Saturday, September 15, 2012

பரவசவெளியில் பதினான்கு நாட்கள் – 2




ஒரு (LIVE ) தொடர்

எப்போது உறங்கினேன். எப்போது விழித்தேன் என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் இரண்டு நொடிகள் போல பறந்துவிட்டன.நேற்று  சென்னையில் விமானம் பிடித்து, டில்லி வந்து அங்கிருந்து பேருந்தின் மூலம் இன்று காலை ரிஷிகேஷில்  காலடி எடுத்து வைத்தாயிற்று.

சென்னையில் இருந்து ரிஷிகேஷ் சுமார் 2380 கிலோ மீட்டர் .  வீட்டை விட்டு புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் பயண செய்ததோ கொஞ்ச நேரம்தான்.

சென்னையில் இருந்து டில்லி இரண்டரை மணி நேர விமானப் பயணம். டில்லியில் இருந்து ரிஷிகேஷ் எட்டு மணிநேர பேருந்து பயணம்.

சுமார் பத்து மணி நேரத்தில் என் வீட்டில் இருந்து ரிஷிகேஷை என்னால் தரிசிக்க முடிகிறது.
என்னே அறிவியலின் அற்புதம் !

இது அறிவியலின் அற்புதம் மட்டுமல்ல மனித அறிவின் அற்புதம் தான் !

இந்த அறிவியல் அற்புதமும்,அறிவின் வெளிப்பாடும் நமக்கு முன்பு இங்கு தரிசித்த எண்ணற்ற ஞானியர்கள் நமக்களித்த பிச்சை ! விமான வசதியும், பிற வாகன வசதியும் இருப்பதால் நம்மால் சில மணி நேரத்தில் இங்கு வர முடிகிறது. இத்தகைய வசதியில்லாத காலத்தில் இங்கு நம் முன்னோர்கள் எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டும். அப்போதெல்லாம் அவர்கள்  இமய தரிசனம் மிகவும் சுலபமாக மாறவேண்டும் என்று தங்களின் வலிமையான புனிதமான எண்ணங்களை விதைத்து இருப்பார்கள் தானே !. அவர்கள் இப்பிரபஞ்சத்தில் விதைத்த எண்ணங்களே இன்று நமக்கு வசதி வாய்ப்பாக மாறியிருக்கிறது. நம் தலைமுறையில் அனுபவிக்க முடியாவிட்டாலும்,அடுத்த தலைமுறை நலம் பெற பிராதித்து, எண்ணங்களால் சாதித்த, அவர்களை இந்த கண நேரத்தில் நினைத்து அவர்களின் பொற்பாதங்களை பணிவதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரும்பேறு.

பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான,இமயம் இன்றுவரை எண்ணிலடங்கா  ரிஷிகளும், மகான்களும் தரிசித்து  புனிந்தமடைந்த பிரதேசம். இமயத்தின் ஓவ்வொரு துளியும் அப்பழுக்கற்ற புனித தன்மை உடையது. இங்கு தோன்றும் நதிகளும், அருவிகளும் நேரிடையாக பரிசுத்தமான பனிமலைகள் உருகி வழிவதின் மூலம் உற்பத்தி ஆனவை. இவ்வாறு மலைகளினூடே குதித்து வரும் போது பல அரிய மூலிகைகளோடு கலந்து அதன் அற்புத மருத்துவத் தன்மையை சுமந்து வருவதால், இங்கு  வழியும் ஒவ்வொரு துளியும் ஜீவிதம் மிக்கது. நோயற்ற வாழ்வையும், நோய்களை தீர்க்கவும் வல்லது. ஏன் நீங்கள் இங்கு சுவாசிக்கும் காற்றும் அத்தகைய ஆற்றல் மிக்கதே !

ஆன்மிக சாதகர்களுக்கு இமயம் தான் உச்சகட்ட இலக்கு. அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் நோக்கம் இமயத்தை ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பதே !

இந்துக்களுக்கு இங்கு சிவனும் பார்வதியும், மகாவிஷ்ணுவும்,பிரம்மனும் எண்ணற்ற ரிஷிமுனிகளும் வசிப்பதான நம்பிக்கை. புத்த மதம் சார்ந்தவளுக்கும், ஜைனர்களுக்கும் இது ஒரு புனித தளம். தென்னிந்தியாவில் காலடியில் பிறந்த ( கி.மு 788 – 820 ) ஆதிசங்கரர் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியில் இறைவனோடு கலந்த இடம் இமயத்தின் உச்சியான கேதார்நாத்.

சீக்கியர்களின் மத குருவான குரு நானக் க  தமது வாழ்நாளில் பல இடங்களில் இமயத்தின் பல பகுதிகளை தரிசித்து இருக்கிறார். உத்ரகண்ட் மாநிலம் சீறிநகரில் சீக்கியர்களின் குருதுவராக்கள் அமைந்துள்ளன.
இயேசு கிறிஸ்து தனது இறுதிநாட்களை காஷ்மீரில் கழித்ததாக ஆதரங்களுடன் பலநூல்கள் வெளியாகி வருகின்றன.முகமது நபியவர்களின் புனித முடியை தாங்கி நிற்பதால் காஷ்மீரில் ஹசரத்பால் மசூதி சிறப்பம்சம் பெறுகிறது.இப்படி மதம் அடிப்படையில் பார்த்தாலும் இமயம் அனைத்து சமயத்திற்கும் ஊற்றாக இருக்கிறது.

சரி ! இப்படி பல மதங்கள், பல இனங்களை ஈர்க்கும் வகையில் இமயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது ?

இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் பயணம். ரிஷிகேஷ், கெளரிகுண்ட், கேதார்நாத்,ஜோஷிமத்,பத்ரிநாத், மணா என்று எங்களின் அடுத்த இரண்டு வார வாழ்க்கை இமயத்தோடு மட்டும். திரும்பும் போது ஹரித்தவாரில் தங்கி கங்கா ஆரத்தியுடன் இந்த இனிய இமயப் பயணம் முடிகிறது.

இந்த பதினான்கு நாட்களும் இமயம் என்ற இந்த பரவசவெளியில் தான் உலாவப் போகிறோம். இமயத்தின் சிற்ப்புகளை  பக்திமார்க்கம் வழியாக மட்டுமல்ல,ஞானமார்க்கமாக, அறிவியல் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் அணுகுவோம்.
இன்று ரிஷிகேஷில் இனிமையுடன் கழிந்தது இனிய இமயத்தின் முதல் நாள். நாளை காலை சீறிநகர் நோக்கிப் பயணம்.

ரிஷிகேஷின் அனுபவத்துடன் மீண்டும் சந்திப்போம் !

வாழ்க வளமுடன் !

Thursday, September 13, 2012

பரவச வெளியில் பதினான்கு நாட்கள்



 ( ஒரு  LIVE  தொடர் )
இனிய இமயம் !

எனக்கும் இமயத்திற்கும் அப்படி என்ன பந்தம் என்று புரியவில்லை. நான்கு வாரம் முடிவதற்குள் இன்னொரு இமயப் பயணம்.

பரவசமாக தான் இருக்கிறது !

மழைப் பிடிக்கும் ! மலையும் பிடிக்கும் !

மலைகளும் மழையும் இணைந்த இமயம் எப்போதும் பிடிக்கும் !

எனக்கு சுமார் மூன்று வயதிருக்கலாம். எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ பெட்டி.அதில் பாட்டுக் கேட்பதற்கு எனது சொந்த பந்தங்கள் எல்லாம் எப்போதும் கூடி  நிற்கும். இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியில் அப்போது பிரபலமான பாடல் ஒன்று. என்ன படம் என்று தெரியவில்லை. அதன் பாடல் தொடக்க வரி இது தான். “ ஈரமான ரோஜாவே…என்னை பார்த்து மூடாதே !” எனப் போகும் அந்தப்பாடல்.

என் ஒன்றுவிட்ட அண்ணன்களும் அக்காக்களும்  கொஞ்சம் மாற்றி ‘ஈனமான ரோஜாவே….என்னைப் பார்த்து மூடாதே ! என்று பாடி திரிவார்களாம்.

எனக்கு என்னமோ அந்த பிஞ்சு வயதில் அந்த பாடல் பிடிக்காதாம். அந்த பாடலை யார் பாடினாலும் ஒரே கத்தல் தான். அர்த்தம் புரியாவிட்டாலும் எனக்கு என்னவோ அந்த பாடலைக் கேட்டால் ஒரு வெறுப்பு.

ஆனால் அதே பருவத்தில் என்னை கவர்ந்த பாடல் ஒன்றிருக்கிறது. நீங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள்.ஒரு மூன்று வயது பிள்ளைக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று. அது என் முப்பாட்டன் பாரதியின் பரவச வரிகள்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் !

அந்த பருவத்தில் இந்த பாட்டுக்கும் அர்த்தம் தெரியாதது தான். ஆனால் இதன் தாளம், சங்கீத மாமேதை டி.ஆர். மகாலிங்கத்தின் கம்பீரக் குரல், கொஞ்சும் வயதிலேயே என்னை தஞ்சம் அடைய செய்துவிட்டது. ( எல்லாம் எங்கம்மா சொல்லி கேட்டதுதான் ! ).நாளடைவில் அர்த்தம் புரிந்து இமயம் குறித்து காட்சிகள் கண்டு, கற்பனையில் விரிந்து இமயம் எனக்கு ஒரு கனவு பிரதேசமாகவே மாறிவிட்டது.

இமயம் என்பது வெறும் மலை அல்ல. அது ஒரு மாபெரும் இயக்கம். ஆதிகாலத்தில் எரிமலையாக இருந்து புவியீர்ப்பு விசையின் நகர்தாலால் பொங்கி எழுந்து நெருப்பு குழம்பாய் வெளிப்பட்டு, பின்னர் தணிந்து ,குளிர்ந்து இறுகி இப்போது பனிமலையாய் பரவி நிற்கிறது என்பது புவியியல் கோட்பாடு. இமயத்தின் எழுச்சியின் அழுத்தத்தால் லெமூரியா கடலில் புதைந்து போனதாக கூறப்படும் தகவல்களும் உண்டு.

இமயம் ஆசியாவின் பத்து நாடுகளுக்கு எல்லையாக நிற்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். இப்போதே பல்வேறு ஈகோக்களில் சிக்கி தடுமாறும் நாடுகள், இமயம் என்றொரு அரண் இல்லாவிட்டால் இந்த நேரம் அடித்து கொண்டு அழிந்திருக்கும்.

இமயம் பல்வேறு மதங்களின் புனித பூமியாகவும் திகழ்கிறது. இமயத்தின் சாரலில் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,முக்திநாத்,கேதார்நாத்,கங்கோத்ரி,யமுனோத்ரி என  பக்தி பரவசமாக ஆன்மிக தேடலுக்கும் வழியுண்டு. இன்னொரு புறம் ஜாலியாக குடும்பத்தோடு சென்று ஜல்லிடித்து வர குலு, மணாலி, சிம்லா, லே,லாடக் போன்ற இடங்களும் உண்டு.
ஆன்மிக பழமாக ருத்ராட்சமும் உண்டு. ஆப்பிள் தோட்டங்களும் உண்டு.

எந்த ஒரு பயணத்தையும் விட இமயத்தின் மீது எனக்கொரு தீராத காதல் உண்டு.

கடந்த மாதம்  ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி.இமயத்தின் உச்சியில் ஜம்சம் விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டோம். தொடர் பனிக் காரணமாக விமானம் இயக்கம் ஒரு வாரத்திற்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்களோ இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் காத்மண்டுவில் இருக்க வேண்டும். ஜம்சம்மில் இருந்து  காத்மண்டிற்கு வாகனம் பிடிக்கவேண்டுமானால் கூட சுமார் 155 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும்.

அது சாதாரண பயணம் அல்ல. ஜம்சம்மில்(Jomsom) இருந்து பென்னி ( Beni )என்ற இடத்திற்கு வந்தால் தான் பேருந்து. மலைச்சரிவுகளுக்கிடையே கிடைத்த வாகனத்தில் தொத்திக் கொண்டும், கடும் மழையில் நனைந்தபடியும்  இருபது மணிநேரத்தில் பென்னியை வந்தடைந்தோம்.

