Friday, January 10, 2020

சக்திக்கு இடம் தருவோம் !

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 7 
ராஜ்மோகன்



அகம் புறம் இரண்டிலும் தேக்கநிலை கூடாது என்பது குறித்து விவாதிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் அகத்திலும்  ( உங்களுக்குள்) புறத்திலும் ( வெளி )  எப்பொழுதும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி வைத்திருந்தால் மட்டுமே சக்தியை நிரப்பிக்கொள்ளமுடியும்.

சக்தி என்பது நான் இங்கு குறிப்பிடுவது பிரபஞ்ச சக்தி. நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் அபரிதமாக குவிந்து கிடப்பது இந்த பிரபஞ்ச சக்திதான். கொஞ்சம் பின்னோக்கி  சென்று யோசிப்போமா ?

கிராமங்களில் இருந்த அந்த கால வீட்டு அமைப்பிற்கும். நகரங்களில் இருக்கும் இந்த கால வீட்டு அமைப்பிற்கும் வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள். இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் புரியும். அந்த கால வீடுகள் அனைத்தும் மிகவும் விசாலமாக காற்றும் ஒளியும் எப்பொழுதும் நிறைந்திருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். 

ஏன் எனில் காற்றும் ஒளியும்தான் பிரபஞ்ச சக்தியை எப்பொழுதும்  விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் ஊடகங்கள். அதுமட்டுமல்ல நல்ல ஆரோக்கியமான காற்றும் ஒளியும் நிறைந்துள்ள வீட்டில் எப்பொழுதும் ஆனந்தமும் அமைதியும் நிறைந்திருக்கும். கிராமங்களில் என் பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். வீட்டின் மையத்தில் அமர்ந்து பார்த்தால் வானம் தெரியவேண்டும் என்பார்கள். ஏன் வானம் தெரியவேண்டும். வானத்தில்  அப்படி என்ன இருக்கிறது ?

வானம் என்பது வெறும் வெட்டவெளிதான்.அங்கு தான் அபரிதமான சக்தி உற்பத்தியாகிறது. இது எப்படி உற்பத்தியாகிறது. பூமி  தன்னைத்தானே ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றுகிறது. பூமியை போன்றே பூமியை சுற்றியுள்ள எல்லா கிரகங்களும் தன்னைத்தானே சுற்றிகொண்டு சூரிய மண்டலத்தை சுற்றி வருகிறது. இவ்வாறு ஒரு சுழற்சி நடைபெறும் பொழுது அதனை சுற்றி ஒரு ஆற்றல் பிறக்கும் அல்லவா ? அந்த ஆற்றல் சுழன்று சுழன்று வந்து திரும்ப திரும்ப பூமியின் மீது மோதுகிறது. அதுதான் உயிராற்றல். அதுதான் சக்தி. நமது எண்ணம் , சொல், செயல் என அனைத்தியும் அலைகளாக பதிவு செய்துகொள்ளும் சக்தி. 

அந்த சக்தி வீட்டு முழுவதும்  நிறைந்திருக்கும் பொழுது நீங்கள் நினைப்பது, சொல்வது எல்லாம் விரைவில் கிரகித்து பிரபஞ்சத்தோடு கலக்க செய்யும் . நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதனை விரைந்து இழுத்து உங்களிடம் சேர்க்கும்.

நாம் முதல் அத்தியாத்தில் முதல் வரியில் பேசியதை நினைவு கூர்வோம். நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்கவிரும்பிய ஒருவர் திடீரென்று உங்கள் முன்பு வந்து நிற்பதும். நீங்கள் விரும்பிய பொருள் ஒன்று உங்களிடம் வந்தடைவதும் இந்த ஈர்ப்பு விதியினால்தான்.

