Friday, January 17, 2020

சென்னை புத்தக கண்காட்சி - 2020 - 3

சென்னை எனக்கு பரிச்சையமான காலத்திலேயே சரவணனும் எனக்கு பரிச்சையமாகிவிட்டான். நானும் அவனும் தினந்தோறும் பார்த்துகொண்டிருக்கமாட்டோம். அவன் ஒரு பக்கம் ஓடிகொண்டிருப்பேன். நான் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருப்பேன். இருவரும் சந்திக்கும் போது நகையும் சதையுமாக எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பது போன்றே ஒரு இடைவெளியற்ற தன்மையுடன் எங்களுக்குள்ளான உணர்வுகள் இருக்கும்.
அதே போல் சரவணனை பெரும் கூட்டத்தில் நிறுத்தி வைத்தாலும் தனக்கான தனித்துவத்துடன் தெரிவான். எந்த விஷயத்திலும் அவனின் பார்வை புதிதாகவே இருக்க்கும். நம்மை சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பதில் சரவணனுக்கு நிகர் சரவணனே !
அவனின் ஐந்து முதலைகளின் கதை இது வரை தமிழ்நாட்டில் யாருமே யோசித்து பார்க்காத களம்.
ரோலாக்ஸ் வாட்சி அரசியல் களத்தின் சாணக்கியர்களையும் சதிகாரர்களையும் பேசியது
லகுடு மூலம் சூது வாது பேசியவன் சுபிட்ச முருகனில் ஏலேய் ! எனக்கு ஆன்மீகம்னா என்னனு தெரியும்லே என்று உரக்க கூவியிருக்கிறான்.
வழக்கமாக எல்லோரும் இந்த வருஷம் என்ன புக் போட்டிருக்கே என்று தான் கேட்பார்கள். சரவணனிடம் மச்சி ! இந்த மாசம் என்ன புத்தகம் என்று தாராளமாக கேட்களாம்.
பரபரவென பதிமூன்று நூல்கள் எழுதிவிட்டான்.
அத்தனையும் ஒன்றுகொன்று மாறுபட்டது
சுவைமிகு உணவகத்தில் நீங்கள் ஒரு பபே விருந்துக்கு சென்றால் எதை விடுவது எதை சாப்பிடுவது என்று ஒரு தடுமாற்றம் வருமே. அது போன்று ருசிகாட்டும் எழுத்து. வளவள கொழ கொழ இல்லை.
புத்தகத்தை எடுத்தால் ( Kindle கூட ) படித்துவிட்டு வைக்க செய்யும் லாவகமான வரிகள் .
சரவணின் latest வையிலைவேற் காளை. முப்பது கட்டுரைகள் அடங்கிய வாழ்வியல் தொகுப்பு. ஒவ்வொன்று ஒரு புது மனிதரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவர்கள் அனைவரும் நமக்கிடையே நம்முடன் உலாவும் ஜீவன்கள்தான். ஆனால் நாம் அவர்களை எத்தனை தூரம் கவனித்து இருப்போம் என்பது ஐயம்தான். அவர்களின் வாழ்வியலை கூர்மையாக கவனித்து பதிவு செய்திருப்பது சிறப்பு. இது அனைவருக்குமானது எனினும் சினிமா பயில்பவர்களுக்கு கூடுதலாக உதவுகூடியது
திரைக்கதையில் Character வடிவமைப்பு அதாவது கதாபாத்திர வடிவமைப்பு மிக அவசியம். தமிழ்படங்களில் பாதிப்படங்களில் கதாநாயகி வெள்ளைக்கோட்டுடன் டாக்டராக வருவதும், நாயகன் பொறுக்கி தின்னுகொண்டு அவளை துரத்த செய்து காதலிப்பதும் தான் அதிக பட்ச கதாபாத்திர அமைப்பு.
"வையிலைவேற் காளை " கதாபாத்திரங்களை பற்றி பேசுகிறது.
இதை படித்து முடிக்கும் போது உங்களுக்கு பிடித்த நீங்கள் பார்த்த உங்களை பாதித்த பாத்திரங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களை உங்கள் படைப்புக்கு எப்படி Mapping செய்யலாம் என்பது உங்களுக்கு இயல்பாகவே தெரியும்.
வையிலைவேற் காளை நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று. Pure Cinema வின் இன்னொரு அங்கமான கருப்பு பதிப்பகத்தின் வெளியீடு. Pure Cinema அரங்கம் மற்றும் அனைத்து அரங்கங்களிலும் கிடைக்கிறது.
அலைந்து திரிந்து கஷ்டப்படாமல் எளிதில் பெற
அரங்கம் எண் : 198
நாதன் பதிப்பகம்
10% சிறப்பு கழிவு உண்டு

சென்னை புத்க்க கண்காட்சி - 2020 - 2

நீங்கள் திரைப்பட ரசிகனாகவும் இருக்கலாம் அல்லது திரைப்பட படைப்பாளியாகவும் இருக்கலாம். சினிமாவின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம். வரலாறு என்பது பழங்கதை அல்ல அது வளர்ந்த பெரும் ஆலமரத்தின் வேர் போன்றது. உங்கள் வேர் எத்தனை உறுதியாக இருக்கிறது என்பதை நீங்கள் உணரும் போது உங்களால் உச்சக்கட்ட உற்சாகமுடன் மேலே மேலே உயர முடியும்.
உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா என மூன்று நிலை சினிமா குறித்த தெளிவான புரிதல் தரும் முழுமையான நூல்கள்.
நாதன் பதிப்பகம் ஸ்டால் எண் : 198
1. தமிழ் சினிமா வரலாறு 1916 முதல் 1941 வரை
தமிழ் சினிமாவின் தோற்றம் – வளர்ச்சி – வெற்றிகொடி நாட்டிய வரலாறு
2. உலக சினிமா வரலாறு – பாகம் 1
3. உலக சினிமா வரலாறு – பாகம் 2
4. உலக சினிமா வரலாறு – பாகம் 3
5. உலக குறும்படங்கள்
6. சிறுவர் சினிமா
7. எப்படி ஜெயித்தேன்
புரட்சித்தலைவர் , மக்கள் திலகம் என்று உலக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் நாயகனாக மாறினார் என்பதை விளக்கும் வெற்றி சூத்திரம்
8. காட்பாதர் – திரைக்கதை தமிழில்
இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக உலகின் Don கதைகள் எல்லாவற்றிற்கும் மாஸ்டர் பீஸாக இருக்கும் திரைக்கதை
9. ரிதுபர்னோ கோஷ்
சத்யஜித்ரே பிறகான வங்கமொழி சினிமாவில் பெரும் ஆளுமையாக திகழ்ந்த மெய்நிகர் திரைக்கலைஞன் ரிதுபர்னோகோஷ் திரைப்படங்கள் குறித்த முழுமையான பதிவு
அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்
நாதன் பதிப்பகம்
ஸ்டால் எண் : 198

