Tuesday, October 22, 2013

சீனா அண்ணன் தேசம் - திருமதி சுபஸ்ரீ மோகன்

இமயம் எனக்கு இன்னொரு வாசஸ்தலமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் என்னை மிகவும் ஈர்த்த பகுதி திபெத்திற்கு உட்பட்ட இமயபகுதிதான். இமயத்தின் உச்சியில் இத்தனை உயரமான  நாட்டில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தும்.நேபாள- திபெத் எல்லையான ஷாங்மூ முனையை தாண்டிய வினாடியில் இருந்து ஆங்காங்கே ( ஹாங்காங் இல்லே  நம்ம லாங்குவேஜில் அங்கங்க.. இதுவும் ஆவ்…எப்படி சொன்னாலும் சீனா சவுண்டுதான் வருது…) பறக்கும் அஞ்சு நட்சத்திர சிவப்பு கொடிகள் என் கண்ணை உறுத்தும்.இப்படி அநியாயமா இந்த  சீனாக்காரன் திபெத்தை ஆக்ரமிப்பு செய்திருக்கிறானே என்று கோபம் வரும். சீனாக்காரன் கட்டுப்பாட்டில் இருக்கிறதாலதான்  திபெத் ஜொலிக்கிறது…இல்லையென்றால் குளிக்க கூட தெரியாத இந்த மக்கள் இதனை இன்னும் மோசமாகதான் வச்சிருப்பாங்க என்று என் அண்ணன் பி.ஆர்.சந்திரன் முன் வைக்கும் கருத்துக்களுடன் மோதல்களை நிகழ்த்தினாலும் நாளடைவில் சீனாவின் ஈர்ப்பு  சீனப்பெண்களைப் போலவே என்னுள் ஊடுருவி நிற்க ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்த பயணங்களில் பயணம் இலகுவாக கொஞ்சம் சீனமொழி கற்றுக்கொள்ளுவோமே என்று சீனப்பயணம் சென்று வந்த அண்ணன் பொன்.காசிராஜனிடம் கேட்டபோது, அதுக்கு என்னடா தம்பி ! நான் ஒரு அக்காவை அறிமுகம் செய்கிறேன் என் பேஸ்புக் லிங்கில் இருக்காங்க என்று அறிமுகம் செய்யப்பட்டவர்தான் திருமதி சுபஸ்ரீ மோகன். அவரின் இன்பாக்ஸில் விவரம் தட்ட படபடவென்று பல இணைப்புகளை பரிந்துரை செய்தார். சீனமொழியை எத்தனை சுலபமாக கற்றுகொள்ள முடியுமோ அத்தனை சுலபமாக கற்றுகொள்ள உதவும் தளங்கள் அவை. ஆச்சர்யமாக தமிழ் மொழியில் கூட சீனமொழியை கற்றுக்கொள்ள பல இணைப்புகளை தந்தார்  அவர்.நம்மை சீனப்பெண்கள் ஈர்த்த வகையில் அந்த மொழி இன்னும் ஈர்க்கவில்லை. அதன் சிரமம் உணர்ந்து ச்சீ..ச்சீ…இந்த பழம் புளிக்கும் நரியாய் நழுவி…..எனினும் ஷி ஷி ( தாங்க்ஸ் ) என்ற ஒரு வார்த்தையை சிரமப்பட்டு கற்றுகொண்டு எதிர்பட்ட சீனப்பெண்களிடம்  சொல்லி… ஜொள்ளி… சின்னப் புன்னகையில் ஜென்ம சாபல்யம் அடைந்த கதை தனி.  திருமதி சுபஸ்ரீ மோகன் பழக்கமான கதை இதுதான்.அதன் பிறகு அவரின் பதிவுகளுக்கு சில லைக்குகள், எப்போதாவது ஒரு ஹாய்  சொல்வதுண்டு சேட்டிங்கில்.சமீபத்தில் அவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் .சீனா அண்ணன் தேசம் என்ற அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் (http://books.vikatan.com/index.php?bid=2133) வெளியிட்டுள்ளது என்பதை முகநூலில் அறிந்து ஒரு ஷேர் மட்டும் செய்து விட்டுவிட்டேன்.இன்று கனெக்‌ஷன் புத்தக கடையில் அந்த புத்தகத்தை பார்த்தபோது அதன் மஞ்சள் நிறமும் செந்நிற எழுத்துக்களும் நூலாசிரியரான திருமதி.சுபஸ்ரீ மோகன் என்பதாலும் உடனே வாங்க தோன்றியது. வாங்கிய கையோடு எதிரில் இருந்த அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்று அமர்ந்துகொண்டேன். இரண்டு நாள் மழை ! விட்டும் தூவானம் விடாத வானம் ! ஜில்லென்று உடலில் ஊடுருவும் காற்றில்  மனதை வருடும் எழுத்து நடையோடு என்னை உள்ளே  இழுத்துகொண்டது சீனா அண்ணன் தேசம்.