Wednesday, October 5, 2011

சதுரங்கம் – ஒரு செய்தியாளனின் வாழ்க்கைப் பயணம் !

கோ – படம் பார்த்தவர்கள் அனைவரும், இப்போது தானே பத்திரிகைதுறை சார்ந்த படம் பார்த்தோம், அதுக்குள் இன்னொன்றா என்று கேட்டீர்களானால் ஏமாந்து போவீர்கள்.

ஏனில் இது செய்திதுறை பற்றிய மற்றொரு படமல்ல!

ஜனநாயகத்தின் ஏனைய தூண்களான அரசியல், காவல், நீதி ஆகியவை தவறு செய்யும்போது சுட்டிகாட்டும் நான்காவது தூணாகிய செய்திதுறை சார்ந்தவர்களின் நிஜவாழ்க்கையை இயல்பாக பேசும் படம் சதுரங்கம். ஒரு நேர்மையான செய்தியாளனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகிறது. அவன் இந்த செய்திகளை வெளிப்படுத்துவதின் மூலம் எத்தகைய அபாய நிலைக்குள் சிக்கிகொள்கிறான் என்பதை அழகிய காதல் கொண்டு விவரிக்கிறது சதுரங்கம்.


திசைகள் பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளனாகிய திருப்பதிசாமி ( சிறீ காந்த் ) மிகவும் துணிச்சலான செய்தியாளன். கொலை செய்தால் தான் சிறைக்கு போகும் நிலை மாறி கொலை செய்வதற்காகவே சிறைக்கு செல்லும் அதிபயங்கர கொலைகாரர்கள் நிறைந்த சிறைச்சாலைக்கு செல்கிறார். அங்கு தங்கி சக கைதிகளிடம் பழகி, சிறைச்சாலையின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்துகிறார். இதனால் சிறைத்துறை அமைச்சர் உட்பட பலரின் பதவி காலியாகிறது. திசைகள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இங்கு ஒரு எதிரி உருவாகிறார்.

சட்டவிரோதமாக கட்டிடம் கட்டிய சிங்கபெருமாளின் ( பிதாமகன் மகாதேவன் ) லீலைகளை வெளிப்படுத்துகிறார். இங்கு இன்னொரு எதிரி உருவாகிறான்.

இதற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி கருணாமூர்த்தி, ரவுடிகள் அதிகாரிகள் என்று தினம் தினம் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இடையில் ஒரு அழகான காதல். வங்கியில் சந்திக்கும் கல்லூரி மாணவி சந்தியாவுடன் ( சோனியா அகர்வால் ) ஒரு தித்திப்பான இளமை குறும்பு காதலாக வெளிப்படுகிறது.சந்தியா - திருப்பதிசாமியின் முதல் சந்திப்பில் இருந்து அவர்களின் காதல் படிப்படியாக வளர்வதை அழகியலோடு கவித்துவமாக கொண்டு செல்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

காதல் வீட்டிற்கு தெரிய. திருமணத்திற்கு தயாராகும் வேளையில் திருப்பதிசாமியின் கண்ணெதிரேயே கடத்தப்படுகிறார் சந்தியா .

கடத்தியது யார் ?

கடத்திய காரணம் என்ன ?

புரியாத சூழலில் திருப்பதிசாமியின் வலிமிகு தேடல்தான் சதுரங்கம்.

ஒருவரி கேட்பதற்கு எளிமையாக இருக்கும் ஆனால் ஒரு செய்தியாளனின் நிஜவாழ்வை பிரதிபலிப்பது போன்ற படத்தின் ஓட்டம் நம்மை படத்தின் ஊடே உருக்கமாக அழைத்து செல்கிறது. திருப்பதி சாமி இழந்த காதலியை தேடும்போது ஏதோ நமது பாசத்திற்குரிய ஒருவரை தேடும் உணர்வு நம்முள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது.

நமது வாழ்க்கையே ஒரு சதுரங்கம் தான். தினம்தோறும் நாம் முகம் தெரியாத பல பிரச்சனைகளை நோக்கி காய் நகர்த்துகிறோம். அதில் வெற்றி பெறுவது தான் வாழ்க்கையின் நகர்வு என்பதை அழுத்தமாக சொல்கிறது சதுரங்கம்.


எதிரிகள் யார் யார் என்று வெளிப்படுத்தி, இவர்களால் கடத்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, இறுதியைல் இவர்களில்லை என்று ஒவ்வொன்றாக விடுவித்து யார் ? யாராக இருப்பார்கள் ? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பை தூண்டும் திரைக்கதை பிரமாதப்படுத்தியுள்ளது.

இறுதியில் அந்த எதிரி யாரென்று தெரிந்தபின்பு, இவரா ? என்று ஆச்சர்யபட வைக்கிறது. ஒரு செய்தி மக்களுக்கு செய்தி. ஆனால் அந்த செய்தியாளனுக்கு அன்று முதல் மரணத்தின் துரத்தல் தான் என்பதை வலுவாக சொல்கிறது சதுரங்கம்.

திரைக்கதையில் சமார்த்தியமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர் கரு. பழனியப்பன். படம் வெளியாகும் முன்பே தமிழக அரசின் மாநில விருது இப்படத்திற்கு கிடைத்திருப்பது பொருத்தம் தான்.

திவாகரனின் கேமரா தேவையான அழகியல் மொழியை தேவையான விதத்தில் பேசுகிறது. சோனியா அகர்வாலுடன் காதல் காட்சிகளில் ரொமன்ஸ் மழை பொழியும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் மற்றும் துரத்தல் காட்சிகளின் போது வேகமெடுக்கிறது.

சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு படத்திற்கு வினாடிக்கு வினாடி படபடப்பை கூட்டுகிறது.

இசை வித்யாசாகர். “ என்னை தந்துவிட்டேன் நான் என்னை தந்துவிட்டேன்” பாடல் ஒருமுறை கேட்டபின்பும் திரும்ப திரும்ப நினைவில் வருடுகின்றன.

மாஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.எஸ். துரைராஜும், ஸ்ரீ துணா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பி. கருணாகரன் மற்றும் பி. கண்ணனும் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். வழக்கமான மசாலா இன்றி சமூக பொறுப்புடன் இத்தகைய படத்தை தயாரிக்க துணிந்த இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் என்பதில் சந்தேகமில்லை.

செய்திகள் நம்மை பரவசப்படுத்துகின்றன, அறிவூட்டுகின்றன. தகவல்களை உடனுக்குடன் சேர்க்கின்றன. வாள் முனையைவிட பேனாமுனை கூர்மையானது என்பார்கள்.
பத்திரிகை உலகின் வலிமையை உணர்த்த சொல்லப்படும் வாக்கு இது. பத்திரிகைதுறை வலிமையானதுதான்,ஆனால் அந்த வலிமையான ஆயுதம் கொண்டு சமூக பாதுகாப்பிற்கு அரண் அமைக்கும் செய்தியாளர்கள் எல்லாம் பாதுகாப்புடன் இருக்கிறார்களா ? இந்த கேள்விக்கு அழகாக பதில் தருகிறது சதுரங்கம்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் ? இருக்கிறது. ஆனால் செய்திதுறையை ஒரு முழுமையான களமாக கொண்டிருக்கும் படம் என்பதால் குறைகளை பற்றி அதிகம் விவாதிக்காமல் இப்படத்தை வரவேற்போம்.

உழைக்கும் பத்திரிகையாளர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு அர்ப்பணம் தான் சதுரங்கம்.

.

Friday, September 16, 2011

தலை நிமிரும் தமிழ் சினிமா : எங்கேயும் எப்போதும்


நேற்று ஒரு சினிமா நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “தமிழ்நாட்ல நாளையோட சினிமா காலி தோழர் ! இந்த அம்மா திடீர்னு கேளிக்கை வரியை 30 சதவீதம் உயர்த்திடுச்சி.....ஏற்கனவே பெப்சி பிரச்சனை வேற....”

கடந்த இரண்டு நாட்களாக அவரின் வார்த்தைகள் மனதை குடைந்து கொண்டிருந்தது.ஆனால் எங்கேயும் எப்போதும் பார்த்தபின்பு அந்த அச்சம் தேவையற்றது என்பது உண்மையிலும் உண்மை.

எங்கேயும் எப்போதும் ! தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.

ஹீரோக்கள் தான் சினிமாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்ற விதியை உடைத்து, சினிமா என்றும் இயக்குனர்களின் ஊடகம் என்பதை நிருபித்து இருக்கும் தோழர் இயக்குனர் சரவணனுக்கு ஒரு பூங்கொத்து.

கதையின் களத்திற்கு அவருக்கு இன்னொரு பூங்கொத்து தரலாம்.



நாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது விபத்துக்களை பார்க்கிறோம். ஒரு “உச்” அல்லது ஒரு சின்ன வருத்ததோடு அதனை மறந்து விடுகிறோம்.அப்படி ஒரு விபத்து, அதன் பாதிப்பு, அதில் சிக்குண்டவர்களின் நிலை, வாழ்ந்த வாழ்க்கையை, எப்படி இந்த விபத்து புரட்டிப் போடுகிறது என்பது தான் ஒருவரிக்கதை.திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டர்வியுக்கு வருகிறார் அமுதா ( அனன்யா ) எதிர்பாரத விதமாக அவரை வரவேற்க வேண்டிய அவரின் அக்கா வராத சூழலில், நண்பனை வழியனுப்ப வரும் சரவ்விடம் உதவி கேட்க, அவர் அமுதாவுடன் இண்டர்வியூக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும் அழகான பயணம் ஒரு கதை. முன் பின் அறிமுக இல்லாத அமுதா வழி கேட்கும் போது , சலனமின்றி அப்பாவியாக அவரை 15B , 37G பேருந்து, ஷேர் ஆட்டோ என மாறி மாறி ( உற்சாகமான கதை சொல்லும் உத்தி )அழைத்து செல்லும் சுவரஸ்யமான பயணம் தமிழ் திரைக்கதையில் புதுசு.பயணத்தின் முடிவில் அந்த இளைஞன் மீது அமுதாவிற்கு காதல் வருகிறது.

திருச்சியில் ஒரு பட்டறையில் வேலை செய்யும் ஜெய் தூரத்தில் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் உலவும் அஞ்சலியை ரூட் விட, அடாவடியாக அஞ்சலி ஜெய்யை மடக்கி நிகழும் இன்னொரு காதல். அஞ்சலி பல்வேறு பரிசோதனைகளில் ( புதுமையான காட்சிகள் ) ஜெய் தேர்ச்சி பெற அஞ்சலி – ஜெய் காதல் றெக்கை கட்டுகிறது.

திருச்சி வந்த அமுதா, அந்த இளைஞனின் நினைவிலேயே தவிக்க,அவனை சந்திக்கும் பொருட்டு மீண்டும் சென்னைக்கு வருகிறார்.விழுப்புரம் அருகே அரசூரில் வசிக்கும் ஜெய்யின் பெற்றோரை பார்க்க ஜெய்யும் – அஞ்சலியும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வருகின்றனர்.அதே நேரத்தில் சென்னையில் இருந்து நாயகி அனன்யா மற்றொரு தனியார் பேருந்தில் திருச்சி நோக்கி பயணிக்கின்றார்.

சென்னையில் இருந்து வரும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து வரும் அரசு பேருந்திற்கும்
வழியில் ஏற்படும் எதிர்பாராத அந்த நிகழ்வு அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.அதன் பாதிப்பு, அந்த கொடூர நிகழ்வு சொல்லும் நீதி தான் கதை.

மிகவும் வலிமையான திரைக்கதை.

இது மட்டுமின்றி பேருந்து பயணத்தில் இதயத்தை மொபைல் எண்கள் மூலம் பறிமாறிக்கொள்ளும் டீன் ஏஜ் காதல். ஐந்து வருடத்திற்கு பிறகு தன் குழந்தையைப் பார்க்க வரும் அப்பா, அவரின் மழலைப் பேசும் ரிங் டோன். புதுப் பொண்டாட்டியை ஊருக்கு வழியனுப்பி பிரிய மனமின்றி அவருடன் பயணிக்கும் இளம் கணவன் என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சிரத்தை எடுத்து செதுக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.

புதிய களம், புதுமையான விறுவிறு திரைக்கதை, தெளிவான படமாக்கம் என்று முதல் படத்திலேயே நம்பிக்கை ஏற்படுத்துகிறார் இயக்குனர் எம்.சரவணன்.வழக்கமான கிளிஷேக்களை உடைத்து கதை சொல்லும் அழகில் தனித்து நிற்கிறார் சரவணன்.

வாங்க பாஸூ..! உங்களுக்காக தான் காத்திருந்தோம்.

துறுதுறு அனன்யா இதில் பாந்தமான பெண்ணாகவும், அமைதியான கதாபாத்திரங்களில் நடித்த அஞ்சலி துறுதுறுப்பாகவும் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். இயக்குனரின் இந்த கதாபாத்திரத் தேர்வில் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஜெய் நடிப்பில் ஜெய்’யித்து இருக்கிறார்.

வேல்ராஜின் கேமராவுக்கு ஒரு பூங்கொத்து.புதிய கோணங்களில் அசத்துகிறார்.

அரங்கங்கள், வெளிநாட்டு பாடல்கள் இல்லாமல் இயல்பான இடங்களை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கிஷோரின் படத்தொகுப்பும் நம்மை ஆழமாக களத்தில் ஊடுருவ செய்கின்றன.

சத்யாவின் பாடல்கள் இருக்கையில் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. பின்னனி இசையும் காட்சிக்கு காட்சி உயிர் சேர்க்கிறது

விபத்தை தத்ருபமாக பதிவு செய்திருக்கும் தொழில்நுட்பத்திற்கு நாம் பெருமையுடன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, அந்த நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் ஒரு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார். அதற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு பூங்கொத்து தரலாம்.

தெலுங்கின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ் தயாரிப்பில் சித்தார்த் – சுருதி கமல் நடிக்க “ அங்க ஒக்கன தீரடு “ படத்தின் தோல்வி மூலம் கசப்பான அனுபவம் பெற்ற பின் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இந்திய சந்தை குறித்து கொஞ்சம் தயக்கமுடன் தான் இருந்தது.

ஏ.ஆர். முருகதாஸ் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அந்த தயக்கத்தை தவிடு பொடியாக்கிவிட்டார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இனி தென்னிந்திய சினிமாவில் தன்னம்பிக்கையுடன் பாய்ச்சல் காட்டும்.

நேற்று தமிழ் சினிமா அவ்வளவுதான் என்று நெகடிவாக பேசிய நண்பர் எனக்கு நினைவுக்கு வந்தார்.
மேலோட்டமான கருத்து என்றாலும் கேட்ட நிமிடம் முதல் மனதை ஏதோ பிசைந்து கொண்டிருந்த்து.

எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, முடக்கவோ முடியாது !

முடியவே முடியாது !

Wednesday, September 14, 2011

இதயத்தை திருடிய “பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை” புத்தக வெளியீட்டு விழா.


சமான்யனையும் சரித்திர புருஷனாக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. அவர்களின் ஆற்றலால் வேடிக்கை பார்க்க போன இடத்தில் நாயகனாகும் அதிர்ஷ்டம் மிக சாதரணமான மனிதனுக்கு ஏற்படும்.பார்வையாளனாக இருக்கையில் நெருக்கி உட்கார்ந்து கொள்ள இடம் தேடும் ஒருவன் திடீரென மேடையை அலங்கரிக்கும் “முக்கிய பிரமுகராக” மாற்றப்படுவான். அந்த வகையில் சாதாரண வாசகனான என்னை தனது புத்தக வெளியீட்டில் இடம்பெற செய்து அவரது வரலாற்றில் சிறு இடம் கிடைக்க செய்த அசாத்திய அன்புமிக்கவராகி நிற்கிறார் அண்ணன் அஜயன் பாலா.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னைக்கு வந்த புதிது. சினிமா ஆவலில் புத்தகங்களையும். திரையரங்குகளையும், திரைப்பட விழாக்களையும் தேடி அலைந்துகொண்டிருந்த காலம், டான்பாஸ்கோவில் ஒரு குறும்பட விழா. இரண்டு நாள் விழா முடிவில் திரையிடப்பட்டது “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைப்படம். இன்றைய திரைதொழில்நுட்பத்தின் பிதாமகனாக திகழும் பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் தரிசனம் அங்குதான் முதன் முதலாக கிடைத்தது. அந்த தரிசனம் பெற சிலம்பு 2002 என்ற குறும்பட விழாவின் மூலமாக என்னைப் போன்ற ”பொடியன்களுக்கு” வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் அஜயன் பாலா. அதற்கு முன்பாக பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் திரைக்கதை, எனது தாய்மொழியில் புத்தக வடிவில் வெளியாகி சக்கைப் போடு போட காரணமாக இருந்தவரும் அஜயன் பாலா தான். இப்போது பாரதி புத்தகாலயத்தின் புதிய கோணம் சார்பாக மூன்றாம் பதிப்பாக வெளியாகியுள்ளது.

இன்று திரைப்படங்களின் திரைக்கதை வடிவங்கள் எத்தனையோ சந்தைகளில் கிடைக்கிறது, நான் அறிந்த வகையில் தமிழில் திரைக்கதை வடிவம் பெற்று வந்த முதல் புத்தகம் அஜயன் பாலாவின் “ பை சைக்கிள் தீவ்ஸாக” தான் இருக்கும்.

இன்று மாலை பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா மறக்காமல் வந்துவிடுங்கள் என்றார் அண்ணன் அஜயன்.

ஆடுகளம் படத்தில் முரட்டுகண்கள் கொண்டு மிரட்டிய “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது “ ரொமன்ஸ் ராஜா வ.ஐ.ச. அவர்கள் வருகிறார்கள் என்றவுடன், ஏனோ தரை டிக்கெட் ரசிகன் தனது அபிமான நாயகனை தரிசிக்கும் மனோபாவத்துடன் வ.ஐ.ச.ஜெயபாலனை கண்டு, கதைத்து மகிழ மனம் அடித்துகொண்டது.ஏன் எனில் வ.ஐ.ச ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், போராளி மட்டுமல்ல, பத்து நிமிடம் கதைப்பதின் மூலமே உங்களுக்குள் பத்து வருடத்திற்காக சுறுசுறுப்பை பாய்ச்சி அனுப்பும் உற்சாக வல்லுனர்.