சென்னை புத்தக கண்காட்சி 2020 - 1

நேற்று இரண்டு சின்ன தம்பிகள் நாதன் அரங்கமான எண் 198 ற்கு வந்தார்கள்.சின்ன லிஸ்டை வைத்துகொண்டு இரண்டு மூன்று சினிமா சார்ந்த நூல்களை எடுத்தவர்கள் நேராக காட்பாதர் நூல் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தார்கள்.ஒருவன் புத்தகத்தை உற்றுப்பார்த்த்து சிறிது யோசித்தவன் அதனை எடுத்து Left, Right, Straight என்று திருப்பினான். அடுத்து அருகில் இருப்பவனிடம் கிசுகிசுவென ஏதோ பேசினான். அந்த பொடியனும் புத்தகத்தை வாங்கி Left Right Straight என திருப்பினான். சற்று இடைவெளியில் நின்றுகொண்டிருந்த எனக்கு சுவரஸ்யம் கூடியது. என்ன பேசப்போகிறார்கள் என்று கேட்க சற்று அருகில் சென்று நின்றேன்.
"நெட்லேயே தமிழ் வெர்ஷன் இருக்கு மச்சி..."
" சாரு..இந்த புத்தகத்தை வாங்கி படிக்க சொன்னாருடா....!"
( அவன் சாரு என்று சொன்னது அவன் வாத்தியாரை )
" ஆனா...தமிழ்லேயே படம் கிடைக்கிறப்போ...இது வேஸ்ட்டுடா....நெட்ல பார்த்து அப்படியே டைப் பண்ணியிருப்பாங்க.....அதுக்கு நாம் படத்தையே டவுன் லோட் செய்து பார்த்துடலாம்...."
முதலாமவன் புத்தகத்தை நேராக ஷெல்பில் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டான். நேராக பில் கவுண்டருக்கு சென்று எடுத்த மூன்று புத்தகங்களை மட்டும் பில் போட சொன்னான். ஒரு பத்து வினாடி இருக்கும் என்ன நினைத்தானோ மீண்டும் ஷெல்ப் பக்கத்தில் வந்து காட்பாதர் புத்தகத்தை எடுத்துகொண்டான்.
" ஹேய்...இதையும் வாங்கிடலாம்டா......சார் சொன்னா சரியா இருக்கும்....அப்படியெல்லாம் தமிழ் வெர்ஷனை காப்பி செய்து எழுதிந்தா சார் சொல்லியிருக்கமாட்டார்......" என்றவன் அடுத்து ஐந்து நிமிடம் மீண்டும் Left Right Straight என்று புரட்டினான் 
அவன் என்ன செய்யப்போகிறான் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்தேன். ( அடையாளமற்று இருப்பது எத்தனை வசதியாக இருக்கிறது ?!!! )
மீண்டும் இருவரும் கிசுகிசுவென விவாதித்தனர் . இப்பொழுது முன்னவன் சொன்ன ஏதோ ஒரு தகவலில் இரண்டாமவனுக்கும் பரம திருப்தி . ( புத்தகத்தில் ஏதோ அவனுக்கு பிடித்தமான ஒரு பாயிண்டை கண்டுபிடித்துவிட்டான் )
மற்ற மூன்று புத்தகங்களோடு காட்பாதர் பில்லிங் கவுண்டருக்கு நகர்ந்தது. 
காட்பாதரின் வாழ்க்கை போன்றே அந்த நூலின் நகர்வும் பல திருப்பங்களுடன் செல்கிறது. 2015 ஆம் ஆண்டின் உலக தமிழராய்ச்சி நிறுவனத்தின் "சிறந்த மொழிபொயர்ப்பு" க்கான விருது பெற்ற நூல் " காட்பாதர் "
இன்று வரை உலகின் பல திரைக்கதைகளுக்கு Blue Print காட்பாதர் திரைப்படம்தான். மூலத்தின் சாரம் துளியும் குறையாமல் மொழியாக்கம் செய்யப்பட்டது. படித்தவர்கள் படத்தின் பரப்பரப்பு சற்றும் குறையாமல் ஒரு நாவலை படிக்கும் மகத்தான அனுபவம் தருகிறது என்று சொல்கிறார்கள். அதே நேரம் திரைக்கதையின் வடிவத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்கிறார்கள். மனம் நிறைய மகிழ்ச்சியும் நன்றியும் !
பெரும்பாலும் இந்நூலை பரிந்துரைப்பவர்கள் ஊடகபள்ளிகளின் ஆசிரியர்கள் பெருமக்கள். அனைவருக்கும் நன்றி !
காட்பாதர் நூல் இரண்டாம் பதிப்பு விற்பனையில்
அரங்க எண் : 198
நாதன் பதிப்பகம்

Monday, January 13, 2020

வாழ்த்துவோம் வளம் பெறுவோம் !

பிரபஞ்சம் பேசுகிறது  - பகுதி 10
ராஜ்மோகன்


தொடக்கம் என்றால் முடிவு என்று நிச்சயம் உண்டு.

இந்த தொடர்  இவ்வாரத்துடன் முடிவைகிறது. ஆனால் நமக்கு உள்ளும்  புறமும் இயங்கிக்கொண்டிருக்கும் பிரபஞ்ச நிலைக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அது அண்டசராசரமாக எங்கும் விரிவடைந்த நிலையில் எப்பொழுதும் நிலைக்கொண்டிருக்கிறது. இதில் பயணிகளாக மனித உருவெடுத்து நாம் வருகிறோம் செல்கிறோம் வருகிறோம். நமது வருகையும் புறப்பாடும் இனிமையாக இருப்பதும் நமது வாழ்க்கை பயணத்தின் முழுமையும்,  நாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்தான் என்பதை உணர்ந்துகொள்ளுவதில் இருக்கிறது 

முழுமையின் முதல் நிலை   பேரன்பு ! எல்லா உயிர்களின் மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துவது எப்பொழுதும் நம்மை பிரபஞ்சத்தோடு இணைப்பில் வைத்திருக்கும். மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிருக்கிறதா " நிற்பதுவே நடப்பதுவே " இன்னொருமுறை கேளுங்கள். நாம் எப்படி பிரபஞ்சத்தின் அங்கமாக பரிமாணிக்கிறோம் என்பதை தெய்வீகத்தன்மையுடன் விவரித்திருப்பார் பாரதியார். இத்தனை அழகான வாழ்க்கையில் ஏன் ஏமாற்றங்களும், ஏக்கங்களும், துன்பங்களும் ? நமது மனதை சஞ்சலத்தில் விடுவதால் நிகழும் பிரதிபலிப்புகளே தவிர வேறு ஏதுமில்லை.

நமது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு அனுபவமும் நமது உடல் மற்றும் மன இயக்கத்தின் பிரதிபலிப்புகளே என்பதை நாம் உணரவேண்டும். 

ஒருவர் வாழ்க்கை அமைதியும் முழுமையும் இருக்கிறது எனில் அதற்கும் அவர்தான் பொறுப்பு. இன்னொருவர் வாழ்க்கையில் துன்பமும் முழுமையற்ற நிலை தொடர்கிறது எனில் அதற்கும் அவர் தான் பொறுப்பு.  

உங்களுக்குள் ஏற்படும் முரண்பாடும் இயற்கைக்கு பொருந்தா நிலையும் தான் இதனை உங்களுக்கு வழங்குகிறது என்கிற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். 

இதனை மாற்றி அமைப்பதின் மூலம் இந்த தன்மையை முழுவதும் நீக்குவதின் மூலம் நமக்குள் ஒரு சமநிலையை முழுமையை அடையவேண்டும்.மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்ப்போம். 

அரிது அரிது மானிடராக பிறப்பது அரிது என்றார் ஒளவையார். இத்தனை அரிதான மானிடப்பிறவி ஏன் துன்பமுடன் தொடரவேண்டும் ? எண்ணத்திலும் செயலிலும் ஏதேனும் தவறு இருப்பின் அதுவே Cause and Effect ஆக துன்பமாக கொண்டு வருகிறது. நமது  நெகடிவ் சிந்தனைகளே நமது துன்பத்திற்கு காரணமாக இருக்கிறது .

பேராசை - நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் உங்கள் ஆசை உங்களுக்கோ இன்னொருவருக்கோ துன்பம் விளைவிக்கும் எனில் அது பேராசை. ஒரு சைக்கிள் வைத்திருப்பவன் சொகுசு காருக்கு ஆசைப்படுவது பேராசை அல்ல. ஆனால் அதனை அடையவேண்டும் என்ற அவன் ஆவல் அவன் மனதில் துன்பமும் அழுத்தமும் தருகிறது எனில் அது பேராசை.அந்த எண்ணம் இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரை துன்புறத்தி அல்லது அவர் மீது ஒரு பொறாமை எண்ணத்துடன் ஏற்பட்டாலும் அது பேராசைதான்.

கடுஞ்சினம் - கோபப்படுவது எல்லா நிலையிலும் துன்பத்தை தரும். கோபம் உங்கள் உடல் நலனை பாதிக்கிறது. வெளியில் உறவை பாதிக்கிறது. அதே நேரம் எதாவது ஒன்றின் மீது கடுமையான பற்றுகொண்டிருப்பதும் ஒருவித மனோநிலை மாறுபாடுதான்.  ஆண் பெண் நட்புநலன் உயிரினங்களுக்கு பொதுவானது. அது மனித நாகரீகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்குமுறையை வழங்குகிறது . இந்த ஒழுங்குமுறை மீறும்போதும் அது வினையாகும். 

இறைவன் என்பவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டால் "அவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்" என்று பட்டென்று பதில் சொல்வோம். இறைவன் எல்லாவற்றிலும் இருக்கும் பொழுது இந்த பிரபஞ்த்தில் எல்லாமும் போற்றுதலுக்குரியதாகிறது. இங்கு உயர்வு தாழ்வு என்ற நிலை எங்கும் ஏற்பட வாய்ப்பில்லை . அப்படி இருக்க நமது மனநிலையில் ஏற்படும் உயர்வு தாழ்வு ஏற்றநிலையும் நம்மை பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிற்பதை தடுக்கிறது.