பின் அட்டையில் பாஸ்கர் சக்தி அண்ணனின்  பின்னுரை ( முன்னுரைதான் அதை பின் அட்டையிலும் போட்டிருக்காங்க ) புத்தகத்தின் வலிமையை எளிமையாக உணர்த்தியது.சுமார்  90 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. என்னை மீறிய ஒரு magical realistic உலகிற்கு பயணித்த அனுபவத்தை தந்தது  இந்த புத்தகம். திருவாளர் மணியன் மற்றும் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன். அதைப் போன்றே எளிய அழகிய தமிழில் தெளிவாக பல தகவல்களை தருகிறார் நூலாசிரியர். காதை சுத்தி மூக்கை தொடாமல்  எதை சொல்லவேண்டுமோ, அதை மிகவும் நேர்மையாக சொல்லியிருக்கிறார்.பயணக்கட்டுரை என்றும் இதனை கருதலாம் அல்லது அனுபவக்கட்டுரைகள் என்றும் எடுத்துகொள்ளலாம். இதுபோன்ற நூல்கள் எழுதும் போது இருக்கும் சிரமம், எழுதுபவர் அந்த இடங்களை பார்த்து பரவசப்பட்டிருப்பார், ஆனால் அதனை எழுத்தில் கொண்டுவந்து தான் பார்த்து ரசித்த இடங்களை, தகவல்களை பார்க்காத ஒருவருக்கு பார்த்த அனுபவத்தை தரும் வகையில் எழுதவேண்டும். அது எல்லோருக்கும் கைவரும் கலையல்ல. இதன் நூலாசிரியர் சுபஸ்ரீ மோகன்  இந்த நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருக்கிறார். இந்த நூல் ஒட்டுமொத்த சீனாவையே எளிமையாக சுருக்கி விவரிக்கிறது.  சீனா தேசத்தை முழுவதும் சுற்றிப்பார்த்த அனுபவத்தை தருகிறது அண்ணன் தேசம் சீனா.சீனாவில் வாழ இந்தியர்களுக்குள்ள வாய்ப்புகள், அக்கரைச் சீமை சீனாவின் சிறப்புகள் ( அக்கறை சீனா என்று கூட சொல்லலாம்…வெளிநாட்டினர்  மீது அவ்வளவு அக்கறையுடன் இருப்பதை சுட்டிகாட்டுகிறார் நூலாசிரியர் ). அந்த தேசத்தின் நேர்மை, பொறுப்புகள். சீனா விழாக்கள், சுற்றுலா என பல்வேறு தகவல்களை சுவரஸ்யமாக அடுக்கிறார். The Last Emperor படத்தில் விவரிக்கப்பட்ட Forbidden City  பற்றிய விவரங்கள் அவரின் ஆழ்ந்த ஆராய்ச்சியை வெளிப்படுத்திகின்றன. ஒரு நூலாசிரியராக அவர் வெளிப்பட்டாலும்  சீனாவின் விருந்தினராக  அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் அடக்கமுடியாத சிரிப்பை வரவழைக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் அவர் கலந்து கொண்ட சீனத் திருமணம் , அதற்கு அவர்கொண்டு போன பரிசும் விளைவுகளும் . ( நாம ஒண்ணு நெனச்சா….சீனா ஒண்ணு நெனக்குதுடா சாமி ! ). ஏழாம் அறிவுப்  புண்ணியத்தில் போதி தர்மர் பற்றி நாம் எல்லாம் அறிந்திருக்கிறோம். நூலாசிரியர்  சீனாவின் அமைந்திருக்கும் சிவன் கோயில் பற்றிய குறிப்புகளை தந்து நம்மை அசத்துகிறார். அந்த சிவன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான்  திருக்கதாலீஸ்வரன் உதயநாயனார் என்பதும் அவர் அங்கு சென்ற கதையையும்  கேட்கும் போது தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பாடல் எத்தனை உண்மையானது என்பது நிரூபணமாகிறது. மேலும் பாண்டிய மன்னன் காலத்திலும் சீனர்களுடனான உறவு புலனாகிறது.சீனாவில் எல்லாமும் சீன மொழிதான் என்ற தகவலுடன் அவர்கள் பிறநாட்டுக் கலாச்சாரம் மொழிக்கு எத்தகைய மரியாதை செய்கிறார்கள் என்ற  தகவல் சீன வானொலியின் பிறமொழி பற்றிய ஒலிப்பரப்பு செயல்பாடுகளை விளக்கமாக தருகிறார் நூலாசிரியர். குறிப்பாக இந்திய மொழிகளில் தமிழிலும் இயங்கும் சீன வானொலி, அங்கு பணிபுரியும் சீனர்களும் தங்கள் பெயரை தமிழில் மாற்றிகொண்டு தமிழர்களாகவே வெளிப்படும் பாங்கு என்பது மொழிபற்று எப்படி இருக்கவேண்டும்,மொழிவெறி எப்படி இருக்க கூடாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.