Saturday, February 7, 2015

என்னை அறிந்தால் - ஷமிதாப்



பிரபலமானவர்களின் பங்கேற்பு இருக்கிறது என்பதால் ஆஹா ! ஓஹோ ! என்று புகழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இது சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்னை அறிந்தால் மட்டும் ஷமிதாப் படங்களுக்கும் பொருந்தும்.

என்னை அறிந்தால் ;
முந்தைய அஜித் படங்களோடு ஒப்பிடும் போது மகா மோசம். ஆனால் வயதுக்கேற்ற வேடங்களை விரும்பி செய்யும் இயல்பான அஜித்தின் நிஜமான தயாள குணத்தை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்

ஷமிதாப் :
முந்தைய பால்கி படங்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் நடிப்பில் பூந்து விளையாடும் தனுஷ் மற்றும் அமிதாப்பிற்காக ஓகே சொல்லலாம்.


என்னை அறிந்தால் :

தன் காதலியை கொன்றவனை பழிவாங்கத் தேடி அலையும் ஒரு போலிஸ் ஆபிசர், முயற்சியின் ஊடே ஒரு உறுப்புதிருட்டு கும்பலை கண்டுபிடித்து எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை.

இதனை காக்க காக்க படத்தின் சீகுவலாக எடுத்திருந்தாலே கூட போதும், தெளிவாக திரைக்கதை எழுதி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கமுடியும்.

ஆனால் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, இன்னொரு மிஷ்கின் படம் என்று கலந்துகட்டி நமக்குள் ஒரு புத்துணர்வு எழாத சூழலை தந்திருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். திரைக்கதை உறுதுணை எனும் டைட்டிலில் ஆரண்ய காண்டம் இயக்குனரின் பெயரும் வருகிறது. யூ டூ தியாகராஜன் குமார ராஜா !

வழக்கமாக கவுதம் மேனன் படம் என்றால் இசையில் படமாக்கலில் ஒரு துள்ளல் இருக்கும். வா ராஜ வா வா என்ற ஒரே ஒரு பாடலைத் தவிர மற்றதெல்லாம் ஜவ்வடிக்கின்றன. இந்நிலையில் பழைய புராணப்படம் போன்று அடிக்கடி பாடல்கள் வந்து பொறுமையை சோதிக்கின்றன.

அருண்குமாருக்கு இதில் வில்லன் அவதாரம்.

அஜித்துக்கு வில்லன் என்பதாலே ஒப்புக்கொண்டு திறம்பட செய்திருக்கிறார். எனினும் காக்க காக்கவில் வில்லன் ஜீவனுக்கு இருந்த அழுத்தம் இதில் இவருக்கு இல்லை என்பதுதான் உண்மை.

அனுஷ்காவும் - திரிஷாவும் அழகு.

டான்ஸ் டீச்சராக வரும் த்ரிஷாவின் உடல்மொழி ஏனோ காக்க காக்க ஜோதிகாவை நினைவுப்படுத்துகிறார்.

மிகச் சிறந்த இயக்குனரான கவுதம் மேனன் அரதபழசான இந்த களத்தை அதுவும் முன்பு பயன்படுத்திய யுக்திகளையே மீண்டும் ஏன் இதில் பயன்படுத்தியுள்ளார் என்பது புரியவில்லை.

எனினும் அஜித்தை பெரும் திரையிலும். கவுதம் மேனனின் படமாக்க அழகியலையும் பார்த்து ரசிக்க ஒருமுறை பார்க்கலாம்.
ஷமிதாப் :

அட்டகாசமான பிரீமைஸ் பிடித்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் பால்கி.

ஊமை ஒருவனுக்கு சூப்பர் ஸ்டாராக ஆசை. அவன் குரல் கொடுக்கும் ஒரு குடிகார கிழவன். எண்ணியவண்ணம் அவன் சூப்பர் ஸ்டாராக வெற்றிப்பெறுகிறான். அவனுக்கு தனது நடிப்புதான் தனது வெற்றிக்கு காரணம் என்ற எண்ணம் ஏற்பட, தன் குரல் தான் அவனின் வெற்றிக்கு காரணம் என்று கிழவன் நினைக்க, இவர்களின் வாழ்வியல்  முரண்பாடுகள் தான் கதை.

அமிதாப் எனும் மகாகலைஞனின் அசத்தலான பர்பார்மன்ஸும், தனுஷ் எனும் சுள்ளானின் துள்ளலான நடிப்பும் ஷமிதாப்பை ரசிக்க வைக்கின்றன. தனுஷ் சில இடங்களில் அமிதாப்பை அசத்தலாக தாண்டி பரிமளிக்கிறார்.

அக்‌ஷரா ஹாசன் குட்டி சரிகா

பூனைக் கண்ணுடன் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். அமிதாப் - தனுஷ் எனும் பயிற்சிப் பெற்ற நடிகர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு அவருக்கு நிகராக நிற்கும் அக்‌ஷரா எனும் இந்த குட்டிப் பூவிற்கு நிச்சயம் ஒரு பூங்கொத்து தரவேண்டும்.

சண்டைக்கோழியாக நிற்கும் அமிதாப் - தனுஷ் இருவரையும் ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் உட்காரவைத்து சமாதான பாடமெடுக்கும் அந்த காட்சி அக்‌ஷரா ! யூ ஆர் கிரே குட்டிப் பாப்பா !

மிகப்பெரிய துருவங்கள் இணைந்து பணியாற்றி  இருக்கிறார்கள், இருப்பினும், காட்சிகள் மெதுவாக நகர்ந்து சலிப்பை வரவழைக்கின்றன.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பற்றி சொல்லத்தேவையில்லை. ஒவ்வொரு பிரேமும் கண்களை பிரமிக்க செய்கின்றன.

ஷமிதாப்பின் எதிர்பார்ப்பே இளையராஜாதான்.

எனினும் இது ராஜா சாரின் இசையா என்று யோசிக்க வைக்கிறது ? சீனி கம்மில் தபு - அமிதாப் ரொமன்ஸ் காட்சிகளின் போது விளையாடிய அவரின் பின்னனி இசை ஷமிதாப்பில் ஏனோ தோய்ந்து ஒலிக்கிறது. இப்படி சொல்வது இளையராஜா வின் ரசிகர்களுக்கு முரணாக படலாம். ஆனால் எல்லோரையும் விட இளையராஜாவின் முதன்மையான ரசிகன் நான். எனகு தோன்றியது இது.


புத்தாண்டு, பொங்கலுக்கு பின்பு எதிர்ப்பார்ப்பைத் தந்த இரண்டு படங்கள் இவை. இவை இரண்டுமே முழுமையான திருப்தி தரவில்லை .

பார்ப்போம் அடுத்து என்ன நல்ல படங்கள் வருகிறது என்று. இல்லையெனில் இருக்கவே இருக்கிறது புத்தகங்களும் ஊர் சுற்றல் திட்டங்களும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...