அடுத்த முக்கியமான ஒன்று நமக்கு நிகழும் துன்பங்களை மறத்தல் நமக்கு துன்பம் இழைத்தோரை மன்னித்தல். உலக இயக்கங்கள் முழுவதுமே பிரபஞ்ச இயக்கத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகிறது என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம். ஒருவர் நமக்கு துன்பம் இழைக்கிறார் என்று வைத்துகொள்வோம் . அதுவும் பிரபஞ்ச செயல்தானே ?  பிரபஞ்சம் தவறு செய்யுமா ? என்று கேட்டால். அந்த துன்பசெயல் முன்பே நாம் பார்த்த செயல்விளைவு தத்துவத்தின் பிரதிபலிப்புதான். எங்கோ ? எப்பொழுதோ ? நாம் செய்த ஒரு வினை இப்பொழுது இன்னொரு வடிவில் இன்னொருவர் மூலம் நமக்கு திரும்பி வருகிறது என்பது தான் உண்மை. அதாவது நீங்கள் செய்த பிழையின் கணக்கு இச்செயலில் தீர்க்கப்படுகிறது. எனவே துன்பம் இழைப்பவர் உங்கள் வினையை போக்க உதவுகிறார். அவர் செயலுக்கு அவர் மீது வருந்தி அவரை பழிவாங்க வஞ்சம் கொள்ளாமல் அவரை வாழ்த்துவதும் அவருக்கு நன்றி சொல்வதும் அந்த துன்பத்தில் இருந்து விடுபட முயல்வதும் நாம் செய்யவேண்டிய முக்கிய செயல். 

இதனை ஒரு பேராசிரியர் சத்யமூர்த்தி மிக அழகாக சொல்வார். உடலில் காயம்பட்டால் அதனை சரிசெய்ய ATS எனப்படும் Anti Tenus Serum  என்ற ஆண்டிபயோடிக் அளிப்பதை போல வாழ்க்கையில் துன்பங்கள் நீங்க Adjustment - Tolerence - Sacrifice எனப்படும் ATS அவசியம். அதாவது விட்டுக்கொடுத்து வாழ்தல் ,சகிப்புத்தன்மை , தியாகமனப்பான்மை இது இருந்தால் வாழ்க்கையில் துன்பமே இருக்காது என்பார்.

இந்த நூற்றாண்டில் ஆன்மீகம் என்பது மிகவும் நவீனமாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது. பாமரர்களின் தத்துவஞானி என்று  அழைக்கப்பட்ட வேதாத்திரி வாழ்வியல் முழுமையடைய இரண்டே இரண்டு நெறிகளை சொல்கிறார் . " நான் எனது வாழ்நாளில் பிறிதொரு உயிருக்கு உடலாலோ மனதாலோ துன்பம் தரமாட்டேன். துன்பப்ப்டும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்" பாருங்கள் வாழ்க்கை எத்தனை எளிமையாக இனிதாக மாறுகிறது.

எத்தனை துன்பங்கள் இடர்பாடுகள் வந்தாலும் இந்த இரண்டு ஒழுக்க கோட்பாடுகளை விடாமல் பின்பற்றுங்கள் . எத்தகையை துன்ப நிலையும் மாறும் . அடுத்து இரண்டு முக்கிய விஷயங்கள். இன்று மேற்கத்திய நாடுகளின் எல்லா பயிற்சிகளும் வலியுறுத்தும் விஷயம் இது.

ஒன்று நன்றி பாராட்டுதல்.

உங்கள் வாழ்க்கையில் மிக மிக சின்னதாக ஒரு உதவி செய்தாலும் உடனே அவருக்கு நன்றியை தெரிவியுங்கள். கணவன் மனைவி வாழ்க்கையில் என்றும் இனிமையாக இருக்க உங்கள் வாழ்க்கை துணைக்கு எத்தனை நன்றிகள் சொல்கிறீர்களோ அத்தனை நெருக்கமாக ரொமன்ஸ் பொங்கும். உங்கள் பிள்ளைகள் சின்னதாக ஒரு செயலை செய்தால் கூட அதற்கு நன்றி தெரிவித்து  வந்தீர்கள் எனில் அவர்களிடம் பிற குணநலன்கள் இயல்பாகவே மேம்படும். நல்ல அறிவார்ந்த சாதனையாளர்களாக அவர்கள் உருவாவார்கள். உங்களுக்கு ஒருவர் துன்பம் இழைத்தால் கூட அந்த நேரத்தில் நிச்சயம் ஒரு கோபமோ வருத்தமோ எழுவது மனித இயல்பு. உடனடியாக அதற்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்தாமல் இருக்க இந்த நன்றி பாராட்டுதல் உதவும். நன்றி ! ஆனால் நீங்கள் செய்த செயல் எனக்கு இப்படி ஒரு பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்று பொறுமையாக சொல்லுங்கள் எதிராளி தடுமாறிவிடுவான் . அவனை நீங்கள் பழிவாங்கி கடிந்து திருத்துவதின் விட இது மேலான நல்ல விளைவுகளை தரும். ஆங்கிலத்தில் Rapport Building என்றொரு வார்த்தையை சொல்வார்கள்.அதாவது இணக்கத்தை உருவாக்கிகொள்ளுதல். இந்த  நன்றி என்ற ஒரு வார்த்தை உயிருள்ள உயிரற்ற பொருட்களிடம் கூட ஒரு இணக்கத்தை உருவாக்கிதரும். இயற்கையை உங்கள் பக்கம் வளைத்து தரும். எனவே எப்பொழுதும் நன்றி பாராட்டுதலை மறக்காமல் செய்வோம்.

அடுத்து எப்பொழுதும் நல்ல வார்த்தைகளை உபயோகிப்பது . அதாவது வாழ்த்துச் சொற்களை மட்டுமே பயன்படுத்துவது. இந்த பிரபஞ்சம் ஒரு காந்த புலன் என்பதை பார்த்தோம். நமது சொல்லும் செயலும் அப்படியே பதிந்து அதுவே மீண்டும் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது என்பதையும் பார்த்தோம். நீங்கள் சதாநேரமும் மோசமான எண்ணத்தையோ மோசமான சொற்களையோ பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அது அப்படியே பிரபஞ்சத்தில் பதியும். உங்களைப் போன்றே கோடிக்கணக்கானோர் அதே போன்று சிந்தனையும் செயலையும் செய்தால் இதே போன்று எல்லோருடைய நெகடிவ் எண்ணங்களும் பிரபஞ்சத்தில் பதிந்து நல்ல பதிவுகளைவிட நெகடிவ் பதிவுகளின் வலிமை அதிகரிக்கும் பொழுது எங்கும் மோசமான விளைவுகளே நிகழும் . எனவே தான் காலை மாலை ஏன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றனர்  நமது மூதாதையர் . நாம் பிரார்த்தனை செய்யும் பொழுதும் ஓரளவு நல்ல மன அலைச்சூழலில் நல்ல எண்ணங்களை விதைக்கிறோம். இதனால் நல்ல நிகழ்வுகள் அதிகரிக்கவேண்டும் என்ற அவர்களின் தொலைநோக்கு பார்வைதான்.
தினம் காலையில் கண்விழித்த பின்னர் இரவு உறங்கப்போகும் முன்பு அமைதியாக அப்படியே சம்மணமிட்டு அமருங்கள். ஒரு இரண்டு நிமிடம் மூச்சை அமைதியாக கவனித்துவிட்டு அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை அசைப்பொடுங்கள். ஏதேனும் நெகடிவ் சிந்தனைகள் இருந்தால் அதனை அப்படியே மன்னித்து கரைத்துவிடுங்கள்.அன்றைய நிகழ்வுக்கு எல்லோருக்கும் பாராபட்சம் இன்றி நன்றி சொல்லுங்கள். அடுத்து உங்கள் குடும்ப உறுப்பினரில் ஆரம்பித்து உங்கள் வாழ்க்கையில் வரும் வந்து சென்ற அனைவருக்கும் வாழ்த்து. ஒவ்வொருமுறையும் சந்திக்கும் நபராக இருக்கலாம் ஒரே ஒரு முறை சந்தித்த நபராக இருக்கலாம் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ உங்களுக்கு பிடித்தமான வாசகங்களில் நீங்களே ஒரு வாழ்த்து செய்தியை உருவாக்கி தினம் தோறும் வாழ்த்தி வாருங்கள். இப்பொழுது நீங்கள் போடுவது விதை. அது முளைத்து தழைத்து மரமாக வளர்ந்து உங்கள் வாழ்க்கை பயணம் முழுவதும் அமைதியெனும்  மலரையும் மணத்தையும் தந்துகொண்டே இருக்கும். நீங்களே பிரபஞ்சம் ...நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதும் நீங்களே.... உங்களை சுற்றி எப்பொழுதும் அமைதியையும் ஆனந்தநிலையையும் விதைத்துகொண்டே செல்லுங்கள்.... இனி எல்லாம் இன்பமயம் !!!