பெய்ஜிங், ஷாங்காய்,ஹாங்ஹாங், குவாங்சோ,சென்ஷேன்,தியான் ஜின், திபெத்,குயிலின்,ஷாங்கய்குவான் என்று பல்வேறு கலாச்சாரங்கள், பொருளாதார நிலைகளில் மாறூபட்டு நிற்கும் சீனநகரங்களை அவர் விவரிக்கும் விதம் நாமும் அருகில் நின்று ரசிக்கும் அனுபவத்தை தருகிறது.இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக பளிச்சிட்டு கவர்கிறது அண்ணன் பொன்.காசிராஜனின் புகைப்படங்கள். சீனாவின் கலாச்சாரம், மொழி பற்று, பிறநாட்டினரை மதிக்கும் பண்பு, தொழில்நுட்ப அறிவு, மூத்தோர்களுக்கு செலுத்தும் மரியாதை, விளையாட்டு மற்றும் பிறத்துறைகளின் ஆர்வம் என்று அனைத்தையும் அச்சு பிசகாமல் முன்வைக்கிறார் நூலாசிரியர். பல இடங்களில் நம் தேசம் இதற்கு நிகராக உயரவேண்டும் என்ற ஆதங்கமும் அவர் எழுத்துக்களில் மறைமுகமாக வெளிப்படுகிறது. நூலின் தலைப்பை பார்த்தவுடன் “ சீனா அண்ணன் தேசம்” என்பது எனக்கு கொஞ்சம் முரணாக பட்டது. படித்து முடித்த பின்பு சீனாவைப் பற்றி நல்ல தெளிவும், பொருத்தமான  தலைப்பைதான் நூலாசிரியர் வைத்திருக்கிறார் என்பது புரிந்தது.கடந்த இரண்டு மாதங்களாகவே கடுமையான பணிச்சுமை. புத்தகங்களின் பக்கம் போக கூட முடியவில்லை. ஒரு அலுவல் சந்திப்பிற்கு நண்பர்களுடன் சென்று, அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு இறுக்கமாக காத்திருந்த வினாடிகளில்  ஒரு புத்தகத்தை வாங்கி, அதனை முழுமையாக படித்து முடித்து அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னை இறக்கிவிடும் போது என் முகத்தை இறுக்கமாக பார்த்த நண்பர்கள், மீண்டும் வாகனத்தில் ஏற்றிகொள்ளும் போது இலகுவான புன்னகையுடன் இருப்பதைக் கண்டு  காரணம் என்ன ? என்று வினவியபோது இந்த புத்தகத்தை படித்தேன் ஏனோ ஒரு சந்தோஷம் வந்துவிட்டது என்றேன். ஒரு புத்தகம் படித்ததால் சந்தோஷமா என்று அவர்களால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை !சீனா என்றவுடன் நம்முள் ஒரு வெறுப்புணர்வு எழுகிறது. அது காலம் காலமாக அரசியல்வாதிகள், மற்றும் ஊடகங்கள் முன்வைத்த பிம்பம் என்பதை உடைக்கிறார் நூலாசிரியர். எப்போழுதோ நிகழ்ந்த ஒன்றை நினைத்து நினைத்து மேலும் இறுகினால் வெறுப்புணர்ச்சிதான் மிஞ்சும். இத்தகைய இறுக்கமான சூழல்களை நல்ல படைப்புகளும், படைப்பாளிகளாலும் தான் மாற்ற இயலும். அந்த வகையில் ஒரு சீரிய பணியை செவ்வனே செய்துள்ளார் நூலாசிரியர் சுபஸ்ரீ மோகன். நம்முடைய நட்புறவு நாடானா சீனாவுடன் நாம் நட்பு பாராட்டுவதின் மூலம் ஏராளமான விடயங்களை சாதித்துகொள்ள முடியும்.  நட்பு பாராட்டுதல் இறுகி நின்றால் எல்லை மீறும் தொல்லைகள் கூட குறையும். இந்த நிலை மாற மக்கள் மனதில் மாற்றம் தேவை. அந்தவகையில் சீனா பற்றிய பிம்பத்தை மாற்றும் எளிமையான படைப்பாக முன் நிற்கிறது அண்ணன் தேசம் சீனா. என் அறிவுக்கு எட்டியவரை சீனா பற்றி எளிமையாக, இத்தனை சிறப்பாக ஒரு நூல் வெளிவந்ததாக தெரியவில்லை. இந்த நூலை படிப்பவருக்கு நிச்சயம் சீனா மீது ஒரு நம்பிக்கையும் நேசமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நல்ல நூல்கள் நல்ல சமூகத்தை மாற்றும். இதற்கு ஒரு படி அமைத்த திருமதி சுபஸ்ரீ மோகனுக்கு ஒரு ரெட் சல்யூட் !


