Thursday, September 13, 2012

பரவச வெளியில் பதினான்கு நாட்கள்



 ( ஒரு  LIVE  தொடர் )
இனிய இமயம் !

எனக்கும் இமயத்திற்கும் அப்படி என்ன பந்தம் என்று புரியவில்லை. நான்கு வாரம் முடிவதற்குள் இன்னொரு இமயப் பயணம்.

பரவசமாக தான் இருக்கிறது !

மழைப் பிடிக்கும் ! மலையும் பிடிக்கும் !

மலைகளும் மழையும் இணைந்த இமயம் எப்போதும் பிடிக்கும் !

எனக்கு சுமார் மூன்று வயதிருக்கலாம். எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ பெட்டி.அதில் பாட்டுக் கேட்பதற்கு எனது சொந்த பந்தங்கள் எல்லாம் எப்போதும் கூடி  நிற்கும். இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியில் அப்போது பிரபலமான பாடல் ஒன்று. என்ன படம் என்று தெரியவில்லை. அதன் பாடல் தொடக்க வரி இது தான். “ ஈரமான ரோஜாவே…என்னை பார்த்து மூடாதே !” எனப் போகும் அந்தப்பாடல்.

என் ஒன்றுவிட்ட அண்ணன்களும் அக்காக்களும்  கொஞ்சம் மாற்றி ‘ஈனமான ரோஜாவே….என்னைப் பார்த்து மூடாதே ! என்று பாடி திரிவார்களாம்.

எனக்கு என்னமோ அந்த பிஞ்சு வயதில் அந்த பாடல் பிடிக்காதாம். அந்த பாடலை யார் பாடினாலும் ஒரே கத்தல் தான். அர்த்தம் புரியாவிட்டாலும் எனக்கு என்னவோ அந்த பாடலைக் கேட்டால் ஒரு வெறுப்பு.

ஆனால் அதே பருவத்தில் என்னை கவர்ந்த பாடல் ஒன்றிருக்கிறது. நீங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள்.ஒரு மூன்று வயது பிள்ளைக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று. அது என் முப்பாட்டன் பாரதியின் பரவச வரிகள்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் !

அந்த பருவத்தில் இந்த பாட்டுக்கும் அர்த்தம் தெரியாதது தான். ஆனால் இதன் தாளம், சங்கீத மாமேதை டி.ஆர். மகாலிங்கத்தின் கம்பீரக் குரல், கொஞ்சும் வயதிலேயே என்னை தஞ்சம் அடைய செய்துவிட்டது. ( எல்லாம் எங்கம்மா சொல்லி கேட்டதுதான் ! ).நாளடைவில் அர்த்தம் புரிந்து இமயம் குறித்து காட்சிகள் கண்டு, கற்பனையில் விரிந்து இமயம் எனக்கு ஒரு கனவு பிரதேசமாகவே மாறிவிட்டது.

இமயம் என்பது வெறும் மலை அல்ல. அது ஒரு மாபெரும் இயக்கம். ஆதிகாலத்தில் எரிமலையாக இருந்து புவியீர்ப்பு விசையின் நகர்தாலால் பொங்கி எழுந்து நெருப்பு குழம்பாய் வெளிப்பட்டு, பின்னர் தணிந்து ,குளிர்ந்து இறுகி இப்போது பனிமலையாய் பரவி நிற்கிறது என்பது புவியியல் கோட்பாடு. இமயத்தின் எழுச்சியின் அழுத்தத்தால் லெமூரியா கடலில் புதைந்து போனதாக கூறப்படும் தகவல்களும் உண்டு.

இமயம் ஆசியாவின் பத்து நாடுகளுக்கு எல்லையாக நிற்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். இப்போதே பல்வேறு ஈகோக்களில் சிக்கி தடுமாறும் நாடுகள், இமயம் என்றொரு அரண் இல்லாவிட்டால் இந்த நேரம் அடித்து கொண்டு அழிந்திருக்கும்.

இமயம் பல்வேறு மதங்களின் புனித பூமியாகவும் திகழ்கிறது. இமயத்தின் சாரலில் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,முக்திநாத்,கேதார்நாத்,கங்கோத்ரி,யமுனோத்ரி என  பக்தி பரவசமாக ஆன்மிக தேடலுக்கும் வழியுண்டு. இன்னொரு புறம் ஜாலியாக குடும்பத்தோடு சென்று ஜல்லிடித்து வர குலு, மணாலி, சிம்லா, லே,லாடக் போன்ற இடங்களும் உண்டு.
ஆன்மிக பழமாக ருத்ராட்சமும் உண்டு. ஆப்பிள் தோட்டங்களும் உண்டு.