சர்வதேச திரைப்படவிழாவின் பொன்விழா நாயகன் ரஜினி


- ராஜ்மோகன்
20/11/2019 ல் எழுதி கல்கி வார இதழில் வெளியான கட்டுரை


சிவாஜிராவ் கெய்க்வாட்  என்ற இளைஞன் ரஜினிகாந்த்  என்று பெயர் மாற்றி இந்திய சினிமாவின் காந்தமாக மையம்கொள்ளத் தொடங்கி இவ்வருடத்துடன் 44 வருடங்கள் நிறைவடைகின்றன. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி 68 வயதை தொடும் ரஜினிகாந்த் தனது வாழ்நாளில் 44 வருடங்களை கலைத்துறைக்காக அர்பணித்து இருக்கிறார். இந்தியாவில் இன்றும் சூப்பர் ஸ்டார் என்றாலும் வசூல் சக்கரவர்த்தி என்றாலும் அது ரஜினிகாந்த மட்டுமே.
ஆறு முறை தமிழக அரசின் விருது, கலைமாமணி விருது, இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய  விருதுகளை பெற்றுள்ள ரஜினிக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழா 2014 ஆம் ஆண்டு நூற்றாண்டு நாயகன் விருதும் தந்து கவுரவித்துள்ளது. இவ்வாண்டு அதே இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா கொண்டாடவுள்ள நிலையில்  ரஜினிக்கு " பொன்விழா நாயகன் விருதும் " அறிவித்துள்ளது விழா கமிட்டி. இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொருபுறம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் தாமரையை மலரசெய்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு செயல்பட்டு வரும் பாஜக அரசு தமிழர்களை குளிர்விக்கவும், ரஜினி ரசிகர்களை கவர்ந்து கால் பதிக்கவும், மறைமுகமாக ரஜினிகாந்தை பாஜக பக்கம் இழுக்கவும் வீசும் வலை என்ற கிசுகிசுப்பு கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறது. இந்த சர்ச்சையை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் ரஜினிக்கு இவ்விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றுதான்.
  ரஜினியின் திரைப்பயணம் என்பது அத்தனை சுலபமான ஒன்றல்ல. ஒன்பது வயதில் தாயை இழந்து பாசத்திற்காக ஏங்கி, என்ன படிப்பது என்று தெரியாமல் தட்டி தடுமாறி படித்து , படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கார்பெண்டர், பெயிண்டர் என்று கிடைத்தபணியை செய்து பொழுதுபோக்குக்காக நாடகம் போட்டு, பின்னர் பஸ் கண்டக்டர் ஆகி இப்படி அவரின் இருபது வயதிற்குள்ளாகவே அறுபது வயதின் அனுபவமும் துன்பத்தையும் அனுபவித்தவர் ரஜினிகாந்த். இந்த நிலையிலும் அவருக்கு கைகொடுத்தது அவரின் ஆன்மீக நம்பிக்கை. அவர் நம்பும் கடவுள் புண்ணியத்தால் சென்னை திரைப்பட பயிற்சி கல்லூரி பற்றி அறிந்து , வீட்டின் எதிர்ப்பை மீறி நண்பன் ராஜ்பகதூரின் உதவியும் 1973 ல் நடிப்பு பயிற்சியில் சேர்ந்து 1975ல் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் பார்வையில் பட்டு சிறு வேடத்தில் அறிமுகமாகி இந்த 44 வருட திரைவாழ்க்கைப் பயணத்தில் சினிமாவின் தொழில்நுட்பத்தோடு போட்டிபோட்டுகொண்டு வளர்ந்தவர் ரஜினிகாந்த். 
கருப்புவெள்ளை காலம் முதல் இன்றை நவீன தொழில்நுட்பமான 3D நுட்பம் வரை எல்லாவற்றிலும் கொண்டாடப்பட்ட ஒரே நாயகன் ரஜினிதான். இந்தியா மட்டுமல்ல சீனா, ஜப்பான் என்று தமிழ் மொழி தெரியாத நாட்டிலும் டப் செய்யப்படாமல் ஓடும் ஒரு இந்திய நடிகனின் படம் ஒன்று உண்டு என்றால் அது ரஜின்காந்தின் படமாகதான் இருக்கும். இன்று இந்திய சினிமா சந்தை உலகளாவிய ஹாலிவுட் சந்தைக்கு நிகராக உயர்ந்துகொண்டிருக்கிறது, அதாவது ஒன்பது ஏரியாவாக பிரித்து நூறு பிரிண்ட் போட்டு நூறு நாட்கள் ஓட்டும் காலம் மலையேறி ஒரே நாளில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் பிரிண்ட் போட்டு மூன்றே நாட்களில் நூறு கோடியை வசூலிக்கும் பாக்ஸ் ஆப் ஹிட் வியூகத்தை இந்திய சந்தையில் தொடங்கிவைத்தவரும் ரஜினிகாந்த மட்டும். " யானை விழுந்தா எந்திரிக்க நேரம் ஆனால் குதிரை விழுந்தா உடனே எந்திரிச்சுடும் " ரஜினிகாந்த் அடிக்கடி குறிப்பிடும் உவமை. இது உண்மையில் அவருக்கு பொருந்தகூடியது. இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ரஜினி ஒவ்வொரு முறை எழும் போதும்  புதிய உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார். 
சிறந்த நடிகனாக எல்லாவிதமான பரிமாணங்களையும் வெளிப்படுத்த கூடிய இவரை சுற்று 1996 முதல் சூழ்ந்துள்ள அரசியல் பிம்பங்கள் இன்றும் புரியாத புதிராக இருக்கின்றன. நான் வருவேன் ஆனால் எப்ப வருவேன் என்பது தெரியாது என்ற இவரின் அரசியல் நிலை ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 23 வருடங்களாக தமிழர்களையும் அவரின் ரசிகர்களையும் தலையை பிய்த்துகொள்ள செய்துவருகிறது. அரசியலில் இப்படிப்பட்ட நிலையில் உள்ள இவரை வைத்துதான் பாஜக தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திகொள்ளப்பார்க்கிறது. 
ஆண்டுதோறும் ஒரு மூத்த கலைஞருக்கு இந்த விருதை கொடுப்பது வழக்கம். ஆனால் அதனை கணக்கில்கொண்டால் இந்தியாவில் ரஜினிக்கும் ஏன் அமிதாப்பிற்கும் மூத்தவர் கமலஹாசன் . களத்தூர் கண்ணமாவில் இருந்து கணக்கிட்டால் இது கமலுக்கு 60வது வருடம். அவரை ஏன் பாஜக கணக்கில் எடுக்கவில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதல்ல.
கலை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.  அரசியலுக்கு அப்பாற்பட்டு ரஜினி இந்த விருதுக்கு தகுதியானவர்தான். எனினும் இதன் ஊடே அரசியல் இருப்பது உண்மையெனில் அது கலைக்கு நல்லதல்ல. அது ரஜினிகாந்திற்கே தர்மசங்கடத்தை உருவாக்கும்.

உள்ளம் எனும் கோயில்

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 9
ராஜ்மோகன்

உள்ளம் எனும் கோயில்

அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி.

இந்த தொடரை படித்துவிட்டு தங்களின் மகிழ்ச்சியையும் ஆதரவையும்   எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நெஞ்சார்ந்த நன்றியும். கடந்த வாரம் ஒரு அன்னை கேட்டார் தம்பி ! உங்கள் தொடரை படிக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அந்த பிரபஞ்ச சக்தியை எப்படி நம்மை வரவழைத்துக்கொள்வது என்பதுதான் குழப்பமாக  இருக்கிறது என்றார்.

பிரபஞ்சத்தை  எங்கிருந்தும் வரவழைக்கத் தேவையில்லை. ஏன் எனில் நீங்கள் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறீர்கள். பிரபஞ்சமாக இருப்பது நீங்கள் தான் என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் என்னால் உணரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ள அவரை போன்றவர்களுக்கு தான் இப்போதைய விளக்கம்.