அதனால் தான் நாம் எப்பொழுதும்  நம்மை சுற்றியும் நமக்குள்ளும் வெற்றிடத்தையே வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். வீட்டினுள் ஒளி ஏற்றுவதும் இதன் அடிப்படையிலான சூட்சுமத்தினால் தான். இப்பொழுதும் ஒரு ஸ்விட்ச் போட்டால் மின்விளக்கு எரிகிறது. வெளிச்சம் வீட்டினுள் நிரம்பிவிடுகிறது. ஒளி என்பது வெறும் வெளிச்சம் மட்டுமல்ல. அது ஒரு ஆற்றல். அந்த ஆற்றலை பெருக்கவே விதவிதமான மூலிகைகள் கலந்த எண்ணெய் கொண்டு ஏற்றினார்கள்.  இதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஊட்டவேண்டும் என்ற மறைமுக நல்ல நோக்கம் தான்.

நமது வீட்டில் தேவையற்ற பொருட்கள் நிறைந்திருக்கும் பொழுது நாம் ஏற்கனவே பேசியதுபோன்று தேவையற்ற எண்ணத்தை தோற்றுவித்து இரண்டும் கலந்து உங்களை சுற்றி பிரபஞ்ச ஆற்றலை குறைக்கும்.

இப்பொழுது நிறைய வெற்றிடத்துடன் யோசித்துபாருங்கள். எங்கெல்லாம் வெற்றிடம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆற்றல் பாய்ந்து நிற்கும். அவ்வாறு ஆற்றல் குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் அங்கு ஒரு எண்ணெய் விளக்கை ஏற்றி வையுங்கள். அங்கு விரைந்து பிரபஞ்ச ஆற்றல் ஈர்க்கப்படும்.

நமது வாழ்வியல் மரபுகளில் ஒளிக்கு அதி முக்கியத்துவம் தரப்பட்டதின் காரணம் இதுதான். ஆனால் நாளைடைவில் ஏனோ அது சடங்காக மாற்றப்பட்டு அதற்குள் பல நம்பிக்கைகள் விதைக்கப்பட்டு பின்னர் மூடநம்பிக்கையாக மாறி விமர்சனத்திற்குள்ளாகி இன்று இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மின்விளக்கைப்  போட்டால் இப்பொழுது எல்லாம் கொசுக்களும் பூச்சிகளும் தான் வருகின்றன.

சரி ! கடந்த வாரம் உங்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு நெகடிவ் சிந்தனையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டிருந்தோம். சிலருக்கு ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். அது எதனால் எழுகிறது . அதில் இருந்து எப்படி வெளியேறவேண்டும், அல்லது அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

எப்படி புறத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தினால் பிரபஞ்ச ஆற்றல் நிறையுமோ அதே போன்று அகத்திலும் வெற்றிடத்தை ஏற்படுத்தவேண்டும். இதைதான் தியானம் என்கிறார்கள்.

தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிரார்த்தனையில் நீங்கள் நிச்சயம் ஏதேனும் வேண்டுகோள் வைப்பீர்கள். குறைந்தபட்ச இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்வீர்கள். இதில் எது செய்தாலும் கூடுதலாக ஒரு எண்ணத்தை மேலும் மேலும் விதைக்கிறீர்கள். ஆனால் தியானம் எண்ணத்தில் இருந்து விடுபடுதல் அல்லது அந்த எண்ணத்தை ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வருதல்.

நம்ம வீட்டு தோட்டத்தில் சிறு குழாய்களை கொண்டு தண்ணீர் பாய்ச்சுவோம். அந்த குழாய் நன்றாக இருந்தால் தண்ணீர் எங்கு பாயவேண்டுமோ அங்கு சீறிகொண்டு பாயும். அதே குழாய் இடையிடையே நிறைய ஓட்டைகள் இருக்கின்றது என்று வைத்துகொள்ளுவோம் . என்ன ஆகும் ? தண்ணீர் இடையில் ஒழுகி சிதறும். முக்கியமாக பாயவேண்டிய இடத்தில் வேகமாக பாயாது அல்லது தண்ணீர் சென்று அடையகூட செய்யாது. 