Sunday, September 8, 2013

என்ன நடக்குது இந்தியாவில் ?

                                                   Picture Courtesy www.unrealtime.com

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் ரூபாய் நோட்டின் அடிப்படையிலேயே கணிக்கபடுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் போது , அந்த தேசம் வளரும் தேசமாக மாறுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு அந்த நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
பொருளாதாரம் என்றால் என்ன ?
பொருள் + ஆதாரம் = பொருளாதாரம்.
மக்கள் வாழ்வியலுக்கு அவசியமாகிறது பொருட்கள். அந்த பொருளின் இருப்புநிலையே பொருளாதாரம்.அதாவது மக்களின் வாழ்வியல் ஆதாரத்திற்கான, தேவையான  பொருட்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப நிர்வகிப்பது தான் பொருளாதாரம்.இவ்வாறு நிர்வகிக்கப்படும் பொருட்கள் மிகும்போது தேவைக்கு மீறியதை ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஒரு வருவாயை ஈட்டி, அதன் மூலம் தேசத்தின் வளத்தை வலிமையாக்குவது செம்மையான பொருளாதாரம். பெரும் வளத்தை உண்டாக்காவிட்டாலும் இந்த பொருட்களின் தேவையில் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துகொள்வதுதான் நல்ல நிர்வாகம்.
 உதாரணத்திற்கு ஒரு கிராமத்தை எடுத்துகொள்வோம். அங்கு ஒரு நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த குடும்பத்திற்கு தினமும் 100 கிலோ அரிசி, 50 கிலோ வெங்காயம்,ஒரு கிலோ மிளகாய், இருபது கிலோ பருப்பு, 5 கிலோ சர்க்கரை,100 லிட்டர் பெட்ரோல், 100 யூனிட் மின்சாரம், ஐந்து கிலோ மருந்து பொருட்கள், 1000 லிட்டர் குடிநீர், இப்படி தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கிராமத்தில் உற்பத்தி செய்ய தக்கவற்றை அங்குள்ள மக்களைகொண்டு இதில் எதையெல்லாம் உற்பத்தி செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் உற்பத்தி செய்யவேண்டும். அப்படி உற்பத்தி செய்யமுடியாத பொருட்களை வெளியில் இருந்துதான் வாங்கவேண்டும். உதாரணமாக கிராமத்தில் அரிசி,வெங்காயம், மிளகாய்,பருப்பு வகைகள்,சர்க்கரை, குடிநீர் ஆகியவற்றை உற்பத்தி செய்துகொள்ளமுடியும். மருந்துப் பொருட்களில் கூட சிறு நோய்களுக்கான வீட்டு வைத்திய முறைகளை அல்லது வரும் முன் காக்கும் முறைகளை இயற்கையாக செய்துகொள்ளலாம், அல்லது தேவையானவற்றை இறக்குமதி செய்துகொள்ளலாம். ( முறையான சுகாதார ஏற்பாடுகளுடன் இருந்தால், நோய் வராமல் தடுக்கமுடியும், இதனால் மருத்துவ உபகரணங்களுக்கான செலவினம் குறையும் ) பெட்ரோல் கிராமத்தில் உற்பத்தி செய்யமுடியாது, மின்சாரம் கிராமத்தில் உற்பத்தி செய்ய முடியாது ( ஆனால் இப்போது சூரிய சக்தியின் மூலம் இதனை செய்யமுடியும் ) மின் பொருட்களை உள்ளூரில் உற்பத்தி செய்யமுடியாது. இது போன்ற பொருட்களை ஒன்று பெருமளவில் உற்பத்தி செய்து பகிர்ந்தளிக்கவேண்டும். அல்லது உற்பத்தி செய்பவரிடமிருந்து வாங்க வேண்டும்.
சரி ! நாம் பட்டியலிட்ட பொருட்களில் பெரும்பாலான பொருட்களை நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியும், சிலவற்றை உற்பத்தி செய்ய முடியாது. அப்போதுதான் இறக்குமதி அவசியமாகிறது. ஒரு காலத்தில் இறக்குமதி என்பது பண்டமாற்று முறையாக தான் இருந்து வந்தது. இன்றும் கூட ஈரானும்,ஈராக்கும் இந்த முறையில் எரிபொருள் ஏற்றுமதிக்கு தயாராக இருக்கின்றன. இவை இரண்டும் இந்தியாவின் நட்புநாடுதான். ஆனால் இந்தியா இவற்றை நிராகரித்து வருவது புரியாத புதிர்.
சரி ! இறக்குமதி இப்போது எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம்.
 ஒன்று நமக்கு இறக்குமதி பொருட்களை தரும்  அந்த மற்றவருக்கு நம்மிடம் உற்பத்தியாகும் பொருட்களில் ஏதேனும் தேவையாக இருப்பின், அதனை நாம்  இறக்குமதி செய்கின்ற பொருட்களுக்கு நிகரான மதிப்பில் கொடுத்து இறக்குமதி செய்வது. இதன் மூலம் அவருக்கு தேவையான பொருட்களை மிகையாக நாம் உற்பத்தி செய்து, நமது தன்னிறைவு போக அவருக்கு வைத்திருக்கவேண்டும்.
இதைதான் பாரதியார் கூட “சிந்துநதியின் மிசை நிலவினிலே” பாடலில்
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். 

