Monday, January 13, 2020

வாழ்த்துவோம் வளம் பெறுவோம் !

பிரபஞ்சம் பேசுகிறது  - பகுதி 10
ராஜ்மோகன்


தொடக்கம் என்றால் முடிவு என்று நிச்சயம் உண்டு.

இந்த தொடர்  இவ்வாரத்துடன் முடிவைகிறது. ஆனால் நமக்கு உள்ளும்  புறமும் இயங்கிக்கொண்டிருக்கும் பிரபஞ்ச நிலைக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அது அண்டசராசரமாக எங்கும் விரிவடைந்த நிலையில் எப்பொழுதும் நிலைக்கொண்டிருக்கிறது. இதில் பயணிகளாக மனித உருவெடுத்து நாம் வருகிறோம் செல்கிறோம் வருகிறோம். நமது வருகையும் புறப்பாடும் இனிமையாக இருப்பதும் நமது வாழ்க்கை பயணத்தின் முழுமையும்,  நாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்தான் என்பதை உணர்ந்துகொள்ளுவதில் இருக்கிறது 

முழுமையின் முதல் நிலை   பேரன்பு ! எல்லா உயிர்களின் மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துவது எப்பொழுதும் நம்மை பிரபஞ்சத்தோடு இணைப்பில் வைத்திருக்கும். மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிருக்கிறதா " நிற்பதுவே நடப்பதுவே " இன்னொருமுறை கேளுங்கள். நாம் எப்படி பிரபஞ்சத்தின் அங்கமாக பரிமாணிக்கிறோம் என்பதை தெய்வீகத்தன்மையுடன் விவரித்திருப்பார் பாரதியார். இத்தனை அழகான வாழ்க்கையில் ஏன் ஏமாற்றங்களும், ஏக்கங்களும், துன்பங்களும் ? நமது மனதை சஞ்சலத்தில் விடுவதால் நிகழும் பிரதிபலிப்புகளே தவிர வேறு ஏதுமில்லை.

நமது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு அனுபவமும் நமது உடல் மற்றும் மன இயக்கத்தின் பிரதிபலிப்புகளே என்பதை நாம் உணரவேண்டும். 

ஒருவர் வாழ்க்கை அமைதியும் முழுமையும் இருக்கிறது எனில் அதற்கும் அவர்தான் பொறுப்பு. இன்னொருவர் வாழ்க்கையில் துன்பமும் முழுமையற்ற நிலை தொடர்கிறது எனில் அதற்கும் அவர் தான் பொறுப்பு.  

உங்களுக்குள் ஏற்படும் முரண்பாடும் இயற்கைக்கு பொருந்தா நிலையும் தான் இதனை உங்களுக்கு வழங்குகிறது என்கிற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். 

இதனை மாற்றி அமைப்பதின் மூலம் இந்த தன்மையை முழுவதும் நீக்குவதின் மூலம் நமக்குள் ஒரு சமநிலையை முழுமையை அடையவேண்டும்.மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்ப்போம். 

அரிது அரிது மானிடராக பிறப்பது அரிது என்றார் ஒளவையார். இத்தனை அரிதான மானிடப்பிறவி ஏன் துன்பமுடன் தொடரவேண்டும் ? எண்ணத்திலும் செயலிலும் ஏதேனும் தவறு இருப்பின் அதுவே Cause and Effect ஆக துன்பமாக கொண்டு வருகிறது. நமது  நெகடிவ் சிந்தனைகளே நமது துன்பத்திற்கு காரணமாக இருக்கிறது .

பேராசை - நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் உங்கள் ஆசை உங்களுக்கோ இன்னொருவருக்கோ துன்பம் விளைவிக்கும் எனில் அது பேராசை. ஒரு சைக்கிள் வைத்திருப்பவன் சொகுசு காருக்கு ஆசைப்படுவது பேராசை அல்ல. ஆனால் அதனை அடையவேண்டும் என்ற அவன் ஆவல் அவன் மனதில் துன்பமும் அழுத்தமும் தருகிறது எனில் அது பேராசை.அந்த எண்ணம் இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரை துன்புறத்தி அல்லது அவர் மீது ஒரு பொறாமை எண்ணத்துடன் ஏற்பட்டாலும் அது பேராசைதான்.

கடுஞ்சினம் - கோபப்படுவது எல்லா நிலையிலும் துன்பத்தை தரும். கோபம் உங்கள் உடல் நலனை பாதிக்கிறது. வெளியில் உறவை பாதிக்கிறது. அதே நேரம் எதாவது ஒன்றின் மீது கடுமையான பற்றுகொண்டிருப்பதும் ஒருவித மனோநிலை மாறுபாடுதான்.  ஆண் பெண் நட்புநலன் உயிரினங்களுக்கு பொதுவானது. அது மனித நாகரீகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்குமுறையை வழங்குகிறது . இந்த ஒழுங்குமுறை மீறும்போதும் அது வினையாகும். 