ஆடுகளத்தில் அபரிதமான நடிப்பில், ஆச்சர்யத்தக்கவகையில் முதல் முயற்சியிலேயே தேசிய விருது பெற்ற, அவரின் தொகுப்பான “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது” புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பு என்னுள் இன்றும் மாறாமல் இருக்கிறது. இவர் மீசையை பார்க்கும் போது, இவரா நெடுந்தீவில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் றோசி ரீச்சர் (டீச்சர்..?!!), ஜெயமங்களம், இந்திரா ,மீனாட்சி ( அவர் தொகுப்பில் இவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார், இன்னும் குறிப்பிடாத பெயர்கள் இருக்க கூடும், அதை தனியாக ஒருநாள் கேட்கவேண்டும் ) என ஒரே நேரத்தில் நான்கு காதல்கள் செய்தவர் என்று ஆச்சர்யமூட்டியது.

இலங்கையின் கலாச்சார வாழ்வியல், அரசியல் மாற்றம், சூழலை " அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது " மிகவும் சுவரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் வெளிப்படுத்துகிறது. அந்த உணர்வை தொகுப்பைப் படித்தால் மட்டும் அனுபவிக்க முடியும்.

வ.ஐ.ச. மட்டும் தான் புத்தகத்தை வெளியிடபோகிறார் என்று நினைத்து கொண்டு சென்றால், என்னையும் அந்த மேடையில் ஏற்றி பூக்களோடு மணக்கும் நாருக்கும் கிடைக்கும் மோட்ச கதியை தந்துவிட்டார் அஜயன்.

ஒரு நல்லவனோட சேர்ந்தால் பல நல்லவர்கள் பரிச்சயமாவர்கள் என்பது மெய்பிப்பது போல, பாரதி புத்தகாலயம் மற்றும் புதிய கோணம் பதிப்பகத்தின் நாகராஜன், படப்பெட்டி திரை இலக்கிய இதழின் சிவசெந்தில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், இயக்கும் லிங்கம், இயக்குனரும் “பிலிம் காட்டுகிறார்கள் “ தொகுப்பை எழுதியவருமான யோகானந்த் என்று மாபெரும் படைப்பாளிகளோடு என்னையும் நிற்க வைத்தது ஏனோ என்று தெரியவில்லை. ஆனால் அதில் கலந்துகொண்டு வந்தபின் உடனடியாக எழுத்துலகில் ஏதேனும் செய்யவேண்டும் என்று மூளை பரபரக்கிறது. ஒரு வேளை ஒரு அண்ணனாக இந்த தூண்டுதலை செய்யக்கூட அஜயன் என்னை உயர்த்தி இருக்கலாம்.

மூன்றாம் பதிப்புக் காணும் “பை சைக்கிள் தீவ்ஸ்ஸை” புதிய கோணம் பதிப்பகத்தின் முதல் பதிப்பு என்ற அறிவிப்புடன் வெளியிடுவதின் மூலம் இந்த புத்தகத்தின் பெருமையை உணரமுடியும்.. இதுவே இந்த நூலுக்கு கிடைத்த முதல் மரியாதை.

அஜயனின் திரைக்கதை வடிவமே ஒரு புதுமையாக இருக்கிறது. வழக்கமாக திரைக்கதை நூல் என்றால் அதில் ஷாட் பிரிப்பு, மற்றும் குறிப்புகள் என குறுக்கிட்டு படிக்கும் சுவரஸ்யத்தை கொஞ்சம் தொந்தரவு செய்யும். ஆனால் அஜயன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் அந்த குறுக்கீடு இல்லாமல் விறுவிறுப்பாக படிக்கும் வகையில் திரைக்கதையை படிவமெடுத்துள்ளார். இதுவே இந்த புத்தகத்திற்கு கிடைத்திருக்கும் அதீத வரவேற்புக்கு காரணமாக இருக்க கூடும்.

திரைக்கதை வடிவம் என்று அப்படியே படிவிறக்கம் செய்யாமல், தமிழ் வாசகர்களின் சுவையறிந்து, அவர்களின் உளவியலுக்கு ஏற்ப, அதே நேரம் மூல படைப்பின் அர்த்தம் மாறாமல் வெளிவந்துள்ள தரமான நூல் “ பை சைக்கிள் தீவ்ஸ்”. அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது அந்த படத்தை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது.

திரைக்கல்வி குறித்த ஆர்வம் பெருகிவரும் சூழலில், திரைப்பட்டறைகளுக்கு ஒரு சிறந்த பாட நூலாக திகழும் தகுதி “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதை புத்தகத்திற்கு இருப்பதாகவே கருதுகிறேன்.
இனி வரும் சந்ததியினர் “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதைப் புத்தகத்தை படிக்காமல் அவர்களின் சினிமா குறித்த புரிதல்கள் எளிமையாகாது.பல வருடங்கள் செலவு செய்து கற்றுக்கொள்ளும் சிரமத்தை குறைத்து எளிதாக திரைக்கதை குறித்த அறிவை வழங்கும் சிறந்த வழிகாட்டியாகவும் “ பை சைக்கிள் தீவ்ஸ்” திரைக்கதை புத்தகத்தை பெருமையுடன் குறிப்பிடலாம்.

கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம் :- 044-24332424 / 24332924 / 24339024
இணையம் : www.thamizhbook.com

Wednesday, September 7, 2011

பிள்ளையார் சதுர்த்தி ! - கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் !


விண் + நாயகன் = வினாயகன். அதாவது விண்ணுலகம் என்று போற்றப்படுகின்ற இந்த பிரபஞ்சத்திற்கே நாயகன். விண்ணுலகம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இந்த பஞ்சபூதங்களுக்கு நாயகனாக விளங்கும் இயற்கையைப் போற்றுவோம் !

கணம் ( பஞ்ச பூத கணங்கள் ) + அதிபதி = கணபதி !

ஐந்து ( பஞ்ச பூதங்கள் ஐந்து ) + கரத்தன் = ஐந்துகரத்தன்.

கணம் ( பஞ்சபூதங்கள் ) + ஆகாஷ் = கணேஷ்

இவையெல்லாம் மிஸ்டர் பிள்ளையாருக்கு நாம் கொடுத்துள்ள வேறு பெயர்கள். பிள்ளையார் என்பது ஒரு செல்லப்பெயர்.

நமது வாழ்வியல் இயற்கையோடு இணைந்தது. இயற்கைய போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற உண்மை தான் ஒவ்வொரு கடவுளின் பின்னும் ஒளிந்துள்ளது.

கடவுளை நோக்கும்போது கருத்தினை உற்றுப்பார் ! அங்கு கடவுளின் உருவம் மறைந்து கருத்தே நிலைத்து நிற்கும் என்பார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி.

ஆனால் இதனையெல்லாம் எடுத்து சொல்ல அறிவியல்புலம் கொண்ட ஆன்மிக பெரியோர்கள் இல்லாததால் இதுபோன்ற விழாக்கள் வெறும் சடங்காக மாறிவிட்டது வருத்ததுக்குரியது.

அதுமட்டுமின்றி கோலாகலமாக எல்லோரும் இணைந்து கொண்டாடவேண்டிய இதுபோன்ற விழாக்கள், இத்தகைய அடையாளம் திணிக்கப்பட்டதின் விளைவாக ஒரு குறிப்பிட்ட மத சடங்காக மாறிவிட்டது.

இன்று அதிகாலை எனது நகர்வலத்தில் நான் கண்ட காட்சி.தெருக்களில் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகள் வைத்து அதற்கு மின்விளக்கு அலங்காரங்களால் பட்டையைக்கிளப்பி கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே மின் தட்டுப்பாட்டில் திணறும் தமிழகத்தி இப்படி கடவுளின் பெயரால் மின்விரயம் தேவையா ?

பாதுகாப்பிற்கு இயந்திரதுப்பாக்கியுடன் காவலர்கள். பாவம் இந்த காவலர்கள், இந்தப் பணிக்கு வரும்போது இப்படி ஒரு சிலைக்கு காவல் காக்க வேண்டிய சூழல் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.இதிலும் சில வயதான காவலர்கள் கொசுக்கடியில் திணறிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருந்தது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் கடலில் கரைக்கப்படும் பிள்ளையார் சிலைகள், பெங்களூரில் அங்குள்ள அழகிய ஏரிகளில் தான் நிகழும்.குறிப்பாக அழகிற்கு பெயர் போன அல்சூர் ஏரி இப்படி வீசப்பட்ட பிள்ளையார் சிலைகளுக்கு பிறகு சகதியாக காட்சி அளிக்கும்.

விழாக்கள் மக்களை ஒன்றுபடுத்த, மகிழ்விக்க பிறந்தவை.

ஆனால் இன்று ?

மின்விரயம்.

மாசுபடுதல்

அச்சம்.

போக்குவரத்து இடைஞ்சல்.

என்று பலவிதங்களில் இடையூறாக மாறிவருகிறது. இதனை காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.

கடவுளை நோக்கும் போது, கருத்தினை உற்றுப்பார். அங்கு கடவுள் மறைந்து கருத்துக்களே நிலைத்து நிற்கும். இன்னொரு முறை சொல்லிக்கொள்வோம்.

இந்த உலகை அறிவால் மட்டுமே நிர்மாணிப்போம் !

Sunday, August 28, 2011

மூவரின் உயிர்காக்க தொடர் கருப்புகொடி அணிந்து போராடுவோம் !


ஒரு ஜனநாயக நாட்டில் எது நிகழக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

கொலை ! தற்கொலை ! சட்டத்தின் பெயரால் மரணதண்டனை.இது மூன்றுமே ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்தான்.

மூன்று நபர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு தற்கொலை நிகழ்ந்து நிலைக்கொள்ளச் செய்கிறது.

எமது நோக்கம் எந்த காரணத்தைக்கொண்டு ஒரு மனித உயிர் கொல்லப்படகூடாது என்பதுதான்.
புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் லட்சக்கணக்கில் கடனை ஏற்றி வைத்துள்ள இந்திய அரசு, இப்போது மூன்று பேரைக்கொல்ல நூற்றிப் பத்துக்கோடி கைகளில் சுருக்கு கயிற்றை திணித்துள்ளது.

ஆன்மிகம் என்றொரு அறிவியில் சக்தி கொண்டு உலகை ஆசிர்வதித்த தாய்மண் இது.அவர்களின் பிள்ளைகளின் கைகளில் அடாவடியாக பாவ ரேகைகளைப் பதிய செய்கிறது சட்டம்.

சமுகப் போராட்டங்கள் எல்லாம் வாய் பேச்சையும் உரைவீச்சையும் மட்டுமே முன்னிறுத்துகின்றன.
அறிவுபூர்வமாக இன்றைய சமூகத்தை வழிநடத்தவேண்டிய தலைவர்கள் உணர்வுப் பூர்வமாக இளைஞர்களை தூண்டிவிடுவதின் காரணமே செங்கொடி, முத்துக்குமார் போன்றோரின் முடிவுகள்.

முத்துகுமார் தீக்குளித்ததால் ஈழபோராட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை.மாறாக முத்துகுமரன் என்ற நல்ல சிந்தனையாளனை, நல்ல செய்தியாளனை வருங்காலத்தில் ஏதோவொரு வகையில் சமுக பங்காற்ற வாய்ப்புகொண்ட ஒரு இளைஞனை இந்த நாடு இழந்தது.அவ்வளவுதான் !

செங்கொடி தீக்குளித்து உள்ளதால் மூன்று பேரின் தண்டனையை அரசு உடனடியாக நிறுத்தப் போவதுமில்லை.மாறாக மூன்று பேரின் தூக்கிற்கு எதிரான போராட்ட தீவிரம் செங்கொடியின் மரணத்தின் மீது திரும்பி, அதனால் எத்தகைய பலன் அடையாளம் என்ற வகையில் அரசியல் முன்னீடுகள் நிகழும்.

இதனால் லாபம் அடைய போவது உரைவீச்சு அரசியல் தலைவர்கள் தான்.

இந்த மண் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை அறிவூப் பூர்வமாக வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் எல்லாம் உணர்ச்சியைது தூண்டிவிட்டு இளைய சமுகத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை மழுங்க செய்து குளிர்காய்ந்து வருகின்றனர்.

ஈழப் போராட்டத்திலும் சரி ! தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டத்திலும் சரி, மேடை போட்டு குருதியைக் கொப்பளிக்க செய்யும் உரைவீசும் அரசியல்வாதிகள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொண்ட்தாக சரித்திரம் இல்லை. பாவம் ! அவர்கள் போய்விட்டால், இவ்வாறாக உணர்ச்சியை தூண்டிவிட யார் இருக்கிறார்கள்.

உண்மை இதுதான் !

அகிம்சை போராட்டதின் பின்பு ஒளிந்திருக்கும் கூர்மை அடாவடித்தனமான போராட்டங்களில் இருப்பதில்லை.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வாஞ்சிநாதன் என்று பலர் கத்தியெடுத்து சாதிக்காத ஒன்றை மகாத்மாவினால சத்தமின்றி சாதிக்கமுடிந்தது.

கடந்த வாரம் தினத்தந்தியில் படித்த ஒரு செய்தி என்னை சிந்திக்க வைத்தது.

இந்தியாவில் சுதந்திரம் போராட்டம் தீவிரம்போராட்டம் வலிமைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் வின்செண்ட் சர்ச்சில் இவ்வாறு காந்தியப் போராட்டத்தைப் பற்றி கூறுகிறார்.” என்னால் காந்திய போராட்டத்திற்கு பதிலடித் தரமுடியவில்லை. நான் செயலற்று நிற்கிறேன். அவர் ஆயதம் கொண்டு போராடினால் அதனைவிட வலிமையான ஆயதம் கொண்டு எதிர்கொள்ளமுடியும். ஆனால் அன்பு என்ற ஆயுதத்தை முன்னிறுத்துகிறார். அதற்கு பதிலடி அதனைவிட வலிமையாக அன்பு செலுத்துவதைவிட வேறு வழி எனக்கு தெரியவில்லை என்று இயலாமையை தெரிவிக்கிறார்.

மக்கள் சக்தி ஒரு மாபெரும் சக்தி. அதனை அன்பு என்ற ஒரு கருவியை கொண்டு ஒருங்கிணைக்கும்போதுதான் அது மேலும் வலிமை அடையும். மனம் அமைதியான நிலையில் இருக்கும் போதுதான் எண்ணங்கள் செயலுக்கு வரும் என்கிறர் உளவியல் ஆராய்ச்சி முடிவுகள்.உணர்ச்சிவசமான போராட்டங்கள், எத்தனை வேகத்தில் முன்னிறுத்தப்படுகிறதோ, அதே வேகத்தில் அடங்கிவிடும். ஆனால் அஹிம்சா போராட்டங்கள் சத்தமின்றி ஒரு கதிர்வீச்சைப் போல பரவும்.

நம் போராட்டம் சாத்வீக முறையில் இருக்க வேண்டும். அதே நேரம் ஒரு தீ போல பரவவேண்டும். மக்கள் மனதில் எந்த நேரமும் அணையாமல் இருக்கவேண்டும். அதனை சாத்வீகப் போராட்டங்களே செய்கின்றன.

அதே நேரம் சட்டப் போராட்டமும் முன்னிறுத்தபடவேண்டும். அய்யா நெடுமாறன் மற்றும் வைகோ போன்றோரின் முயற்சிகளால் சட்டம் போராட்டம் ஒருபுறம் வலுப்பெற்று வருகிறது. அதே நேரம் எதிர்ப்பின் வலிமையை இந்த ஆட்சியாளர்களுக்கு அமைதியான வழியில் தெரியப்படுத்தவேண்டும்.
இத்தனை கோடி மக்கள் இதனை எதிர்க்கிறார்களா ? அப்படியெனில் இவர்களின் மனநிலைக்கு எதிராக நாம் செயல்பட்டால் இவர்களின் ஓட்டு அனைத்தும் நமக்கு எதிராக தானே அமையும் என்று ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.

நாம் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

அதற்கு அடையாளம் வேண்டும்.

அனைவரும் காலவரையற்ற கருப்பு பேட்ஜ் அணியலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் எங்கு சென்றாலும் கருப்பு பேட்ஜ் அணிந்தே செல்லுங்கள்.

தெரியாதவர்கள் இதனைப் பார்த்து காரணம் கேட்கும் போது பொறுமையாக எடுத்து கூறுங்கள். மேலும் அவர்களிடம் ஒரு பேட்ஜ்ஜை கொடுத்து விருப்பமுடன் அணிய பணியுங்கள். நோக்கம் நண்மையாக இருக்கும் சூழலில் இது தீ போல பரவி எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணியும் சூழல் ஏற்படும். அப்போது காணும் இடமெல்லாம் மக்கள் கருப்பு பேட்ஜில் தான் இருப்பார்கள்.

வயது வித்தியாசமின்றி இதனை எல்லோராலும் செய்ய முடியும். நிச்சயம் இந்த கரும்புரட்சி எண்ண அளவில் ஆட்சியாளர்கள் மனதில் பிரதிபலிக்கும். தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இருக்கும் நிலையில். அதனை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.

எனினும் உள்ளாட்சி தேர்தல்கள் நெருங்கும் சுழலில், இந்த கரும்புரட்சி பெரும் அளவில் வெடித்தால், எதிர்ப்பின் வலிமை அதிகரித்தால், இத்தனை ஓட்டுக்களை எந்த அரசாங்கம் இழக்க விரும்பும்.

அவசரகாலத்தில் நிச்சயம் ஏதேனும் மாற்றம் நிகழும்.

நம்பிக்கையோடு செய்வோம்.

இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன.

அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிவோம் !

நம் கைகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள தூக்கு கயிற்றை அறுத்தெறிவோம்.

Friday, May 20, 2011

ரஜினிகாந்திற்கு என்ன வேண்டும் !

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் சோகமுடனும் பதட்டமுடன் இருக்கின்றனர்.

ரஜினியின் இரத்தபந்தமான சத்யநாராயணா கெய்க்வாட்டிற்கே அவரைப் பார்க்க அனுமதியில்லை. பெங்களூரில் அவர் கதறிக் கொண்டிருக்க்கிறார்.