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே

இரண்டாவது முறை அவரிடம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான மதிப்பை பணமாக வழங்குவது. இதில் இரண்டுமுறை இருக்கிறது. ஒன்று பொருட்களின் மதிப்பை நமது பணத்தின் மதிப்பில் நிர்ணயித்து அதனை வழங்குவது. இரண்டாவது அவர்களின் பணத்தில் மதிப்பை நிர்ணயித்து வாங்குவது.இங்குதான் இந்தியா போன்ற நாடுகளுக்கு சிக்கல் தொடங்குகிறது. நமது பணத்தில் விலை நிர்ணயிப்பதில் கூட ஒரளவு பிரச்சனையில்லை. ஆனால் அவர்களின் பணத்தில் நிர்ணயிக்கும் போது அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது நம்மிடம் இருக்கும் பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை, அவர்களின் பணமாக மாற்றி , அதனை கொடுத்து அந்த பொருட்களை வாங்கி துய்ப்பது. இவ்வாறு செய்யும் போது, அவர்களிடம் இருந்து பெறும் பொருட்களின் மதிப்பும், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மூலமாக வரும் வருவாயின் மதிப்பும் நிகராக இருப்பின் பெரும் பிரச்சனையில்லை. மாறாக இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய தொகையும், ஏற்றுமதியின் மூலம் உருவாக்கப்படும் வருவாய், பின்னர் அதனை அவர்களின் பணமாக மாற்றும் போது ஏற்படும் செலவினம் இது அவர்களின் மதிப்பை விட குறைந்து இருந்தால் இங்கு ஒரு பற்றாக்குறை நிலவும். இந்த பற்றாக்குறை தொடரும் போது அங்கு இறக்குமதிக்கு அனுமதிப்பவரின் பொருளாதார நிலையில் ஒரு ஏற்றதாழ்வு ஏற்படும்.
உதாரணத்திற்கு 100 லிட்டர் டீச்சல் 55000 ரூபாய் என்று வைத்துகொள்வோம். நாளை அவர்கள் இதனை அறுபது ஆயிரம் என்று சொன்னாலும், நமது பணத்தில் கொடுக்கும் போது ஒரு ஐந்தாயிரம் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும். இதையே நீங்கள் டாலரில் கணக்கீடு செய்யுங்கள். 55000 என்பது 1000 டாலர் என்று வைத்துகொள்ளுங்கள். நீங்கள் நிர்ணயித்த 1000 டாலர் பொருளை பெறும்போது இந்திய பணத்திற்கு எதிரான மதிப்பில் உயர்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,  அதாவது ஒரு டாலர் 55 இந்திய ரூபாய் என்பது, 60 என்றோ அல்லது 62 என்றோ உயரும் போது, இரண்டுவிதங்களில் செலவினங்கள் நிகழ்கிறது.