இமயத்தின் மிக உயரமான மலைத்தொடர்கள் இரண்டு. ஒன்று அன்னப்பூரணா தொடர். இன்னொன்று கஞ்சன் ஜங்கா.இறைவனின் திருவிளையாடலால் அன்னபூரணாவில் கால் வைத்த நாங்கள் கண்டகி நதியோரமாகவே கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில்  பென்னி எனும் இடத்தை வந்தடைந்தோம்.

சாதரணமாக ஒரு மழை அடித்தாலே நாம் வெளியே வர அச்சப்படுவோம். ஆனால் முன்பின் பழக்கம் இல்லாத மண்ணில் எப்படி அச்சமின்றி நம்மால் நடக்க முடிகிறது.
அதுதான் இமயம்.

இமயம் ஒரு தாயின் மடியைப் போன்றது.

நீங்கள் இமயத்தில் காலடி எடுத்து வைத்த வினாடியில் தாயின் மடியில் தவழும் குழந்தையின் மனோநிலைக்கு ஆட்படுவீர்கள்.இதோ இன்னொரு முறை என் தாயின் மடியில் தவழப்போகிறேன். இந்த முறையும் ரிஷிகேஷ்,ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் என்ற பரிச்சயப்பட்ட இடங்கள் தான்.ஆனால் பயணம் அப்படி இருக்காது என்று உணர்ந்தே இருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அற்புதம். ஒவ்வொரு நகர்தலிலும் ஒரு அனுபவம். அடுத்த நிகழ்ப்போவதை அறிந்துகொண்டால் அதில்  ஒரு சுவரஸ்யம் இருக்காது.

அந்த நொடியை அதே கணத்தில் வாழும்போது தான் அதில் ஒரு இன்பம். இந்த வினாடியில் இருந்து இமயத்தில்  எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.

எழுதி பலநாட்களான நிலையில் என் விரலுக்கும் சிந்தனைக்கும் இடையே ஒரு இடைவெளியை உணர்கிறேன். எனினும் என்னுள் எழுதவேண்டும் என்ற ஆவல் குறையவில்லை.

நாளை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பரவசவெளிக்கான எமது பயணம் தொடர்கிறது. எனது குரு சத்குரு டி.கே.எஸ்.சுப்ரமண்யன், எனது சொந்தங்கள்  தாமிரபரணி ஆசிரமத்தின் தலைவர் பி.ஆர்.சந்திரன் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் என்னோடு பயணிக்க உள்ளார்கள்.

நாளை முதல் தினமும் இமயத்தின் அனுபவங்கள் உங்களோடு…

இப்போது உறங்கச் செல்கிறேன். வாழ்க வளமுடன் !


Saturday, March 31, 2012

கூடங்குளம் - போர்குணம் விதைக்கப்பட்டுள்ளது ! புதைக்கபடவில்லை !



இரண்டு மாதங்களில் கூடங்குளம் தனது உற்பத்தியை துவங்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்துவிட்டார். பெரும்பாலான போராட்டக்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தபின்னும்,சாகும்வரை உண்ணாவிரதம் என்று உட்கார்ந்த எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூட  எழுந்துசென்றுவிட்டார். அவர் எழுந்துசென்ற கையோடு மத்திய உளவுத் துறையும் உதயக்குமாரின் வீட்டில் சோதனையிட்டு சென்றுவிட்டது.

கூடங்குளம் மீட்பு போர் என்று அறிவித்து திருநெல்வெலியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் மூன்று கிலோமீட்டர் தாண்டும் முன்பே கைது செய்யப்பட்டு விடுதலையாகி வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.

இனி கூடங்குளம் போராட்டத்தின் கதி என்ன ?

தென்மாவட்டம் முழுவதும் இனி வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு உறங்கவேண்டியதுதான். வழக்கமாக  சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கும் கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்லும் போதெல்லாம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை கடக்கையில் ஏதோ பேய் பங்களாவைக் கடக்கும் மனோபாவம் என்னுள் தொற்றிக்கொள்ளும். இனி என் திருநெல்வேலி பயணங்களிலும் இந்த பயம் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க முடியாது.

என்னடா உனக்கு உயிர் மேல் அவ்வளவு ஆசையா ? என்று நீங்கள் கேட்கலாம். அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி சொல்வது போல் வரும்போதே ரிடர்ன் டிக்கெட்டுடன் வந்தவர்கள் தான் நாம் அனைவரும், வந்த கடமையை முடித்து  திரும்புதல் பயணம்  அந்த வந்த இடத்தை  நோக்கி மிகவும் ஆத்மார்த்தமாக முழுநிறைவுடன் இருக்கவேண்டும். மதியால் முழுமையாக வாழ்ந்த பின்பு விதியின் தீர்ப்பை ஏற்கவேண்டும்.

ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் மாற்றி எழுதப்படும் தீர்ப்புகளில் அல்ப ஆயுசில் போவதற்கு அடியேனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியைப் பாருங்கள். இந்த மூன்று வயதுக் குழந்தையின் பெயர் அபி, கல்பாக்கத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் சத்ராஸ் குப்பம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இந்த ஆத்மா என்ன நோக்கத்தோடு இந்த பூமிக்கு  வந்ததோ தெரியவில்லை, அதற்குள் இந்தப் பாழாய்ப் காலன்....ஐயெம் சாரி......கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் கதிர் வீச்சு இந்த பச்சைப்பிள்ளைக்கு நாள் குறித்துவிட்டது. இவர் ரெட்டினோபிளாஸ்டுமா ( Retinoblastoma ) என்ற கண்புற்றுநோயாளால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். வறுமையிலும், உடல்தான விழிப்புணர்வு பெற்ற இவளின் தந்தை மகளின் உறுப்பை தானம் செய்வது எப்படி என்று விசாரித்துகொண்டிருக்கிறார். பிறந்து மூன்று வருடங்களுக்குள்ளேயே திரும்பி செல்ல எந்த ஆத்மாவுக்காவது விருப்பம் இருக்குமா ? தனக்கு என்ன என்று தெரியாமல் இறந்துகொண்டிருக்கும் கொடுர நிலைக்கும் இந்த பிள்ளையை கொண்டு வந்தவர்கள் யார் ?

கூடங்குளம் திறந்தால் மின்வெட்டு ஒழிந்துவிடும் என்ற போலி மாயையை உருவாக்கி மக்களின் எதிர்ப்பலையை குறைய செய்த தமிழக அரசு கல்பாக்கம் அணு உலை இதுவரை என்ன சாதித்தது என்பதை ஆராய்ந்து பார்த்ததா ?

1984 ஆம் ஆண்டு 1000 மெகாவாட் மின்சாரம் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட  கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி இன்று வரை 440 மெகாவாட்டைத் தாண்டவில்லை.இதோ வருகிறது வசந்தகாலம் என்ற ஆசைக்காட்டுவது போல் இன்னும் 500 மெகாவாட் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று இன்று வரை சொல்லிகொண்டிருக்கிறார்களே தவிர, இதுவரை ஒரு ஆணியையும் பிடுங்கினதாக தெரியவில்லை. அதற்குள் எண்ணற்ற விபத்துக்கள்.

கல்பாக்கம் அணு ஆட்டத்தின் சில உதாரணங்கள் இதோ...

1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அணுகசிவில் வாசுதேவன் மற்றும் தயாநிதி என்ற இரு ஊழியர்கள் இயல்பான கதிரிவீச்சு அளவைவிட ஐம்பது மடங்கு அதிகமான கதிர்வீச்சுக்கு உள்ளாகி  கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் கே5 என்ற யூனிட்டில் கசிந்த தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கதீர்வீச்சு கண்டறியப்பட்டது.இதில் சுமார் ஏழு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

2001 ஆண்டு மே  மாதம் ஒன்றாம் தேதி சிவக்குமார் என்ற ஊழியர் உபயோகித்த நியோபிரேன் ( Neoprene ) என்ற கையுறையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவரின் உண்ட உணவினுள் கதிர்வீச்சுக் கலந்து பாதிப்புக்கு உள்ளானார்.

2002 ஆம் ஆண்டு ஜூலைமாதம்  ஏழாம் தேதி,செல்வக்குமார் என்ற ஊழியரின் இடது முற்றிலு எரிந்து போனது. ஒரு கதீர்வீச்சு மிகுந்த உலோகத்தை தள்ளிவிட முயன்றபோது ஏற்பட்ட விபத்து காரணம்.

2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு விபத்தில் மதுசூதனன் மற்றும் ராஜன் என்ற ஊழியர்கள் உள்ளுறுப்புகளில்  தீவிரமான கதிர்வீச்சுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதெல்லாம் ஒரு  ஜு..ஜுபி விபத்துக்கள்.

இதனைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்கிறது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் சம்மேளனம், 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி இங்கு நடந்த ஒரு விபத்து குறித்து விளக்கம் கேட்டு,இந்த அணு உலையை நிர்வகிக்கும் மும்பை பாபா அணு அராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ள கடிதம். ( ரகசிய கோப்பு எண் (BARCFEA/ 03/03/131 dated 24 January 2003 )அந்த கடிதத்தை வெளியிட்டு இருக்கிறது தில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெகல்கா புலனாய்வு இதழ். அந்த கடிதத்தின் சாரம்சம் இதுதான். அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றும் டாக்டர் சீனிவாசராஜுவை குறைந்த கதிர்வீச்சுக்கான வாய்ப்புள்ள ஒரு பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட திரவத்தில்  பொருளை எடுத்துவரும்படி உத்திரவு இடுகிறார் அவரின் மேலதிகாரி. அந்தபகுதியில் கதிர்வீச்சைக் கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கவில்லை. இதனை அறியாமல் சீனிவாச ராஜு சுமார் பன்னிரெண்டு மணியளவில் தனது கைகளால் அந்தப் பொருளை எடுத்து சென்று உள்ளே இருக்கும் ஆய்வுக்கூடத்தில்  வைத்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அணுவீச்சு கண்காணிக்கும் கருவி அபாய நிலையில் கதிர்வீச்சு அதிலிருந்து வருவதை எச்சரித்து இருக்கிறது. இதனை அறியாமலேயே சுமார் ஒரு மணிநேரம் அந்தப் பொருளோடு ஆய்ந்த சீனிவாச ராஜுக்கு தான் கடுமையான கதிர்வீச்சில் தாக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர கூடுதலாக இன்னும் ஒரு மணிநேரம் ஆனது. அன்று அவர் மட்டுமல்ல,  ஒரு பெண் உட்பட் மொத்தம் ஏழு பேர் கடும் பாதிப்புக்குள்ளாகி, அணுமின்நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனில்லாம் உயிரையையும் விட்டார். இந்த விபத்து குறித்த விளக்கத்தைதான் ஊழியர்கள் அமைப்பு கேட்டுள்ளது. அடுத்த எட்டு மாதங்கள் இதனை மறைக்க முயன்று தோற்றுப் போய், இறுதியில் பாபா அணுமின்நிலையத்தின் அப்போதைய இயக்குனர்  பட்டாச்சார்யா, இது இந்திய அணு உலைகளில் நடந்த விபத்துக்களிலேயே மிகவும் மோசமான விபத்து என்று ஒப்புக்கொண்டார்.

இன்னும் என்னென்னமோ நடந்திருக்கலாம். கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையின் கோப்புகளை உண்மையுடன் ஆராய்ந்தால், பல அதிர்ச்சிகள் வெளிவரலாம்.