ஊடகங்களின் நிர்பந்தத்தின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த திருமதி. லதா ரஜினிகாந்த், அவர் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

எத்தனையோ சமுகப் பிரச்சனைகள் அணிவகுத்து கிடக்க, எரிகிற வீட்டில் இருப்பதை பிடுங்குவதில் குஷி காணும் இக்கால ஊடகங்கள் ஏற்கனவே மிரண்டு கிடக்கும் ரசிகர்கள் மத்தியில் விதவிதமான செய்தி பரப்பி டிஆர்பியை ஏற்றிக்கொண்டு சந்தோஷ ஜல்லியடித்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் ரஜினிக்கு என்ன நோய் ?

அவர் ஒருவித வைரஸால் ( EBV வகை ) பாதிக்கப்பட்டு இருப்பது உண்மை. அது இப்போது வந்த வைரஸ் அல்ல. அவரின் சிறுவயதில் ஏற்பட்ட தொற்று இப்போது வெளிப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நம்ப தகுந்த மருத்துவ வட்டாரம் சொல்கிறது. இதன் ஆரம்ப நிலையில் மயக்கம், காய்ச்சல், வாந்தி போன்ற குறீயிடுகளைத் தரும். உள்ளுறுப்புகளை பாதிக்கும் வாய்ப்புகளும் உண்டு.அதனால் சிறுநீரக செயல்பாட்டில் சிறு தோய்வு ஏற்பட அதன் காரணமாக டயாலிஸிஸ் செய்யப்பட்டு இப்போது சீராக இயங்கத் தொடங்கியுள்ளது.ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டு விட்டதால் கட்டுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மற்றபடி அச்சப்பட அவசியமில்லை. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

சாதாரணமான ஒரு குடியானவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே, அவரின் உறுவினர் ஒருவருக்கு மட்டுமே உடனிருக்க அனுமதி கிடைக்கும். அடுத்ததாக மற்ற பார்வையாளர்கள் பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி உண்டு. இதற்கு காரணம், வருவர்கள் மூலம் நோயாளிகளுக்கு கிருமித் தொற்றுக் கூடாது என்பதும், நோயாளிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு நோய் தொற்று கூடாது என்பதும் தான்.

இதனை பரபரப்பாக்குவது அவரின் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஒரு தோய்வை ஏற்படுத்தும். அந்த சோர்ந்த எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வலிமைப் பெறுவது நல்லதல்ல. எப்போது ஆரோக்கியமான எண்ணமும், அதனை வலிமை சேர்க்கும் முயற்சியும் நோயாளிக்கும் அவர் மீது அபிமானம் கொண்டவருக்கும் அவசியம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல, சாதாரண குடியானவனுக்கும் பொருந்தும்.


சரி...ஊடகங்களின் பரபரப்பு இருக்கட்டும் !

ரஜினிக்கு இப்போது என்ன தேவை !

அவருக்கு தேவை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி !

அதாவது ஜீவகாந்தம் பெருக்கம்.

ஜீவகாந்தம் என்பது கண்ணுக்கு தெரியாத காந்த ஆற்றல்.

உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்க, ஜீவகாந்தம் அவசியம். அது உண்ணும் உணவு, மற்றும் பிரபஞ்ச வெளியில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. தவம் செய்வதின் மூலமாக, அதீதமான வாழ்த்துக்களை மற்றவர்களிடம் இருந்து பெருவதின் மூலமாக நம் உடலில் ஜீவகாந்த அதிகரிக்கும்.

உடல் நோய்வாய்ப்படும் போது பிரபஞ்சத்தில் இருந்து ஜீவகாந்த சக்தியை கிரகிக்க தடுமாறுகிறது.

உடலில் ஜீவகாந்தம் குறைந்தால் உடல் நலம் பாதிக்கும்.ரஜியின் உடலில் ஜீவகாந்தப் பெருக்கத்தை மருந்து மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் நலக் கோளாறை சரிசெய்ய மருத்துவக் குழுவினர் செயல்ப்பட்டு வருகின்றனர்.ரஜினி யோகமுறைகள் அறிந்தவர். தானே தன் எண்ணத்தின் மூலம் சரி செய்யும் முயற்சியில் இப்போது ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார்.

அவரின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில்,நாம் நமது வழியில் எண்ணத்தின் வாயிலாக ஜீவகாந்த திணிவை அவருக்கு தர முயற்சிப்போம்.

வாழ்த்துக்கள் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்கிறார். வேதாத்ரி மகரிஷி.

பதட்டப்படுவதைவிட, கவலைக் கொள்வதைவிட,இந்த சிறு முயற்சி வலிமை சேர்க்கும்.

எப்படி ?

மிகவும் எளிது ?

பிராத்தனை மற்றும் வாழ்த்துக்களால் முடியும்.

பிரார்த்தனை என்பது ஒரு Metaphor. ஆனால் வாழ்த்து என்பது ஒரு உளவியல் பயிற்சி.

பிரார்த்தனையில் இன்னொரு சக்தியின் மீது எண்ணத்தை செலுத்துவதின் மூலம் உங்கள் எண்ண ஆற்றலை செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துவதின் மூலம் நீங்களே உங்கள் எண்ணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். பதட்டப் படாமல் ! வருத்தப்படாமல் ஒரு இடத்தில் அமைதியாக உட்காருங்கள். அது பூஜை அறையாகவும் இருக்கலாம். படுக்கை அறையாகவும் இருக்கலாம். முக்கிய அமைதி !

கண்களை மென்மையாக மூடிக்கொள்ளுங்கள்.

எண்ணத்தை இரு புருவங்களின் மத்தியில் முடிந்தவரை கொண்டு வாருங்கள்.
இப்போது உணருங்கள்.

அமைதி ! அமைதி ! அமைதி !

நீங்கள் உட்கார்ந்து இருக்கும் சுற்றமும் சூழலும் அமைதியில் இருப்பதை உணருங்கள்.
உங்களை சுற்றி ஒரு தெய்வீக சக்தி சூழ்ந்து இருப்பதாக உணருங்கள். அந்த சக்தி உங்கள் உடலில் பாய்வதாக இப்போது உணர்கிறீர்கள்.அந்த சக்தியின் ஊடே நீங்கள் ஒன்றன, உயிர்கலப்பு பெற்று இருக்கிறீர்கள்.

உங்களைச் சுற்றி தூய்மைப் பெறுகிறது.

உங்களைச் சுற்றி வலிமை பெறுகிறது.

இப்போது உங்கள் மூச்சு காற்றையே சிரமமின்றி கவனியுங்கள்.

இவ்வாறு ஒரு மூன்று நிமிடங்கள் உங்கள் மூச்சுக்காற்றையே கவனியுங்கள்.

அதற்காக மூச்சுகாற்றை வலிமையாக இழுக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.
மிக மென்மையாக கவனியுங்கள். அது மட்டும் போதும்.

இப்போது எண்களை எண்ணுங்கள்.

100
99
98
97
96
95
94
93
92
90
80
70
என்று ஒவ்வொரு எண்ணாக ஒன்று வரை எண்ணுங்கள்.

ஒன்று வரும்போது நீங்கள் கொஞ்சம் அரைத்தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் இருப்பீர்கள். உங்கள் எண்ண அலைச்சூழல் சுருங்கி மிகவும் கூர்மையாக இருக்கும்.

இப்போது நீங்கள் பிரபஞ்சவெளியில் மிதப்பதாக கற்பனையில் உணருங்கள்.

உங்களைச் சுற்றி ஆற்றல் களம் சூழ்ந்து கொண்டுள்ளது.

அந்த ஆற்றலில் நீங்கள் மிதந்துகொண்டுள்ளீர்கள்.

உங்கள் உடலில் அதீத சக்தி நிரம்பி வழிகிறது.

உடலில் இன்ப ஊற்றும். மனதில் அதீத அமைதியும் நிரம்பி வழிறது.

இப்போது ரஜினி அவர்களின் உருவத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு பிடித்தமான ரஜினியின் உருவம்.

உங்களுக்கு விருப்பமான உருவம்.

இப்போது ரஜின் உங்கள் முன்பு அமர்ந்து இருக்கிறார்.

நீங்கள் ரஜின் முன்பு அமர்ந்து இருக்கிறீர்கள்.

மிக வலிமையாக கற்பனை செய்யுங்கள்.

ரஜினியும் நீங்களும் எதிர் எதிரே உட்கார்ந்து இருக்கிறீர்கள்.

அதே நிலையில் பிரபஞ்சத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு.

பிரபஞ்சத்தில் ஒரு வெண்மை ஒளியை உண்டாக்குங்கள்.

கற்பனையில் தான் ! ஆனால் ஒரு நிஜமான ஒளி பிரபஞ்சத்தில் உருவாகிறது.

கண்களை கூசச் செய்கிறது அந்த ஒளி.

அந்த வெண்மையான ஒளியை ஒரு பந்துபோல் உருட்டி உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு
வாருங்கள்.

இப்போது அந்த ஒளி உங்கள் கட்டுப்பாட்டுக்கு வருகிறது.

அதனை அப்படியே ரஜினியின் உடலில் பாய்ச்சுங்கள்.

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும்
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

அந்த வெண்மை நிற ஒளி, ரஜினியின் உடலில் உள்ள நோய் குறியீட்டை உடலில் இருந்து அப்புறப்படுத்தி பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து கரைவதாக உங்கள் கற்பனையை முடித்துக் கொள்ளுங்கள்.



ஒரு பாவனையில் உங்கள் எண்ணத்தினால் ஒரு சங்கல்பத்தை சொல்லுங்கள்.
கற்பனையில் ரஜினி அவர்களின் நோய் தீருவதாக, அவர் நலம் பெறுவதாக உணருங்கள்.

இதோ அவர் நலம் பெறுகிறார்.

இதோ அவர் உற்சாகம் பெறுகிறார்.

இதோ ரஜினி ஆரோக்கியமாக புத்துணர்வோடு எழுந்து வருகிறார்.

நீங்கள் விரும்பும் வகையில் ரஜினியின் புத்துணர்வை உணருங்கள்,

இப்போது அந்த காட்சியை சில நிமிடங்கள் அனுபவியுங்கள்.
இப்போது வாழ்த்துலகில் இருந்து வெளியே வருகிறோம்.

பத்தில் இருந்து ஒன்று எண்ணுகிறோம்.

ஒன்று எனும் போது பிரபஞ்சவெளியில் இருந்து நாம் தவம் செய்யும் அறைக்கு வருகிறோம்.
நம்மை சுற்றி ஆற்றல் நம் உடலில் பரவுகிறது.

அந்த ஆற்றலை நம் உடலில் பெருக்கிக் கொண்டு கைகளால் மென்மையாக கண்களில் ஒத்து,லேசாக கண்களைத் திறந்து வாழ்த்து மற்றும் தவத்தை முடித்துக் கொள்வோம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல.
உற்றார், உறவினர் மற்றும் யார் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இத்தகைய எண்ண ஆற்றலை

பெருக்குவதின் மூலம் வாழ்த்து சொல்லலாம்.

பெங்களுரில் பேசிக்ஸ் என்னும் பெயரில் ஹிப்னோதெரபி பள்ளி நடத்தி வரும் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தரிடம் ஹிப்னோதெரபி படித்த போது அவர் சொல்லித தந்த self hypnosis நுட்ப பயிற்சியில் இது ஒரு வகை.

இது ஒரு வலிமையான உளவியல் பயிற்சி !

இதில் மாயமும் இல்லை ! மந்திரமுமில்லை 1

செய்து பாருங்கள்

பலன் நிச்சயம்.

Tuesday, May 10, 2011

சொர்க்கவாசலும் சித்திரகுப்தனின் i-tab ம்

சொர்க்கம் எது ? நரகம் எது ?

எனது சொந்த பாட்டிமார்களை நான் பார்த்தது இல்லை.

பாவம் அவர்கள் ! நான் பிறக்கும் முன்பே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அவரவர் செயல் விளவுக்கு ஏற்ப இடம் பிடித்து சென்று விட்டார்கள்.

ஆனால் என் அதிர்ஷ்டம் ! என் அம்மாவின் பாட்டியை நான் பார்த்து இருக்கிறேன். என் அம்மாவின் அம்மாவுக்கு அம்மா. என் அம்மாவின் அம்மம்மா ! எனக்கு அம்மம்மம்மம்மா.....அட கொள்ளு பாட்டிங்க ! விசாலாட்சி என்று பேர்.

கொஞ்சம் ரொமண்டிக்கா விசாலி !

நான் தான் விசாலாட்சியின் ஒரே கொள்ளுபேரன்.அதனால் அவருக்கு என் மீது கொள்ளைப் பிரியம்.

அவர்தான் எனக்கு எமராஜன் கதையை சொன்னார்.

நான் பிறந்து சில வருடங்களே தான் ஆகியிருந்தன. விசாலிக்கு இந்த பூமியில் வாழும் வாய்ப்பு சில வருடங்கள் தான் இருந்தன. இந்த பூமிக்கு வாழ வந்த பச்சபிள்ளைக்கு பாட்டி சொன்ன கதை எமனின் திருவிளையாடல்.

வாழ்க்கையின் இறுதியில் இருந்த விசாலிக்கு !பாவம் எப்போதும் மரண பயம் இருந்திருக்க வேண்டும். எனக்கு பால் சோறூட்டும் வாய்ப்புகளில் சொல்லும் கதைகளில் கூட எமதர்மன் எப்போது “ Propose “ பண்ணுவார் என்ற நினைப்பு அவருக்கு.

எமதர்மராஜன் ஒரு பனைமர உயரத்திற்கு இருப்பார். இந்த வீடு உயர பெரிய எருமை மாட்டின் மீது வருவார். அவர் கையில் ஒரு பெரிய பாசக்கயிறு இருக்கும். அந்த கயிற்றை வீசிதான் மனிதர்களின் உயிரை எடுப்பார் என்று அவர் சொல்லும் போதே எனக்கு பயத்தில் பாதி சாப்பாடு உள்ளே இறங்கிவிடும்.

சாப்பிட்ட பின் இரவு தூக்கத்தில் எமதர்மராஜன் வர, நான் அலறிக் கொண்டு எழ, அதற்கும் அந்த பாட்டி இரவில் முனி வந்து பிள்ளையை மிரட்டுகிறது என்று மறுநாள் எருக்கை என்னும் மரநாரில் செய்த தாயத்தையோ அல்லது புங்கை காய் தாயத்தையோ இடுப்பில் கட்டிவிடும். பலநேரங்களில் புரண்டு படுக்கும்போது தாயத்தின் கூர்மை இடுப்பில் குத்த, வலியின் அந்த சிணுங்களுக்கும், யட்சினை வந்து பிள்ளையை மிரட்டுவதாக, நாலு வீட்டு ஓலை எடுத்து அதனில் என்னை துப்பச் சொல்லி அடுப்பில் எரிக்கும்.

எனக்கு பாட்டியின் கையில் துப்புவதிலும், அந்த ஓலை அடுப்பில் படபடவென சத்தம் போட்டு எரிவதையும் பார்ப்பதில் ரொம்ப இஷ்டம்.என் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரணமோ, கதையோ விசாலியிடம் இருந்து வெளிப்படும்.


விசாலிக்கு என் மீது பிரியம்.

நெடுநாள் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்த காலங்களில் நான் பள்ளி மாணவனாகிவிட்டேன். பள்ளி விட்டதும் மாலையில் சென்று பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து ஏதேனும் பேசுவார்களா என்று பார்ப்பேன்.

ஒருநாள் என் மாமா மதியமே பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.பாட்டியை சுத்தி சொந்தபந்தங்கள்.பாட்டியைப் பார்த்தேன், நெஞ்சுக் கூடு ஏறி இறங்கி மூச்சு முட்டிக் கொண்டிருந்தார்.ஒத்தை ரூபாயை கல்லில் இழைத்து பாலில் கலந்து பாட்டியின் வாயில் ஊத்தச் சொன்னார்கள். கையும் நடுங்க உதடுகள் சிணுங்க, கண்களில் நீர் துளிர்க்க அவ்வாறு ஊற்றினேன். நான் பால் ஊற்றிய சில நிமிடங்களிலேயே பாட்டியின் உயிர்துடிப்பு அடங்கிவிட்டது. என்னை அதிர்ஷ்டக்காரன் என்றார் என் பெரியப்பா. பாட்டியின் உயிர் என் மேல் தான் இருந்தது என்று பெருமைபட்டார்கள்.பாட்டிக்கு என் மேல்தான் அதிக பாசம் என்றார்கள்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அதைவிட பெரிதாக சந்தேகம் வந்தது. பாட்டியை கொன்றது நானா ? எமதர்மனா ?

எமதர்மன் வரவில்லை பாசக்கயிற்றை வீசவில்லை ! பாட்டி எப்படி இறந்து போனாள் ? பிறகு என் பெரியப்பாவிடம் சந்தேகம் கேட்டபோது இன்னும் சில கிளைக் கதைகள் கிடைத்தன.

பெரியப்பா சொன்னார், எமதர்மன் நம் கண்ணுக்கு தெரியமாட்டார். உயிரை விடுபவர்களுக்கு மட்டுமே தெரிவார். அப்படி உயிரை எடுத்து எருமையில் உட்கார வைத்து கொண்டு எமலோகம் செல்வானாம். அங்கு சித்திரகுப்தன் என்பவன், இறந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கணக்கு பார்ப்பானாம். பூமியில் நல்லது செய்து வாழ்ந்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.

சொர்க்கத்தில் தேவக்குமாரிகள் வரவேற்று, பன்னீரில் ரோஜாப்பூக்களை விட்டு குளிப்பாட்டி, யானைத் தந்த சீப்பில் தலைவாரி,உடல் முழுவதும் சந்தனமும் அத்தரும் பூசி,தினம் தினம் புதிய உடையளித்து, அறுசுவை உணவளித்து, வெள்ளி தாம்பலத்தில் வெத்திலை,பாக்கு, கும்பக்கோணம் சீவல் வைத்து உபசரித்து,தங்கத்தில் தகதகக்கும் அரண்மனையில்,பட்டு மெத்தையில் தூங்க வைப்பார்களாம். வாழ்நாள் முழுவதும் அங்கு அவர்கள் சந்தோஷமாக இருக்கலாமாம்.