நமக்குள் ஒரு வெற்றிடம் இருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்சத்தை உணரமுடியும் என்பதை பார்த்தோம் . நம்மை பாதிக்கும் பல வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திகொள்கிறோம். நம்முள் ஏற்படும் பேராசை, இனம் புரியாத கோபம், ஏதாவது ஒன்றின் மீது தீவிரமான விருப்பம்,நம்மை உயர்த்தி நினைத்துகொண்டு பிறரை தாழ்த்தி மதிப்பிடுவது அல்லது நம்மை தாழ்த்தி நினைத்துகொண்டு பிறரை உயர்வாக நினைப்பது, தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு செயலை நினைத்து ஒருவரை பழிவாங்கவேண்டும் என்று சதா நேரமும் நினைத்துக்கொண்டிருப்பது, இயற்கைக்கு முரணான பாலியல் வேட்கைகள் ,நிறைவேறாத ஆசைகள், நடக்கவே வாய்ப்பில்லாத ஒன்றினை நினைத்துகொண்டு காலம் கடத்துவது இப்படி பெரும் பட்டியலை சொல்லிக்கொண்டே செல்ல முடியும். இதில் ஒன்றோ பலவோ இணைந்து சேர்ந்து சேர்ந்து வலிமையடையும் போது அது மன அழுத்தமாக உருவெடுக்கிறது.
                        
நாம் முன்பே சொன்னது போல் இதுபோன்ற நெகடிவ் எண்ணங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து இதில் எவையெல்லாம் உங்களுக்கு இருக்கிறது என்று டிக் செய்யுங்கள். இதனை உடனடியாக விட்டுவிட இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து அந்த வினாடியில் அதிலிருந்து வெளியேறுங்கள். இவற்றை பட்டியலிட்டு இவற்றையெல்லாம் விடப்போகிறேன் என்று அழித்துவிட்டாலே உங்கள் மனம் மிகவும் இலகுவான நிலைக்கு  வருவதை உணரமுடியும். 

உங்கள் மனம் ஒரு கோயிலை போன்று எப்பொழுதும் இருக்கவேண்டும். கோயில் என்பது ஒரு புனிதமான இடம். அது எப்பொழுதும் தூய்மையுடனும் ஆற்றலுடனும் இருக்கதானே ஆசைப்படுவோம்.கோயிலின் கருவறையை இருட்டில் இருக்க விடுவோமா ? அங்கே ஒரு வெளிச்சம் பாயவேண்டும் என்பதற்காக விளக்கு ஏற்றிவைக்கிறோம் அல்லவா ?

நமது ஒவ்வொருவரின் உள்ளமும் கோயில்தான். அங்கேயும் இதைதானே கடைபிடிக்கவேண்டும். உள்ளத்தை நீங்கள் கோயிலாக கருத தொடங்கினால் போதும் உங்கள் எண்ணத்தில் எழுதும் வேண்டாத பதிவுகள் படிபடியாக கரைந்துவிடும். தேவையற்ற கவலைகளை அப்புறப்படுத்தினால் உள்ளொளி தானாக ஒளிரத்துவங்கும்.



நாம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லையெனில் கவலை ஏற்படுகிறது. அந்த விருப்பதின் மீது மிகுந்த ஏதிர்பார்ப்பு வைத்திருந்தீர்கள் எனில் அந்த ஏமாற்றம் மன அழுத்தத்தை தருகிறது. 

நீங்கள் எதிர்பாராத ஒன்று உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் பொழுது அதனை எதிர்கொள்ளும் வலிமை மனதிற்கு இல்லையெனில் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகிறது

உங்களுக்கு பிரியமான ஒன்று உங்களிடம் இருந்து பிரியும் போதோ அல்லது இல்லாமல் போகும் பொழுதும் அது ஏற்படுத்தும் வெற்றிடம் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது.

சில செயல்களில் வெளியில் இருந்து தரப்படும் கூடுதல் அழுத்தம் , எதிர்பார்ப்பு, அதனை பூர்த்தி செய்யவேண்டுமே என்ற யோசனை பெருகி அதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகிறது.

மன அழுத்தத்திற்கான சூழல்கள் , காரணங்கள் பல அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அவை இரண்டே இரண்டு விஷயத்தில் அடங்கிவிடும்

எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் . இதனால் நிகழ்வது மன அழுத்தம். பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களினால் அதாவது கிரகங்களின் நகர்வினால் அதில் இருந்து வரும் அலைவீச்சு உங்கள் உடலோடு தொடர்புகொண்டு அது ஏற்படுத்தும் பாதிப்பினாலும் மன அலை சூழல் மாறி கவலையும் அழுத்தமும் ஏற்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் நிகழ்வுகள் எத்தனை வகையில் மாறி மாறி வந்தாலும் ஒரே இடத்தை தான் அது பாதிக்கிறது. அது மனம். மனதை செம்மையாக்கிகொண்டால் எந்த பாதிப்பும் நம்மை அண்டாது.

மனம் உறுதிபெற தியானம் இருக்கிறதே ஆனால் அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களால் எப்படி தியானம் செய்யமுடியும் ? 

கொஞ்சம் பயிற்சி ! கொஞ்சம் முயற்சி ! இது இருந்தால் சுலபத்தில் நம்மால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடமுடியும்.

Attachment    மற்றும் Detachment நுட்பத்தை தெரிந்தவர்கள் எளிதில் மன அழுத்ததிற்குள் செல்ல மாட்டார்கள்

உங்களின் கவலைகளின்  பட்டியலை வகைபடுத்துங்கள்  . அதில் இரண்டு வகை இருக்கும் . ஒன்று உங்களால் கட்டுபடுத்த முடிந்த பிரச்சனைகள் ஒருவகை. உங்களால் கட்டுபடுத்த முடியாத இயற்கையினால் மட்டுமே தீர்க்க வேண்டிய பிரச்சனை இன்னொரு வகை. 

இன்று டயாபடிஸ் என்கிற சர்க்கரை நோய் மிகவும் சாதாரணமாகிவிட்டது. தங்களுக்கு சர்க்கரை என்பது பெருமைப்படும் ஒரு கூட்டம் ஒருபுறம். அய்யோ....! சர்க்கரை வந்துவிட்டதே என்று அலறும் கூட்டம் இன்னொருபுறம். இந்த அலறும் கூட்டம் மன அழுத்தத்தை தனக்குள் விதைத்துகொள்ளும் வகை. இந்த வகை மன அழுத்தத்தை தங்களுக்குள் அதிகமாக்கிகொள்வதுடன் தங்களைவிட எளியவன் என்று அவர்கள் கருதும் நபர்களிடம் தங்களின் அழுத்தத்தை காட்டி அங்கும் தங்கள் மன அழுத்தத்தை காண்பிப்பார்கள். பெரும்பாலும் அலுவலகங்களில் இது நிகழும். மேலதிகாரி தங்களின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் சதா நேரமும் எரிச்சலாக காண்பித்துகொள்வதின் மறைமுக காரணம் அவருக்குள் ஏதேனும் உடல் மன உபாதைகள் இருக்கும் காரணத்தினால் கூட இருக்கும்.
      ஆனால் உண்மை என்னவெனில் இந்த சர்க்கரை வியாதியை அவர்களால் கட்டுபடுத்த முடியும். இதற்கு அவர்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. கவலையே நிலைமையை மோசமாக்கும். ஆற அமர அமர்ந்து யோசித்தால் உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணவு, தேவைப்பட்டால் கொஞ்சம் மருந்து மாத்திரைகள். உடலின் செயல்பாடு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். 

சில நோய்கள் தீர்க்கமுடியாத நோய்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது. அதன் பின்புலனை புரிந்துகொண்டு மனோரீதியாக நம்மை வலிமைப்படுத்திகொள்ளவேண்டும். கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். 2011 ஆம் ஆண்டு அவரின்  முப்பதாவது வயதில் அதாவது மிக மிக இளம் வயதில் அவருக்கு கேன்சர் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.  வழக்கமாக இது போன்ற நோய்கள் தங்களுக்கு வந்துவிட்டது என்று ஒருவருக்கு தெரிந்தவுடனேயே அவர் மனோரீதியாக சோர்ந்துவிடுவார். அதாவது  உடலின் சக்தி நோயால் ஐம்பது சதவீதம் கரைகிறது எனில் அது குறித்த அச்சத்தினால் மீதமுள்ள சக்தியும் கரைந்து மேலும் பலவீனமாக்கிவிடும்.