அணுமின் நிலைய ஊழியகளுக்கு மட்டும்தானா பாதிப்பு ? தற்போது கல்பாக்கத்தை சுற்றியிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானோர்  புற்றுநோய், மலட்டுத் தன்மை, கண் பார்வை குறைபாடு என்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் கடல் மற்றும் விவசாயம் என இயற்கையோடு இயந்து வாழும் பாமர மக்கள். ஒரு சின்ன ஜுரம் தலைவலி என்றால் கூட ஒரு கஷாயமோ அல்லது சுட சுட கருவாட்டு குழம்போ வைத்து கூழுடன் கலந்து உண்டு நோய்க்கு பை ! பை ! சொல்லும்  இயற்கை வாழ்வில் திளைப்பவர்கள்.

இவர்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை,தோல் நோய் என்றால் என்னவென்று கூட தெரியாது. ஆனால் இப்போது இந்த அணுஉலையின் கதிர்கள் இதனையெல்லாம் பரிசளித்து இருக்கிறது.

தமிகத்தின் முதல் அணுமின்நிலையத்தினால் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்களே தகினதத்தம்  போடும் சூழலில், கூடங்குளம் ஏற்படுத்தப் போகும் பாதுகாப்பு பாதிப்புகள் இப்போதே வயிற்றில் புலியைக் கரைக்கின்றது.

சரி ! இப்போது கூடங்குளம் விஷயத்திற்கு வருவோம்.

இரண்டாயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கலாம், அதில் ஆயிரம் மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்கும் என்று முழங்குகிறது அணுமின் கழகமும் , அரசும்.  இதெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதைதான்.
ஆமாம் ! கூடங்குளம் போராட்டம் நீர்த்துப் போய்விட்டதா
மக்கள் மனதில் பற்றவைக்கப்பட்ட எந்த ஒரு போராட்டமும் நீர்த்துப் போனதாக சரிச்த்திரம் இல்லை .ஆட்சி அதிகாரத்தின் இரும்பு பிடி. மின்வெட்டினை ஏற்படுத்தி, அது தீர்வு அணுமின்நிலையம் தான் என்ற தந்திர பிரச்சார யுக்திகள். அடக்குமுறைகள் மூலமாக போராட்டம் தணிந்தது போல் தோன்றினாலும் இன்னும் கிராமங்களில் மக்கள் மனதில் அது ஆழமாக ஊறிக்கொண்டே தான் இருக்கிறது.

அணுமின் நிலையம் செயல்படத்துவங்கும் சூழலில் சுமார் முப்பதாயிரம் பேர் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக கூறுகிறார் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாள உதயக்குமார்.

அவ்வாறு மக்களை இடம்பெறச்செய்யும் போது இந்த பிரச்சனை மேலும் தீவிரமடையும். மேலும் அ.தி.மு.க.வின்  பெரும்பான்மை பலம், அடுத்து அடுத்து உள்ளாட்சி, இடைத்தேர்தல் வெற்றி தமிழக அரசுக்கு இத்தகைய நடவடிக்கைக்கு துணிச்சல் தந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் அரசு செய்யும் சிறு பிழையின் போது ஏற்படும் போராட்டங்களின் போது கூடங்குளமும் தொற்றிக்கொள்ளும்.

மக்களுக்கு இருக்கும் கடமை, ஒவ்வாத ஒன்றை அரசு திணிக்கும் போது அதனை இடைவிடாமல் இறுதிவரை போராடி தடுக்கும் மனவுறுதியும், கட்டுக்கோப்பும்.
நான் சென்னையில் பத்திரிகையாளனாக சுற்றி திரிந்தபோது நடந்தது இது. மலேசியா சுற்றுலாத்துறை சார்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியாவில் மலேசியா சுற்றுலா வளர்ச்சியைப்  பரப்பும் நோக்கில் அந்நாட்டின் அப்போதைய சுற்றுலா அமைச்சர் மாண்புமிகு படுக்கா முகம்மது அப்துல் காதர் பின் அவர்கள் வந்திருந்தார்கள்.

மலேசியாவில் பிறந்து தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனும் சிறப்பு விருந்தினர். விருந்து உபச்சாரம் கொண்டாட்டங்களின் இடைவெளியில் மலேசியா அமைச்சருடன் பர்சனலாக பேச நேரம் கிடைத்தது.

அப்போது அவர் சொன்னது “ இந்தியாவில் இந்தியர்களுக்கு தனது நாட்டின் மதிப்பு தெரியவில்லை. இதோ தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள், சுமார் ஆயிரம் கிலோ மீட்டர்  நீளத்திற்கு கடல்  பரந்து விரிந்துள்ளது. ஆனால் இதனால் யாருக்கும் பலனே இல்லை. இந்த கடல் பரப்பு மட்டும் மலேசியாவில் இருந்திருந்தால், நாங்கள் இன்னும் பத்து மடங்கு முன்னேறி இருப்போம் என்றார்.

அவர் அப்படி கூறும் போது எரிச்சலாக இருந்தாலும்,  இன்று வரை நினைத்துப் பார்க்கும் போது அதில் நிறைய உண்மை இருக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ...ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடி திரியும் இனம் தான். ஆனால் உண்மையில் இந்த மண்ணிற்கே உரிய வளத்தையும் பலத்தையும் அறியாமல் இருக்கிறது.

கூடங்குளம் பிரச்சனையும் அப்படிதான். தமிழ்நாடு போன்ற மிதமான தட்பவெட்ப நிலையுள்ள மாநிலத்தில் மாற்று எரிபொருளின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு ஏராளமாக இருந்தாலும் அணு ஆற்றலை மட்டுமே கட்டிக்கொண்டு அழுவது வேதனை தரக்கூடியது தான்.

தாமிரபரணி மண் அதி சக்தி வாய்ந்த ஒன்று.

தாமிரம் என்ற தாதுபொருளின் தன்மை பூமிக்குள் ஓடுவதாலும், தாமிரபரணி என்ற ஆற்றின் பெயர் காரணத்தோடு ஆன்மிக நெறியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் பின்னி பிணைந்தது.

நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதின் சூட்சுமமும் இதுதான். இதன் மூன்றிற்கு இடையே வான்காந்த ஆற்றல் நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைத்தனர் கட்டிடக்கலையில் தலைசிறந்து விளங்கிய நமது முன்னோர்கள்.இதுமட்டுமின்றி நோயற்ற வாழ்வை பெற நெல்லையப்பர் கோயினுள் தாமிர பொற்சபை என்ற ஆற்றல்மிகு அமைப்பும் உள்ளது. நோயுள்ளவர்கள் இதன் கீழ் அமர்ந்து தியானம் செய்து வந்தால், நாளடைவில் உடலில் நோய்குறி மாறி ஆரோக்கியம் மேம்படும்.

உடலின் எத்தகைய நோய் ஏற்படினும் அதனை தீர்க்கவல்லது தாமிரபரணியின் தூய்மையான சுவைமிகு நீர். இங்கிருந்து வெளிபடும் காற்றும் அத்தகைய வலிமை வாய்ந்தது. நெல்லைப் பகுதியில் நீங்கள் ஒரு மோசமான கையேந்தி பவனின் சென்று சாப்பிட்டால் கூட தேவமிர்தமாக சுவைக்கும். எல்லாம் இங்கு  பூமிக்குள் ஓடும் நீரின் தன்மையும் அதனுள் ஒளிந்திருக்கும் பரிசுத்தமும் தான்.
ஏற்கனவே கோவையை சுற்றி தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளின் நீரை ஒழுங்குப்படுத்தாமல் சிறூவாணியின் சுவையை ஐ.சி.யூ.வில்  வைத்திருக்கிறார்கள். இப்போது தாமிரபரணிக்கும் வாய்க்கரிசி போட நாள் குறித்து இருக்கிறது அரசின் செயல்பாடு.

இப்படி ஆரோக்கியமும் ஆனந்தமும் நோயற்ற வாழ்வும் நிறந்த நெல்லை சீமைக்கு  இனி கூடங்குளம்  தரப்போகும் பரிசை எண்ணிப் பார்க்கும் போது வேதனையின் உச்சம் தான் தெரிகிறது.

ஏற்கனவே  மணல் கொள்ளையார்களால் தாமிரபரணி அன்னை செத்துப் பிழைத்துகொண்டிருக்கிறாள். கூடங்குளம் மொத்த கணக்கையும் தீர்த்து வைத்துவிடும் போலிருக்கிறது.

அணு உலையால் ஏற்படும் ஒரே நன்மை, அதன் மூலப்பொருளை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியும் என்பது மட்டுமே ! அதாவது இப்போது பெரும் விலைகொடுத்து யுரேனியம் வாங்கப்பட்டாலும், அதனை எத்தனை முறை வேண்டுமானலும் மறு சுழற்சி செய்யமுடியும், அதனால் நாளடைவில் மூலப்பொருளுக்கான முதலீடு ஜூரோ காஸ்ட்டாக தெரியும்.

இது சாதகமான ஒன்றாக கருதப்பட்டாலும், இந்த நிலையை அடைய நீண்ட நாட்களாகும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணு உலைகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. ஜூரோ காஸ்ட் நிலையால் ஏற்படுத்தும் நன்மையைத் தவிர இதன் பயன்பட்டால் ஏற்படும் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும்.

நெல்லை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் வசிக்கும்  சொந்தங்களே, ஏதோ உங்களுக்கு பிரச்சனை இல்லை என்பது போல் இருந்துவிடாதீர்கள்.
கல்பாக்கத்தில் ஒன்று கூடங்குளத்தில் ஒன்று இரண்டுக்குமிடையேயான தூரம் சுமார் 700 கிலோமீட்டர் மட்டுமே. ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், தமிழ்நாடு என்ற மாநிலமே இந்திய வரைபடத்தில் இருக்காது. புல் பூண்டு முளைக்க கூட இன்னொரு பரிமாணம் எடுக்கவேண்டும்.

எனவே கூடங்குளம் என்பதை நமத்து போன ஒரு விஷயமாக பார்க்காமல், நமது இருக்கைக்கு கீழே எரியும் நெருப்பாக பாவித்து, அணு உலைகளுக்கு எதிரான போரட்டத்தை இன்னும் பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்தவேண்டும்.
அதுதான் உங்களுக்கு அல்ல, இயற்கைக்கும் , தேசத்திற்கும் நீங்கள் செய்யும் பேருதவி.

எத்தனை அதிகார துஷ்பிரயோகங்கள் வந்தாலும் போராட்டங்கள் என்று புதைக்கபடுவதில்லை. அவை விதைக்கப்படுகின்றன என்றார் சேகுவாரா.
இப்போதைக்கு அதிகாரம் என்ற மண்ணைக் கொட்டி போராட்டாங்கள் புதைக்கப்பட்டாலும். விரைவில் அது முளைக்கும் !

மனம் நிறைய மகிழ்ச்சி – பகுதி மூன்று

மனம் நிறைய மகிழ்ச்சியின் இரண்டு பதிவேற்றி மூன்றாவது பதிவிற்குள் இத்தனை இடைவேளை. ஏற்கனவே கடவுள் பற்றியும். ஹிப்னோபர்த்திங் பற்றியும் தொடங்கி அது பாதியில் உருப்படாமல் நின்று விட்டது.

இதற்கெல்லாம் பெரிய காரணம் ஏதுமில்லை. மனம் ஒத்துழைக்கவில்லை.

அவ்வளவுதான்.

எந்த ஒரு செயலுக்கும் மனதின் ஒத்துழைப்பு அவசியம். எந்த ஒரு செயலும் அதனை செய்யும் நேரத்தை கணக்கிட்டுக்கொண்டால் மிகவும் குறுகிய ஒன்றாக தான் இருக்கும்.

ஆனால் திட்டமிடுகிறேன் பேர்வழி என்று நாம் அதற்கு கொடுக்கும் பில்டப்புகளிலேயே காலம் கரைந்தோடிவிடும். இதற்கு இன்வால்மெண்ட் (Involement ) இல்லாமையோ, கான்சண்ட்ரேஷன் ( Concentration ) இல்லாமையோ காரணம் அல்ல.

இது ஒருவித சோம்பல். சோம்பல் என்பது ஒருவித மனவியாதி.