சித்திரகுப்தனின் கணக்கில் கெட்டவனாக வாழ்ந்து பாவியாக இருந்தால்,அவர்களை நரகத்தில் தள்ளிவிடுவார்களாம். அங்கு பாம்பும் பூராணும் ஊறுமாம்,பல்லி வந்து கடிக்குமாம், எரியும் நெருப்பில் எண்ணெய் கொப்பரை இட்டு அதில் குளிக்க வைப்பார்களாம், குஷ்டம் பிடித்த பெண்கள் வந்து வரவேற்றும்,ஆய்...?!!! கிணற்றில் குளிப்பாட்டி.....இன்னும்...இன்னும் எழுதமுடியாத தண்டனைகளை எல்லாம் தருவானாம்.பிறகு வாழ்நாள் முழுவதும் நரகவாழ்க்கைதான் வாழவேண்டுமாம்.

இப்போது எமதர்ம மகாராஜாவை விட சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்தின் மீது எனக்கு அதிகம் பயம் வந்தது.

இந்த எமதர்மனின் கதையை நான் பெரியவனான பின்னும் நெடுநாட்கள் நம்பிக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபின்பு முதல் முறையாக சுடுகாடு பார்த்தேன். எரித்துவிட்டு திரும்பிய பின் எதிர்வீட்டு துரைசாமி தாத்தா என் தந்தையை எமதர்மன் அழைத்துபோனதை பார்த்தேன் என்றார். எமதர்மன் தனது எருமை வாகனத்தின் பின் ஒரு பளபளக்கும் தங்க பல்லக்கில் உட்காரவைத்து அழைத்து போனான் என்றார். சுற்றி அழுது முடித்திருந்த பெண்கள் எல்லாரும் என் தந்தையை புண்ணியவான் என்றார்கள். என் அம்மா கல்லூரிவரை படித்த சமுகநலத்துறை ஊழியராக இருந்தாலும்,அவரின் அறிவுக்கு கூட துரைசாமித் தாத்தாவின் வர்ணனை ஏனோ பிடித்து இருந்தது.எனக்கு கூட அப்பாவை இழந்த சோகத்தையும் மீறி அவர் மீது ஒரு ஹீரோயிசம் தோன்றியது.

இந்த நம்பிக்கைகள் எல்லாம் இறைஞான வகுப்புகளில் கலந்துகொள்ளும் வரைதான்.

கடவுள் யார் ? ஏன் இந்த நம்பிக்கைகள் என்று படிபடியாக உணர ஆரம்பித்தவுடன் எனக்கு சித்திரகுப்தன் பற்றி பயமில்லை. ஆனால் இந்த கதை எதற்கு. காலம் காலமாக இவ்வாறாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கைகள் எதற்காக ?

மனிதவாழ்க்கையை செம்மையாக்கவும், ஒருவர் மீது ஒருவர் நேசத்தைக் பரிமாறிக்கொள்ளவும்,முடிந்தவரை மற்றவர்க்கு துன்பம் தராமல் வாழவேண்டும் என்பது தான் இந்த பாமர கதை சொல்லிகளின் வாழையடி வாழையாக வரும் கதைகளின் நோக்கம்.

இதை மிக எளிமையாக செயல் விளைவுத் தத்துவம் ( Cause and effect ) என்று விளக்குகிறார் வேதாத்ரி மகரிஷி.

சொர்க்கம் என்பது என்ன ? நரகம் என்பது என்ன ?

எமதர்மன் வருகிறானோ இல்லையோ ? சித்திரகுப்தன் கணக்கெடுக்கிறானோ இல்லையோ ? அது நம்பிக்கை. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கான விளைவுகளை தந்தே தீரும். இது உண்மை.

இது எப்படி செயல்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் செயல்களையும் யார் பதிவு செய்கிறார்கள். சித்திரகுப்தன் என்று ஒருவன் இருந்தாலும். அவன் கணக்கு புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு நவீனகாலத்திற்கேறப ஒரு ஐ டேஃபை வைத்துக்கொண்டு, மிகப் பெரிய சர்வரில் உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபைல் போட்டு பராமரித்தாலும், அதற்கான விளைவுகளை எப்படி சரியாக தரமுடியும் ?

இது பொதுவான கேள்விதான்.

சித்ரகுப்தன் கற்பனைபாத்திரமெனில் இப்போது பாவபுண்ணியங்களை பட்டியலிட்டு செயல்படுத்துவது எது ?

உலகில் இரண்டே செயல்கள்தான்.

ஒன்று நன்மை தருவது. இரண்டு தீமை தருவது.

இது தனிமனிதனுக்கும் இருக்கலாம்.அல்லது சமுகத்திற்கும் இருக்கலாம்.

இது தனிமனிதனாலும் நிகழலாம்.சமுகத்தாலும் நிகழலாம்.

பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன ? ஈர்ப்புசக்தி அல்லது கிரகித்தல்.

இது உந்துதல் மற்றும் அழுத்தம்.

சுருக்கமாக காந்தம் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

காந்தத்தின் தன்மை என்ன ?

எதனையும் ஈர்த்துக்கொள்வது.

நாம் செய்யும் செயல்கள் யாவும் காந்த அலையாக மாறி பிரபஞ்சத்தில் பதிகிறது. பின்னர் அதே பதிவுகள் மன அலைசூழலுக்கேற்ப நமது அறிவில் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு வகை.
நாம் செயல்கள யாவும் நமது கருமையத்தில் பதிந்து நமது அடுத்த தலைமுறையினரிடம் சென்று வெளிப்படுவது இது இன்னொரு வகை.

பல்வேறு எண்ணங்கள் ஒன்று கூடி பிரபஞ்சத்தில் பதிந்து வலிமைபெற்று,அதே ஒத்த அலைவரிசையுடைய எண்ணங்களில் கலந்து அறிவாக வெளிப்படுவது.இது மற்றொரு வகை.

இவையாவும் காந்த தத்துவமே.

காந்தி தாத்தா இதை மூன்று குரங்குகளை வைத்து அருமையாக சொன்னார்.

கெட்டதை பேசாதே !

கெட்டதைப் பார்க்கதே !

கெட்டதை செய்யாதே !

இந்த உலகம் முழுவதும் சுமார் 700 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு தனிப்பட்ட சிந்தனை உண்டு.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிப்பட்ட லட்சியம் உண்டு.

இவ்வாறு தனித்து தனித்து நினைக்கும்போது தான் பிரிவினைகள் ஏற்படுகின்றன.

இந்த பூமி வெறும் 25 ஆயிரம் மைல் சுற்றளவு உள்ளது.

இதில்தான் இந்த 700 கோடி மக்களும் வசிக்கவேண்டும்.

இந்த பூமியில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லைக்கட்டி நிற்கும் போதும்,பதுக்கும்போதும், பிறர்க்கு தேவையிருக்க, தேவையில்லாமல் இருப்பு கொள்வதும் தான் உலக அமைதி சீர்கேட்டிற்கு காரணம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.இதில் ஏற்படவேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியப்பாடல் உள்ளது. அதுபோல் உலகம் முழுவதற்கும் இயற்கையை போற்றி ஒரு பொதுவான வாழ்த்துப்பாடல் வேண்டும். ஒரே கருத்துள்ள இப்பாடலை அவரவர் மொழியில் மொழிபெயர்த்து தினமும் ஒருமுறை, கோயில்கள், தேவலாயங்கள், இறைவழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், நிகழ்ச்சிகள் என எங்கெங்கும் பாடும் போது ஒரு சக்தி மிகு ஒருமித்த சிந்தனை கிளர்ந்தெழும்.

இவ்வாறு செய்யும் போது நாளடைவில் இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள கெட்ட அலையியக்கத்தை மாற்றி நல்வாழ்வுக்கான அலையிக்கமாக பதிவு செய்துவிடலாம்.

வேதாத்ரி மகரிஷி இதனை ஐம்பது வருடத்திற்கு முன்பு செய்திருக்கிறார்.அவரின் உலகநல வாழ்த்துப் பாடல் இளையராஜா இசையில் வெள்ளை ரோஜாப் படத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது.

இனி தனி மனித வாழ்க்கையைப் பார்ப்போம்.

சொர்க்கம் என்பது நரகம் என்பதும் வேறங்குமில்லை.

அது இங்கே தான் இருக்கிறது.

நாம் வாழும் வாழ்வில், நமது எண்ணத்தில்,நமது விழிப்புணர்வில், நமது அறிவில்,நமது சிந்தனையில்.

எமதர்மனும் நீங்கள் தான்.ஒழுக்கநெறித் தவறினால் உங்கள் மரணத்தை நீங்களே வரவேற்கிறீர்கள்.
சித்திரகுப்தனும் நீங்களேதான் ! இயற்கைக்கும் சமுகத்திற்கும் முரணான காரியங்களையோ அல்லது நல்ல காரியங்களையோ செய்யும் போது அது பிரபஞ்சத்தில் பதிவாகி அதற்கான விளைவு, நல்லதோ ! கெட்டதோ ! உங்களுக்கோ அல்லது உங்கள் சந்ததிக்கோ ஏற்படுத்தும் அக்கவுண்டை நீங்கள் தான் பராமரிக்கிறீர்கள்.

இந்த 25 ஆயிரம் மைல் சுற்றளவுள்ள பூமியில் அனுபவிக்காத இன்பத்தை வேறெங்கும் அனுபவிக்க முடியாது. இதே பூமியில் இல்லாத துன்பத்தை வேறெங்கும் எதிர்கொள்ள முடியாது.
எல்லா கணக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

எண்ணம் சொல் செயல் இம்மூன்றிலும் பிறர்க்கு உடலாலோ மனதாலோ துன்பம் தராமல் வாழவேண்டும். துன்பப்டுவோருக்கு எந்த பிரதிபலனும் இன்றி நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

இந்த உலகம் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது.

கிரகங்களுக்குள் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து அது நம்மை நிலைகொள்ள வைக்கிறது. அது கண்களால் காணமுடியாது.

அதே போலதான் மனிதர்களுக்குள்ளும் உள்ள ஆன்ம இணைப்பு. அது கண்ணுக்கு தெரியாவிட்டாலும், அதுதான் ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இயக்குகிறது.

ஒரு தெரிந்த உதாரணம். இதுவும் வேதாத்ரி மகரிஷி சொன்னதுதான்.

நாம் குடிக்கும் ஒரு டீ . மதிப்பிட்டால் ஒரு ஐந்து ரூபாய் சொல்லலாம். ஆனால் அது உற்பத்தி ஆகும் இடம் தொடங்கி தயாராகி நம் கையில் உள்ள கோப்பையில் தவழும் வரை எத்தனை மனிதர்களின் உழைப்பை சுமந்து வருகிறது. அதன் மதிப்பை போட்டால் வெறும் ஐந்து ரூபாய் எனலாம்.ஆனால் அதனை உருவாக்கி நம் கைகளில் தவழவிட்டது வரை உழைத்த மக்களின் சேவையை நம்மால் மதிப்பிட முடியுமா ? ஒரு தேனிருக்கே இத்தனை உழைப்பு என்றால், நாம் அன்றாடம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதி வாய்ப்புகளிலும் எத்தனை மனிதர்களின் உழைப்பு கொட்டி கிடக்கிறது. அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து நன்றி சொல்ல நினைத்தால் முடியுமா ? அல்லது முடிகிற விஷயம்தானா ?

இதற்கெல்லாம் ஒரே வழி, பொதுவாக உலகை நேசிப்பது. உலகை நேசித்தால் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் தானே நேசம் பொங்கும்.

இந்த நேசம் ஒவ்வொரு மனிதர்களிடம் வளர்ந்துவிட்டால். சொர்க்கம் நரகம் பற்றி கவலைப்படத்தேவையில்லை. செய்கின்ற செய்லகளில் தீமைகளை பதிந்துவிட்டு கோயில், குளம் என்று அலைந்தாலோ. நாம் அடிக்கும் தொகையில் பாதியை உண்டியலில் போட்டு கடவுளையும் பங்குதாரராக மாற்றிவிட்டாலோ மட்டும் சொர்க்கம் கிடைத்துவிடாது.

சொர்க்கம் என்பது ஒரு உவமை. அது நிஜமல்ல.

நரகம் என்பதும் ஒரு உவமைதான் . அதுவும் நிஜமில்லை.

ஆனால் செயல்விளைவுத் தத்துவம் என்பது உண்மை.அதற்கான வங்கி உங்கள் கருமையத்திலேயே கணக்கு தொடங்கி வைத்திருக்கிறது. உங்களின் செயல்விளைவுகள் உங்களை அறியாமலே பராமரிக்கப்படுகிறது. அதில் எப்போதும் நல்ல கணக்கை பதியும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்க்ள்.

இதை மட்டும் கருத்தில் கொண்டால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலை தரிசிக்காமலே உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.

இருக்கும் போதே சொர்க்கத்தை பார்க்காலாம் !

சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்திற்கோ அல்லது ஐ டெஃபுக்கோ tablet க்கோ வேலையிருக்காது.

Saturday, May 7, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 2 )

அது என்ன ஹிப்னோபர்த்திங்…!

புதுசா இருக்கே என்ற கேள்வி எழுகிறதா?

சிலர் அவசர அவசரமாக இணையதளத்தில் தகவல் அறிய தேடும் உங்களின் ஆர்வமும் புரிகிறது.

ஹிப்னோபர்த்திங் பற்றித் தெரிந்துக்கொள்ளவேண்டுமெனில் நாம் ஹிப்னாடிசம் பற்றியும் சற்று தெளிவுபெறுவேண்டும்.

அட…! ஹிப்னாடிசமா ? தெரியுமே….! “அந்நியன்” படத்தில் மல்டிபிள் பெர்சனாலிட்டி நோயாளியான விக்ரமை வசப்படுத்தி நாசர் உண்மையை வரவழைப்பாரே அதானே… என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.

அது தான் ஹிப்னாடிசம். அதே மனோவசிய கலை சற்று விரிவடைந்து புதிய நுட்பங்களுடன், ஹிப்னோதெரபி எனும் சிகிச்சைமுறையாக மனோத்துவ உலகில் புதிய சாதனைப் படைத்து வருகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?,நமது உடலில் ஏற்படும் பெரும்பான்மையான நோய்கள் காரணமாக இருப்பது நம் மனம்தான். மனோரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் போகும்போது அது உடல்ரீதியான நோய்களாக மாறுகிறது.

உதாரணமாக ஒருவருக்கு சிறு தலைவலி ஏற்படுகிறது. முதலில் வீட்டு வைத்தியம் பார்க்கிறார், குறையவில்லை. பின்னர் அருகில் உள்ள மருந்துக்கடையில் ஏதோ ஒரு மருந்து வாங்கி சாப்பிடுகிறார். வலி நிற்கிறத்!

அப்பாடா..! என்று உட்கார்ந்தால் லிமிடேட் ஸ்டாப் சர்வீஸ் பஸ் மாதிரி திரும்பவும் தலைவலி.அவர் கொஞ்சம் சீரியசாக யோசிக்கிறார். ஏன் ஒரு டாக்டரை பார்க்க கூடாது.

“தலைவலின்னு சும்மா விட்டுடக்கூடாதுப்பா….இப்படி தான் நம்ம காரைவீட்டு கனகத்துக்கு தலைவலி அடிக்கடி வருமாம்…..அவ கண்டுக்காம விட்டுட்டா, இப்ப என்னடான்னா அது பிரைன் கேன்சர்ல வந்து நிக்குது”

ஊர் வாய் வந்தது வியாக்யாணம் என்று பேச,கேட்டவர்க்கு தந்தி அடிக்கிறது.அவரை அறியாமலே அவரின் ஆழ்மனதில் தனக்கு அதுமாதிரி ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயத்தை பதிவாக ஏற்படுத்திக்கொள்கிறார்.

லீவு போட்டுவிட்டு பிக்னிக் போவது போல கட்டுசாதம் கட்டிக்கொண்டு மருத்துவமனை சென்று காத்திருந்து,பல பரிசோதனைகளை செய்து,பர்சிலும் வங்கியிலும் உள்ள சேமிப்புகளை கரைத்து, மருத்துவ பரிசோதனை அறிக்கையை வாங்கி பார்த்தால் ஒண்ணுமில்லை !

என்ன்ணா இது..! இவ்வளவு செலவுப்பண்ணி ஒண்ணுமில்லேனுட்டானே…!” மனைவி கவலைப்பட, “ ஏண்டி….! செலவுபண்ணதுக்காக எனக்கு நோய் இருக்குனுமா.. என்ன ?” என்று கணவன் அலற, கட்டைபிரேம் கண்ணாடி போட்ட டாக்டருக்கே கொஞ்சம் குழப்பம்தான்.

“ஒண்ணு பண்ணுங்க சார்…!” சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி,ஒரு சின்னக்கண்ணாடிப் போட்டுக்குங்க….நான் நெனைக்கிறன்….கொஞ்சம் கண்பார்வை கோளாறாலேயும் தலைவலி வரலாம்..அப்படியே இந்த மருந்தும் ஒரு கோர்ஸ் சாப்பிடுங்க “ என்று பில்லடிக்கிறார்.

அப்படி இப்படியென நிற்காத தலைவலியுடன், அடுத்த மருத்துவ பில்லுக்கு பயந்து சிகிச்சையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது,ஒருநாள் வாய்மொழியாய் கேள்விப்பட்டு ஹிப்னோ சிகிச்சைக்கு போகிறார் அவர்.

ஆழ்நிலைக்கு கொண்டு சென்றதில்,இரண்டு வருடம் முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், அவருக்கு “மன அழுத்தமாக” பதிந்து இருப்பதைக் கண்டறிகிறார் சிகிச்சையாளர்,அதே ஆழ்நிலையில் வைத்து.சில நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கோர்வையாக அவர் ஆழ்மனதில் பதியசெய்து அந்த மன அழுத்தத்தை நீக்குகிறார் சிகிச்சையாளர்.சில நிமிடங்கள்தான் இவர் இயல்புநிலைக்கு வந்து கண்வழித்தால்,தலைவலி போன இடம் தெரியவில்லை. போயே….போச்சு !

உடல் ரீதியான நோய்க்கு கண்டிப்பாக அதற்குரிய சிகிச்சை எடுத்தே தீரவேண்டும். ஆனால் பல உடலியல் பிரச்சனைகளுக்கு மனோரீத்யான சிகிச்சை அல்லது ஒரு பயிற்சி முறை தேவை.