யுவராஜ் சிங்கிற்கும் அந்த நிலை ஒரு சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் இப்படி ஏற்பட்டிருக்க கூடும். ஆனால் கை தேர்ந்த விளையாட்டு வீரரான அவர் அமைதியாக சிந்தித்தார் .நோயால் பலவீனப்பட்ட உடலுக்கு மனோதிடத்தினால் ஆற்றல் கொடுத்துகொண்டே இருந்தார். ஒருபுறம் நோய்க்கான சிகிச்சை, இன்னொருபுறம் மனோதிடம் . மனோதிடம் என்பது அளப்பரிய ஒன்று அது உடலில்  அணுக்கள்  நிலையில் Cell அளவில் செயல்படக்கூடியது. அதாவது ஒவ்வொரு செல்களிலும் Electron, Proton, Neutron என்ற கூறுகள் இருக்கின்றன . இதில் ஏற்படும் காந்த சுழற்சியினால் உடலுக்கு வேண்டிய  ஆற்றல் உற்பத்தியாகிறது. ஒருவர் நோய்வாய்ப்படும் போது ஒரு குறிப்பிட்ட உறுப்பினுடைய செல்களோ அல்லது குறிப்பிட்ட உடல் பகுதியின் செல்களோ பாதிக்கப்பட்டு அதில் இந்த ஆற்றல் தடைபடுவதால் அது நோயாக முற்றுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நமது உடலில் தினந்தோறும் கோடிக்கணக்கான  செல்கள் கரைகின்றன அதே நேரம் உற்பத்தியாகின்றன. இந்த இயற்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதுதான் நோய். மன ஆற்றலை அதிகரிக்கும் போது இப்படி பாதிக்கப்பட்ட செல்கள் மீண்டும் ஆற்றலுடன் புதுப்பிக்கப்படுகிறது என்கிறார்  ஜாய்ஸ் வைட்லே ஹவுக்கீஸ். இவர் ஒரு மரபியல் ஆராய்ச்சியாளர். தனது சொந்த வாழ்க்கையில் உடல் அளவில் பாதிக்கப்பட்டு அவர் மீண்ட கதையை Cell Level Healing என்றொரு நூலாக எழுதியுள்ளார். அதில் மனவலிமை எப்படி நோய் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அழகாக விவரித்துள்ளார். நமது நெகடிவ் பதிவுகளில் இருந்து வெளியேறு வழிமுறைகளையும்  எப்படி செல் அளவில் நமது ஆற்றலை அதிகரித்துகொள்வது என்பதையும் இனி வரும் வாரங்களில் பார்ப்போம்

                                          ( பிரபஞ்சம் பேசும் )

Saturday, January 11, 2020

மன அழுத்தம் என்பது ஒரு மாயை !

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 8 
ராஜ்மோகன்



ஒரு விஷயத்தில் இந்தியர்களான நாம் எல்லாம் நமது காலரை தைரியமாக தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

உலக அளவில் மன உறுதியும் சகிப்புதன்மையும் இந்தியர்களான நமக்கு தான் அதிகம். அதனாலேயே இந்த மன அழுத்தம் என்ற நோய் நம்மிடையே அதிக அளவில் இல்லை.  

என்ன பாஸ் சொல்றீங்க ?  

நம்ம ஊருலதான் அதிகம் என்று யாராவது  சொன்னால் நம்பாதீர்கள். 
அவர்கள் உங்களுக்குள் மன அழுத்தத்தை விதைக்க முயல்கிறார்கள். 

அமெரிக்கா , ஐரோப்பியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது நம்ம ஊரில் இந்த மன அழுத்தம் மிக மிக குறைவு.  ஏன் எனில் நமது உறவுமுறை அமைப்பு அத்தகையது. 

நீங்கள் கூட்டு குடும்பத்திலும் நல்ல நட்புடனும் உறவுமுறைகளோடு ஆரோக்கியமான உறவுடனும் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு.

மன அழுத்தம் என்ற இந்த சொல்லாடலே பன்னாட்டு நிறுவனங்கள் நம்ம ஊரில் தலையெடுக்க தொடங்கிய பின்னர்தான் அதிகம் பேசப்படுகிறது. பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் என்ற நோயே இல்லை. சர்க்கரை நோய்க்கு பணக்கார நோய் என்று அழைப்பார்களாம். இதனால் தான் என்னவோ எல்லோரும் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று பெருமையாக சொல்லிக்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

இல்லாத ஒன்று மிகைப்படுத்தப்பட்டு அதுவே இருப்பதாக மாறிவிட்டது. நாம் தான் முதலிலேயே சொன்னோம் அல்லவா பிரபஞ்சத்திற்கு ஒன்று தெரியாது நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை கொடுத்துவிடும். உலக மக்கள் அனைவரும் சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும் என்று நம்பினால் அது வந்துவிடும்.

மன அழுத்தம் அதே போல் ஒரு பேண்டஸி வார்த்தையாகிவிட்டது. I am in stress ya….என்று சொல்வதை ஏதோ பெருமையாகவும்.....உலகிலேயே தாங்கள் தான் பிசியானவர்களாக காட்டிகொள்ளவும் பயன்படும் ஜோடனை வார்த்தை.

உங்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கிறேன். எதுவும் நீங்கள் அனுமதிக்காமல் உங்களுக்குள் இறங்கமுடியாது. அதே போல் உலகில் எத்தனை பெரிய வலியையும் தாங்கிகொள்ளும் ஆற்றலுடன் தான் இந்த மனித பேரினம் படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம் சொல்லவா ? நமது உடற்கூறு அமைப்பின்படி மனித உடல்  அதிகபட்சமாக 45 டெல் அளவு வலியைதான் தாங்கமுடியும். ஆனால்  குழந்தைபிறப்பின் போது ஒரு பெண்ணின் உடலில் அதிகபட்சமாக 57 டெல் அளவிற்கு வலி நிகழ்கிறது. அதாவது 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைந்தால் எத்தனை வலி வருமோ. அத்தனை வலி அந்த வினாடியில் தாக்கும். இதையே தாங்கும் மனித உடல் ஒரு சின்ன மன அழுத்தத்தை தாங்காதா ?

மனம் ஒரு காந்தபுலன் என்கின்றனர் ஞானிகள். அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கமுடியும் . உங்கள் எண்ணம் முழுவதும் நெகடிவான விஷயங்கள் பதிந்து இருந்தாலும் அதன் அளவைவிட பாசிடிவ் சிந்தனைகளை விதைப்பதின் மூலம் நெகடிவ் தன்மையை முற்றிலும் மாற்றிவிடமுடியும்.

கடமையை செய்ய பலனை எதிர்பாராதே என்கிறது வாழ்வியல் நெறி. கடமை செய்து பலனை எதிர்பார் என்கிறது நவீன வாழ்வியல். சரி ! எதிர்பார்ப்புடன் ஒரு பணியை செய்யும்பொழுது அதன் பலன் எதுவாக இருந்தாலும் ஏற்றுகொள்வேன் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் மன அழுத்தம் வரவே வராது.   ஆனால் அப்படியா இருக்கிறோம்.

எண்ணத்தால் எல்லாம் முடியும் என்கிறீர்களே நான் எனது எண்ணத்தையும் கடும்  உழைப்பையும் பயன்படுத்தி தானே ஒரு செயலை செய்கிறேன். அதன் பலன் ஏன் எனக்கு கிடைப்பதில்லை. அதனாலேயே எனக்கு அதிக டென்ஷன் வருகிறது என்று நீங்கள் நினைத்தால் இங்கு ஒன்றை நான் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். வெறும் எண்ணமும் உழைப்பும் மட்டும் பலன் தராது.

எண்ணம். உழைப்பு இத்துடன்  இடம். காலம். சூழல் இவையும் உங்களுக்கு ஒத்துவரவேண்டும்.
உழைப்பும் எண்ணமும் கடுமையாக இருந்தாலும் காலமும் சூழலும் தான் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது.  

எல்லா கடமைகளும் முடித்துவிட்டு  இனி கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சொந்த வீடு வாங்கலாம் என்று நினைக்கும் பொழுது யாருக்காவது உடல்நலக்கோளாறு வந்து செலவழித்த பணமெல்லாம் சிகிச்சையில் கரைந்தால் இங்கு எது உங்கள்  எதிர்ப்பார்ப்பை தகர்க்கிறது ? எதிர்பாரத வரும் இந்த செலவு காலம் ஏற்படுத்தும் பாதிப்புதானே ? ஆனால் நீங்கள் பிரபஞ்ச இணைப்பில் இருந்தால் உங்கள் உள்ளுணர்வு ஒரு மருத்துவ காப்பீட்டை செய்து வைத்திருக்க செய்யும். நீங்கள் மிக சுலபமாக இதிலிருந்து விடுபட்டுவிட முடியும்.