இறைவன் என்பவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டால் "அவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்" என்று பட்டென்று பதில் சொல்வோம். இறைவன் எல்லாவற்றிலும் இருக்கும் பொழுது இந்த பிரபஞ்த்தில் எல்லாமும் போற்றுதலுக்குரியதாகிறது. இங்கு உயர்வு தாழ்வு என்ற நிலை எங்கும் ஏற்பட வாய்ப்பில்லை . அப்படி இருக்க நமது மனநிலையில் ஏற்படும் உயர்வு தாழ்வு ஏற்றநிலையும் நம்மை பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிற்பதை தடுக்கிறது.

அடுத்த முக்கியமான ஒன்று நமக்கு நிகழும் துன்பங்களை மறத்தல் நமக்கு துன்பம் இழைத்தோரை மன்னித்தல். உலக இயக்கங்கள் முழுவதுமே பிரபஞ்ச இயக்கத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகிறது என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம். ஒருவர் நமக்கு துன்பம் இழைக்கிறார் என்று வைத்துகொள்வோம் . அதுவும் பிரபஞ்ச செயல்தானே ?  பிரபஞ்சம் தவறு செய்யுமா ? என்று கேட்டால். அந்த துன்பசெயல் முன்பே நாம் பார்த்த செயல்விளைவு தத்துவத்தின் பிரதிபலிப்புதான். எங்கோ ? எப்பொழுதோ ? நாம் செய்த ஒரு வினை இப்பொழுது இன்னொரு வடிவில் இன்னொருவர் மூலம் நமக்கு திரும்பி வருகிறது என்பது தான் உண்மை. அதாவது நீங்கள் செய்த பிழையின் கணக்கு இச்செயலில் தீர்க்கப்படுகிறது. எனவே துன்பம் இழைப்பவர் உங்கள் வினையை போக்க உதவுகிறார். அவர் செயலுக்கு அவர் மீது வருந்தி அவரை பழிவாங்க வஞ்சம் கொள்ளாமல் அவரை வாழ்த்துவதும் அவருக்கு நன்றி சொல்வதும் அந்த துன்பத்தில் இருந்து விடுபட முயல்வதும் நாம் செய்யவேண்டிய முக்கிய செயல். 

இதனை ஒரு பேராசிரியர் சத்யமூர்த்தி மிக அழகாக சொல்வார். உடலில் காயம்பட்டால் அதனை சரிசெய்ய ATS எனப்படும் Anti Tenus Serum  என்ற ஆண்டிபயோடிக் அளிப்பதை போல வாழ்க்கையில் துன்பங்கள் நீங்க Adjustment - Tolerence - Sacrifice எனப்படும் ATS அவசியம். அதாவது விட்டுக்கொடுத்து வாழ்தல் ,சகிப்புத்தன்மை , தியாகமனப்பான்மை இது இருந்தால் வாழ்க்கையில் துன்பமே இருக்காது என்பார்.

இந்த நூற்றாண்டில் ஆன்மீகம் என்பது மிகவும் நவீனமாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது. பாமரர்களின் தத்துவஞானி என்று  அழைக்கப்பட்ட வேதாத்திரி வாழ்வியல் முழுமையடைய இரண்டே இரண்டு நெறிகளை சொல்கிறார் . " நான் எனது வாழ்நாளில் பிறிதொரு உயிருக்கு உடலாலோ மனதாலோ துன்பம் தரமாட்டேன். துன்பப்ப்டும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்" பாருங்கள் வாழ்க்கை எத்தனை எளிமையாக இனிதாக மாறுகிறது.

எத்தனை துன்பங்கள் இடர்பாடுகள் வந்தாலும் இந்த இரண்டு ஒழுக்க கோட்பாடுகளை விடாமல் பின்பற்றுங்கள் . எத்தகையை துன்ப நிலையும் மாறும் . அடுத்து இரண்டு முக்கிய விஷயங்கள். இன்று மேற்கத்திய நாடுகளின் எல்லா பயிற்சிகளும் வலியுறுத்தும் விஷயம் இது.

ஒன்று நன்றி பாராட்டுதல்.