எந்த ஒரு பயணத்தையும் விட இமயத்தின் மீது எனக்கொரு தீராத காதல் உண்டு.

கடந்த மாதம்  ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி.இமயத்தின் உச்சியில் ஜம்சம் விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டோம். தொடர் பனிக் காரணமாக விமானம் இயக்கம் ஒரு வாரத்திற்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்களோ இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் காத்மண்டுவில் இருக்க வேண்டும். ஜம்சம்மில் இருந்து  காத்மண்டிற்கு வாகனம் பிடிக்கவேண்டுமானால் கூட சுமார் 155 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும்.

அது சாதாரண பயணம் அல்ல. ஜம்சம்மில்(Jomsom) இருந்து பென்னி ( Beni )என்ற இடத்திற்கு வந்தால் தான் பேருந்து. மலைச்சரிவுகளுக்கிடையே கிடைத்த வாகனத்தில் தொத்திக் கொண்டும், கடும் மழையில் நனைந்தபடியும்  இருபது மணிநேரத்தில் பென்னியை வந்தடைந்தோம்.

இமயத்தின் மிக உயரமான மலைத்தொடர்கள் இரண்டு. ஒன்று அன்னப்பூரணா தொடர். இன்னொன்று கஞ்சன் ஜங்கா.இறைவனின் திருவிளையாடலால் அன்னபூரணாவில் கால் வைத்த நாங்கள் கண்டகி நதியோரமாகவே கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில்  பென்னி எனும் இடத்தை வந்தடைந்தோம்.

சாதரணமாக ஒரு மழை அடித்தாலே நாம் வெளியே வர அச்சப்படுவோம். ஆனால் முன்பின் பழக்கம் இல்லாத மண்ணில் எப்படி அச்சமின்றி நம்மால் நடக்க முடிகிறது.
அதுதான் இமயம்.

இமயம் ஒரு தாயின் மடியைப் போன்றது.

நீங்கள் இமயத்தில் காலடி எடுத்து வைத்த வினாடியில் தாயின் மடியில் தவழும் குழந்தையின் மனோநிலைக்கு ஆட்படுவீர்கள்.இதோ இன்னொரு முறை என் தாயின் மடியில் தவழப்போகிறேன். இந்த முறையும் ரிஷிகேஷ்,ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் என்ற பரிச்சயப்பட்ட இடங்கள் தான்.ஆனால் பயணம் அப்படி இருக்காது என்று உணர்ந்தே இருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அற்புதம். ஒவ்வொரு நகர்தலிலும் ஒரு அனுபவம். அடுத்த நிகழ்ப்போவதை அறிந்துகொண்டால் அதில்  ஒரு சுவரஸ்யம் இருக்காது.

அந்த நொடியை அதே கணத்தில் வாழும்போது தான் அதில் ஒரு இன்பம். இந்த வினாடியில் இருந்து இமயத்தில்  எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.

எழுதி பலநாட்களான நிலையில் என் விரலுக்கும் சிந்தனைக்கும் இடையே ஒரு இடைவெளியை உணர்கிறேன். எனினும் என்னுள் எழுதவேண்டும் என்ற ஆவல் குறையவில்லை.

நாளை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பரவசவெளிக்கான எமது பயணம் தொடர்கிறது. எனது குரு சத்குரு டி.கே.எஸ்.சுப்ரமண்யன், எனது சொந்தங்கள்  தாமிரபரணி ஆசிரமத்தின் தலைவர் பி.ஆர்.சந்திரன் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் என்னோடு பயணிக்க உள்ளார்கள்.

நாளை முதல் தினமும் இமயத்தின் அனுபவங்கள் உங்களோடு…

இப்போது உறங்கச் செல்கிறேன். வாழ்க வளமுடன் !


2 comments:

  1. Vaazhga valamudan ,

    Waiting for your daily updates, Wishes to all....Have a blissful journey. prayers to all our members.

    Badhriyil narayananidam en anbai unarthungal.

    ReplyDelete
  2. நல்லது நண்பா.. தொடருட்டும் உன் பனி/பணி அனுபவங்கள்..

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...