நீங்கள் யாரோ ஒருவரை பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருக்கிறீர்கள். அவர் நீங்களே எதிர்பாராத சூழலில் திடீரென்று உங்கள் முன் வந்து நிற்கிறார்.
உங்களுக்கு எப்படி இருக்கும் ?
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று ஆவல்கொண்டுள்ளீர்கள்.ஆனால் சந்தர்ப்ப சூழலால் அதை வாங்க முடியாமல் தள்ளிகொண்டே போகிறது. திடிரென்று ஒருநாள் உங்களுக்கு தெரிந்த ஒருவர் நீங்கள் விரும்பிய பொருளை பரிசாக கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்கிறார்.
நீங்கள் எப்படி உணர்வீர்கள் ?
இது என் நண்பனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவம்.
அவனுக்கு ஒரு நல்ல Hatch Back கார் வாங்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. ஆனால் அவன் சம்பாதிக்கும் பணத்திற்கு அது உடனடியாக சாத்தியமில்லை. பயன்படுத்திய ஒரு காரை வாங்கவேண்டுமானால் கூட கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்தால் மூன்று வருடம் ஆகலாம். ஆனால் நண்பனின் ஆசை அடங்கவில்லை. அவன் எப்பொழுதும் சிந்தித்துகொண்டே இருந்தான். அவனுக்கு பிடித்தமான அந்த காரை சாலையில் பார்த்தால் கூட அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். ஒருநாள் இது போன்றதொரு கார் வாங்கியே தீருவேன் என்ற எண்ணம் அவனுக்குள் வலிமைப்பெற்றுகொண்டே இருந்தது . அவனின் பிரார்த்தனையில் அந்த கார் வாங்கவேண்டும் என்பது நிச்சயம் இடம்பெற தொடங்கியது. எப்படியும் அவன் எப்படியும் கார் வாங்கியிருப்பான் என்று உங்களுக்கு தோன்றும். உண்மைதான். ஆனால் அவனுக்கு கார் கிடைத்தவிதம் தான் அலாதியானது.
ஒரு இரண்டு மாதம் அவனை நைஜிரியாவுக்கு ஆன்சைட் பணிக்காக அனுப்பினார்கள். அங்கு சென்ற பின்னரும் அவனுக்கு அந்த எண்ணம் குறையவில்லை. அங்கு அவனுடன் நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். ஒருநாள் பேசிகொண்டிருக்கும் பொழுது அவனுடைய பாஸ் அவனிடம் சொன்னார் " எப்படியும் அடுத்த மூன்று வருடம் நான் இங்கேயேதான் இருக்கவேண்டும். நான் புதிதாக வாங்கிய பிளாட்டை வாடகைக்கு விட்டுவிடலாம். ஆனால் கார் ஒன்று இருக்கிறது. அதனை விற்கவிரும்புகிறேன். நீ எடுத்துகொள்கிறாயா ? என்றார். நண்பனுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும். பயன்படுத்திய கார் விற்கும் கடையில் கேட்டால் கூட கிடைக்காத மலிவு விலை. அடுத்து அவர்கள் இருவரின் ஒப்பந்தத்தின் படி நண்பன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்தால் போதும் என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். நண்பன் நியாயமானவன் என்பதால் இருவரும் ஒப்புக்கொண்டனர். மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பிய நண்பனின் கையில் அவன் விரும்பிய காரின் சாவி. போனஸாக குறைந்த வாடகையில் அவன் மேலதிகாரியின் வீட்டிலும் வாசம். சிங்கிள் அறையில் நண்பர்களோடு தங்கியிருந்த அவன் வாழ்க்கை ஒரு சில நாட்களில் மாறிப்போனது. இன்னும் சொல்லபோனால் மூன்று வருடம் கழித்து கார் வாங்கவேண்டும் என்ற அவனின் இலக்கு ஒரு வருடத்திற்குள்ளாகவே நிறைவேறிவிட்டது.
இது கடவுளின் கருணையா ?
எண்ணத்தின் வெற்றியா ?
அல்லது யதேச்சையாக நடந்திருக்குமா ?
நம்ம ஊர் மக்கள் அவனுக்கு நல்ல நேரம் என்பார்கள். கடவுள் கருணை காட்டினார் என்பார்கள். மேற்கத்தியர்களை கேட்டால் Law of Attraction வேலை செய்திருக்கிறது என்பார்கள். இதை எத்தனை வகையில் கூறினாலும் ஒன்றே ஒன்றுதான் அங்கு பிரபஞ்ச விதி செயலாற்றியிருக்கிறது.
பிரபஞ்சம் அளப்பறியது.
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று விவிலியம் சொல்வது இதைதான்.
நாம் எதை விரும்புகிறோமோ அதனை அடையமுடியும். இங்கே ஒரே ஒரு கட்டுபாடுதான். அதை பெறுவதற்கு தகுதியானவராக இருக்கவேண்டும். பிரபஞ்சத்திடம் எப்படி கேட்பது ? பிரபஞ்சத்தை எப்படி செவிசாய்க்க வைப்பது. அது உங்களை நீங்கள் தகுதியானவராக மாற்றிகொள்வதில் தான் இருக்கிறது.
இன்றைய தேதியில் அதிகம் விற்பனை ஆகும் நூல்கள். சமையல், ஜோதிடத்தை தாண்டி தன்னம்பிக்கை நூல்கள். மக்களால் அதிகமாக கலந்துகொள்ளப்படும் பயிற்சி வகுப்புகள் Life Coaching எனப்படும் தன்னம்பிக்கை வகுப்புகள். இவையெல்லாம் சொல்லும் மந்திரம் ஒன்றே ஒன்றுதான் நினைத்தது நடக்கும் ! கேட்பது கிடைக்கும் !
நீங்கள் காந்தமாக மாறுங்கள்.
உங்கள் ஈர்ப்புசக்தியை அதிகரித்துகொள்ளுங்கள்
விரும்பியதை ஈர்ப்பது எப்படி ?
நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டும்.
இன்னும் பல பல தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் கோடிக்கணக்கான பிரதிகள் தினமும் விற்றுதீருகின்றன. வட அமெரிக்கா முழுவதும் இத்தகைய எழுத்தாளர்கள் பெருகி நிற்கின்றன. நம்ம ஊரு தினசரிகளில் நீங்கள் பார்க்கலாம் கோட்டு சூட்டுடன் அவர்களின் படங்களை போட்டு குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்று கீழே சில ஆயிரங்களையாவது அனுமதி கட்டணமாக குறிப்பிட்டு இருப்பார்கள்.
உண்மையில் இந்த பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் கோடீஸ்வரனாக மாறுகிறார்களோ இல்லையோ. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கோடீஸ்வரராகிவிடுகிறார்கள். இதுவும் அவர்களுக்கான பிரபஞ்ச விதி தான். இவர்கள் விதவிதமான பெயர்களில் வகை வகையான விதங்களில் வகுப்புகளை நடத்தினாலும் இவர்கள் அனைவரும் சொல்லும் எளிய மந்திரம் " பிரபஞ்சத்துடன் பேசுங்கள் "
பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. பிரபஞ்சம் போன்றே மனமும் எல்லையற்றது. நாம் எதைவிரும்பினாலும் நமது மனமும் பிரபஞ்சமும் ஒத்த அலையியக்கத்தில் இயங்கும் பொழுது நாம் விரும்பியது நம்மை நோக்கி வருகிறது. நாம் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. நினைத்தது எல்லாம் நடக்கிறது.
இதனை எப்படி செய்வது ? வாருங்கள் பிரபஞ்சத்திடம் கேட்போம் !
No comments:
Post a Comment