இப்பொழுது எண்ணத்தை இத்துடன் கற்பனை செய்துகொள்ளுவோம். நாம் ஒன்றின் மீது சிந்தனை வைக்கும் பொழுது , அந்த சிந்தனையிலேயே கூர்மையாக இருக்கும் பொழுது அந்த எண்ணம் மிகவும் வலிமை பெறுகிறது. அந்த எண்ணத்தில் ஆற்றல் அளப்பரியதாகவும். அணுவைவிட மிக வலிமையானதாகவும் கூறுகின்றன மகான்கள். நாம் அத்தகைய வலிமையான எண்ணத்தை பெறும் பொழுது எதன் மீது நமது எண்ணத்தை திருப்புகிறோமோ அத்துடன் நாம் எளிதில் இணைப்பை பெற்றுவிடுவோம்.  ஆனால் நமது சிந்தனை பலவேறு விஷயங்களில் குழம்பி, தேவையற்ற பதிவுகளை தாங்கிகொண்டிருந்தால் என்னவாகும். ஒட்டைகள் நிறைந்த குழாய் போல எண்ணச்சிதறல் ஏற்படும். அதனால் நம் எண்ணத்திற்கு வலிமை கூடாது. நாம் எதன் மீது எண்ணத்தை திருப்பினால் ஒன்று அங்கு சென்று அது அடையாது. அல்லது அங்கு சென்று அடைந்தாலும் அதனுள் ஊடுருவாமல் சிதறிவிடும். இதனால் எண்ணம் வலிமையாக செயல்படாது.
இதற்காகதான் நாம் நமது எண்ணத்தை வலிமைப்படுத்தவேண்டும். எண்ணத்தை வலிமைப்படுத்துவது என்பது மனதில் சிந்தனையில் அறிவில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.
பெரும்பாலும் நமது மனதில் நிறைந்து நிற்பது இந்த நெகடிவ் சிந்தனைகள் தான். சிலருக்கு ஒன்றே ஒன்று இருக்கும். சிலருக்கு பல சிந்தனைகள் இருக்கும். எத்தனை சிந்தனைகள் இருந்தாலும் அது ஒரே அலையின் கீழ் வருகிறது. 

முந்தைய பகுதியில் பார்த்த ஒரு விஷயத்தை இங்கு நினைவு கொண்டு வருவோம்.

பீட்டா அலைகள் என்ற நிலையில் தான் நெகடிவ் சிந்தனைகள் கொண்டு சென்று விடும். EEG கொண்டு அளந்தோமெனில் உங்களின் மன அலைச்சூழல் 13 CPS அதாவது 13 Cycle speed per second இருக்கும். இந்த நெகடிவ்  எண்ணத்தை குறைக்க குறைக்க அது தானாகவே 8 முதல் 12 க்குள் அதாவது ஆல்பா நிலைக்கு வரும். அப்பொழுது மனம் பதட்டமின்றி அமைதியுடன் இருக்கும். இந்நிலையில் இருந்து அடுத்து தீட்டா அல்லது அதற்கு நுண்ணிய நிலைக்கு கொண்டு செல்ல கொண்டு செல்ல பிரபஞ்சமாக நீங்கள் மாறுவீர்கள்.

இன்றைய நவீன பரபரப்பு உலகில் அதிகமாக பாதிக்கும் நெகடிவ் சிந்தனை மன அழுத்தம்.மன அழுத்தமில்லாத மனிதர்கள் வெகு குறைவு. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு  எந்த குறையுமில்லை என்பார்கள். ஆனால் அவர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இருக்கும். எனக்கு மன அழுத்தம் இல்லை என்பது மாயை. மன அழுத்தமில்லாமல் இருப்பது என்பதை அடையாளம்  காண்பது மிக மிக எளிது . நமக்குள் நிறைய வகையில் நெகடிவ் சிந்தனைகள் இருந்தாலும் அதிக கவனத்துடன் உடனடியாக சரி செய்யவேண்டிய ஒன்று இந்த மன அழுத்தம்.

அனேகமாக நீங்கள் அனைவரும் இதனை  எப்படி சரி செய்வது என்பது தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்கு தெரிந்த நாங்கள் பயன்படுத்தும் சில யுக்திகளை இனி வரும் வாரம் பார்ப்போம்

                              ( பிரபஞ்சம் பேசும் )













No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...