தலைவலி, மன அழுத்தம்தான் என்றில்லை, நாள்பட்ட எந்தவித நோய்க்கும் மனரீதியான காரணங்கள் இருப்பதுதான் உண்மை. நாம் எப்படி ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ உடல் பரிசோதனை செய்துகொள்கிறோமோ, அதேபோல் மனப்பரிசோதனை செய்துகொண்டால் வாழலாம் வளமுடன் !

” என்ன சார்..அப்ப எங்க எல்லாரையும் மெண்டல் என்கிறீர்களா ? சைக்ரியாடிஸ்ட்கிட்ட போக சொல்றீங்க ? “ உங்களின் வினா கேட்கிறது.

இது சைக்ரியாட்ரி அல்ல,சைக்கோதெரபி.

சைக்ரியாட்ரி வேறு,சைக்காலஜி வேறு,சைக்கோதெரபி வேறு.மற்ற இரண்டையும்விட சைக்கோதெரபியின் சிகிச்சைமுறை முற்றிலும் மாறுப்பட்டது. சைக்கோதெரபியின் வலிமயான சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி. வலியில்லாத,வளவளவென அறிவுரைகளில்லாத மருந்தில்லாத மகாமருத்துவ சிகிச்சைமுறைதான் ஹிப்னோதெரபி.

ஹிப்னோதெரபி பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் கண்டிப்பா “மனம்” பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

என்னங்க…….. ஹிப்னோ பர்த்திங்ள ஆரம்பிச்சு ஹிப்னோதெரபியில் நிறுத்தினீங்க,இப்ப மனம் பற்றி பேசலாம்னு சொல்றீங்க.

மனம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும்போது, அதப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் இல்லைங்களா ? உங்களுக்கு ஒரு கேள்வி.

மனம் என்றால் என்ன ?

உடம்பில் எந்த பகுதியில் இருக்கு ?

எதன் அடிப்படையில் இயங்குது ?

என்ன எதேதோ பதில் மனதில் ஒடுதா ?

அப்படியே ஒரு பதிலை பிடிச்சு வைங்க,எது சரின்னு அடுத்த பகுதியில பார்ப்போம்.

Monday, May 2, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 1 )

“அய்யோ …அம்மா வலி உயிர் போகுதே…..! “ அவளின் அலறல் கேட்டவுடன் வீடே கலவரக்காடானது.

“வேகமாய் போய் ஒரு ஆட்டோ புடிடா..” என்று அந்த வயதான அம்மாள் பயமுடன் பரிதவித்தாள்.

”அவ புருஷனுக்கு போனபோடு…” என்று இன்னொரு குரல் எதிரொலிக்க அவள் மரண வேதனையில் இருந்தாள்.

வலியின் வீரீயம் அவளின் உடம்பில் பரவும்போது உயிர்பிழைப்போமா என்ற பயமும்,கடவுளே யாருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது என்ற அச்சமும் அவள் மனதில் மேலும் ஒரு அழுத்தத்தை உண்டாக்கியது.

சர்ரென்று வந்து நின்ற ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு,நிரம்பி வழிந்த டிராபிக் சிக்னல்களைதாண்டும் போதே அவள் மேலும் வலியின் கொடுமையில் அலறத்தொடங்கினாள். ஆட்டோவின் ஹாரன் சத்தம், டிராபிக்கின் இரைச்சல்களைத் தாண்டி அவள் அலறல் குரலைக் கேட்டவர்கள் அவர்களை வினோதமாக பார்த்தபோது,அவளுக்கே வெட்கமாக இருந்து.

ஆனால் என்ன செய்யமுடியும் வலியை அனுபவிப்பது அவள்தானே.

ஆட்டோ மருத்தவமனையை அடைந்து ஒரு ஸ்டெரச்சரில் தூக்கி வைத்து, டாக்டரிடம் சேர்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர் அனைவரும்.

“கடவுளே…!.தாயையும் பிள்ளையையும்….பத்திரமா காப்பாத்திக் கொடுடா சாமி.....…!” மொத்தக் குடும்பமும் நெஞ்சுருகி இஷ்டதெய்வங்களை இன்ஸ்டால்மெண்டில் வேண்டிக்கொண்டிருந்த்து.

எப்போது நல்ல செய்திவரும் என்று அனைவரும் வார்டு வாசலில் காத்திருக்க,கையில் பெரிய ஓலையுடன் வந்து குண்டைத்தூக்கி வீசினார் டாக்டர்.

’பார்வதி அட்டெண்டர் யாரு.......குடும்பம் ஆவலுடன் ஓட ஒரு அணுகுண்டை வீசினார் “…கொழந்த பொசிஷன் மாறியிருக்கு….சிசேரியன் பண்ணிதான் எடுக்கணும்....”….கவுண்டர்ல போயி….இந்த பணத்தை .....…உடனே கட்டுங்க…...பேஷண்ட்...!!! புருஷன் யாரு வாங்க இந்த பேப்பர்ல கையெழுத்துப் போடுங்க”

அவ்வளவுதான் !

உலகமே இன்னொரு பூகம்பத்தில் விழுந்து மாதிரி ஆனது கணவனுக்கு. இவ்வளவு பணத்திற்கு…..? எங்கே போவேன் நான் ?

சிடுசிடுக்கும் முடியில்லா அவனின் வழுக்கைத் தலை மேலதிகாரியிடம் மல்லுக்கட்டி பாடுபட்டால் கிடைக்கும், அவனின் ஒன்றரை மாதச் சம்பளம் அல்லவா இது.

அய்யோ கடவுளெ….ஆண்டவா……! பிள்ளைப்பெறுவது இவ்வளவு கஷ்டமா, உள்ளே அவள் அதிகரிக்கும் பேறுகால வலியில் அலறிக்கொண்டிருந்தாள்

“ இறைவா……பிள்ளைய பெத்துக்க… இவ்வளவு செலவா,,? வெளியே அவனுக்கு,முழி பிதுங்கி வெளியே வந்துவிடும்போல் இருந்து.

போதாக்குறைக்கு உறவுமுறைகளின் சுருதி மாறிக்கொண்டிருந்தது.

“அவ வயத்து புள்ளையோட மினுக்கிகிட்டு திரியும்போதே நெனைச்சேன் இப்படியெல்லாம் ஆகும்னு…எம்புள்ளை இப்படி திடுதிப்புனு பணத்துக்கு எங்கப் போவான்….” அம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல் அவன் மனைவியை திட்டுவது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

“மாசமா இருக்கும் போது சத்து பத்தா நாலு வாங்கி கொடுத்திருந்தா இப்படி ஆவுமா..” இதுதான் வாய்ப்பு என தன் மகளின் புகுந்தவீட்டை குறைகண்டனர் சற்று முன்னர் வந்த பெண்ணை பெற்றவர்கள்.

ஒருபுறம் பணம் புரட்டவேண்டும்.

இன்னொருபக்கம் புறம் காணும் சொந்தங்களை சமாளிக்க வேண்டும்.இதைவிட அவனின் காதல் மனைவியின் அலறல், அவன் நாடி நரம்பெல்லாம் ஒரு வித உதறலை தந்தது.

ஒரு அழகான மழைப்பொழுதில் காலின் கொலுசு ஜல்லியடிக்க பின்னால் வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்ட அவளின் மென்மையான கரங்களும்,அவளின் உஷ்ணமான மூச்சுக்காற்றும்..அவளுக்கென அவளின் கூந்தலில் இருந்து வரும் பிரத்யோகமான மணத்தின் ரம்மியமும் ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது.

“கடவுளே என் தேவதைக்கு எதுவும் ஆகக்கூடாது…….! குழந்தைப் பெற்றுக்கொள்வது இவ்வளவு சவாலான விஷயமா..! அப்படியே இடிந்து ஆஸ்பத்திரி வராண்டாவில் இருந்த பிள்ளையார் சிலை முன்பு உட்கார்ந்துவிட்டான்.

இது ஏதோ தொடர்கதையின் முதல் அத்தியாயம் அல்ல…… இன்று இந்தியக் குடும்பங்களின் கணவன்மார்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தீர்களானால் உங்களுக்கு கூட இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கும்.

ஆம்…! மருத்துவ உலகம் தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டது என்று நாம் நேஞ்சை நிமிர்த்தி நிற்கும் வேளையில்,அதனை நடுத்தர சராசரி மக்கள் எதிர்கொள்ளும் விலையில் இருக்கிறதா என்று பார்த்தால்,நாம் குனிந்த தலையை நிமிர்த்த முடியாது.

குழந்தைப் பேறு என்பது ஒரு புதிய உறவின் வரவேற்பு விழா என்ற நிலை மாறி, பர்சை பதம் பார்க்கும் “கடி” விழாவாக மாறிவருகிறது.

இன்று நிகழும் பிள்ளைபிறப்பில் நூற்றில் 50% சிசேரியம் மூலம் தான் நிகழ்கிறது என்கிறது ஒரு சமூக புள்ளிவிவரம்.செலவு ஒரு புறம் என்றால் அறுவை சிகிச்சையின் போது திணிக்கப்படும் மருந்துகள் உடம்பில் தேங்கிக்கொண்டு ஆயுசு முழுவதும் உறுத்திக்கொண்டு தொடரும்.

இதற்கு என்னதான் விடிவு என்று கேட்கிறீர்களா..? தீர்வு இல்லாமல் இத்தனை பில்டப் தருவோமா என்ன..!

இந்த வலிமிகுந்த அனுபவத்திற்க்கெல்லாம் வழி அனுப்பவருகிறது புதிய மனோவசிய நுட்பம்
“ஹிப்னொபர்த்திங்” என்ற சாகசம் !

சாகசமா….என்ன அது.? என்றுதானே கேட்கிறீர்கள்.

ஆமாம்…கற்பனை செய்துபாருங்கள்..! ஒரு நிறைமாத கர்ப்பிணி ஜாலியாக வாக்கிங் சென்று ஒரு ஆஸ்பத்தியில் ஹாயாக ஜோலியை முடித்துக்கொண்டு குழந்தையுடன் திரும்புவது ஒரு சாகசம்தானே….!

அந்த சகாசம் குழந்தைப்பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவராலும் முடியும் “ ஹிப்னோபர்த்திங்” என்ற கலையால்.உங்களை அந்த சாகசத்திற்கு தயார் செய்வதே இந்த தொடரின் நோக்கம்.
தயாராகுங்கள் ஒரு சாகசமிக்க தாயாராக….!

-------- இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக் கிழமை ( 06.05.2011 ) பதிவில்

உதவி :
டாக்டர்.சி.ஜே.ஜெயச்சந்தர்.
ஆழ்மன ஆற்றுபடுத்துதல் மனோவசிய சிகிச்சை நிபுணர்
www.basixinc.org

Friday, April 29, 2011

பாபா “ மேஜிக்” - குற்றமற்ற குரு யார் ?

புட்டபர்த்தி சத்ய சாயி பாபாவின் உடல் இந்த பூவுல பார்வையில் இருந்து மறைந்து விட்டது. இந்த உடலெடுத்த காரணம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆமாம் ? பாபா நல்லவரா ? கெட்டவரா?

பாபா ஒரு கடவுளின் அவதாரம்.அவரே கடவுள் அற்புதங்கள் பல புரிந்தவர். இது உலகமெங்கும் வாழும் ஒரு சில மக்களின் நம்பிக்கை.

பாபா ஒரு சுயநலவாதி. சாதாரண மனிதப்பிறவிதான். கடவுள் என்ற பெயரால் கோடிக்கணக்கான சொத்து சேர்த்துவிட்டார். கடவுள் என்றால் அவர் ஏன் மரணம் அடையவேண்டும் ? கடவுளுக்கு மரணம் உண்டா ? இது முற்போக்குவாதிகள் என்ற பெயரில் வெளிப்படும் மக்களின் மனவோட்டம்.

இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் கடவுள் வேறு ! மனிதன் வேறு ! என்று காலம் காலமாக பதிந்துவிட்ட எண்ணம் தான்.மண்ணில் ஆறறிவுடன் பிறப்பெடுத்துவிட்டாலே அவர்கள் மனிதர்கள் தான். ஆனால் மண்ணில் பிறப்பெடுத்துவிட்டதாலேயே ஒருவர் கடைசி வரை மனிதனாக வாழ்ந்து மடியவேண்டும் என்பதில்லை.மகானாகவும் மாறலாம். ஏன் கடவுளாகவே போற்றப்படலாம்.

பாபா மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன ?பாபா மட்டுமல்ல ? இயேசு கிறிஸ்து. நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர் தொடர்ந்து நவீன காலத்தில் வாழ்ந்த ஓஷோ உட்பட தற்போது வாழும் ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர்,ரவிஷங்கர்,கல்கி எனத் தொடர்கிறது பட்டியல்.

இவர்களின் மீது பொதுவான குற்றச்சாட்டுக்கள் என்ன ? ஒன்று பாலியல் தொந்தரவு அல்லது ஓரின சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அடுத்தது கடவுளின் அவதாரம் என்று பொய்யுரை செய்து கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பது அல்லது பிற குற்றச்செயல்கள்.

இதனை எளிமையாக இப்படி அடக்கலாம். அவர்களின் குற்றங்கள் எதுவானலும் பேராசை, வஞ்சம், கடுஞ்சினம், முறையற்ற பால் கவர்ச்சி மற்றும் உயர்வு தாழ்வு மனப்பான்மை. எத்தகைய கொடிய குற்றங்களும் இதற்குள் அடங்கும் அல்லது இதுவே அடிப்படையாக இருக்கும்.

பாபா விமர்சனத்துக்குள்ளான அதே காலக்கட்டத்தில் தான் லட்சக்கணக்கான சீடர்களும் உருவாகி வந்திருக்கின்றனர். சீடர்கள் என்றால் சாதாரண ஆட்கள் இல்லை.உலகின் முன்னனி மருத்துவர்கள், பொறியாளர்கள்,விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள்,கலைஞர்கள் என்று பலர். இவர்கள் ஏன் பாபாவை பின்பற்ற வேண்டும். இவர்களின் கருப்பு பணத்தை பதுக்க அல்லது பாதுகாக்க அவர் உதவுகிறார் என்று கூட புதிய குற்றச்சாட்டு கூறலாம்.இதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதனை மீறிய ஒரு ஈர்ப்பு சக்தி அவரிடம் இருந்தது என்பதுதான் உண்மை.அப்படியெனில் அவர் மீது விமர்சனங்கள் ஏன் ?

மனித பிறவி என்பது கண்ணுக்கு தெரிந்த உறுப்புகளோட கண்ணிற்கு தெரியாத கருமையப்பதிவுகளையும் ( Genetic Imprints )சுமந்தே வருகிறது. இந்த கருமையப் பதிவுகள் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களின் வாழ்வியலின் பிரதிபலிப்பாக நம்முள் ஏற்படும்.

உதாரணமாக மூன்றுவிதமான கர்மாக்கள் இருக்கின்றன.

ஆகாமியம், சஞ்சிதம் மற்றும் பிராப்தம் என்பன அவை.

ஆகாமியம் என்பது உங்களின் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பாவப்பதிவுக்ள் பிறவித் தொடராக உங்களிடம் வருவது.சஞ்சிதம் என்பது நீங்கள் சிந்திக்க தொடங்கிய வினாடியில் இருந்து பதிந்துகொண்ட நல்லது கெட்டதை உங்கள் செயலில் பிரதிபலிக்க செய்வது. பிராப்தம் என்பது ஆகாமியமும் சஞ்சிதமும் கலந்து ஒரு புதிய பதிவை உங்களுக்குள் ஏற்படுத்துவது.இந்த பிரதிபலிப்புகள் நம் உடல் எடுத்த வினாடியில் இருந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மா இதில் இருந்து மாறுபட்டது. அது அழிவற்றது என்று நமது யோகமுறை சொல்கிறது. ஒரு ஆன்மா இந்த பூமிக்கு வருமுன்பே தனது நோக்கத்தை தீர்மானித்தே வருகிறது.

உதாரணமாக தேசத்தந்தை மகாத்மா காந்திஜி. நாம் நானூறு வருடங்கள் வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம்.எப்போது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைக் கிடைக்கும் என்ற இந்தியாவெங்கும் மனித எண்ணங்கள் ஏங்கி கொண்டிருந்தன. அவர்களின் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் பதிந்து கொண்டே வந்தன. பிரபஞ்சத்தில் உலா வந்த ஒரு ஆன்மா இந்திய மக்களின் ஏக்கத்தை நிறைவேற்ற முடிவெடுத்து பூமிக்கு வர தீர்மானித்தது. அது கரம்சந்த் காந்தியையும், புத்திலிபாய் அம்மையாரையும் தன் பெற்றோராக தேர்ந்தெடுத்தது. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். மோகன் தாஸ் பிறந்த வினாடியில் மகாத்மாவாக தன்னை உணரவில்லை. அவருக்கு புகைக்கவும்,புலால் உண்ணவும், மது அருந்தவும் உடல் ஆர்வம் தூண்டியது. தந்தை மரணப்படுக்கையில் இருக்க மனைவியுடன் சல்லாபித்தார். இதையெல்லாம் செய்ய அந்த ஆத்மா தூண்டவில்லை. அவரின் உடலுக்கு ஏற்பட்ட ஆர்வம். அது அவரின் முன்னோர் வழி வந்தது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. சிலதை தவிர்த்தார், சிலவற்றை அனுபவித்து தீர்த்தார்.அவரின் உளவியல் குழப்பம் கருமையத்தில் பதிந்து, அடுத்த தலைமுறைக்கும் சென்றது.

மோகன் தாஸூக்கு ஏற்பட்ட இந்த தூண்டுதல் அவருடன் நிற்கவில்லை. அவருக்கு பிறந்த ஹரிகிருஷ்ணலால் காந்தி வரை நீண்டது. ஹரிகிருஷ்ணலாலின் லீலைகளை நாம் படித்து இருக்கிறோம். ஆனால் இந்த உடல் தூண்டுதல்கள் கொஞ்சம் காலம் தான். அது தணிந்தபின்பு ஆத்மா தன் கடமையை செய்ய தொடங்கியது. மோகன் தாஸ் மகாத்மாவாக மாறினார்.