சோம்பல் என்ற மனவியாதிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கிய காரணம் உடலியல் சார்ந்த ஒன்று. மனதை உற்சாகமூட்டும், மனதை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் போதிய சக்தியை உடல் உற்பத்தி செய்யவில்லை என்றால் சோம்பல் வரும்.

சரி உடல் ! ஏன் மனதிற்குரிய சக்தியை உற்பத்தி செய்யவில்லை. அதற்கும் காரணம் மனம் தான்.

என்ன குழப்புகிறாய் என்கிறீர்களா ?

குழப்பவில்லை. மனம் சோம்பலில் விழக்காரணம் எப்படி போதிய சக்தியை உடல் உற்பத்தி செய்யாமல் காரணமாக அமைகிறதோ, அதே போல் மனம் உடலுக்கு எனக்கு இவ்வளவு சக்தி வேண்டும் உற்பத்தி செய்து தா என்று ஆணையிடாமல் இருப்பதுதான்.

மனதின் சக்தி உடலின் சக்தியோடு இணைந்த ஒன்று.அதற்கு மனதும் உடலும் சேர்ந்து செயல்பட வேண்டும்.

உடலின் சக்தி அவசியமா ? மனோசக்தி அவசியாமா என்றால். சாதிக்க மனோசக்தி தான் முதலில் நிற்கும், ஆனால் அதன் பின்னால் உடல்சக்தியும் இருக்கும்.

எப்படி கணவன்மார்களின் வெற்றிக்கு மனைவி துணை நிற்கிறார்களோ அப்படி. கல்யாணம் ஆகாதவர்களுக்கு காதலோ, கேர்ள் பிரண்டோ, பாய் பிரண்டு அல்லது முகம் தெரியாத ஆணோ, பெண்ணொ யாரோ ஒருவர் ஊக்கசக்தியாக இருக்கிறார்களே ! அதே போல உடலும் மனமும் ஒன்றையொன்று உற்சாகப்படுத்திகொள்ளவேண்டும்.

சரி ! மனதால் உடலை உற்சாகப்படுத்துவது எப்படி ?

உடலால் மனதை உற்சாகப்படுத்துவது எப்படி ?

முதலில் உடலை உற்சாகப்படுத்தி மனதை உற்சாகப்படுத்தும் வழிமுறையைப் பார்ப்போம்.

மீண்டும் பழைய சமாச்சாரம் தான்.

உடலின் அவசியம் சீரான இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம். இது சீராக இயங்க நமது உடலின் ஜீவகாந்த இயக்கம் சீராக இருக்கவேண்டும்.

வழக்கமாக சோர்வாக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு ஒரு மணிநேரம் தூங்கியோ அல்லது சும்மாவேனும் படுத்து எழுந்தால் ஒரளவு சுறுசுறுப்பு வருகிறது.

எப்படி ?

உடல் செயல்படாமல் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. உடலில் உள்ள சிறு சிறு சிற்றறைகளில், அதாவது செல்களில் ஒரு சுழற்சி ஏற்பட்டு, அது பிரபஞ்சவெளியில் நிரம்பி வழியும் வான்காந்தம் என்ற ஆற்றலை இழுத்து நமது உடலில் ஜீவகாந்தமாக நிரப்புகிறது.

ஜீவகாந்த குறைபாடால் சோர்வுற்று கிடந்த உடல், அது நிரப்பப்பட்டவுடன் புத்துணர்வு பெறுகிறது.

எனினும் சிலர் படுக்கையில் இருந்து எழும் போது சோர்வுடன் எழுந்திருக்கிறார்களே ஏன் ?

காரணம் மிகவும் எளிது. அவர்களின் செல்கள் போதிய ஜீவகாந்த ஆற்றலை உற்பத்தி செய்யவில்லை  அதனால்.

தூங்கும் போது முழுமையான உறக்கமில்லாமல் போனாலோ, அல்லது குழப்பநிலை, தேவையற்ற சிந்தனை, மன அழுத்தம் ஆகியவை இருந்தாலோ இந்த செல்களின் செயல்பாட்டில் மந்தநிலை ஏற்படும்.

அதாவது ஒரு மனிதன் தனது நினைவுகளை முற்றிலும் அழித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றால் தான் ஒரு இன்பமான உணர்வுடன் எழுந்திருக்க முடியும். அதாவது ஜீவகாந்தம் நிரம்பி வழியும்.

மனதை இரண்டு வகைப்படுத்துகிறது உளவியல்

ஒரு புறமனம் அல்லது Concious Mind
இரண்டாவது ஆழ்மனம் அல்லது Sub Consious Mind

புற மன சிந்தனையோடு  உறங்கும்போது ஜீவகாந்த உற்பத்தியின் வேகம் தடைபடும்.நீங்கள் உறங்கும் போது நீங்கள் முழுவதும் சப் கான்சியஸ் மைண்ட் என்ற நிலைக்கு சென்றுவிடவேண்டும். அப்படி சென்றுவிட்டீர்கள் எனில் உங்களின் உடலில் தானாகவே ஜீவகாந்த பெருக்கம் நிகழும்.

எனவே உறங்க செல்லும் முன் கண்டதை நினைத்து எண்ணங்களை வரிசைப்படுத்தி மேலோட்டமான தூக்கத்திற்கு செல்லாமல், நல்ல ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கவேண்டும்.படுத்தால் பல்வேறு சிந்தனைகள் வருவது சகஜமே. அவ்வாறு வரும்போது அவற்றை ஒவ்வொன்றாக கரைத்து,உறக்கத்தை மட்டுமே பிரதானமாக முன்மொழியவேண்டும்.

இந்த ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்லும் ஒரு பயிற்சியாகதான் சில மதங்களில் இரவில் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு இறைநிலையிடம் நமது மனதை செலுத்து suggestion எனப்படும் சங்கல்பங்களை செய்யும் போது, இயல்பாகவே நமது எண்ண அலைகள் வீரியம் குறைந்து ஒருமுகப்படுகிறது.

சங்கல்பத்தின் இறுதியில் உறங்குவதற்கும் ஒரு சங்கல்பம் இருக்கும்.

படுத்தவுடன் தூக்கம் வரும்.

நீங்கள் இயல்பான மனோநிலையில் இருக்கிறீர்கள் என்றால். நான் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு படுத்த அடுத்த பத்து வினாடியில் நீங்கள் உறங்கசெல்ல வேண்டும்.

உங்களுக்கு பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லையெனினும், இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு ஐந்து நிமிடம் உங்கள் மனதிடம் மிகவும் பர்செனலாக

நான் உறங்கச் செல்கிறேன் மனமே, எனக்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை கொடு, கனவுகளற்ற இந்த ஆழமான உறக்கத்தின் மூலமாக எனது உடல் உறுப்புகள் உற்சாகம் பெறுகின்றன. நான் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆனந்தமான உறக்கத்தின் மூலம் எனது மனமும் அறிவும் கூர்மையடைகிறது. நான் உறக்கம் முடிந்து எழும்போது உடல் நிறைய உற்சாகமும், மனம் நிறைய மகிழ்ச்சியுடம் பெறுகிறேன். நான் செய்யவேண்டிய பணிகளுக்கான அறிவும் ஆற்றலும் எனது உறக்கத்தின் மூலம் எனது உடலிலும் மனதிலும் பெருகும் ஆற்றல் ஈர்த்து தரும்... இப்போது நான் மகிழ்ச்சியாக உறங்குகிறேன் “

என்று சொல்லிவிட்டு உறங்கச் செல்வதை பழக்கமாக கொள்ளுங்கள்.

இதையேதான் சொல்லவேண்டும் என்றில்லை. உங்களுக்கு பிடித்த வாசகங்களை நீங்கள் எழுதி வைத்து பழகலாம்.

இது உடலை மனதால் உற்சாகப்படுத்தும் முறை.

உடலை உற்சாகப்படுத்தும் இன்னொரு முறை.

உடல் பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிளில் செல்வது மற்றும் யோகாப் பயிற்சிகள்.

மனம் சோர்வுற்று இருக்கும் போது “ அய்யோ இப்படி ஆகிவிட்டதே ! என்று சோர்வடையாமல் ஒரு சைக்கிளையோ அல்லது நடந்தோ அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்துக்கு செல்லுங்கள்.

மிகவும் உற்சாகமாக இரண்டு மூன்று சுற்றுகள் வாருங்கள்.

அதற்குள்ளாகவே உடலில் இரத்த ஓட்டமும், வெப்ப ஓட்டமும் சீர்படும். இது உடலில் உள்ள செல்களை சுறுசுறுப்பாக்கி பிரபஞ்ச வெளியில் உள்ள வான்காந்த ஆற்றலை இழுத்து ஜீவகாந்தத்தைப் பெருக்கி உங்களை அமைதிபடுத்தும்.

உடலுக்கு பயிற்சி தருவது மனதை வலிமையாக்கும். மனதிற்கு தரும் பயிற்சி உடலை செம்மைப்படுத்தும்.

இது ஒரு பழக்கமாக வந்துவிட்டால் சோம்பல் என்பது இருக்காது. நாம் நமது உடலையும், மனதையும் பயன்படுத்தாமல் இருக்கும் போது தான் சோம்பல் என்ற நோய் நம்மை சுற்றி வளைக்கிறது.

மனோப்பயிற்சியாக தியானமும், உடலநலனிற்கு யோகாவும் செய்யும் சூழலில் கூட இத்தகைய சோம்பல் சூழ்ந்து திட்டங்களை தள்ளிப் போடுகிறது. இதற்கு காரணம் வேறொன்றுமில்லை, நம்மால் செய்யத்தக்க அளவிலான, தகுந்த பணிக்கு அதிகமான சுமையை நாம் ஏற்றிக்கொள்ளும் போது, நாம் எவ்வளவுதான் சுறுசுறுப்பாக உழைத்தாலும், நேரமின்மை  ஒருவித சோம்பலை உடலுக்கு தருகிறது.

விரலுக்கு ஏத்த வீக்கம் என்ற பழமொழியின் அர்த்தம் இப்போது எனக்கு புரியவருகிறது. அதனால் கொஞ்சம் இந்த தவற்றை சரி செய்துகொண்டிருக்கிறேன்.


பள்ளி நாட்களில் பெரும்பாலும் பிறகு படிக்கலாம், என்று சோம்பலில் தள்ளிவைப்பது உண்டு. நான் பலமுறை அவ்வாறு செய்துவிட்டு பின்னர் தேர்வின் நெருக்கத்தில் அவஸ்தைப்பட்டு இருக்கிறேன்.

இப்போது இருக்கும் கல்விமுறையில், பிள்ளைகளின் உளவியலை யாரும் பார்ப்பதில்லை.

மதிப்பெண்ணை ஒரு பெரும் விஷயமாக , பாடத்தை திணிப்பதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

நான் அப்படி ஒரு பலியாடாக இருந்து தான் வந்திருக்கிறேன். சில நேரங்களின் எனக்கு வியப்பாக இருக்கும். ஒரு நாவலை ஒரே மூச்சில் படித்துவிட்டு, பின்னர் பல நாட்கள் ஆனபின்னும் அதில் உள்ள விஷயங்களை நினைவில் வைத்து சொல்கிறோமே. ஆனால் பாடப் புத்தகத்தை பார்த்தால் ஏன் பயம்.

ஏன் என்றால், நாம் கதை புத்தகங்களை creative visualization மனநிலையோடு அணுகுகிறோம். கதை புத்தகத்தைப் படித்தவுடன் ஒரு ரசனை நம்முடன் கலக்கிறது.

ஆனால் பாடப்புத்தகத்தை அவ்வாறா படிக்கிறோம் ?

எந்த ஒரு விஷயத்தையும் இப்படி creative visualization முறையில் பார்த்தால் ஒருமுறைப் படித்தாலே போதும், உங்களுக்கு நினைவில் நிற்கும்.

அது எப்படி என்று அடுத்தப் பதிவில் பார்ப்போம்..

Wednesday, March 28, 2012

வேதாத்ரி எனும் சமுக துறவி !



அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி மண்ணுலக சேவைகளை முடித்துக்கொண்டு விண்ணுலக சேவைக்கு பொறுப்பேற்றுச் சென்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

அருள்தந்தை என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். தாயும் தந்தையும் உயிரையும் உடலையும் மட்டும் கொடுப்பதில்லை. நம் முன்னோர் வழி வந்த பல்வேறு பாவப்பதிவுகளையும் சேர்த்தே நமக்கு தருகின்றனர். இவ்வாறு புனிதமானதாக போற்றப்படும் தாய் தந்தை உறவுகள் கொடுத்த பாவப்பதிவுகளை கூட அகற்றி, தூய்மையான ஆத்மாவை உருவாக்கும் ஆற்றல் ஒருவருக்கு உண்டென்றால் அது குருமார்களுக்கு மட்டுமே உண்டு.

பேராசை, கடும்பற்று, பெருஞ்சினம், உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என்று தறிகெட்டுத் திரிந்துகொண்டிருந்த என் மனதில் நீக்க வேண்டியதை நீக்கி, கூர்மைப்படுத்த வேண்டியதை கூர்மைபடுத்தி இதோ பிறப்பெடுத்த பெரும் பயனை முறையாக கடக்க இன்னமும் கைபிடித்து அழைத்து சென்று கொண்டிருக்கும் எனது ஆன்மிக தாத்தா வேதாத்ரி மகரிஷி.

வேதாத்ரி மகரிஷி உலகிற்கு என தனியாக எந்த செய்தியும் சொல்லவில்லை. அவர் தனிமனிதனுக்கு சொன்ன செய்திகள் அனைத்தும் உலகத்திற்கு பொருந்தும் செய்தியாகிவிட்டது. உலகை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக திருத்த முடியாது என்பது மகரிஷிக்கு தெரியும். அதனால் தான் தனி மனித அமைதி ! அதன் மூலம் உலக அமைதி என்று மிக துல்லியமாக பாதை அமைத்தார்.

அணு உலை எதிரிப்புக்கான போர் பாமர மக்களிடையே உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்த ஆன்மிக சாதகரின் தீர்க்க தரிசனம் என்னை வியக்க வைக்கிறது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அணு உலைகளுக்கு எதிராக முழங்கியவர் அருள் தந்தை அவர்கள். வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் “அணுவிஷம்” என்ற தலைப்பில் ஒரு நாடகமும் இயற்றியுள்ளார். சுவாமிஜி ஏராளமான புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் இயற்றிய ஒரே நாடகம் இது தான்.

பாமரனுக்கு எளிமையாக இதன் கொடுமை புரியவேண்டும் என்பதாலே அவர் இதனை நாடகப் பாணியில் எழுதியிருக்கிறார். அணுவை வியாபாரமாக்கினால் “வீட்டோ” அதிகாரம் பெற்ற நாடுகள் எல்லாம் எப்படி வளரும் நாடுகளை நசுக்கி பிழைக்கும் என்பதை நக்கலும் நையாண்டியுமாக விலாசியிருப்பார்.அன்று அவர் எழுப்பிய முழக்கம் தான் இன்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறதோ என்று ஆச்சர்யமூட்டுகிறது.

சீனா அருணாச்சல பிரதேசத்தில் ஆக்ரமிக்கிறது என்று அலறுகிறார்கள். திபெத்தை ஏற்கனவே கபாளிகரம் செய்தாகிவிட்டது. இந்த எல்லைப் பிரச்சனை இந்தியாவில் மட்டுமா இருக்கிறது. உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. வேதாத்ரி மகரிஷி இதற்கும் வழி காட்டியுள்ளார். அவரின் “ உலக சமாதானம் “ என்னும் நூலில் எல்லைகள் இல்லா உலகம் தேவை என்கிறார். எந்த ஒரு நாட்டிற்கும் எல்லை கோடுகளே இருக்க கூடாது என்கிறார்.

பருவ காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இன்னொரு நாட்டிற்கு பறவைகள் இடம்பெயர்கின்றன. இவை என்ன பாஸ்போர்ட் ! விசா ! வைத்துகொண்டா திரிகின்றது. பறவைகளே இவ்வளவு சுதந்திரமாக திரியும் போது மனிதனுக்கு ஏன் கட்டுப்பாடு என்று கேட்டவர் வேதாத்ரி.
வேதாத்ரி மகரிஷி விட்டு வைக்காத துறையே இல்லை. எல்லாத் துறைகளையும் எல்லாக் கோணங்களிலும் ஆய்ந்து, எளிமையான முறையில் அதிலிருந்து மக்களுக்கு பயன்படும் கருத்துக்களை சொல்லிச் சென்றுள்ளார்.

வேதாத்ரி மகரிஷி மண்ணுலகில் பூதவுடலோடு இருந்த காலக்கட்டத்தில் கூட இல்லாத எழுச்சி இப்போது அவர் விண்ணுலகில் இருந்து சேவையாற்றும் போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அவர் வடிவமைத்த மனவளக்கலை. இப்போது தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் திறனூக்கப்பயிற்சியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி இசுலாமிய நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே யோக முறை மனவளக்கலை மட்டும். ஏன் ? சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் யோகா பயிற்சிகள் தடைசெய்யப்பட்ட நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே யோகமுறை மனவளக்கலை மட்டும்.காரணம் மனவளக்கலை எந்தவித சாதி மத அடையாளங்களையும் கொண்டதல்ல. பெரும்பான்மையான கிறித்துவ கன்னியஸ்திரிகளும் , இசுலாமிய தோழர்களும் பயிலும் ஒரே மார்க்கம் வேதாத்ரியம்.

வேதாத்ரியத்தை போல் பெண்களை ஆராதிக்கும் ஆன்மிக பயிற்சி வேறு ஏதுமில்ல. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கேள்வியை கொளுத்தி பெண்கள் தான் இப்பிரபஞ்சத்தின் சக்தி என்று அவர்களின் வலிமையைம் பறைசாற்றும் ஒரே பயிற்சியும் மனவளக்கலை தான்.

இன்று புதிது புதிதாக யோகா குருமார்கள் உருவெடுத்து வருகிறார்கள். நெடுஞ்சாலைக்கு நெடுஞ்சாலையிலோ அல்லது இயற்கை எழில் கொஞ்சும் பெரும்பாலான மலையடிவாரத்திலோ புதிது புதிதாக ஆசிரமங்கள் உருவெடுத்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ஆசிரமங்களை ஆன்மிக பயிற்சிப்பட்டறை என்ற பெயரில் அழைத்தவர் வேதாத்ரி. பொள்ளாச்சிக்கு அருகே ஆழியாறில் அவர் அமைத்த முதல் ஆசிரமம் இன்று வரை அறிவுத் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

அறிவுதான் தெய்வம். அதனை தவிர வேறு எதனையும் வணங்க அவசியமில்லை என்ற உண்மையை துணிச்சலாக முன்மொழிந்த வீரத்துறவி.

மலிவான விளம்பர யுக்தி ! கூட்டம் சேர்க்கும் வர்த்தக தந்திரம் ஏதுமில்லாமல் நாடி வருபவர்களுக்கு தேவையான பயிற்சி, அதிலும் சிலர் தொழிலை விட்டுவிட்டு வெகுதூரம் இதை கற்க வருகிறார்களே என்று வருந்தி அவர்களுக்கு தனது கை காசை செலவழித்து உதவி வழி அனுப்பிய வள்ளலாக வாழ்ந்தவர்.
துறவறம் மேற்கொள்ளும் முன்பு சம்சாரியத்தில் இருக்கும் போது கூட அவர் பெரும் வள்ளல் தான். சுதந்திரத்திற்கு முந்தைய காஞ்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கு அதிகமான தறிகள், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிய போது கூட தொழிலாளர்களையும் லாபத்தில் பங்குதாரர்களாக்கி பெரும் புரட்சி செய்தவர்.

தனக்குரிய பங்கில் ஒரு காரை வாங்கி அதில் எப்போதும் எரிபொருளுடன் ஒரு ஓட்டுனரை அமர்த்தி அவசரக்கால பேறு மற்றும் சிகிச்சைக்கு சென்னை பொது மருத்துவமனை செல்ல அப்போதே இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தியவர்.



வேதாத்ரி மகரிஷி உடலளவில் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் சுக்கும நிலையில் நம்முடன் தான் இருக்கிறார். அதனால் தான் அவர் இல்லாத சூழலிலும் மனவளக்கலை உலகமெங்கும் அதிவிரைவாக பரவுகிறது.

மனவளக்கலையில் இன்னொரு புரட்சியாக, கிராமங்கள் தத்தெடுப்பு என்று புதிய திட்டம் இம்மாதம் முதல் செயல்படுகிறது. அரசுடன் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அவர்கள் தேவைகள் பூர்த்திச் செய்யப்படுவதோடு, அங்குள்ளோருக்கு மனவளக்கலை பயிற்சிகள் முழுவதும் இலவசமாக கற்பிக்கபடுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரத்தியோகமாக இரண்டு மனவளக்கலை பயிற்றுநர்கள் நிர்மாணிக்கபட்டுள்ளார்கள்.

இது ஒரு மகத்தான திட்டம், ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் ஆளுமை திறனூக்கம் பெறும் போது அது அடுத்த கட்டத்தில் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.

உலகின் நல்லது கெட்டதிற்கு எல்லாம் காரணம் எண்ணம் தான். பெருவாரியாக நினைக்கபடும் எண்ணங்கள் எல்லாம் சமுகத்தில் பிரதிபலிக்கிறது, மேலும் நடைபெறுகிறது.
மனவளக்கலை பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எண்ணங்களின் வலிமை பிரபஞ்சத்தில் வலிமையாக பதியப்படும்.

இதன் மூலம் தீமைகள் குறைந்து மக்கள் விரும்பும் அமைதியான ஆனந்த உலகம் சாத்தியப்படும்.
உடலை விடும் போது வேதாத்ரி சொன்னார் “ நான் பிரபஞ்சத்தோடு இணைந்து இயங்கும் போது இன்னும் அதி வேகமாக செயலாற்றுவேன் என்றார்”

அவர் விண்ணுலக சேவைக்கு பொறுப்பேற்று சென்ற இந்த ஆறாவது ஆண்டுக்குள்ளாகவே மாபெரும் மைல்கற்களை தாண்டி அவரின் வாழ்வியல் முறை வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

இதோ இப்போது அவர் கையைப் பற்றியபடியே தான் நடந்துகொண்டிருக்கிறோம். குருவின் கைகளை நாம் பற்றியிருக்கும் போது எந்த தீமையும் நம்மை அணுகாது.

நாம் விரும்பும் இந்த ஆனந்தமான அமைதியான உலகத்தை நோக்கி இதோ நடந்துகொண்டிருக்கிறோம்

வாழ்க வளமுடன் !

Saturday, March 17, 2012

சத்யம் எஸ்கேப்பின் கர்ண மோட்சம்



இந்த வார ஆனந்த விகடனுக்காக காத்திருக்கிறேன்.

**************

இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் பிரமிப்பில் இருந்து விலக முடியவில்லை.......!

************

சுண்ட கஞ்சி .....சல்பேட் ......சோடா ...நொச்சிகுப்பம்.....மாம்பலம் ....மயிலாப்பூர்.....சவுகார்பேட்.....மிண்ட்.... போட் கிளப்....கானகம்....என்று சென்னைப்பட்டினத்தின் சாயலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு......

சிங்கப்பூரா...மலேசியா....லண்டனா...அமெரிக்காவா......கனடவா....என்று யோசிக்க வைக்கும் பிரமாண்டம்....

சென்னையின் எக்ஸ்பிரஸ் அவன்யூ மால்... உண்மையில் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் பட்டுப்புடவைகளில் சரசரக்கும் மாமிகளுக்கிடையே ஒரு மெக்ஸிகோ மோகினியைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

காபி ஷாப்

டாட்டு பார்லர்

கே.எப்.சி

பேஷன் ஸ்டோர்ஸ்

கீழே ஒன்று மேலே ஒன்று என்ற சறுக்கி விளையாடும் எஸ்கலவேட்டர்....