பயிர் செய்து அறுவடைக்கு தயாராகும் முன்பு திடிரென்று பூச்சிகள் தாக்க ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும். பூச்சிகள் ஒரே நாளில் உற்பத்தியாவதில்லை. நீங்கள் பிரபஞ்ச இணைப்போடு இருந்தால் இந்த பூச்சிகள் தாக்குதல் குறித்து ஒரு முன்னெச்சரிக்கை செய்தி உங்களுக்குள் விதைக்கப்படும். நல்லவேளை முன்பே தெரிந்தது அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சிகொள்ளிகளை பயன்படுத்தி பெரும் பாதிப்பை தடுத்துவிட்டேன் என்பீர்கள்.

இப்படி எந்தவித இடர்பாடுகள் நிகழ்ந்தாலும் அது நிகழ்வதற்கு முன்பு உங்கள் மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கும் பிரபஞ்சம். இதனை உள்ளுணர்வு சக்தி என்கிறார்கள் அறிஞர்கள். Power of Intution குறித்து ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ வழிகாட்டுதல்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லா வழிகாட்டுதல்களைவிடவும் மிக வலிமையான வழிகாட்டி நீங்கள் தான்.

ஆம் ! நமக்கான வழிகாட்டி நம்மைத் தவிர வேறு யாராலும் இருக்கமுடியாது. நாம் மட்டுமே நம்மை 360 டிகிரியிலும் உணர்ந்தவர்கள். அப்படியிருக்க இன்னொருவர் ஆலோசனை எப்படி நம்மை வழிநடத்தும். நம்மை நாமே உணர்ந்துகொள்வது தான் பிரபஞ்சத்தை  உணர்ந்துகொள்ளும் வழி.

உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது எனில் அதனை நீங்கள் உங்களுக்குள் சேமிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  முதலில் ஒரு புள்ளியாக சின்ன அழுத்தம் தோன்றும். அதனை நீங்கள் உடனடியாக சரி செய்யவில்லை எனில்.அடுத்த புள்ளி...அடுத்த புள்ளி என  ஒரு சுமையாக  உருவெடுத்து நிற்கும். அந்த சுமை இன்னொரு சுமையை இழுக்கும். 

உடல் அமைப்பு விந்தனையானது. உடலில் எண்ணற்ற நரம்புகள் இருக்கின்றன. அவை ஒரு குறிபிட்ட இணைப்பில்  ஒன்றோடு ஒன்றாக பிணைந்து கிடக்கின்றன. நீங்கள் மனதில் தரும் அழுத்தம் அதிர்வலைகளாக பதிந்து இந்த நரம்புகளில் கடத்தப்பட்டு அந்த முடிச்சுக்களில் சேமிக்கப்படும். இது அதிகமாக அதிகமாக அந்த முடிச்சுக்களில் இருந்து இந்த அதிர்வுகள் வெளியேறி சுரப்பிகளில் பரவும். சுரப்பிகள் தனது இயக்கத்தை மந்தப்படுத்தும். சுரப்பிகள் மந்தப்பட்டால் உடல் இயக்கம் மந்தப்படும். உடல் இயக்கம் பாதிக்கப்படும் போது அது நோயாக மாறி நிற்கும். மனதில் ஏற்படும் ஒரு பாதிப்பு அது உடல் பாதிப்பாக வந்து நிற்பது இப்படிதான்.

அய்யோ ! நானே கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். இப்படியெல்லாம் லெக்சர் தந்து அறுக்காமல் எனக்கு இதில் இருந்து விலகி நிற்க வழிசொல்லுங்கள் என்று யாரேனும் கேட்கிறீர்கள் எனில் ஒரே பதில் தான். அதனை ஏன் சுமந்து நிற்கிறீர்கள். சற்று வைத்து ஒதுங்கி நில்லுங்கள். மன அழுத்தம் வெறும் மாயை ! மாயையில் இருந்து விடுபடுங்கள் !

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் உலகின் மூத்த மனோத்துவ டாக்டர் திருவள்ளவர். நகுக என்றால் சிரிக்க என்பது மட்டுமல்ல. நகர்க என்றும் பொருள் கொண்டு பாருங்கள். உங்களை நோக்கி ஒரு துன்பம் வரும் போது அதனை எதிர்கொண்டு ஏற்றுகொள்ளாமல் சற்று நகர்ந்து நில்லுங்கள். அது அதன் வழியில் சென்றுவிடும்.

அது எப்படி என்கிறீர்களா ? Attachment மற்றும் Detachment என்று இரண்டு செயல்கள் இருக்கின்றன. இதனை நீங்கள் தெளிவாக உணர்ந்து செயல்படுத்தினால் நிச்சயம் உங்கள் மன அழுத்தத்தை தூக்கி வீசிவிட முடியும். மாயையில் இருந்து விடுபட முடியும்.அளவற்ற இந்த பிரபஞ்ச ஆற்றலை உங்களுக்குள் தேக்கிவைத்துக்கொள்ள முடியும். எப்படி செய்யலாம் ?

                                          ( பிரபஞ்சம் பேசும் )



Friday, January 10, 2020

சக்திக்கு இடம் தருவோம் !

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 7 
ராஜ்மோகன்



அகம் புறம் இரண்டிலும் தேக்கநிலை கூடாது என்பது குறித்து விவாதிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் அகத்திலும்  ( உங்களுக்குள்) புறத்திலும் ( வெளி )  எப்பொழுதும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி வைத்திருந்தால் மட்டுமே சக்தியை நிரப்பிக்கொள்ளமுடியும்.

சக்தி என்பது நான் இங்கு குறிப்பிடுவது பிரபஞ்ச சக்தி. நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் அபரிதமாக குவிந்து கிடப்பது இந்த பிரபஞ்ச சக்திதான். கொஞ்சம் பின்னோக்கி  சென்று யோசிப்போமா ?

கிராமங்களில் இருந்த அந்த கால வீட்டு அமைப்பிற்கும். நகரங்களில் இருக்கும் இந்த கால வீட்டு அமைப்பிற்கும் வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள். இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் புரியும். அந்த கால வீடுகள் அனைத்தும் மிகவும் விசாலமாக காற்றும் ஒளியும் எப்பொழுதும் நிறைந்திருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். 

ஏன் எனில் காற்றும் ஒளியும்தான் பிரபஞ்ச சக்தியை எப்பொழுதும்  விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் ஊடகங்கள். அதுமட்டுமல்ல நல்ல ஆரோக்கியமான காற்றும் ஒளியும் நிறைந்துள்ள வீட்டில் எப்பொழுதும் ஆனந்தமும் அமைதியும் நிறைந்திருக்கும். கிராமங்களில் என் பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். வீட்டின் மையத்தில் அமர்ந்து பார்த்தால் வானம் தெரியவேண்டும் என்பார்கள். ஏன் வானம் தெரியவேண்டும். வானத்தில்  அப்படி என்ன இருக்கிறது ?

வானம் என்பது வெறும் வெட்டவெளிதான்.அங்கு தான் அபரிதமான சக்தி உற்பத்தியாகிறது. இது எப்படி உற்பத்தியாகிறது. பூமி  தன்னைத்தானே ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றுகிறது. பூமியை போன்றே பூமியை சுற்றியுள்ள எல்லா கிரகங்களும் தன்னைத்தானே சுற்றிகொண்டு சூரிய மண்டலத்தை சுற்றி வருகிறது. இவ்வாறு ஒரு சுழற்சி நடைபெறும் பொழுது அதனை சுற்றி ஒரு ஆற்றல் பிறக்கும் அல்லவா ? அந்த ஆற்றல் சுழன்று சுழன்று வந்து திரும்ப திரும்ப பூமியின் மீது மோதுகிறது. அதுதான் உயிராற்றல். அதுதான் சக்தி. நமது எண்ணம் , சொல், செயல் என அனைத்தியும் அலைகளாக பதிவு செய்துகொள்ளும் சக்தி. 

அந்த சக்தி வீட்டு முழுவதும்  நிறைந்திருக்கும் பொழுது நீங்கள் நினைப்பது, சொல்வது எல்லாம் விரைவில் கிரகித்து பிரபஞ்சத்தோடு கலக்க செய்யும் . நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதனை விரைந்து இழுத்து உங்களிடம் சேர்க்கும்.

நாம் முதல் அத்தியாத்தில் முதல் வரியில் பேசியதை நினைவு கூர்வோம். நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்கவிரும்பிய ஒருவர் திடீரென்று உங்கள் முன்பு வந்து நிற்பதும். நீங்கள் விரும்பிய பொருள் ஒன்று உங்களிடம் வந்தடைவதும் இந்த ஈர்ப்பு விதியினால்தான்.