இந்த கருமைய விளையாட்டை மோகன் தாஸிடம் மட்டுமல்ல பலரது வாழ்க்கையில் பார்க்கலாம். இன்றைய உதாரணம்,கலைஞர் மற்றும் மு.க.முத்து. விஜய்.டி.ராஜேந்தர் ஒரு அற்புத படைப்பாளி, நான் பெண்ணை தொட்டு நடிக்கமாட்டேன் என்று கூறுவார். அப்படிதான் நடித்து வந்தார், ஆனால் செயல் அளவில் அவர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உளவியல் அளவில் அதில் ஒரு ஊசலாட்டம் இருந்திருக்கவேண்டும், அதுவே அவரின் மகனை ஒரு பிளேபாயாக சுற்றத் தூண்டுகிறது.

இந்த செயல் விளைவு தத்துவம் மனித பிறப்பெடுத்த எல்லாருக்கும் பொருந்தும்.இதுதான் இந்த ஆன்மிக குருக்களின் வாழ்வியலிலும் நடக்கிறது. அவர்கள் ஆன்மிகம் விருப்பமாக இருந்தாலும், ஆன்மா சேவையை வாழ்வியல் நோக்கமாக கொண்டிருந்தாலும், உடலியல் வேட்கையை நெறிப்படுத்தும் பயிற்சியில் தவறும்போது இத்தகைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர். இதில் கவனமாக இருக்கவேண்டும். ஒரு சில குருமார்கள் தான் பக்குவப்பட்டு பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர்.

அத்தகைய பக்குவம் எப்போது வரும்.நமது வாழ்வியல் முறை, உலகின் இன்ப துன்பங்களை அனுபவித்து,வாழ்ந்து, மகிழ்ந்து வாழ்க்கையின் இறுதி காலத்தில் தான் துறவறம் செல்லவேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் ஒருசிலர் இளம் வயதிலேயே இறையுணர்வை பெற்று விடுகின்றனர்.இதுவும் கர்மவினைதான். அவ்வாறு பெற்றாலும், முன்னோர் வழி வந்த உடலெடுத்த காரணத்தால்,அந்த பதிவுகள் பிரதிபலிக்கும் போது, அறிவு மங்கி உடல் சுகத்தால் தடுமாறி விடுகின்றனர். முற்காலத்தில் பீடங்கள் தங்கள் குருமார்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் காண்பித்தன. பல நெறிமுறைகளை வகுத்தன.இளம் வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடும் போது, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.உணவு,உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்று உடலையும் மனதையும் பக்குவப்படுத்தப்படும்.இது எல்லா மதத்திலும் நடைமுறையில் இருக்கின்றன.

முறையான நல்வழியில் வளர்க்கப்பட்டும் ஜெயேந்திரரும் , விஜேயந்திரரும் கம்பி எண்ணிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம் வாழையடியாக வரும் பீடங்களுக்கே இந்த கதி என்றால் திடீர் இறையுணர்வு பெறும் மனிதர்களால் என்னதான் செய்ய முடியும்.

நித்தியானந்தாவின் யோகமுறைகளை குறை சொல்ல முடியாது. ஆனால் ஆன்மிக வாழ்வில் இருந்துகொண்டு ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருப்பது பெரும் குற்றம் தான். இதனை தவிர்க்க நித்தியானந்தா என்ன செய்திருக்க வேண்டும் ? தனக்குள் இத்தகைய தூண்டுதல் எழும்போதே வெளிப்படையாக வந்து விருப்பமான பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். இல்லறம் ஆன்மிக வாழ்க்கைக்கு தடையில்லை.

வேதாத்ரி மகரிஷி அதை தான் செய்தார். அவர் பிரம்மச்சாரியத்தை ஆதரிப்பதில்லை. ஒரு மாபெரும் தொழில்மேதையாக வாழ்ந்தவர். ஒரு ராணுவ வீரனாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். யோகத்தில் விருப்பம் கொண்டு, குருவைப் பெற்று, கற்று ஆராய்ந்து பின்னர் மற்றவர்க்கு போதித்தவர். அவரின் போதனைகள் அவரின் வாழ்வின் அனுபவங்களே. அவர் பொருளாதாரம் பேசினார், மருத்துவம் பேசினார்,உலக அமைதி பேசினார், பாலியல் பேசினார். எல்லாம் அவரின் வாழ்க்கையில் அவர் பெற்ற அனுபவம் கொண்டு பேசினார்.ஒருவன் யோக வாழ்வில் முன்னெற வேண்டுமெனில் அவன் இல்லற வாழ்வுதான் முதல் படி என்பார். பெண்களுக்கு ஆன்மிக ஒளியைக் காண்பித்தவர். இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கவே காயக்கல்பம் என்ற அற்புத பயிற்சியை தந்தவர்.

காயகல்ப நுட்பத்தின் மூலம் திருமணம் ஆகும் வரை உடலியல் உணர்வுகளை நெறிப்படுத்திக் கொள்ளலாம். அதே நுட்பத்தின் மூலம் தம்பதிகள் நிறைவான இல்லறவாழ்வையும் அனுபவிக்கலாம். தவமும் யோகமும் தந்த மகரிஷி அகத்தாய்வு என்று ஒரு உளவியல் பயிற்சியையும் தந்துள்ளார். இந்த அகத்தாய்வு நமது ஆளுமைத் திறனை அதிகரிக்கிறது. எண்ணம் எந்த சூழலிலும் மற்றவர்களுக்கு துன்பம் தராமல் தடுக்கிறது.ஆணும் – பெண்ணும் யோகம் பயின்று வரும் போது பாவபதிவுகள் கரைந்து அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்கும் என்பது அவர் நிரூபித்த உண்மை. இந்த நூற்றாண்டின் பரிசுத்தமான ஒரு யோகி என்று அவரை குறிப்பிட முடியும்.

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகம் தான். இந்த தேசத்தில் ஆன்மிக குருக்கள் பிறப்பெடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு வாழ்பவர்கள்.

சத்திய சாய் பாபாவும் அப்படிப்பட்டவர்தான். ஆந்திராவில் புட்டபர்த்தி என்னும் சிறுகிராமத்தில் ஈஸ்வரம்மா மற்றும் பெத்தவன்காமா ராஜூ ரத்னாகராம் என்பவர்களை தன் பெற்றோராக தீர்மானித்து, பூமியில் அவதாரம் எடுத்த அந்த ஆத்மா, ஒரு பெரும் அரசியல் இயக்கமும், ஆட்சியும் சாதிக்க தவறிய சாதனையை உலகமெங்கும் சாதித்து இருக்கிறது. சுமார் 114 நாடுகளில் 1200 க்கும் அதிகமான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவையனைத்தும் முற்றிலும் இலவசம் என்பதும், சாதி சமய மதம் இனம் வேறபாடு இன்றி யாரும் இங்கு பயன் பெறலாம் என்பது சேவையின் சிகரம்.

குரங்கினை ஒத்தது மனித மனம். அது சும்மா இருந்தால் எதை நோக்கி செல்லும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித மனதை ஒருமுகப்படுத்தி பிரசாந்தி நிலையம் நோக்கி திருப்பியவர் சத்ய சாயி. இத்தனை லட்சம் மக்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது சாதாரண செயல் அல்ல. ஒரு பெரும் கூட்டத்தை சாத்வீகமாக வைத்திருந்தது சத்ய சாயின் மாபெரும் சாதனை தான்.

இப்போது சத்யசாய் இல்லை. அவர் உருவாக்கிய இந்த அமைப்புகளும்,சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் என்ன செய்யலாம் ?

ஆந்திர அரசாங்கம் அதனை எப்படி கையகப்படுத்தலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. சத்ய சாய் அறக்கட்டளை அரசு கையகப்படுத்தும் முயற்சியை எப்படி முறியடிக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.

அரசின் கீழ் சென்றாலும் ஆபத்து. சத்ய சாய் என்ற அந்த மாபெரும் மனிதர் இல்லாத சூழலில், அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் முற்றிலும் இருந்தாலும் அது தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் பராமரிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி? மக்கள் மேம்பட மக்கள் வழங்கியப் பணம்.முழுவதும் மக்களுக்காக சென்றடைய வேண்டும். அதற்கு ஒரே வழி ஆக்கப்பூர்வமான ஒரு நிர்வாக குழு அமைக்கப்படவேண்டும். அறக்கட்டளை, அரசு மற்றும் பல்துறை நிபுணர்கள் இதில் இடம்பெறவேண்டும். சத்ய சாயி அறக்கட்டளையின் சொத்து விபரங்கள் உட்பட அனைத்தையும் ஒளிவுமறைவின்றி வெளியிட்டு, ஒவ்வொரு செயல்பாட்டையும் அனைத்து மக்களும் எளிதாக அறியும் வண்ணம் எப்போது திறந்த புத்தகமாக செயல்படுவது.அப்போது தான் அறக்கட்டளையின் உண்மையான நோக்கம் மக்களை சென்றடையும்.

பாபா செய்த அற்புதங்கள் பல. அது பி.சி.சர்க்காரின் மேஜிக் நுட்பங்களை மிஞ்சக் கூடியது. வெறும் விரல் நுனியில் இருந்து விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நொடியில் கைகளை சுழற்றி தங்கமாலை வரவழைப்பது எனப் பல பல. இவையாவும் அறிவில் சிறந்த சான்றோர்களைக் கூட பரவசப்படுத்தியது. இன்னொரு புறம் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியது. பாபா தன் பரிவாரங்கள் துணையுடன் மேஜிக் செய்து மக்களை மயக்குகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த மேஜிக்குகள் நிகழ சீடர்கள் துணையிருந்தனரோ இல்லையோ , இனி வரும் காலங்களில் சத்ய சாய் பாபாவின் நோக்கங்கள் நிறைவேற எந்தவித எதிர்பார்ப்புமின்றி உறுதி பூணவேண்டும்.

முற்போக்குவாதிகளாக தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் சத்ய சாய் மீதான எதிர்முறை விமர்சனத்தையும் தவிர்க்கவேண்டும். ஒருவர் இனி புவியில் இல்லாத போது அவரை விமர்சிப்பதில் எந்தவொரு பலனும் இல்லை. அதைவிடுத்து ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்.

சீடர்கள் குருவைத் தேர்ந்தெடுப்பது இல்லை. குருதான் சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ...அப்படியே உங்களுக்கான குருவும் அமைவார்.குரு இல்லாமல் வாழ முடியாதா என்றால் ? முடியும். ஆனால் குரு இல்லாமல் உங்களை நீங்கள் உணரமுடியாது. வேறும் வாழ்க்கை வாழவேண்டும் என்றால் உங்களுக்கு குரு தேவையில்லை. தன்னையறிந்த முழுவாழ்க்கை வேண்டுமெனில் ஒரு குரு தேவை. எது தேவையோ அதனை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

Saturday, April 2, 2011

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

ஆனந்தத்தை வாங்க முடியுமா ?

கண்டிப்பாக முடியும். ஒரு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பேருந்தோ, ரயிலோ பிடித்து (வசதிமிக்கவர்கள் விமானம் கூட ஏறலாம் ) பொள்ளாச்சி வந்து, அங்கிருந்து ஒரு டவுன் பஸ் பிடித்து, ஆழியாறு டிக்கெட் எடுத்து, அருட்பெருஞ்ஜோதி நகர் வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் மற்றும் ஆராய்ச்சி மையம் வந்தால் அளவில்லாத ஆனந்தத்தை அள்ளிக்கொண்டு போகலாம்.
இங்கு அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது.

ஆனால் இந்த ஆனந்தத்தை காசு கொடுத்து வாங்க முடியாது.

ஒரு எக்சேஞ்ச் ஆபரில் ( Exchange Offer ) இதனைப் பெற்றுச் செல்லலாம்.

உங்களிடம் செல்லுபடி ஆகாத நிலையில் உள்ள பேராசை, கடுஞ்சினம், கடும்பற்று,முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இப்படி ஏதாவது இருந்தால் அல்லது எல்லாமும் இருந்தால், அதனை இங்கு கரைத்துவிட்டு அளவில்லாத ஆனந்தத்தை உங்களுள் நிரப்பிச் செல்லலாம்.

ஆனந்தம் இங்கு மனவளக்கலை என்ற வடிவில் கிடைக்கிறது.

அது என்ன மனவளக்கலை ? உங்களுக்கு வேதாத்ரி மகரிஷியை தெரியுமா ?

இது என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா ?

வாழ்க வளமுடன் ! என்ற மந்திர சொல்லுக்கு சொந்தக்காரர்தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சாலையில் பத்து வாகங்கள் ஓடினால் அதில் எட்டு வாகனங்களில் வாழ்க வளமுடன் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும்.

வாழ்க வளமுடன் என்பது ஒரு சொல் !

அது என்ன மந்திரச்சொல் ?

வாழ்க வளமுடன் என்பது உச்சரிப்பு இலகுவானது. ஆனால் அந்த உச்சரிப்பின் பின் புலமாக அமைந்துள்ள மந்திரத்தன்மை என்ன ?

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?

தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1.உடல் நலம் 2.நீளாயுள் 3.நிறைச்செல்வம் 4.உயர்புகழ் 5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன ?

வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி. உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...அட்லீஸ்ட்....நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை. எண்ணமும் வீணாவது இல்லை.அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள். வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல ; அது ஒரு மந்திரச் சொல் என்பது இப்போது விளங்குகிறதா ?

இந்த சொல்லின் வித்தகர் வேதாத்திரி அருளிய யோகமுறைதான் மனவளக்கலை.

வேதாத்திரி ஒரு தீர்க்கதரிசனம் பெற்ற யோகி.

பாஸ்ட் புட்டும் ,பீட்சா ஹ்ட்டையும் தேடி தின்று, லேப்டாப், டேபிள் டாப் முன்பு உண்டு உறங்கி,இரத்த அழுத்தம், மன அழுத்தம் என்பதை இன்கிரிமெண்டாக பெற்று முப்பது வயசிலேயே நரைவிழுந்து....நொந்து நூடுல்ஸாய் இருக்கும் இந்த தலைமுறை என்பதை ஐம்பது வருடத்திற்கு முன்பே கணித்தவர் வேதாத்திரி. கணித்தது மட்டுமல்ல, அதற்கு ஒரு எளிய தீர்வும் தந்துள்ளார்.

அதுதான் மனவளக்கலை.

தனிமனிதனுக்கு இப்படி என்றால் உலகம் வேறுமாதிரி இருக்கும் என்பதையும் கணித்தார்.நாடு பிடிக்கு ஆசையில், தொடரும் சண்டை,வேல்,ஈட்டி, கத்தி, கபாடா போய் துப்பாக்கி,பீரங்கி தேய்ந்து, அணுவைப் பிளந்து ஆராயும் மனிதன், அந்த அணுவாலேயே அழிவை தேடும் நிலையில் நிற்பான் என்பதையும் கணித்து...உலகம் அமைதி அடைய ஒரு வழி கண்டார் வேதாத்திரி.

அது தான் மனவளக்கலை.

உலகின் அமைதி என்பது தனி மனித அமைதி தான்.

தனி மனித அமைதி என்பது தான் உலகம் அமைதி.

உலக அமைதி என்பது ஒரு நீண்ட நூலின் ஒருமுனை என்றால் ; தனிமனித அமைதி இன்னொரு முனை. இரண்டையும் இணைப்பது மனவளக்கலை.

மனவளக்கலையில் அப்படி என்ன இருக்கிறது?

ரொம்ப சாதாரணம் தான். உங்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும் ஒரு வாழ்வியல் முறை. மிகவும் எளிமையான முறை.அவ்வளவுதான்.

நீங்கள் எப்போது அமைதியாக இருப்பீர்கள் ? உடல் அளவிலும் மன அளவிலும் அமைதியாக இருக்கும் போது தானே.

உடல் அளவில் அமைதியாக இருக்க, நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும். உடலில் நூற்றுக்கணக்கான உறுப்புகள், ஆயிரமாயிரம் நரம்புகள், இருந்தாலும் அதன் ஆரோக்கியமான இயக்கம் நான்கு நிலைகளில் கட்டுபடுத்தப்படுகிறது.

அந்த நான்கும் இரத்த ஓட்டம்,வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் என்பதாகும்.
இந்த நான்கும் சம நிலையில் இருந்தால் ஆயுசு நூறு, இது சமநிலைத் தவறினால், நோய்,வலி...தொடர்ந்தால் அல்ப ஆயுசு. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீண்ட நாள் வாழ நமது முன்னோர்கள் வடிவமைத்த பயிற்சி முறைதான் யோகாசனங்கள்.

அது அஷ்டாங்க யோகம், ஹடயோகம் என்று பலவகைப் படுகிறது. இதன் சூத்திரதாரி மிஸ்டர் பதஞ்சலியார். ஆதியில் சுமார் 88000 யோகமுறைகள் இருந்ததாக தெரிகிறது. உண்ணுவது, உறங்குவது, இயங்குவது,சம்போகிப்பது,இறப்பது என ஒவ்வொரு செயலிலும் யோகம் நிறைந்து இருந்தது.ஆனால் நாளடைவில் அது 88 ஆக சுருங்கி இப்போது இருபதையும் முப்பதையும் வைத்துக்கொண்டு யோகா ஆசான்கள் ஜல்லியடித்து கொண்டிருக்கின்றனர். எண்பதெட்டாயிரமோ எண்பதெட்டோ, அதன் நோக்கம் இதுதான் உடலில் இரத்த ஒட்டம்,வெப்ப ஒட்டம், காற்றோட்டம்,உயிரோட்டம் ஆகிய நான்கையும் சீரமைப்பது.

முப்பது யோகா என்றே வைத்துக்கொள்ளுங்கள், அதனை முழுமையாக தினம் செய்து முடிக்கவேண்டும் என்றால் எவ்வளவு நேரமாகும். சிறுவர்களுக்கு சரி, யோகா வாசனை அறியாமலே வாழ்ந்து, நோய்பட்டு திருந்தி யோகா செய்ய விரும்பும் நடுத்தர, மூத்த குடிமக்களால், கையையும் காலையும் வளைத்து நெளித்து இத்தனையும் செய்ய முடியுமா ?

பெரிய கேள்விதான் ?

பார்த்தார் வேதாத்திரி. எல்லா யோகா முறைகளிலும் கிடைக்கும் பலன்கள் கிடைக்கவேண்டும். அதே நேரம் குறுகிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். எட்டு வயது பொடியன் முதல் எண்பது வயது முதியவர் வரை அசராமல் செய்யவேண்டும். எப்படி என்று யோசித்தார்.அத்தனை யோக முறைகளையும் ஆராய்ந்து ஒரு பயிற்சியை வடிவமைத்தார். அதுதான் எளியமுறை உடற்பயிற்சி.