மேலே மட்டும் முழங்கால் தெரிய உடையணிந்து நடமாடும் ஹை ஃபை கேர்ள்ஸ்…..நம்ம ஊரு பிரவுன் நிறப்பெண்களுடன், பிரவுன் கண்களுடன் நடமாடும் பல பல மஞ்சள் நிறப் மங்கைகளும்….இன்னும் பிற….

இங்கிலிஷ்

இந்தி

மராத்தி

தெலுங்கு

கன்னடம்

கொஞ்சம் கொரியன்

சின்னதாக சீனம்…

இவைகளுடன் தேமதுர தமிழோசை.

இங்குள்ள சத்யம் சினிமாஸின் எஸ்கேப் திரையரங்கம் இன்னொரு மாயலோகம். இருக்கும் அஞ்சு ஸ்கீரீனில் திரையிடப்படும் இருபதுக்கும் மேற்பட்ட காட்சிகளில் ஒரு ஊறுகாய் அளவுக்கு தான் தமிழ்படம் தேறும்.

பிரமாண்டமான ஸ்கீரின்….பிரமிப்பூட்டும் ஒலியமைப்பு….பரபரப்பூட்டும் அனுபவங்கள் நிச்சயம் பார்ப்பவர்களுக்கு உண்டு. இங்கு பெரும்பாலும் தமிழ் படங்களைப் பார்ப்பது எரிச்சலூட்டும் செயல்தான்.

வாய்க்கால், வரப்பு, கத்தி, கபடா, தொப்புள் ஆம்லெட் என்று இதன் உயரிய தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் படைப்பு தமிழில் இல்லை என்பது தான் இதன் காரணம். இது ஒரு குறையும் கூட.
இந்த குறையை சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு ,அதாவது என் பெற்றோர்கள் பிறந்து சேர்ந்து என்னை உருவாக்க யத்தனித்த பல்லாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்பட போக்கியிருக்கிறது.

உண்மையில் தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்த ஒரு திரைப்படக்கூடம் அத்தகைய படத்தை

திரையிட்டு கர்ண மோட்சம் அடைந்து இருக்கிறது எனலாம்.

அந்த சிறப்பு வாய்ந்த படம் கர்ணன். வெள்ளிக்கிழமை சென்னையில் பார்த்தது. பெங்களூர் திரும்பி
இரண்டு நாட்கள் ஆகியும் பிரமிப்பு அடங்கவில்லை.

சிவாஜிகணேசன், தேவிகா, சாவித்திரி, முத்துராமன், அசோகன் நடித்து பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் 1964 –ல் வெளிவந்த அதே கர்ணன் தான்.

புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்,டி.டி.எஸ் ஒலியமைப்புடன் இயக்குனர் பி.ஆர். பந்துலுவின் நூற்றாண்டையோட்டி இப்படம் மறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறுவயது முதல் கேட்டு, டிவிக்களில் பார்த்து பழகிய படம் தான். எனது வாழ்நாளில் இப்போது தான் பிரமாண்டமான திரையில் கர்ணன் படத்தைப் பார்க்கிறேன்.

சினிமாவின் இருக்கிறோம்,சினிமாவை சுவாசிக்கிறோம்,என்று பெருமைப்பட்டு கொண்டு அலையன்ஸ் பிரான்ஸிஸ், மாக்ஸ்முல்லர் பவன் என்று உலக சினிமா கதை பேசி திரிவதை பெருமையாக நினைத்துகொண்டிருந்த எனக்கு எனது மொழியில் எனது மண்ணில் இத்தனை பிரமாண்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்நதுள்ளது முழுவதும் கவனத்தை கவராமல் போனது துரதிஷ்டமான ஒன்றுதான்.

ஒரு முழுமையான தொழில் நுட்ப படம் என்பார்களே. அந்த பெருமையை கர்ணன் படத்தை ஒப்பிடலாம். அந்த காலத்தில் பற்றாக்குறையாக கிடைத்த தொழில்நுட்பத்திலேயே இத்தனை அசத்தல் என்றால், இப்போது பி.ஆர்.பந்துலு போன்றோர் இருந்தால் எப்படியெல்லாம் அசத்தியிருப்பார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. குந்திதேவி தனக்கும் சூரியனுக்கும் ரகசியமாக பிறந்த குழந்தை தனது குலத்திற்கு இழுக்கு என்று மறைத்து கங்கையில் விடுவதிலிருந்து துவங்கி, அதே குந்தி தேவி மகனே என்று எல்லாரும் அறியும் வண்ணம் கர்ணனை ஏற்றுக்கொள்ளும் வரை ஆன் நேர்த்தியான கதையமைப்பு. திரைக்கதையின் தெளிவு சக்தி.டி.கிருஷ்ணசாமி என்பவர் தான் கதை சொல்லியாம் ! தாத்தா உங்களை உண்மையிலேயே மிஸ் பண்றோம் !

அந்தகாலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிட்செல் கேமாரவை வைத்துகொண்டு நாம் யூகிக்க முடியாத கோணங்களில் காட்சியமைப்புகளில் பிரமாண்டம் காண்பித்திருக்கிறார்கள். இப்போதைய லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் மிட்செல் கேமராக்கள் யானை கணம் கணக்கும். அதனை கொண்டு பல்வேறு கோணங்களி படம்பிடித்துள்ள விதம், அந்த காலத்து மனிதர்களின் உழைப்பே உழைப்பு தான்.

சிவாஜி கணேசன் தொடங்கி எல்லாரின் நடிப்பை பற்றி எழுதும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. அது நம்ம பார்த்திபன் சார் பாணியில் சொல்லப் போனால் சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி ஆகிவிடும். ஆனால் இன்றைய நடிகர்கள் நிச்சயம் இவர்களின் படத்தை பார்த்து பழகவேண்டும்.
லிப் டூ லிப் கிஸ் அடித்தால் தான் காதல் என்று இன்றைய தமிழ்ப்படங்கள் வழிமொழியும் சூழலில் ஒரு நளின பார்வை, ஒரு சிறு உதட்ட அசைவு, சின்னதாக உடல் மொழி.... அய்யோ சான்ஸே இல்லை !

வைட் ஆங்கிள் லென்ஸுகளில் விளையாட பெரும்பாலும் எல்லோரும் யோசிப்பார்கள். காட்சிக்குள் வரும் விஷயங்கள் நேர்த்தியாக இல்லை எனில் பிரமாண்டம் விலகிப் போய் பல் இளிக்கும்.
ஆனால் பிரமாண்டத்தை உணர்த்த நிறைய இடங்களில் வைட் ஆங்கிளில் விளையாடி இருக்கிறார்கள். கர்ணனின் அரண்மனை, துரியோதனின் அரண்மனை , போர்களம் என கலை இயக்குனர் இயக்குனருக்கு நிகராக மெனக்கட்டு இருக்கிறார்.குறிப்பாக அர்ஜுனனும், கர்ணனும் வில் வித்தையை காட்டும் காட்சியின் அரங்கை பல்வேறு இடங்களில் நிர்மாணித்து இருக்கிறார். செஞ்சிக்கோட்டையின் பின்னனியில் மிகவும் நேர்த்தியாக இயல்பு மாறாமல் அவர் அமைத்து இருக்கும் விதம், செஞ்சிகோட்டைக்காரனான எனக்கே இது நம்ம ஊரு ...என்று கண்டு பிடிக்க தாமதமாயிற்று.

பழையப் படங்களை நவீன தொழில்நுட்ப மெருகேற்றலோடு மறு வெளியீடு செய்த திவ்யா பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இதே போன்று அந்த கால பிரமாண்டங்களான நாடோடி மன்னன், வீர பாண்டிய கட்டபொம்மன், தில்லனா மோகனாம்பாள்,சிவகங்கை சீமையிலே போன்ற படங்களை காண ஆசை.

சத்யம் போன்ற அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த அரங்குகளில் இப்படங்களில் பார்க்கும் போது தான், நமது முன்னோர்கள் திரைத்துறையில் எத்தகைய சாதனைகளை செய்துள்ளார்கள் என்று நமக்கு தெரிகிறது.

இன்னொரு முக்கிய விடயம், திரையரங்கில் என்னுடம் படம் பார்த்த கூட்டத்தில் ஒரு சில வயோதிக வாலிபர்களை தவிர ஏனையோர் அனைவரும் இளைஞர் கூட்டமே.படத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அசத்தலான கைதட்டல். இறுதி காட்சிக்கும் பிறகு ஒரு நிசப்தமான அமைதியுடன் அனைவரும் கலைந்து சென்றனர். ( ஹய்யோ...இப்போது நடிகர் திலகம் நம்முடன் இல்லையே ...! )




அறுபதுகளில் வெளியான இத்திரைப்படம் நிச்சயம் அந்தக்காலத்தில் வெளியான உலக திரைப்படங்களுக்கு நிகரான ஒன்றுதான். என்ன ? சந்தைப்படுத்துதல் என்ற ஒரு வித்தையை நம்ம ஆட்கள் அறியாத சூழலில் இது உலக அரங்கைத் தொடாமல் போயிருக்கிறது என்பதே துரதிஷ்டம்.
வெறும் மொக்கை படங்களை உலக அளவில் ரிலிஸ் செய்து மகிழும் விநியோகஸ்தர்கள், இப்படங்களை மீண்டும் உலக அரங்கில் நிறுத்த முயற்சிக்க வேண்டும்இவர்கள் செய்கிறார்களோ இல்லை, இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கும் ஈழத் தமிழ்மக்கள் இதனை நிச்சயம் செய்வார்கள். ஏனெனில் இந்திய தமிழர்களை விட ஈழமக்களுக்கு தான் நடிகர் திலகம் சிவாஜியின் மதிப்பு தெரியும்.

அந்த காலத்தில் இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் என்ன மதிப்பெண் போட்டிருக்கும் என்று அறிய ஆசை. பெட்டகம் பகுதியில் அது வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனந்தவிகடனுக்காக காத்திருக்கிறேன்.

Tuesday, March 13, 2012

மனம் நிறைய மகிழ்ச்சி - பகுதி இரண்டு



மனம் என்றால் என்ன ?

மனம் ஒரு குரங்கு .

பெரும்பாலும் நாம் சீட்டியடிக்கும் விஷயம் இதுதான்.

மனம் ஒரு குரங்கு என்றால் பெருமைப்படவேண்டிய விஷயம் தான்.

குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல் மனம் ஒரீடத்தில் இருப்புக்கொள்ளாமல் அலைவதை குறிப்பிட இவ்வாறு மனம் ஒரு குரங்கு என்று சொல்வழக்கு வந்திருக்கலாம். ஆனால் உண்மையில் மரத்திற்கு மரம் தாவுவது தானே குரங்கின் இயல்பு. அது எதற்காக அவ்வாறு தாவுகிறது. இருப்பிடம்,உணவு, பாதுகாப்பு மற்றும் உடலின் சுறுசுறுப்பை தக்கவைத்துகொள்ள நோக்கமுடன் தாவும் குரங்கை மனிதனோட ஒப்பிட முடியுமா ?

குரங்கின் மனதை போல மனிதனின் மனமும் இவ்வாறான மேம்பாட நோக்கதுடனா இருக்கிறது ?

மனதிற்கு எண்ணற்ற அறிஞர்கள் பலவிதமான விளக்கங்கள் கொடுத்து இருந்தாலும், எனக்கு சுலபமாக புரிய வைத்தது அருள்தந்தை வேதாத்ரி மகரிஷியின் விளக்கம் தான்.

அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி “மனம்” ஒரு காந்தம் என்கிறார். நமது உடல் இயக்கங்களின் போதும் ஏற்படும் மின் ஆற்றலால் ஒரிடத்தில் குவிந்து அது இந்த பிரபஞ்சவெளியோடு தொடர்பு கொண்டு மனம் என்ற நிலையை உருவாக்குகிறது.

அதாவது மனம் என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது பிரபஞ்சவெளியோடு இந்த உடலை இணைக்கும் ஆற்றல். எவ்வளவு அழகான அருமையான விளக்கம்.