அதாவது டாலரில் உயர்ந்த தொகை. இரண்டாவது இந்திய மதிப்பிலான ரூபாயை டாலராக மாற்றும் போதிலான பரிவர்த்தனை தொகை. இது ஒருநாள் ஆட்டமல்ல, நிரந்தரமற்ற தினம் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, ஒவ்வொருநாளும் பரிவர்த்தனையில் பற்றாக்குறை ஏற்பட்டுகொண்டே இருக்கும். இந்த பற்றாக்குறையின் எதிரொலி, பெட்ரோல் சார்ந்த ஏனைய தொழில்களிலும் எதிரொலிக்கும். விளைவு ! ஏனைய பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக உயரும். இதன் முடிவு உள்நாட்டில் பணவீக்கம் ஏற்படும். இதுமட்டுமின்றி, இந்நிலை தொடரும் போது பரிவர்த்தனைக்காக வைத்திருக்கும் குறிப்பிட்ட டாலர்கள் விரைந்து செலவாகி, டாலரின் இருப்பு குறைந்து, அதற்கான பற்றாக்குறை ஏற்படும். அவர்களுக்கு டாலரில் செலுத்த கடன் வாங்க நேரிடும்.அப்போது டாலரின் மதிப்பு உயர,உள்நாட்டு பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படும்.
பணத்தின் மதிப்பு பொளாதார ஏற்றதாழ்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பணவீக்கம்,வேலைவாய்ப்பு, வட்டிவிகிதம், வளர்ச்சி விகிதம், வர்த்தக பற்றாக்குறை,சந்தை வர்த்தக செயல்பாடு.வெளிநாட்டு பரிவர்த்தனை இருப்புநிலை, பொருளாதார கொள்கை, அயல்நாட்டு முதலீட்டு, வங்கி முதலீடு, பொருட்களின் விலைவாசி மற்றும் அரசியல் சூழல்கள் இவைகளே ஒரு நாட்டின் பண மதிப்பை தீர்மானிக்கின்றன.
இறக்குமதி என்பது ஒரு நாட்டிற்கு அவசியம் தான். ஆனால் என்னென்ன இறக்குமதி செய்யவேண்டும். எந்த அளவில் இறக்குமதி செய்யவேண்டும் என்பதில் ஒரு கட்டுபாடு தேவை. இது மீறும் போது இறக்குமதி பெருகி, உள்நாட்டு உற்பத்தி முற்றிலும் பாதிக்கபடும்.இன்று இந்தியா ஒரு திறந்தவெளி சந்தையாக மாறி, உள்நாட்டு பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களுக்கு உகந்த இடமாக மாறிவிட்டது. 75 லட்சத்திற்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டு தமிழகத்தில் கூட பெரும்பாலான உணவு பொருட்கள், குறிப்பாக பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுவது வேதனையான உண்மை.
இந்தியா போன்ற  நாடுகளுக்கு உள்கட்டமைப்பு, புதிய திட்டங்கள்,வசதி வாய்ப்புகளை பெருக்க பெரும் முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீட்டை நம்மால் மட்டுமே பூர்த்தி செய்யமுடியாத சூழலில் நாம் அந்நிய முதலீட்டை அனுமதித்தோம். ஆனால் அதில் ஒரு ஒழுங்குமுறை பின்பற்றாததால், அந்நிய முதலீட்டாளர்களும், அவர்களுடன் கூட்டணி அமைத்து தனியார் நிறுவனங்களும் தேசத்தை கபளிகரம் செய்ய தொடங்கிவிட்டன.