அதனை வடிவமைத்தது மட்டுமின்றி உண்மையில் உரிய பலன் இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். யாரைக் கூப்பிடலாம் ? மகரிஷி சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியில் வசித்தபோது நிகழ்ந்தது இது. யார் ஆராய்ந்து சொன்னால் நம்பகத்தன்மை வரும் என்று தேடிய போது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தார் செங்கல்பட்டு அறுவைச் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர்.அனந்தநாராயணன். எளியமுறை உடற்பயிற்சியை கற்றறிந்து தன்னிடம் வரும் சர்க்கரை, இரத்த அழுத்தம்,இதயநோய் உள்ளவர்களுக்கு கற்றுத் தரத் தொடங்கினார்.

என்ன ஆச்சர்யம் ! பாதிக்கு மேலானவர்களுக்கு சர்க்கரை நோய் போயே போச்சு! இரத்த அழுத்தம் கட்டுப்பட்டது. இதய நோயாளிகளின் ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றம்.

டாக்டர் அனந்தநாராயணன் அடிப்படையில் ஒரு அறுவைச் சிகிச்சை பேராசிரியர்.கத்தியையும் இரத்தத்தையும் பார்த்து பார்த்து அலுத்துபோன அவருக்கு இந்த மனவளக்கலை கத்தியின்றி இரத்தமின்றி ஆரோக்கியத்தை மீட்க யுத்தம் செய்ய உதவும் வியூகமாகவே தெரிந்தது.
வந்தபின் அறுப்பதை விட வரும் முன் காப்பது சிறந்தது என்பதால் டாக்டர் அனந்த நாராயணன் தன் வாழ்நாள் முழுவதும் மனவளக்கலை பரப்புவதில் முன்னுரிமை தந்தார். அவர் மட்டுமல்ல இன்று பிரபலமான இதயசிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர் சொக்கலிங்கம் உட்பட பெரும் மருத்துவ மேதைகள் மனவளக்கலை யோகத்திற்கு பச்சைக் கொடி பிடிக்கின்றனர்.

உடல் நலத்தை தொடர்ந்து தேவை நீளாயுள். நீளாயுளுக்கு வேதாத்ரி மகரிஷி வடிவமைத்த யோகமுறை காயக்கல்பம். இதுபற்றி நாம் ஏற்கனவே போதும் போதும் என்ற அளவில் பார்த்துவிட்டோம். பார்க்க தவறியவர்கள் எனது பழைய பதிவு (http://rajmohanfourthestate.blogspot.com/2010/12/blog-post_18.html ) படித்து தெரிந்துகொள்ளலாம்.
உடல்நலம், நீளாயுள் இருந்தால் போதுமா? விரும்பியதை அனுபவிக்க பொருள்வளம் தேவையல்லவா ? இதனை வேதாத்ரி நிறைசெல்வம் என்கிறார்.

நிறைசெல்வம் என்றால் என்ன? யார் யாருக்கு எந்த அளவில் நிறைவு தருகிறதோ அதுவே நிறைச்செல்வம். அப்படியென்றால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைபடலாமா?
கண்டிப்பாக. வேதாத்ரி மற்ற யோகிகள் போன்றில்லை. ஆசையை ஒழி. ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்ற கோஷமெல்லாம் வேதாத்ரியிடம் இல்லை. ஆசைபடலாம்.....எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை படலாம்.ஆனால் அது பேராசையாக கூடாது. இதுதான் வேதாத்திரி மகரிஷி.

ஆசையை பேராசையில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

ஒரு ஆசை மற்றவரை உடல் அளவிலோ, மனதளவிலோ பாதிக்காது, துன்பம் தராது என்றால் அது நியாயமான ஆசை. துன்பம் தருமெனில் அது பேராசை.

சரி நிறைச்செல்வத்தை அடைவது எப்படி. கடுமையாக உழைக்க வேண்டும்.

இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதில் என்ன புதுசு என்கிறீர்களா?

உழைப்பு எல்லோரும்தான் உழைக்கிறார்கள்,ஆனால் ஒரு சிலர் தானே வெற்றிப் பெறுகிறார்கள்.

உண்மைதான். உழைப்பு மட்டும் போதாது. வெற்றிக்கான வியூகம் வேண்டும். அதற்கு மனத்தெளிவு அவசியம். அதற்காக வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த யோகம் எளிய முறை குண்டலினி யோகம்.
நீங்கள் விரும்பு பொருள் தேவை எதுவானாலும் அது இந்த பூமியில் தான் கிடக்கிறது.நீங்கள் வாழும் மண்ணில் அது வேறோரு இடத்தில் இருக்கிறது. அதனை உங்களிடம் வர செய்வது எது ? உங்களுள் அதிகரிக்கும் ஈர்ப்பு சக்தி.

அந்த ஈர்ப்பு சக்தியை தருகிறது வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த எளியமுறை குண்டலினி யோகம். இப்பயிற்சிகள் நீங்கள் நிறைசெல்வம் காண வழி தருவதோடு நினைத்ததை நடத்தி காட்டுகிறது. கேட்பதை பெற்று தருகிறது.

உடல்நலம்,நீளாயுள்,நிறைச்செல்வம் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு தேவை உயர்புகழ். உயர்புகழ் என்றால் என்ன ? அது எப்படி கிடைக்கும்.

கடந்த ஒரு வாரமாக கோட்டையில் கொடிநாட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு பெரும் கோடிஸ்வரர்கள் குப்பத்து ராஜாவாக இந்தியாவை ரவுண்ட் அடித்து நம்ம ஊர் பிள்ளைகளை குளிப்பாட்டி,சீராட்டி தாலாட்டி கொண்டிருக்கின்றனர்.

ஒருவர் பில்கேட்ஸ் ; மற்றொருவர் வாரன் பஃப்பெட்.

பேரைக்கேட்டாலே வாவ்...! என்று கத்த தோன்றுகிறதா ?

ஏன்...? அந்த பேரில் உள்ள மந்திரசக்தி. இவர்கள் பணக்காரர்கள் என்பதற்காக மட்டுமல்ல ? அவர்களின் கடும் உழைப்பு மற்றும் வெற்றி. இதுதான் உயர்புகழ். இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் தெரியுமா ? தாங்கள் சம்பாதித்ததில் எண்பது சதவீத பணத்தை அதனை கொடுத்த இந்த சமுதாயத்திற்கே திருப்பி தருவதற்காக.

ஒவ்வொரு மனிதனும் தனது சம்பாத்தியத்தில் ஒரு பத்து சதவீதமாவது சமுதாய நலனுக்கு செலவிட வேண்டும். நான் எப்போது சமுதாயத்திற்காக பாடு படுகிறோமோ அப்போதே நம்மை உயர்புகழ் உயர்த்தி வைக்கும்.

அடுத்த ஐந்தாவது தேவை என்ன ? அதுதான் மெய்ஞானம்.

மெய்ஞானம் என்றால் என்ன ? இறைநிலை ரகசியத்தை அறிவது. இறைநிலை என்பது என்ன. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் இறைநிலையே. தன்மாற்றம் அடைந்து வேவ்வேறு தோற்றத்தில் தெரிவதாக கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி.

அப்படியானால் நானும் இறைவனின் வடிவமா என்று கேட்டீர்களானால், அதில் சந்தேகமே இல்லை. நீங்களும் கடவுளே !

நீங்கள் எந்த நோக்கத்திற்காக பிறப்பெடுத்து உள்ளீர்கள். பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்ற தன்னையறியும் விஞ்ஞானம் தான் மெய்ஞானம். அது எப்போது வரும். நல்ல உடல்நலனுடன், நிறைவான வாழ்க்கை வாழும் போது மெய்ஞான தத்துவம் தானே விளங்கும்.
இந்த ஐந்து தத்துவங்களை உள்ளடக்கிய மந்திரச்சொல் வாழ்க வளமுடன். நீங்கள் திரும்ப திரும்ப உச்சரித்து வாழ்த்தும் போது அவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடைகிறது. அதே நேரம் அதன் பிரதிபலிப்பு உங்களையும் மேம்படுத்தும்.

இது அறிவியல் பூர்வமான,உளவியல் பூர்வமான உண்மை.

இப்போது சொல்லுங்கள் வாழ்க வளமுடன் என்று.

உண்மையில் இது மந்திரச்சொல் தானே.

இந்த வாழ்க வளமுடன் சொல்லை செயலாக்கும் பயிற்சி தான் மனவளக்கலை.

மனவளக்கலைப் பயின்றால் வேறெதுவும் தேவையில்லை.

இந்தியா ஒரு ஆன்மிக பூமி. கோடான கோடி வருடங்கள் கோடான கோடி ரிஷிகளாலும், யோகிகளாலும், சித்தப் புருஷர்களாலும் வழிநடத்தப்படும் பூமி இது. இங்கு காலத்திற்கு ஏற்ப மகான்கள் பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு பிறப்பெடுத்த மகான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி, மேல் வர்க்க்கத்திற்கு மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த இந்த தத்துவங்களை தடைகளை உடைத்து எளியவருக்கும் கற்பித்தவர் வேதாத்திரி மகரிஷி. எனவே இவர் பாமரர்களின் தத்துவஞானி எனவும் போற்றப்படுகிறார்.

அவர் வாழ்ந்த சக்திவாய்ந்த ஆற்றல் களம்தான் ஆழியாறு.


ஆழியாறில் நீங்கள் உலா வரும் போது உங்களுக்குள் ஒரு சுத்திகரிப்பு தானே நிகழ்கிறது.

மனவளக்கலையை பயின்றால் அந்த சுத்திகரிப்பு உங்களுக்குள் நீடித்து நிலைக்கிறது.

பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பேராசை சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை,முறையற்ற பால் கவர்ச்சி மற்றும் வஞ்சம் ஆகியவை சுத்திகரிக்கப்படும் போது அளவில்லாத ஆனந்தம் உங்களுள் ஊற்றெடுக்கும்.

கோடை விடுமுறையில் குதுகலிக்க ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் என்ற பறக்கலாம்.இடையில் ஒரு இரண்டு நாள் ஆழியாறு போன்ற புனித இடங்களுக்கு சென்று கொஞ்சம் யோகம் பயில்வது ஆயுள் முழுவதும் ஆனந்ததை அதிகரிக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

வருடத்தின் 365 நாட்களும் வாழ்வில் இன்பம் பொங்க, ஆழியாறு ஊற்றிற்கு சென்று கொஞ்சம் நிரப்பிக்கொண்டு வாருங்கள்.

எக்சேஞ்ச் ஆபர் எல்லா நாட்களும் உண்டு.

ஆழியாறு போங்க ! ஆனந்தம் வாங்க !

Sunday, March 13, 2011

நர்த்தகி

விஜய் டிவியின் தீவிர ரசிகரா நீங்கள் ?

இப்படிக்கு ரோஸ் என்று ஒரு நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள்.

லட்சுமி அவர்கள் நடத்திய கதையல்ல நிஜத்தை கொஞ்சம் மாற்றம் செய்து, புதிய வடிவில் மனித உறவின் சிக்கல்களை அலசியவர் தான் இந்த ரோஸ்.

இந்த ரோஸ் ஒரு திருநங்கை என்பது எல்லோரும் அறிவோம்.

அவரின் தொலைக்காட்சி வெற்றிக்கதையை தொடர்ந்து. இன்னொரு முயற்சியிலும் இறங்கி இருக்கிறார். அது என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

திருநங்கைகளைப் பற்றிய எண்ணம் நம் தமிழ் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலமை இப்போது இல்லை எனலாம். திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.

நர்த்தகி திருநங்கைகள் குறித்த ஒரு நல்ல சினிமா.

அதன் படைப்பாக்கம் மற்றும் தொழில்நுட்பம் தவிர்த்து எடுத்துகொண்ட களம் என்ற நிலையிலேயே அதனை நல்ல சினிமா என்று வரவேற்கலாம்.

பெண் இயக்குனராக முதல் முயற்சி செய்துள்ள சகோதரி விஜயபத்மாவிற்கு ஒரு வந்தனம்.குறிப்பாக திருநங்கைகளை தமிழ்த் திரைப்படங்கள் ஒரு கேலிப் பார்வையில் சித்தரித்து வரும் சூழலில், அவர்களின் உலகை விவரிக்கும் இந்த முயற்சி ஒரு ஆரோக்கியமான படி.

சமூகத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் சேவகி திருநங்கை கல்கியின் வாழ்க்கை வரலாறாக ஒரு விவரண தோற்றமுடன் தொடங்குகிறது படம். மூன்று சகோதரிகளுடன் ஒரே ஆண் வாரிசாக பிறக்கும் கதையின் நாயகனின் சிறுவயது, அந்த வயதில் அவனுக்கு மனைவியாக நிச்சயக்கபட்ட சமகால தோழியின் காதல், குறும்புகள் என நகர்கிறது படம்.பிள்ளைப் பருவம் தாண்டி விடலைப் பருவம் வரும் போது அவனுள் பெண்ணிற்குரிய தன்மையை உணர்கிறான். உடலியல் ரீதியான மாற்றங்கள் அவன் குடும்பம், காதலில் ஏற்படுத்தும் விளைவுகள், தொடர்ந்து வீட்டை விட்டு வேளியேறி இரண்டு திருநங்கைகளால் அரவணைக்கப்படும் போது விரிவடைகிறது அரவாணிகளின் அந்தரங்க உலகம். இறுதியில் அவன் கல்கியாக் மாறி கலையில் எத்தகைய சாதனை புரிகிறான் என்பதோடு முடிகிறது திரைப்படம்.

விடலை நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் மற்றும் நாயகி, சிறுவயது கல்கியாக நடித்திருக்கும் இளம்பெண்ணின் துணிச்சலுக்கு ஒரு ஜே !

படத்தில் சலிப்பூட்டும் சில காட்சிகள், நாயகனின் பிள்ளைப் பிராயத்துக் காதல். அழகி முதல் பூ வரை பல படங்களில் இந்த FEEDING BABY காதலை பார்த்துவிட்டதால், ரசிப்பதற்கு பதில் வெறுமைத் தான் வருகிறது.

திருநங்கைகள் பால்மாற்றம் செய்யும் சடங்கு அவர்களின் சம்பிரதாயங்களை மிகவும் வலிமையுடன் சொல்லி இருக்கலாம். அதனை முழுமையாக சொல்லி இருந்தால் ஒரு புதிய தகவல் பார்வையாளர்களுக்கு சென்று இருக்கும். அந்த பரபரப்பே கூடுதலாக பார்வையாளர்களை ஈர்க்க துணை நிற்கும்.மேலும் ஒரு ஆண் பெண்ணாக மாறும் அவனின் உளவியல் மாற்றம் வலிமையாக பதிவு செய்யப்படவில்லை.வெறும் புறக்காட்சி விவரிப்பிலேயே படம் நகர்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு விவரணப் படம் “ கண்ணீர் பூக்களின் காதல் திருவிழா” என்ற தலைப்பு, நாகர்கோவில் ரெமி வீடியோவிஷன் தயாரிப்பு என்று நினைவு. திருநங்கைகளின் உலகம் உருக்கமாக விவரிக்கப்பட்டு இருக்கும். பத்திரிக்கையாளர் ஜி.கெளதம் அவர்கள் மாலை மதியில் எழுதிய “அடையாளம்” என்ற குறுநாவல் கூட “ வாச்சா-போச்சா” சடங்கை வலியும் திகிலும் கடந்து முன்னிறுத்தும்.

வாச்சா போச்சா நிகழ்வு வந்தால் வாழ்க்கை போனால் உயிர் என்ற நிலையிலான ஒரு சவாலான திருநங்கைகளின் சடங்கு.

எனினும் நர்த்தகியை,இயக்குனரின் முதல் முயற்சி ,ஒரு புதிய தளம் என்பதில் பாராட்டலாம்.

எனக்கும் திருநங்கைகளுக்குமான நட்பு நான் பிறந்தது முதலே என்று சொல்லலாம்.எனக்கு அவர்கள் மீது எப்போது ஒரு பெருமதிப்பு உண்டு. திருநங்கைகளுக்கு குண்டலினியோக முறையை முதன் முதலின் எங்கள் குழுவினர்தான் வழங்கி வருகின்றனர். மனவளக்கலை அவர்களுள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவ்ம் பல நல்ல மாற்றங்களை தருவதாக பயன்பெற்றவர்கள் சொல்கின்றனர்.

சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இது.

நான் சென்னைக்கு வந்த புதிது. டீன் ஏஜின் கடைசி பருவத்தில் இருந்தேன். கிராமத்தில் வளர்ந்த எனக்கு அப்போதெல்லாம் சென்னையின் பிரமாண்டம் ஒரு பரபரப்பை தரும். சென்னையின் பல இடங்களுக்கு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நடந்தே சென்று விடுவேன். ஒருநாள் மாலை நேரம். நேப்பியர் பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன்.

திடீரென அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். எனக்கு அவர்களைப் பார்த்தவுடன் அச்சமும் கூச்சமும் சூழ்ந்து கொண்டது.

அவர்கள் என்னை மடக்கிப் பிடித்தனர்.

இருவரின் கைகள் என் மீது, முகத்திலும், வயிற்றிலும் பரவியது. அவர்களிடன் இருந்து தப்பித்து போக திமிறினேன்.

“ அய்யோ ...நான் ஒரு ரிப்போர்ட்டர்...என்னை விடுங்கள்...!”

” ஏய்...இவன் ரிப்போர்ட்டாராண்டி......நேத்து நம்மகிட்ட யார் வந்து போனான்னு சொல்லுங்கடி...” என்று ஒருவர் இன்னொருவரை சீண்ட, எனக்கு அவர்களின் நோக்கம் புரிந்தது.

“உங்களுக்கு பணம் தானே வேண்டும்...இந்தாருங்கள் என்று “ என் பர்ஸை திறந்து அதில் இருந்த கடைசி முப்பது ரூபாய்......மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டினேன். அவர்கள் என் பர்சில் வெறும் முப்பது ரூபாய் மட்டும் பார்த்துவிட்டு, வேறு பணம் இல்லையா என்று கேட்டனர்.