நான் சிந்தனை செய்வது, நான் எண்ணுவது என்னுள் மட்டும் ஏற்படும் செயல் அல்ல, அது இந்த பிரபஞ்ச வெளியோடும் தொடர்புடையது. அதாவது நான் மதுரை என்று ஒரு ஊரை நினைக்கிறேன் எனில் என் மனம் அதிவிரைவாக கடந்த முறை மதுரையை தரிசித்த நினைவுகளை கொண்டு வருவதோடு, இப்போதும் மதுரைவரை பயணித்து அங்கு மோதி பிரதிபலித்து திரும்புகிறது.
இது ஒரு வினாடியில் நிகழ்ந்து விடுகிறது. ஒரு இடத்தை மட்டுமல்ல, நீங்கள் விரும்பும், நினைக்கும் எதன் மீதும் இதுதான் நிகழ்கிறது.

நான் ஒரு பெண்ணை நினைக்கிறேன் எனில் எனக்கு அறிமுகமானவள் எனில் அவளை முன்பே நினைத்த அந்த நிகழ்ச்சியும். இப்போது அந்த பெண் இருக்கும் இடத்திற்கும் என் எண்ணம் பயணித்து அவளை சார்ந்த நினைவலைகளை எழுப்புகிறது.

சமீபத்தில் இந்த ஆற்றல் பற்றி உலக சந்தையில் சக்கைப் போடுகிறது ஒரு புத்தகம். அதன் பேர் “THE SECRET” ரோண்டா பைன் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் Law of attraction என்ற ஆற்றலைப்பற்றி விவரமாக அலசியிருக்கிறார்கள்.
Law of attraction என்பது பெரிய சமாச்சாரம் இல்லை. முகவசியத்தை தான் ஆங்கிலத்தில் இப்படி சொல்கிறார்கள்.

முகவசியம் மற்றும் ஜகவசியம் பற்றியும் நம் முன்னோர்கள் ஏகமாக சொல்லி சென்றிருக்கிறார்கள்.
இந்த முகவசியம் அதிகரிக்க வள்ளலார் சுவாமிகள் பல சிறப்பு பயிற்சிகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

முகவசியம் என்றால் என்ன ?

பேர் & லவ்லியும், பேசியலையும் பூசிக்கொண்டு பளபளவென இருப்பதா ?

முகவசியத்திற்கு அழகிற்கு சம்மந்தமே இல்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை காஞ்சிபுரத்திற்கு ஒரு திருமணவிழாவிற்கு நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தேன். இடையில் உணவிற்காக வேலூரில் நிறுத்தினோம். உணவுக்கு பின் வண்டியை ஸ்டார்ட் செய்தால் உய்ய்ய்ய்...என்று பெரும் விசில் சத்தம்.

வேறொன்றுமில்லை, ஆட்டோமெடிக் டோர் லாக்கில் உள்ள பேட்டரி தீர்ந்த்விட்டதால் theft அலாரம் ஓசை எழுப்பியது. வண்டி ஒரே இடத்தில் ஜாம் ஆகி நின்றுவிட்டது. ஒரே வழி ரிமோட்டில் உள்ள பேட்டரியை மாற்றவேண்டும். அன்று ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டுமணி.

ஒரு இரண்டு செண்டி மீட்டர் நீளமுள்ள மெல்லிய பேட்டரி. பத்துக்கடைகள் ஏறி இறங்கியும் எங்கு கிடைக்கவில்லை.

எலக்ட்ரிஷியன் கிடைத்தால் theft alaram இணைப்பை துண்டித்து அதன் மூலம் வண்டியை இயக்க முடியும் என்ற நிலை.

மெக்கானிக்கை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் வந்தார். என்ன விஷயம் என்று கேட்டார்.
”சார் ! இன்னைக்கு ஞாயிற்றுகிழமை அதனால் கடை கிடையாது, மெக்கானிக்குங்க பாதி பேரு டாஸ்மாக்குல தண்ணியை போட்டுட்டு மட்டையாகி இருப்பானுங்களே...” என்றவர் எதிர்பாரத சூழலில் “ ஒரு காரியம் பண்ணுங்க...என்னோட ரிமோட் பேட்டரியை கழற்றி தரேன்..,போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு போங்க...நான் நாளைக்கு வாங்கி போட்டுகிறேன் “

எவ்வளவு சார் ?

காசெல்லாம் வேண்டாம் சார்.

அவர் யார் என்று கூட தெரியாது.

முன்பின் பார்த்தது இல்லை.

இந்த உதவி எப்படி நிகழ்நத்து.

அவரின் மனதில் இந்த எண்ணம் எப்படி நிகழ்ந்தது.

இதன் பெயர் தான் முகவசியம்.

அதாவது அறிமுகம் இல்லாத நபர்களை கூட நம்முடன் இணைத்து நமக்கு தேவையான உதவியை பெற்று தரும்.

இதுவும் மனதின் ஒரு மந்திர சக்தி தான்.இந்த முகவசியத்தை எல்லாராலும் பெற முடியும். ஏன் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும். ஆனால் எப்போதும் நடந்திருக்காது. எப்போதாவது நடந்திருக்கும். எப்போதும் நடைபெற செய்ய என்ன செய்யவேண்டும்.

முடியுமா என்றால் ? முடியும் !

அதற்கு முகவசியத்தை அதிகரிக்கும் மனப்பயிற்சி தேவை. அது என்ன என்பதை பிறகு பார்ப்போம்.


சரி ! போதும் வளவள கொல கொல...

சீக்ரெட் புத்தகம் சொல்லும் செய்தி என்ன ?

நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் ! கேட்பதெல்லாம் கிடைக்கும் ! என்பதே.

இந்த புத்தகத்தின் விலை சுமார் 300 ரூபாய், இந்திய விலையில். இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் டிவிடியாகவும் கிடைக்கிறது. அதன் விலை சுமார் 700 ரூபாய்.

இந்த புத்தகத்தை எழுதியவர் இதனை உருவாக்க, அமெரிக்கா முழுவதும் கடும் பயணம் மேற்கொண்டு எண்ணற்ற அறிஞர்களை சந்தித்து பேசி, இந்த ரகசியத்தை தெரிந்துகொண்டதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தின் மூலம் அவர் பலகோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்.

ஆனால் சிவானந்தர் எழுதிய எண்ணம் என்ற புத்தகத்தை படித்த எவரையும் அந்த புத்தகம் கவராது.
ஏன் எனில் வெறும் முப்பது ரூபாய் விலையில் சிவானந்த எழுதிய எண்ணம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பல தகவல்களை தான் அவர் கொஞ்ச அழகியல் சேர்த்து சந்தைப் படுத்தியுள்ளார்.
பெரும்பான்மையான மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் மனோத்துவ நிபுணர்கள், இங்குள்ள பாரம்பர்ய பாரத யோகமுறைகளை அறிந்துகொண்டு சென்று அங்கு கொஞ்சம் மேற்கத்திய சுவையை ஊட்டி, தங்களது படைப்பாக, தங்களின் கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

நமது மதிப்பையும் மரியாதையும் உணராத நாம் பல ஆயிரங்கள் கொட்டி இதனை வாங்கி, சிலாக்கிக்கிறோம்.

நினைப்பதை தீர்க்கமாக எந்தவித சலனமும் இன்றி நினைத்தால், கேட்பது கிடைக்கும் ! நினைப்பது நடக்கும் !

நமது மில்களில் 500 ரூபாய்க்கு விற்கபடும் துணிமணிகள் தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு , அங்குள்ள பிராண்டுகளோடு திரும்பவும் இந்தியாவிற்கு இரண்டாயிரம், மூவாயிரம் என்ற விலையுடன் வருகிறது.

இங்கு 500 என்ற விலையை நிராகரித்த நாம் மூவாயிரம் கொடுத்து அதேப் பொருளை பெருமையுடன் வாங்கி அணிகிறோம்.

அது போன்று தான் நமது வாழ்வியல் முறைகளும் இப்போது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் சொல்லாததை

ஒளவையார் சொல்லாத தகவலை

கொன்றை வேந்தன் சொல்லாத ஒன்றை

இந்த உலகின் எந்த இலக்கியமும், யோகமுறைகளும் சொல்லவில்லை.
இந்த சீக்ரெட் புத்தகத்தைவிட மேம்பட்ட பயிற்சிமுறைகள், மிக எளிமையான வடிவங்கள் நமது யோகமுறையில் உள்ளன.

சமீபத்தில் என் நண்பரின் தாயார் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஏம்பா ! நீதான் யோகவெல்லாம் சொல்லி தர்றீயே...எனக்கு ஏனோ மனம் நிம்மதியே இல்லை என்றார் (கவனிக்கவும்...ஊருக்கு உபதேசம் செய்யும் அடியேனின் அம்மாவும் இப்படிதான் புலம்புகிறார் )உண்மையில் இந்த வயதில் அவர் கவலைப்பட வேண்டிய காரணங்களே இல்லை.

பிள்ளைகுட்டிகளுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து கொடுத்து, பேரப்பிள்ளைகளையும் பெற்றுவிட்ட சூழலில் ( எங்கம்மாவின் ஒரே கவலை நான் எப்போது கல்யாணம் செய்யபோகிறேன் என்பதே ) அவரின் கவலைப்பட காரணம் பெரிதாக ஏதுமில்லை.

ஆனாலும் அவருக்கு மனதில் சிறு அழுத்தம் இருப்பதை அவர்கள் கண்கள் காட்டிக்கொடுத்தது.
பெரும்பாலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு பழகியவர்கள், கவலை இல்லாத சூழலில் கூட, கவலைப்பட காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கவலைகளை நீங்கள் பட்டியலிட்டால். நிச்சயம் அதில் தொண்ணுறூ சதவீதம் அர்த்தமற்றது தான்.

வேதாத்ரி மகரிஷி கவலை ஒழிக்க ஒரு சுலபமான பயிற்சியை தருகிறார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக உங்கள் கவலையை எழுதுங்கள்.

பின்னர் அந்த கவலையின் காரணம், அவசியம் எப்படி தீர்க்கலாம், அதற்கான வாய்ப்புகள், கால அளவு என அனைத்தையும் அருகில் எழுதுங்கள். பேப்பரில் எழுதும்போதே பெரும்பாலான கவலைகள் அர்த்தமற்றது என்பதை உணர்வீர்கள்.

மீதமுள்ளவைகளுக்கு காலத்தின் அடிப்படையில் தீர்வு கிடைக்கும்.

சில தீர்க்கமுடியாத கவலைகள் பற்றி கவலைப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. அதனால் அவற்றை தூக்கி குப்பையில் போடுங்கள்.

கவலையை ஒழிக்க சில மனோத்துவ பயிற்சிமுறைகளும் இருக்கின்றன.

அவை என்ன என்பது பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம்....

Friday, March 9, 2012

மனம் நிறைய மகிழ்ச்சி


மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இரண்டே இரண்டு வகை தான்.

ஒன்று உங்களை தொந்தரவு செய்யாமல் வாழ்வது.

இரண்டு மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்வது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் நம்மை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தாலே போதும், அது இயல்பாகவே மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாத வாழ்வாக அமைந்துவிடும். அதனால் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒரே ஒரு வகைதான்.

அது நம்மை தொந்தரவு செய்யாமல் வாழ்வதுதான்.

நீங்கள் உங்களுக்கு தொந்தரவு தராமல் வாழ்கிறீர்களா ?

பொதுவாக நீங்கள் யாரிடம் இந்த கேள்வியை கேட்டாலும், ஏன் ஆரம்பக்காலங்களில் என்னிடம் இந்தக் கேள்வி வீசப்பட்டாலும் நான் உடனே சொல்லும் பதில் நான் மகிழ்ச்சியுடன், ஆனந்தமுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்பதே.