இந்நிலை மாற தேசபற்றுமிக்க ஒரு ஆட்சிமுறை வரவேண்டும். அதற்கு மக்களும் விழித்துகொள்ளவேண்டும்.

Friday, August 30, 2013

களிமண்ணு - கவித்துமான சினிமா !


பிரெஞ்சின் பிரபல இயக்குனர் பிரான்கைஸ் ட்ருபோர்ட்  ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும்போது இப்படி சொல்கிறார் “ ஒரு படத்தை ஒருவர் பார்க்கும் போது அந்த மொழி அறியாத ஒருவருக்கு கூட தொண்ணூறு சதவீதம் தெளிவாக புரியவேண்டும் என்கிறார். திரைப்படம் என்பது காட்சி மொழி. உரையாடல் என்பது இரண்டாம்பட்சம்தான்.காட்சி மொழித் திரைப்படங்களை மிக அரியதாக மாறிவரும் சூழலில், முழுமையான அழகியலோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் “களிமண்ணு”.

தன்மாத்ரா, பிரணயம் போன்ற மாறுபட்ட படங்களை தந்த மலையாள இயக்குனர் பிளஸ்ஸியின் முற்றிலும் மாறுபட்ட படம் “களிமண்ணு”. இந்த படத்தின் கரு இந்திய சினிமாவுக்கே புதியது எனலாம். நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சியை படமாக்கினார், இந்திய பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார் என்று பல குற்றசாட்டுகளை சுமந்தபடி இந்த படத்தை இயக்கி முடித்துள்ள பிளஸ்ஸிக்கு இப்படம் ஒரு நிஜமான மைல்கல்.
ஒரு கலைபடைப்பை, கமர்ஷியல்தனமுடன் தரும் ஆளுமை என்பது எளிதான ஒன்றல்ல. இதில் வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.

முதல்காட்சி ஒரு பெண் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறாள்.தொடர்ந்து ஒரு சிலை வடிக்கும் காட்சித் தொகுப்பு ஒளிப்பதிவும் ஷாட்களின் நேர்த்தியான படமாக்கப்பட்ட விதமும் நம்மை படத்திற்குள் மொழியை கடந்து சுலபமாக இழுந்த்துசெல்கின்றன.களிமண்ணை பிசையும் ஒரு கலைஞன் அதனை ஒரு அழகான பெண் சிலையாக வடிவமைப்பதை பாடலின் ஊடே ஒளி ஓவியமாக்கி விவரிக்கிறார் இயக்குனர். தொடர்ந்து அந்த சிலை உயிர் பெற்று ஒரு கமர்ஷியல் பாடல், அது முழுமையாக படத்திற்கு தேவையான பாடலாக அமைகிறது. ஏதோ பீரியட் படமோ என்று யோசிக்கும் வினாடியில் “ கட்” என்ற குரல், அது சினிமா படபிடிப்புதளம், அந்த பெண் நாயகி மீரா.

தொடர்ந்து ஒவ்வொரு கேரக்டரும் அடுத்த இருபது நிமிடங்களில் அதற்கான குணாதியசங்களுடன் தெளிவாக அறிமுகமாகின்றன. திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடும் நாயகி மீரா,தான் முதல்முதலில்  நாயகியாக நடித்த ஹிந்திப்படத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறாள். தனது கணவனும் டாக்ஸி ஓட்டுனருமான ஷியாமையும் அழைக்கிறாள். பணியில் பிசியாக இருக்கும் ஷியாம், மீராவின் ப்ரிமியர் ஷோவில் கலந்துகொள்ள காரில் விரைகிறார்.பிரிமியர் ஷோவில் பிரபல நடிகர்களின் பாராட்டு மழையில் நனையும் மீரா, அந்த சூழலிலும் தன் கணவனின் வருகையை தவிப்புடன் எதிர்நோக்குகிறார்.

