்கள் எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டும். அப்போதெல்லாம் அவர்கள்  இமய தரிசனம் மிகவும் சுலபமாக மாறவேண்டும் என்று தங்களின் வலிமையான புனிதமான எண்ணங்களை விதைத்து இருப்பார்கள் தானே !. அவர்கள் இப்பிரபஞ்சத்தில் விதைத்த எண்ணங்களே இன்று நமக்கு வசதி வாய்ப்பாக மாறியிருக்கிறது. நம் தலைமுறையில் அனுபவிக்க முடியாவிட்டாலும்,அடுத்த தலைமுறை நலம் பெற பிராதித்து, எண்ணங்களால் சாதித்த, அவர்களை இந்த கண நேரத்தில் நினைத்து அவர்களின் பொற்பாதங்களை பணிவதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரும்பேறு.

பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான,இமயம் இன்றுவரை எண்ணிலடங்கா  ரிஷிகளும், மகான்களும் தரிசித்து  புனிந்தமடைந்த பிரதேசம். இமயத்தின் ஓவ்வொரு துளியும் அப்பழுக்கற்ற புனித தன்மை உடையது. இங்கு தோன்றும் நதிகளும், அருவிகளும் நேரிடையாக பரிசுத்தமான பனிமலைகள் உருகி வழிவதின் மூலம் உற்பத்தி ஆனவை. இவ்வாறு மலைகளினூடே குதித்து வரும் போது பல அரிய மூலிகைகளோடு கலந்து அதன் அற்புத மருத்துவத் தன்மையை சுமந்து வருவதால், இங்கு  வழியும் ஒவ்வொரு துளியும் ஜீவிதம் மிக்கது. நோயற்ற வாழ்வையும், நோய்களை தீர்க்கவும் வல்லது. ஏன் நீங்கள் இங்கு சுவாசிக்கும் காற்றும் அத்தகைய ஆற்றல் மிக்கதே !

ஆன்மிக சாதகர்களுக்கு இமயம் தான் உச்சகட்ட இலக்கு. அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் நோக்கம் இமயத்தை ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பதே !

இந்துக்களுக்கு இங்கு சிவனும் பார்வதியும், மகாவிஷ்ணுவும்,பிரம்மனும் எண்ணற்ற ரிஷிமுனிகளும் வசிப்பதான நம்பிக்கை. புத்த மதம் சார்ந்தவளுக்கும், ஜைனர்களுக்கும் இது ஒரு புனித தளம். தென்னிந்தியாவில் காலடியில் பிறந்த ( கி.மு 788 – 820 ) ஆதிசங்கரர் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியில் இறைவனோடு கலந்த இடம் இமயத்தின் உச்சியான கேதார்நாத்.

சீக்கியர்களின் மத குருவான குரு நானக் க  தமது வாழ்நாளில் பல இடங்களில் இமயத்தின் பல பகுதிகளை தரிசித்து இருக்கிறார். உத்ரகண்ட் மாநிலம் சீறிநகரில் சீக்கியர்களின் குருதுவராக்கள் அமைந்துள்ளன.
இயேசு கிறிஸ்து தனது இறுதிநாட்களை காஷ்மீரில் கழித்ததாக ஆதரங்களுடன் பலநூல்கள் வெளியாகி வருகின்றன.முகமது நபியவர்களின் புனித முடியை தாங்கி நிற்பதால் காஷ்மீரில் ஹசரத்பால் மசூதி சிறப்பம்சம் பெறுகிறது.இப்படி மதம் அடிப்படையில் பார்த்தாலும் இமயம் அனைத்து சமயத்திற்கும் ஊற்றாக இருக்கிறது.

சரி ! இப்படி பல மதங்கள், பல இனங்களை ஈர்க்கும் வகையில் இமயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது ?

இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் பயணம். ரிஷிகேஷ், கெளரிகுண்ட், கேதார்நாத்,ஜோஷிமத்,பத்ரிநாத், மணா என்று எங்களின் அடுத்த இரண்டு வார வாழ்க்கை இமயத்தோடு மட்டும். திரும்பும் போது ஹரித்தவாரில் தங்கி கங்கா ஆரத்தியுடன் இந்த இனிய இமயப் பயணம் முடிகிறது.

இந்த பதினான்கு நாட்களும் இமயம் என்ற இந்த பரவசவெளியில் தான் உலாவப் போகிறோம். இமயத்தின் சிற்ப்புகளை  பக்திமார்க்கம் வழியாக மட்டுமல்ல,ஞானமார்க்கமாக, அறிவியல் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் அணுகுவோம்.
இன்று ரிஷிகேஷில் இனிமையுடன் கழிந்தது இனிய இமயத்தின் முதல் நாள். நாளை காலை சீறிநகர் நோக்கிப் பயணம்.

ரிஷிகேஷின் அனுபவத்துடன் மீண்டும் சந்திப்போம் !

வாழ்க வளமுடன் !

1 comment:

  1. ஒரு நல்ல தொடருக்கான எல்லா சாத்தியங்களும் இக்கட்டுரையில் இருப்பதை உணர்கிறேன்.. தொடந்து எழுது. இது ஒரு அற்புதமான பயணக்கட்டுரைகளால் ஆன தகவல் பெட்டகமாக இருக்கும். வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...