நான் முழு மனநிறைவோடு இந்த பதிலை சொன்னாலும், எனக்குள் சில வினாடிகளில் சில சஞ்சலங்கள் தொக்கி நிற்கும். இது இப்படி நடக்கவில்லையே ? அது அப்படி கிடைக்கவில்லையே ? இவர்களுக்கு கிடைப்பது ஏன் எனக்கு கிடைக்கவில்லை ? எனத் தொடரும்.

அத்தகைய காலக்கட்டங்களில் நான் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை. என்னை நான் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்கு விளங்கும்.ஆனால் நான் எப்படி நிறைவான வாழ்க்கை வாழ்வது போல ஒரு உடனடி பதிலை சொன்னேன்.

அதற்கு காரணம் நான் யார் என்பதை என்னால் உணரமுடியாத நிலை தான்.

நான் யார் ?

இதனை உணரதானே எண்ணற்ற ஞானிகளும், அறிஞர்களும் பல ஆண்டுகளை கடந்தார்கள். நான் யார் என்பதை அவ்வளவு சுலபமாக உணர முடியுமா ?

முடியும் !

அதற்கு ஞானியாகவோ துறவியாகவோ தேவையில்லை. நாம் பெற வேண்டியது இரண்டைப் பற்றிய அறிவு மட்டுமே. அது போதும் !

முதலாவது உடலைப் பற்றிய அறிவு.

இரண்டாவது நமது மனதைப் பற்றிய அறிவு.

மனம் சதா சர்வகாலமும் எதையோ சிந்தித்துகொண்டே இருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு எழும் எண்ணங்களில் எவையெல்லாம் அவசியம் உங்களுக்கு தேவையானவை. எவையெல்லாம் உண்மையில் பலன் தரக்கூடியவை.

உதாரணமாக....

நான் ஒரு பேரூந்துப்பயணத்தில் இருந்தேன்.

பெங்களூரின் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஸ்டாப்பில் இருந்து ஹெக்டே நகர் நோக்கியதாக இருந்தது என் பயணம். நான் ஒரு திரைக்கதை எழுதும் பணியில் முழுமையாக ஈடுபடுத்திகொண்டிருக்கும் சுழல். என் சிந்தனையில் ஒரு எண்பது சதவீதம் திரைக்கதை குறித்து நான் சிந்திப்பதாக நான் என்னை ஏமாற்றிக்கொண்டு என் சிந்தனையில் ஓடியவை இவை.

பேருந்திற்காக காத்திருக்கும் தருணத்தில் மனம்

” சே...! என்ன கூட்டம் இது “

பிகர் சூப்பரா இருக்கே !

ஆகா ! வறுத்தகடலை வாசம்...

நிலக்கடலை மலையாக குவிந்திருக்க அதில் சிறுவனாக நான் உருண்ட நினைவுகள்...

எதிரே இருக்கும் மாலில் தான் நான் Dream பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

அப்போது ஹுப்னோதெரபி படித்துகொண்டிருந்தேன்...

ஹா...புரொபசர் போன் பண்ணாரே...அவர் தங்கச்சி கல்யாணத்துக்கு போகவேண்டும்...

ஆஹா ! நான் பஸ்சுக்காக காத்திருக்கிறேன்...பக்கத்தில் தான் சுவர்ணா சேனல் ஆபிஸ்
நான் பஸ்ஸில் போவதை யாராவது பார்த்துவிட்டால்..

யாருப்பா இது பொண்ணு....அய்யோ ! ...பட்டாம் பூச்சு பறக்குதே..

தண்ணி அடிப்பான்னு நெனைக்கிறேன்... கண்ணு உள்ள வாங்கி இருக்கு...

ஆஹா ! யார்ரா இவன் தள்ளிட்டு போறான்..

எதிரே ஷாங்காய்க்கு தினசரி விமானசேவை குறித்த ஒருவிளம்பரம்.

காசு நிறைய கிடைத்தவுடன் சீனா போகவேண்டும்.

சைனாப் பொண்ணை கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும்...

யூ மீ ( என் சீனத்து சினேகிதி ) கிட்ட இருந்து மெயிலே வரலை
புதுசா பாய் பிரண்ட் புடிச்சிட்டாளோ...

இந்த பொட்டச்சிங்கள நம்ப முடியாது...

ஒரு பஸ் வருகிறது. ஓடிச்சென்று கேட்க, அது ஹெக்டே நகர் போகாது என்று திரும்பி வருகிறேன். அந்த வினாடியில் பஸ்ஸின் கண்டக்டர் ஒரு பெண்.

சின்ன வயசு டிரைவர்.

ஜன்னல் ஓரம் நான்கு பெண்கள்.

அதில் ஒரு வெள்ளைக்கோட்டுடன் டாக்டர் பெண்....

ஆம் ! சுனிதா இப்படிதான் இருப்பா...!

ஹும் ! கல்யாணம் கட்டியிருந்தா இன்னேரம் இரண்டு வயசுல ஒரு புள்ளை இருக்கும்
விட்றா அவளை !

செல்வராகவன்.

மயக்கமென்ன பாடல்.

இந்த தனுஷ் பையன் என்ன இப்படி பாப்புலர் ஆயிட்டான்.

வாங்க பாஸு ! தங்கராஜ் சார்....மோகன் சாருக்கு ஏதாவது சாப்பிட சொல்லுங்க
தனுஷின் சினேகப் புன்னகை.

மீண்டும் தனுஷுடன் பேசவேண்டும்.

இப்ப பேசனா மதிக்க மாட்டான். இந்த கன்னடப்படத்தை ஹிட் கொடுத்துவிட்டு பேசணும்...
அந்த கதைக்கு அவனை விட்டா சான்ஸ் இல்லை...

இப்ப...பண்ணா நம்ம சம்பளமும் கம்மிதான்.

நாம ஒரு ஹிட் கொடுத்து... அவன வச்சிப் பண்ணா ஒரு அஞ்சு கோடி சம்பளம் கேட்கலாம்..
கே.வி.ஆனந்த் சம்பளம் அஞ்சு கோடியாமே...

பஸ் வருகிறது.

நெரிசல்களுடன் உள்ளே ஏறுகிறேன்.

சே ! ஏசி பஸ்ஸா இருந்தா நல்லா இருக்கும் !

ஒரு முசலமான் பக்கத்தில் உட்கார...

அத்தர் வாசம் கமக்குதே ! குளிச்சிருக்க மாட்டானோ...?

என் துளுக்க தோழன்கள் நினைவுக்கு வந்தார்கள்.

அஜுஸ் அகமது...உருப்படாமல் சுத்தறான்.

அகமதுல்லா.... ஊருல ரைஸ் மில்லைப் பாத்துட்டு இருப்பான்.

ஷாஜித் அலி...லண்டல போய் செட்டிலாயிட்டான்.

லண்டன்ல முஸ்லிம்கள் அமைதியாக வாழ முடியுமா ?

இடையே பிளஸ் டூ சினேகிதி மும்தாஜ் பேகம் நாகூரில் வைத்து கையில் சர்க்கரை பொட்டலத்தை ரகசியமாக திணித்துவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது.

மும்தாஜுக்கு நம்ம மேலே லவ் இருந்திருக்குமோ...

போடா ! வெண்ரு...! இத்தனை வருஷம் கழிச்சி இப்ப பீல் பண்றே..

அவன் இன்னேரம் துபாயோ....சவுதியோ புருஷனோட செட்டில் ஆகியிருப்பா...

பத்தாம் கிளோசோட கல்யாணம் ஆகிப் போனாளே கரிமா பீவி ...அவளும் சவுதில தான் இருக்கா..

போதும் ! போதும் ! இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

நான் பேருந்திற்காக நின்றது முதல் ஹெக்டே நகர் வந்தது வரை சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டு இருக்கலாம். அதற்குள் எழுந்த ஆயிரக்கணக்கான எண்ணங்களில் நினைவில் உள்ள சிலதையே நான் பட்டியலிட்டு இருக்கிறேன்.

ஏன் இதனை தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இந்த வினாடியில் கூட எண்ணற்ற எண்ணங்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன.

சரி ! இதில் எனக்கு பயன் தரக்கூடியவை எவை ? என் கவனத்தை சிதறடிக்க கூடியவை எவை ?
இதில் எத்தனை சிந்தனைகள் எனக்கு இப்போது அவசியமானவை. இத்தனை சிந்தனைகளையும் எனக்கு ஆக்கபூர்வமானதா ? இதனை எப்படி கண்டுபிடிப்பது எப்படி ? இதற்கு மனதை அறியவேண்டும்.

மனதை அறிவதா ?

எப்படி ரொம்ப சுலபம்.

அதற்கு முன்பு உங்களின் உடலை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ?

உடலை அறிவதின் மூலம் மனதை அறிந்துகொள்வதை சுலபமாக்க முடியும்.

ஒருநாள் திடீரென கவனித்துப் பார்த்தேன். என் பாதங்களி நிறைய வெடிப்புகள். ஒரு நகத்தில் சிறு பிளவு.கொஞ்சம் நாட்களாக தொண்டைப் புண்.

ஊருக்கு உபதேசம் செய்பவன்.

யோகா பண்ணுங்கள். உடல் நலன் கிடைக்கும் என்று உரக்க சொல்பவன்.

இவன் உடலின் சில உபாதைகள்.

ஏன் !

நான் என்னதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் எனது உடலை நான் முழுவதும் உணராததால் வந்த வினை.

உடலையும் மனதையும் உணர பெரும்பாடெல்லாம் படத்தேவையில்லை. ஒரு சிறு பயிற்சி தினம் செய்தாலே போதும். இரண்டும் உங்களுக்கு பிடிப்பட்டுவிடும்.

உடலை அறிவது சுலபம்.

நீங்கள் தீவிர உடபயிற்சியாளராக இருக்கலாம் அல்லது பயிற்சியே செய்யாதவராக கூட இருக்கலாம். தூங்கச் செல்லும் முன்பு இதனை செய்யுங்கள்.

நன்றாக வசதியாக மல்லாந்துப் படுத்துக்கொள்ளுங்கள்.

மூச்சை மிதமாக விடுங்கள்.

இப்போது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு பகுதியாக நினைவை கொண்டு வாருங்கள். அந்த பகுதிகளை உங்களின் மனக்கண்ணால் பாருங்கள்.

பாதம்...

கணுக்கால்

முழங்கால்

மூட்டுப் பகுதி

தொடை

படிபடியாக அப்படியே மனக்கண் முன்பு கொண்டு வாருங்கள்.

இறுதியாக உச்சந்தலையில் சென்று முடியுங்கள்.

இப்போது என்ன உணர்கிறீர்கள் ?

உடலில் ஒரு புத்தணர்வு பொங்கும். சில நேரங்களில் தூக்கம் வந்தால் தூங்கிவிடுவீர்கள். ஆனால் தூக்கம் கலைந்து எழும்போது பளிச்சென்று எழுந்திருப்பீர்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக சிந்திக்கும் போது, அந்தப் பகுதியில் குறைபாடுகள் இருந்தால் உடனே உணர்ந்துகொள்ள முடியும்.பெரும்பாலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால், அத்தகைய குறைபாடுகள் தானே விலகி விடும்.

அப்படி சரியாகவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சிகிச்சை.

இந்த பயிற்சியை முறையாக செய்தால் ஒரு பதினைந்து நிமிடத்தில் சிறப்பான பலனைத் தரும்.
இது ஒன்றும் புதிய அரிய பயிற்சி இல்லை. நம் உடலில் தட்பவெட்ப நிலையை சரி செய்ய, பல்வேறு யோகா மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் சொல்லித்தரப்படுவதுதான்.


அங்கு போய் காசு கட்டி செய்வதை நீங்களே செய்து பாருங்களேன்.

மிச்சமானது செலவு ! ஆரோக்கியம் புது வரவு !

உடலை அறிய இந்த சிறிய பயிற்சியில் ஆரம்பியுங்கள். இன்னும் பல பயிற்சிகளை பிறகு பார்ப்போம்.

சரி மனதை அறிவது எப்படி ?

அடுத்த பதிவில் கொஞ்சம் விரிவாப் பார்ப்போம்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...