அதனால் தான் நாம் எப்பொழுதும்  நம்மை சுற்றியும் நமக்குள்ளும் வெற்றிடத்தையே வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். வீட்டினுள் ஒளி ஏற்றுவதும் இதன் அடிப்படையிலான சூட்சுமத்தினால் தான். இப்பொழுதும் ஒரு ஸ்விட்ச் போட்டால் மின்விளக்கு எரிகிறது. வெளிச்சம் வீட்டினுள் நிரம்பிவிடுகிறது. ஒளி என்பது வெறும் வெளிச்சம் மட்டுமல்ல. அது ஒரு ஆற்றல். அந்த ஆற்றலை பெருக்கவே விதவிதமான மூலிகைகள் கலந்த எண்ணெய் கொண்டு ஏற்றினார்கள்.  இதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஊட்டவேண்டும் என்ற மறைமுக நல்ல நோக்கம் தான்.

நமது வீட்டில் தேவையற்ற பொருட்கள் நிறைந்திருக்கும் பொழுது நாம் ஏற்கனவே பேசியதுபோன்று தேவையற்ற எண்ணத்தை தோற்றுவித்து இரண்டும் கலந்து உங்களை சுற்றி பிரபஞ்ச ஆற்றலை குறைக்கும்.

இப்பொழுது நிறைய வெற்றிடத்துடன் யோசித்துபாருங்கள். எங்கெல்லாம் வெற்றிடம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆற்றல் பாய்ந்து நிற்கும். அவ்வாறு ஆற்றல் குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் அங்கு ஒரு எண்ணெய் விளக்கை ஏற்றி வையுங்கள். அங்கு விரைந்து பிரபஞ்ச ஆற்றல் ஈர்க்கப்படும்.

நமது வாழ்வியல் மரபுகளில் ஒளிக்கு அதி முக்கியத்துவம் தரப்பட்டதின் காரணம் இதுதான். ஆனால் நாளைடைவில் ஏனோ அது சடங்காக மாற்றப்பட்டு அதற்குள் பல நம்பிக்கைகள் விதைக்கப்பட்டு பின்னர் மூடநம்பிக்கையாக மாறி விமர்சனத்திற்குள்ளாகி இன்று இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மின்விளக்கைப்  போட்டால் இப்பொழுது எல்லாம் கொசுக்களும் பூச்சிகளும் தான் வருகின்றன.

சரி ! கடந்த வாரம் உங்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு நெகடிவ் சிந்தனையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டிருந்தோம். சிலருக்கு ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். அது எதனால் எழுகிறது . அதில் இருந்து எப்படி வெளியேறவேண்டும், அல்லது அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

எப்படி புறத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தினால் பிரபஞ்ச ஆற்றல் நிறையுமோ அதே போன்று அகத்திலும் வெற்றிடத்தை ஏற்படுத்தவேண்டும். இதைதான் தியானம் என்கிறார்கள்.

தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிரார்த்தனையில் நீங்கள் நிச்சயம் ஏதேனும் வேண்டுகோள் வைப்பீர்கள். குறைந்தபட்ச இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்வீர்கள். இதில் எது செய்தாலும் கூடுதலாக ஒரு எண்ணத்தை மேலும் மேலும் விதைக்கிறீர்கள். ஆனால் தியானம் எண்ணத்தில் இருந்து விடுபடுதல் அல்லது அந்த எண்ணத்தை ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வருதல்.

நம்ம வீட்டு தோட்டத்தில் சிறு குழாய்களை கொண்டு தண்ணீர் பாய்ச்சுவோம். அந்த குழாய் நன்றாக இருந்தால் தண்ணீர் எங்கு பாயவேண்டுமோ அங்கு சீறிகொண்டு பாயும். அதே குழாய் இடையிடையே நிறைய ஓட்டைகள் இருக்கின்றது என்று வைத்துகொள்ளுவோம் . என்ன ஆகும் ? தண்ணீர் இடையில் ஒழுகி சிதறும். முக்கியமாக பாயவேண்டிய இடத்தில் வேகமாக பாயாது அல்லது தண்ணீர் சென்று அடையகூட செய்யாது. 

இப்பொழுது எண்ணத்தை இத்துடன் கற்பனை செய்துகொள்ளுவோம். நாம் ஒன்றின் மீது சிந்தனை வைக்கும் பொழுது , அந்த சிந்தனையிலேயே கூர்மையாக இருக்கும் பொழுது அந்த எண்ணம் மிகவும் வலிமை பெறுகிறது. அந்த எண்ணத்தில் ஆற்றல் அளப்பரியதாகவும். அணுவைவிட மிக வலிமையானதாகவும் கூறுகின்றன மகான்கள். நாம் அத்தகைய வலிமையான எண்ணத்தை பெறும் பொழுது எதன் மீது நமது எண்ணத்தை திருப்புகிறோமோ அத்துடன் நாம் எளிதில் இணைப்பை பெற்றுவிடுவோம்.  ஆனால் நமது சிந்தனை பலவேறு விஷயங்களில் குழம்பி, தேவையற்ற பதிவுகளை தாங்கிகொண்டிருந்தால் என்னவாகும். ஒட்டைகள் நிறைந்த குழாய் போல எண்ணச்சிதறல் ஏற்படும். அதனால் நம் எண்ணத்திற்கு வலிமை கூடாது. நாம் எதன் மீது எண்ணத்தை திருப்பினால் ஒன்று அங்கு சென்று அது அடையாது. அல்லது அங்கு சென்று அடைந்தாலும் அதனுள் ஊடுருவாமல் சிதறிவிடும். இதனால் எண்ணம் வலிமையாக செயல்படாது.
இதற்காகதான் நாம் நமது எண்ணத்தை வலிமைப்படுத்தவேண்டும். எண்ணத்தை வலிமைப்படுத்துவது என்பது மனதில் சிந்தனையில் அறிவில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.
பெரும்பாலும் நமது மனதில் நிறைந்து நிற்பது இந்த நெகடிவ் சிந்தனைகள் தான். சிலருக்கு ஒன்றே ஒன்று இருக்கும். சிலருக்கு பல சிந்தனைகள் இருக்கும். எத்தனை சிந்தனைகள் இருந்தாலும் அது ஒரே அலையின் கீழ் வருகிறது. 

முந்தைய பகுதியில் பார்த்த ஒரு விஷயத்தை இங்கு நினைவு கொண்டு வருவோம்.

பீட்டா அலைகள் என்ற நிலையில் தான் நெகடிவ் சிந்தனைகள் கொண்டு சென்று விடும். EEG கொண்டு அளந்தோமெனில் உங்களின் மன அலைச்சூழல் 13 CPS அதாவது 13 Cycle speed per second இருக்கும். இந்த நெகடிவ்  எண்ணத்தை குறைக்க குறைக்க அது தானாகவே 8 முதல் 12 க்குள் அதாவது ஆல்பா நிலைக்கு வரும். அப்பொழுது மனம் பதட்டமின்றி அமைதியுடன் இருக்கும். இந்நிலையில் இருந்து அடுத்து தீட்டா அல்லது அதற்கு நுண்ணிய நிலைக்கு கொண்டு செல்ல கொண்டு செல்ல பிரபஞ்சமாக நீங்கள் மாறுவீர்கள்.

இன்றைய நவீன பரபரப்பு உலகில் அதிகமாக பாதிக்கும் நெகடிவ் சிந்தனை மன அழுத்தம்.மன அழுத்தமில்லாத மனிதர்கள் வெகு குறைவு. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு  எந்த குறையுமில்லை என்பார்கள். ஆனால் அவர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இருக்கும். எனக்கு மன அழுத்தம் இல்லை என்பது மாயை. மன அழுத்தமில்லாமல் இருப்பது என்பதை அடையாளம்  காண்பது மிக மிக எளிது . நமக்குள் நிறைய வகையில் நெகடிவ் சிந்தனைகள் இருந்தாலும் அதிக கவனத்துடன் உடனடியாக சரி செய்யவேண்டிய ஒன்று இந்த மன அழுத்தம்.

அனேகமாக நீங்கள் அனைவரும் இதனை  எப்படி சரி செய்வது என்பது தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்கு தெரிந்த நாங்கள் பயன்படுத்தும் சில யுக்திகளை இனி வரும் வாரம் பார்ப்போம்

                              ( பிரபஞ்சம் பேசும் )













பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...