“ வேறப் பணம் இருந்தா...நான் ஏன் நடந்து போகிறேன் “

அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் எரிச்சலும், கோபமும் தெறிக்க, அவர்களிடம் “ உங்களைப் போன்றவர்கள் மீது நான் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறேன் தெரியுமா ...? உங்களுக்கு மும்பையில் என்ன மரியாதை தெரியுமா...? ஒரு குழந்தைப் பிறந்த வினாடியில் உங்களைப் போன்றவர்களின் கைகளில் கொடுத்து தான் முதல் ஆசிர்வாதம் வாங்குவார்கள், நானும் மும்பையில் பிறந்தவன் தான்........ஒரு கடவுளுக்கு நிகரான நீங்கள் இப்படி செய்யலாமா? “ கேட்ட வினாடி தான். ஒருவள் இன்னொருவளிடம் இருந்த முப்பது ரூபாயைப் பிடுங்கி என்னிடம் திணித்தாள்.

“சாரி...பிரதர்....கோவிச்சுக்காதீங்க...மிஸ்டேக் பண்ணிட்டோம்...நீ..ங்..போங்க...பிரதர்...”என்னை விடுவித்து தள்ளினாள்.

அவளை பின்பற்றி மற்றவர்களும் வழிவிட்டனர்.அன்று என்னிடம் வழிப்பறி செய்ய முயற்சித்தவர்கள் திருநங்கைகள். உடனடியாக உணர்ந்து வழி அனுப்பிய நல்ல மனம் படைத்தவர்களும் அவர்கள்தான்.
பெரும்பாலும் வயிற்றுபிழைப்பிற்காகவே அவர்கள் வேறு வழியின்றி பாலியில்,வழிப்பறி போன்றைவைகளில் இறங்குகின்றனர்.

குடும்பத்தின் அரவணைப்பு இருப்பவர்களில், பெரிய அளவில் சாதனை புரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெங்களூரில் ஒரு டிரக் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் துணைத் தலைவர் அவர், விளம்பரம் தொடர்பாக அவரை சந்திக்க நேர்ந்தது. அவர் குரலை உணர்ந்து அவரை நான் பார்க்க....” I am Hegde sir… I am a transgender ” என்றார். ஐ.ஐ.ம்மில் ( Indian Institute of Managements ) படித்தவராம். அன்றைய நிலவரத்திற்கு மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறினார்.

ஹெக்டே போன்றவர்கள், சமுகத்தில் வெற்றிப் பெற்று முன்னிலை வருவது சமான்யமான விஷயம் அல்ல.காரணம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத நிலை.

தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வு பெருகி வருகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இவர்களுக்கென சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

வேலூரில் பால் மாற்றச் சிகிச்சைக்கென பிரத்யோகமான மருத்துவ பிரிவும் தொடங்கப்பட்டது.தி.மு.க.ஆட்சியில் திருநங்கைகளுக்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது நல்ல முயற்சி.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவேண்டும்.அதற்கு நர்த்தகி மாதிரியான திரைப்படங்கள் வலுசேர்க்கும்.

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் கலக்கிய ரோஸ் தே.மு.தி.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் ஒரு உறுப்பினரையாவது திருநங்கைகளின் சமுகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கவேண்டும்.

வெள்ளக்காரன் கால சம்பிரதாயமான ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதிவத்தை விடாமல் பின்பற்று தமிழக சட்டசபை இதனையும் கட்டாயமாக்கலாம்.ரோஸின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. கட்சியைப் பார்க்காமல் வேட்பாளரின் தகுதியினைப் பார்த்து வாக்களித்தால் ரோஸ் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

அதே போல் நர்த்தகி போன்ற புதிய முயற்சிக்கு மக்களும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்.

ரோஸ் மற்றும் நர்த்தகியின் வெற்றி, திருநங்கைகள் சமூகத்திற்கு ஒரு புதிய ஊக்க மருந்தாக அமையும்.

Tuesday, March 8, 2011

வீரத்தை விளைவித்த தாய்.

2006 ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி.

ஆங்கிலப் புத்தாண்டு.

வேதாத்ரி மகரிஷி தோற்றுவித்த மனவளக்கலை அன்பர்களுக்கு அன்று உலக சமாதான நாள். ஆழியாறில் உள்ள அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் அனைவரும் கூடி அருள்தந்தையின் புத்தாண்டு செய்தி கேட்பது வழக்கம்.அன்றும் ஆழியாறு வளாகத்தில் அன்பர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

96 வயது வேதாத்ரி மகரிஷி கம்பீரம் குறையாமல் உதவியாளர்களுடன் குழுமியிருந்த அன்பர்களை காண வந்தார்.

அனைவரும் மகரிஷியின் உரையைக் கேட்க ஆவலுடன் அவரையே நோக்கினார்கள். வாழ்க வளமுடன் என்று தனது வழக்கமான வாழ்த்துக்களுடன் ஆரம்பித்த சுவாமிஜி தனது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டது, தனது நிலை குறித்து.

தான் வேண்டுதல் வேண்டாமை என்ற நிலையில் இருப்பதாக சுவாமிஜி கூறினார். நான் பிறந்த நோக்கம் என்னவோ, அது நிறைவேறியதாகவே கருதுகிறேன். நான் அறிந்தது எல்லாவற்றையும் அனைவருக்கும் ஒளிவு மறைவு இன்றி கற்பித்து விட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கையில் நிறைவாக உணர்கிறேன் என்று குறிப்பிட வேதாத்ரி எதைக் குறிப்பிடுகிறார் என்று அன்பர்கள் உணர்ந்து கொண்டனர். அனைவரின் நெஞ்சிலு,ம் வேதனை சூழ்ந்தது.

மனவளக்கலை என்ற வலிமைமிகு வாழ்வியில் ,உளவியல் பயிற்சி பெற்று இருந்தாலும் வேதாத்ரியை அனைவரும் தனது தந்தையாக, தனது தாத்தாவாக, தம் குடும்பத்தினுள் ஒருவராகவே பாவித்து வந்தனர்.வேதாத்ரி மகரிஷி உலக வாழ்க்கையில் இருந்து விடைப் பெறப்போகிறார் என்பதை குறிப்பால் உணர்ந்த அன்பர்கள் அனைவரும் கதறி அழுதனர்.

சுவாமி சலனப்படவில்லை ஒரு புன்னகையுடன் அனைவரையும் வாழ்த்துவிட்டு தனடு அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்,இதிலிருந்து சரியாக 87 வது நாளில் அதாவது 2006 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28 –ம் தேதி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

சென்னையிக் ஹிந்து செய்தி தாள் அந்த மகானின் இறப்பை “Vethathiri Maharishi Dead “ என்று குறிப்பிட்டு இருந்தது.பல செய்தி தாள்கள் இறந்துவிட்டார் என்ற அர்த்தத்திலேயே குறிப்பிட்டு இருந்தன.

இலங்கையில் வீரகேசரி என்ற தமிழ் பத்திரிகை மட்டும் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது “ மனவளக்கலையை தோற்றுவித்த அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி இன்று தனது மண்ணுலக பணியை முடித்துக்கொண்டு விண்ணுலகப் பணிக்கு பொறுப்பேற்று சென்றார் “

ஒரு இறப்பை, அதாவது ஒரு மகானின் இறப்பை இவ்வளவு அழகாக மனம் கோணாமல் தெய்வீகத் தன்மையுடன் எந்த பத்திரிகையும் குறிப்பிட்டு நான் பார்த்தது இல்லை.

இதுவல்ல செய்தி. வேதாத்ரி மகரிஷி இறப்பதற்கு முன்பு, அவர் சூட்சுமமாக குறிப்பிட்ட அதே ஜனவரி முதல் நாள், அவரின் உதவியாளர்கள் சுவாமிஜியிடம் ஏன் சுவாமி இப்படி பேசினீர்கள், எல்லாரும் துன்பத்தில் கதறுகிறார்கள் என்று கூற, சுவாமிஜி சற்று உணர்ச்சிவயப்பட்டு தான் ஏன் அப்படி கூறினேன் என்பதையும், பிறப்பு இறப்பு குறித்து சில வரிகளில் கூற, வலியில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு சாந்தமும்,ஏற்புத்தன்மையும் வந்தது.

வேதாத்ரி மகரிஷி அப்படி என்ன கூறினார் ?

இவ்வருடம் பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி
வழக்கம் போல் காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எனது இலங்கை தோழர் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த தகவலை கூறினார்.

” ராஜா…ஒரு துக்கச் செய்தி ….பார்வதி பாட்டி இறந்துவிட்டார் “

“ பார்வதி பாட்டி இறந்துவிட்டார் என்று சொல்லாதீர்கள்……பூவுலக வாழ்வை துறந்துவிட்டார் என்று சொல்லுங்கள்…..இது துக்கச் செய்தியல்ல..மகிழ்ச்சி செய்திதான்…..” என்றேன்.

இந்த பதிலைக் கேட்டதும் தோழருக்கு அதிர்ச்சி. இப்படிப்பட்ட பதில்கள் கண்டிப்பாக அதிர்ச்சி தரும் எனத் தெரியும்..எனினும் நான் போனில் விளக்கம் தரவில்லை. ”அண்ணே…நான் இலங்கை வருகிறேன்… நேரில் பேசலாம்..” என்று முடித்துகொண்டேன்.

பூவுலக வாழ்க்கை என்பது மிகவும் சாதாரணமானது.பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையேயானது.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கமுடன் பிறக்கிறான்.

பார்வதியம்மாளின் பிறப்பு அத்தகையது.

இயேசுவின் பிறப்பிற்கு முன்பு மரியாளின் வாழ்க்கை வெகு சாதாரணமானது. இயேசுவின் பிறப்பு மரியாளை அர்த்தமாக்கியது.பார்வதியம்மாள் அம்மாளும் அவ்வாறுதான். அன்பான கணவன்.நான்கு பிள்ளைகள். மூன்று பிள்ளைகளின் பிறப்பை விட தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறப்பு பார்வதியம்மாளின் பிறப்பிற்கு அர்த்தம் தந்தது.

எப்போது பிரபாகரன் பிறந்தாரோ ..எப்போது பிரபாகரன் தமிழீழ தேசியத்தை முன்வைத்து போராடத் தொடங்கினாரோ அப்போதே பார்வதி அம்மாளின் இப்பிறப்பின் நோக்கம் நிறைவேறி விட்டது.

பார்வதி அம்மாள் பண்பாடு போற்றும் பெருந்தகையாகவே வாழ்ந்தார்.எந்தவொரு பிரச்சனையான சுழலிலும் அவர் தான் பிறந்த மண்ணை விட்டு அகலவில்லை.

ஒரு செய்தியாளனாக வாழ்ந்த காலத்தில் அந்த புனித ஆத்மாவை தரிசிக்கும் வாய்ப்பு ஒருமுறை கிட்டியது. 2000-ஆம் ஆண்டு ஒயாத அலைகள் முன்னெடுப்பு கடுமையாக இலங்கையில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சுழலில், பார்வதியம்மாளை தமிழகத்தில் திருச்சி அருகே வசித்து வந்தார். அப்போதே அவருக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டு முசிறி அருகே ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செய்தியாளன் போர்வையில் சென்றதால் அன்பர்கள் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.

எனினும் பாட்டியை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், செய்தியாளன் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு சென்றேன்.

உடல் உபாதையான சுழலிலும் அவர்களின் உபசரிப்பும், அன்பும் என்னை நெகிழச்செய்தன. நான் பிறந்தபோது என் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா பாட்டிகளை நான் நேரில் பார்த்ததில்லை, பார்வதியம்மாளைப் பார்த்தவுடன், அவரின் அன்பில் திளைத்தபின்பு பாட்டிமார்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று உணர்ந்தேன். பார்வதியம்மாள் என்றழைப்பதைவிட பார்வதி பாட்டி என்றழைப்பது எனக்குள் ஒரு ஆனந்தத்தை தந்தது.

எனக்கு மட்டுமல்ல உலக தமிழுர்களுக்கு அவர் தாயாக என் வயதையோத்தவர்களுக்கு அன்பு பாட்டியாக அவர் திகழ்ந்தார்.

பார்வதி பாட்டியின் மற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும், அவர் தமிழ் தேசியத் தலைவருடன் இருப்பதையே விரும்பினார். தமிழ் தேசியத் தலைவருக்கும் தன் தாயுடன் இருப்பது புதிய சக்தியை தந்தது.

மே 2009 நிகழ்வுக்கு பின்னர், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிக சாதாரணமானது அல்ல. பார்வதி பாட்டியை கேடயாமாக வைத்து அவர்களின் உறவுகளுக்கு வலைவிரிக்க சிங்கள ராணுவம் திட்டமிட்டது. வயோதிகத்திலும், வலியிலும் அவர் அத்தகைய சூழ்ச்சிகளில் எச்சரிக்கையாக இருந்தார்.

பாட்டியை வைத்து அரசியல் பிழைப்புகளும் அரங்கெறியது.

அய்யா வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு பின்னர் அவரின் பாடு மிகவும் கொடுமையானது. பெற்றபிள்ளைகள் உடன் சென்று இறுதி நாட்களை கழிக்க முடியாத சூழல். உலகமே அந்த கர்மயோகியை தாங்கிக் கொள்ள நேசக்கரம் விரித்தது.

இந்தியாவை தவிர.

எனினும் தன் மீதுள்ள பாசத்தினால் மற்றவர்களுக்கு சிரமம் வந்துவிடக்கூடாது என்ற நல்லேண்ணம் காரணமாக அவர் அனைவரின் உதவியையும் மறுத்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் துரோக விளையாட்டை மன்னித்தார்.

சான்றோர் சிவாஜிலிங்கம் மற்றும் மருத்துவர் மயிலேறும் பெருமாளின் அரவணைப்பில் சிகிச்சைப் பெற்று வந்தார். பார்வதியம்மாள் பற்றி செய்தி வரும்போதெல்லாம் என் மனம் இனம்புரியாத வலியில் சூழும். இறைவா ! இந்த வயதில் ஏன் அவரை மேலும் மேலும் வருத்துகிறாய் என்று மனம் பிராத்திக்கும்.

பார்வதி பாட்டி உடல் கூட்டில் இருந்து விடுதலைப் பெற்றது சாதாரண பார்வையில் ஒரு துயரமிகு நிகழ்வுதான்.ஆனால் பிறப்பு இறப்பிற்கு பின்னால் இருக்கும் செயலை உணர்ந்தால். பிறப்பும் இறப்பும் அர்த்தமற்றதாகிவிடும்.

கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்க வந்த என் தோழர் முதலில் கேட்ட கேள்விதான்.
”என்ன ராஜா நீங்கள்…..பார்வதி அம்மாள் இறந்துவிட்டார் என்றால்…வருத்தம் தெரிவிக்காமல்….,மகிழ்ச்சிதான் என்கிறீர்கள் “ கோபமோ எரிச்சலோ….ஏதோ ஒரு உணர்ச்சியில் கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதில், அருள்தந்தை வேதாத்ரி இறப்பிற்கு முன்னால் சொன்னதை அப்படியே சொன்னேன்.

வேதாத்ரி மகரிஷி தனது உலக சமாதான உரைக்குபின் அவரின் அறையில் சந்தித்த அன்பர்கள் கண்ணீருடன், சுவாமி ஏன் அப்படி பேசினீர்கள். நீங்கள் இன்னும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று மன்றாட…வேதாத்ரி மகரிஷி இவ்வாறு கூறினார்.

“ எனக்கு இப்போது வயது 96 ஆகிறது. என்னுடைய வேலைகளை என்னால் செய்துகொள்ள முடியவில்லை. பலர் என்னை பல இடங்களில் இருந்து உதவிக்காக அழைக்கிறார்கள்.அழைத்த குரலுக்கு உடனடியாக செல்ல, இந்த உடல் கூடு வயோதிகத்தின் காரணமாக தடையாக இருக்கிறது. இந்த ஆன்மா இந்த கூட்டை விட்டு விட்டால் போது. இந்த பிரபஞ்சத்தொடு கலந்துவிடும்…பிறகு நீங்கள் எங்கிருந்து…யார் கூப்பிட்டாலும் அவர்களுடம் உடனடியாக வந்து கலந்துவிடுவேன்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றார்.

இது சாத்தியமா என்றால் சாத்தியம். சராசரி மனிதனால் புரிந்துகொள்ள, ஏற்றுக் கொள்ளமுடியாத செய்திதான் ஆனால்,யோக வாழ்விலும், ஆன்மிகப் பயிற்சியிலும் இருப்பவர்களுக்கு இதன் உண்மை விளங்கும்.

வேதாத்ரி மகரிஷியின் இந்த பதில் அன்பர்களுக்கு நிம்மதியையும்,நம்பிக்கையையும் தந்தது.வேதாத்ரி மகரிஷி மட்டுமல்ல பார்வதி பாட்டிக்கு இது பொருந்தும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அன்பு நெஞ்சங்களின் வேண்டுதலுக்கு,அழைப்பிறகு அவரால் இந்த வயோதிகத்தின் காரணமாக செவி சாய்க்க முடியாத நிலை.

ஆனால் இப்போது அவர் பிரபஞ்சத்தில் கலந்தபின்பு கூப்பிட்ட குரலுக்கு அவரால் உடனடியாக வரமுடியும்.

பார்வதி பாட்டியின் பூவுலக வரவு தமிழ் தேசியக் கட்டமைப்பிற்காக, அதற்காக அவர் சுமந்து தந்த ஆன்மா தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.

மே 2009 நிகழ்வு அந்த கனவிற்கு பின்னடைவு தந்தாலும், பார்வதி பாட்டியின் விண்ணுலக பிரவேசம் ஒரு புதிய எழுச்சியை நிச்சய்ம் தரும்.

தமிழீழத்த, தமிழீழக்கனவை முன்வைத்து போராடு ஒவ்வொருவருக்கும் அந்த வீரதாயின் ஆற்றல் ஆன்மாவில் கலந்து செயல்படும்.

இன்று சர்வதேச மகளிர் தினம். முகாம்களில் வாழும் தமிழீழ மக்களின் வாழ்க்கை மலர்ச்சி அடைய,அந்த வீரத்தாயின் ஆற்றலுடன் சங்கல்பம் ஏற்போம்.

தமீழீழம் நிச்சயம் வெல்லும்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...