உங்கள் வாழ்க்கையில் மிக மிக சின்னதாக ஒரு உதவி செய்தாலும் உடனே அவருக்கு நன்றியை தெரிவியுங்கள். கணவன் மனைவி வாழ்க்கையில் என்றும் இனிமையாக இருக்க உங்கள் வாழ்க்கை துணைக்கு எத்தனை நன்றிகள் சொல்கிறீர்களோ அத்தனை நெருக்கமாக ரொமன்ஸ் பொங்கும். உங்கள் பிள்ளைகள் சின்னதாக ஒரு செயலை செய்தால் கூட அதற்கு நன்றி தெரிவித்து  வந்தீர்கள் எனில் அவர்களிடம் பிற குணநலன்கள் இயல்பாகவே மேம்படும். நல்ல அறிவார்ந்த சாதனையாளர்களாக அவர்கள் உருவாவார்கள். உங்களுக்கு ஒருவர் துன்பம் இழைத்தால் கூட அந்த நேரத்தில் நிச்சயம் ஒரு கோபமோ வருத்தமோ எழுவது மனித இயல்பு. உடனடியாக அதற்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்தாமல் இருக்க இந்த நன்றி பாராட்டுதல் உதவும். நன்றி ! ஆனால் நீங்கள் செய்த செயல் எனக்கு இப்படி ஒரு பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்று பொறுமையாக சொல்லுங்கள் எதிராளி தடுமாறிவிடுவான் . அவனை நீங்கள் பழிவாங்கி கடிந்து திருத்துவதின் விட இது மேலான நல்ல விளைவுகளை தரும். ஆங்கிலத்தில் Rapport Building என்றொரு வார்த்தையை சொல்வார்கள்.அதாவது இணக்கத்தை உருவாக்கிகொள்ளுதல். இந்த  நன்றி என்ற ஒரு வார்த்தை உயிருள்ள உயிரற்ற பொருட்களிடம் கூட ஒரு இணக்கத்தை உருவாக்கிதரும். இயற்கையை உங்கள் பக்கம் வளைத்து தரும். எனவே எப்பொழுதும் நன்றி பாராட்டுதலை மறக்காமல் செய்வோம்.

அடுத்து எப்பொழுதும் நல்ல வார்த்தைகளை உபயோகிப்பது . அதாவது வாழ்த்துச் சொற்களை மட்டுமே பயன்படுத்துவது. இந்த பிரபஞ்சம் ஒரு காந்த புலன் என்பதை பார்த்தோம். நமது சொல்லும் செயலும் அப்படியே பதிந்து அதுவே மீண்டும் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது என்பதையும் பார்த்தோம். நீங்கள் சதாநேரமும் மோசமான எண்ணத்தையோ மோசமான சொற்களையோ பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அது அப்படியே பிரபஞ்சத்தில் பதியும். உங்களைப் போன்றே கோடிக்கணக்கானோர் அதே போன்று சிந்தனையும் செயலையும் செய்தால் இதே போன்று எல்லோருடைய நெகடிவ் எண்ணங்களும் பிரபஞ்சத்தில் பதிந்து நல்ல பதிவுகளைவிட நெகடிவ் பதிவுகளின் வலிமை அதிகரிக்கும் பொழுது எங்கும் மோசமான விளைவுகளே நிகழும் . எனவே தான் காலை மாலை ஏன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றனர்  நமது மூதாதையர் . நாம் பிரார்த்தனை செய்யும் பொழுதும் ஓரளவு நல்ல மன அலைச்சூழலில் நல்ல எண்ணங்களை விதைக்கிறோம். இதனால் நல்ல நிகழ்வுகள் அதிகரிக்கவேண்டும் என்ற அவர்களின் தொலைநோக்கு பார்வைதான்.
தினம் காலையில் கண்விழித்த பின்னர் இரவு உறங்கப்போகும் முன்பு அமைதியாக அப்படியே சம்மணமிட்டு அமருங்கள். ஒரு இரண்டு நிமிடம் மூச்சை அமைதியாக கவனித்துவிட்டு அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை அசைப்பொடுங்கள். ஏதேனும் நெகடிவ் சிந்தனைகள் இருந்தால் அதனை அப்படியே மன்னித்து கரைத்துவிடுங்கள்.அன்றைய நிகழ்வுக்கு எல்லோருக்கும் பாராபட்சம் இன்றி நன்றி சொல்லுங்கள். அடுத்து உங்கள் குடும்ப உறுப்பினரில் ஆரம்பித்து உங்கள் வாழ்க்கையில் வரும் வந்து சென்ற அனைவருக்கும் வாழ்த்து. ஒவ்வொருமுறையும் சந்திக்கும் நபராக இருக்கலாம் ஒரே ஒரு முறை சந்தித்த நபராக இருக்கலாம் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ உங்களுக்கு பிடித்தமான வாசகங்களில் நீங்களே ஒரு வாழ்த்து செய்தியை உருவாக்கி தினம் தோறும் வாழ்த்தி வாருங்கள். இப்பொழுது நீங்கள் போடுவது விதை. அது முளைத்து தழைத்து மரமாக வளர்ந்து உங்கள் வாழ்க்கை பயணம் முழுவதும் அமைதியெனும்  மலரையும் மணத்தையும் தந்துகொண்டே இருக்கும். நீங்களே பிரபஞ்சம் ...நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதும் நீங்களே.... உங்களை சுற்றி எப்பொழுதும் அமைதியையும் ஆனந்தநிலையையும் விதைத்துகொண்டே செல்லுங்கள்.... இனி எல்லாம் இன்பமயம் !!!

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...