எதிர்பாராத நிலையில் விபத்தி சிக்க, ஷியாம் உயிருக்கு போராடுகிறார். ஷியாமை பார்க்க மருத்துவமனைக்கு விரையும் ஸ்வேதாவிற்கு பழைய நினைவுகள் அணிவகுக்கின்றன, ஒரு பார் டான்ஸராக வாழும் அவள் சினிமா நாயகியாக மாற எப்படியெல்லாம் இரையக்கப்பட்டாள் என்ற சம்பவங்கள் நிழலாடுகின்றன, இறுதியில் வாழ்க்கையில் விரக்தியாகி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். படத்தின் முதல் காட்சியில் ஒரு பெண் தற்கொலை செய்ய முயலும் காட்சியோடு தொடர்புபடுத்தபடுகிறது.

அவளுக்கு டாக்ஸ் ஓட்டுனராக அறிமுகமாகும் ஷியாம், அவளை தொடர்ந்து கடலில் குதித்து காப்பாற்றுகிறான்.அவளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறான். சிரமங்களில் தன்னம்பிக்கை மற்றும் கனிவுடன் இருக்க, பழைய துன்ப சம்பவங்களை மறந்து ஷியாமை நட்புடன் பழகுகிறாள். நட்பு காதலாகி. காதல் திருமணத்தில் முடிகிறது. ஆனந்தமான திருமண வாழ்க்கை.கனவு தொழிலிலும் முன்னேற்றம் தெரிகிறது. கவர்ச்சி நடனமாடுபவராக உயர்ந்து படிப்படியாக நாயகியாக உருவெடுக்க, தனது முதல் படம் வெளியாகும் சூழலில், அதன் ப்ரீயர் ஷோவன்று ஷியாமின் விபத்து பெரும் சோகமாகிறது.

மருத்துவப் பரிசோதனையில் ஷியாம் மூளைச்சாவு அடைந்தது தெரிய வருகிறது. உறுப்பு தானம் குறித்து பலர் அவளை நிர்பந்திக்க, ஷியாமுடனான பந்தம் அவளை தடுக்க. மீராவுக்குள் போராட்டம்.மீரா யாரும் எதிர்பாராத ஒரு அற்புதமான முடிவெடுக்கிறார். அந்த முடிவு தொடர்ந்த விளைவுகளும் தான் படத்தின் சாராம்சம்.

மீராவின் முடிவு என்பது ஏதோ சினிமாவிற்கான டிவிஸ்ட் அல்ல, அது சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல ஒரு பெரும் புரட்சி.மீராவின் முடிவின் அடிப்படையில்; ,சமூகத்தின் பார்வை என ஒரு மிக சீரியஸான படத்தை கொஞ்சமும் தொய்வின்றி மிகத் தெளிவாக படைத்துள்ளார் இயக்குனர் பிளஸ்ஸி.

                                             இயக்குனர் பிளஸ்ஸி


திரைப்படம் என்பது ஊடகமொழி. அது உளவியல் மொழியாக மாறும்போதுதான் பார்வையாளரோடு இணையசெய்கிறது. களிமண்ணு ஒளிப்பதிவு, இசை என்று எல்லாவற்றிலும் ஒரு முழுமை தெரிகிறது.படத்தில் இந்தி, தமிழ், மலையாளம் என்று பல மொழிகள் பேசப்பட்டாலும் மொழிகளை கடந்து ஒரு புரிதல் தருகிறது.

பாரம்பரியமிக்க இந்திய மண்ணில் கர்ப்பகாலம் என்பது மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று. ஆனால் அது இப்போது இயந்திரமயமாகி வருகிறது. மகப்பேறு குறித்த சிறந்த விழிப்புணர்வை தருகிறது களிமண்ணு. குழந்தைப் பிறப்பு என்பது ஏதோ இன்னொரு உயிரை சுமந்து மண்ணிற்கு தரும் செயல் அல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான வலுவான அடித்தளம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது களிமண்ணு. ஒவ்வொரு பெண்ணும் பார்க்கவேண்டிய படம் களிமண்ணு.



சிறந்த திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இதமளிக்கும் இசை, உறுத்தல் இல்லாத படத்தொகுப்பு, அறிவியல் பூர்வமான விழிப்புணர்வு என்று களிமண்ணு ஒரு படமாக மட்டுமல்ல, திரையாளுமைகளுக்கு ஒரு பாடமாகவும் போற்றப்படும்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...