Friday, January 3, 2020

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 3




கடந்த இரண்டு பகுதிகளும் புரிந்துகொள்ள கொஞ்சம் கடுமையாக இருக்கிறது என்று தோழர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். குட்டி குட்டி நகைச்சுவை கதைகளை இடையில் புகுத்தலாமே ? நல்ல உதாரணங்களை இடையில் சொல்லலாமே ? என்றெல்லாம் சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
இந்த தொடர் வெறும் பொழுது போக்குக்காக எழுதவில்லை. நான் ஒரு பொழுது போக்கு கலைஞனும் இல்லை . இதனை புரிந்துகொண்டு உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் போது மாற்றம் நிச்சயம். நாம் இதுவரை எதையல்லாம் இலைமறைக்காயாக. மறைத்துவைத்திருந்தோமோ அதனை வெளிப்படையாக பேசவேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு வாய்த்த ஆன்மீக ஆசான்களும் எனக்கு அப்படிதான் பயிற்றுவித்தார்கள்.
பிரபஞ்சம் என்பது அளப்பரிய சக்தி. அது எல்லையற்ற நிலையில் பரந்து விரிந்து இயங்கிகொண்டிருக்கிறது.. பூமி பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். பூமி  ஒரு தன்மையாக உருவெடுத்து இருந்தாலும் அதற்குள்ளும் பிரபஞ்சத்தின் தன்மை இருந்துகொண்டேதான் இருக்கிறது. பூமியில் எண்ணற்ற உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் இருக்கின்றன. அதில் ஆறறிவுடன் மதிநுட்பமுடன் உயரிய உயிரினம் மனித இனமாகிய நாம். நமக்குள்ளும் இந்த பிரபஞ்சத்தின் தன்மை இருக்கிறது. அதனை நாம் உணராமல் இருப்பதால் தான் நம் கனவுக்கும் நினைவுக்குமான தூரம்  இருந்துகொண்டே இருக்கிறது. நினைத்தது நடக்க கேட்பது கிடைக்க நீங்கள் பிரபஞ்சமாக வேண்டும். உங்களை தன்னிருப்பில் வைத்துக்கொள்ள பிரபஞ்சம் எப்பொழுதும் செய்திகளை சொல்லிகொண்டே இருக்கிறது. அதனை புரிந்துகொண்டோம் எனில் உங்களுக்கு எதிலும் வெற்றி எப்பொழுதும் வெற்றிதான்.

ஆனால் அது அத்தனை சுலபமானது அல்ல. நீங்கள் ஒரு கடினமான பயிற்சிக்கு தயாராக இருக்கவேண்டும், இப்பொழுது சொல்லுங்கள். கடந்த இதழில் முன்னூறு வினாடிகளில்  உங்களுக்கு பிடித்த 100 விஷயங்களை எழுத கேட்டிருந்தோம். எத்தனை பேர் இந்த பயிற்சியை சரியாக செய்தீர்கள் ?

சரி ! நம்மை நாமே பரிசோதித்துகொள்வோமா ? 

கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு பிடித்தமான  ஒன்றை அது சாமியாக இருக்கலாம். அல்லது நபராக இருக்கலாம். இவரிடம் பொய்யே பேசமாட்டேன் என்று நீங்கள் கருதும் ஒருவரை அல்லது உங்கள் மனசாட்சியை மனக்கண் முன்பு  சாட்சியாக கொண்டு வாருங்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் உங்களால் எத்தனை விஷயங்களை அந்த  300 வினாடியில் எழுத முடிந்தது. 100 ம் எழுதிவிட்டேன் என்பவர்கள். முதல் பெஞ்சில் சென்று உட்காருங்கள். 50 முதல் 80 வரை அடுத்த பெஞ்ச். 30 முதல் 50 வரை அடுத்த  பெஞ்ச். முப்பதுக்கும் குறைவானவர்கள் கடைசி பெஞ்சுக்கு செல்லுங்கள்.
இப்பொழுது உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. நீங்கள் விரும்பிய அந்த  ஐம்பது முதல் நூறு வரையிலான விஷயங்களில் எத்தனை விஷயங்கள் இயற்கை சார்ந்தது ? மழை,வெயில், மலை, ஓடை, காற்று, யானை காக்கை, இயற்கை இப்படி எத்தனை எழுதியிருக்கிறீர்கள் என்பதை பட்டியிலிடுங்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நீங்கள் இயற்கையை குறிப்பிட்டு இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் ஆழ்மனதில் இயற்கை மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பீச் சைட் அப்பார்டெமெண்ட், பி எம் டபியூ கார், பேங்க் பேலன்ஸ்,..இத்தியாதி மிகுந்திருந்தால் எச்சரிக்கை ! நீங்கள் இயற்கையை விட்டு விலகிகொண்டே இருக்கிறீர்கள். நிச்சயம் விரைவில் இயந்திரமாக மாறி நிற்பீர்கள் அல்லது இப்பொழுதும் இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

இந்த நிலையை மாற்றவேண்டும் ? ஏன் மாற்றவேண்டும் ?

பொருள் தேவை என்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றுதானே ? அதனை விரும்புவதின் மூலம் எப்படி நான் இயந்திரமாகிறேன் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. உண்மை இதுதான் பொருள் தேவை அவசியம் தான் . ஆனால் பொருள் தேவை மட்டும் வாழ்க்கையல்ல. பொருளை மட்டும்கொண்டு வாழ்க்கையில் முழுமையை அடைய முடியாது  என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் உங்களிடம் தக்கவைத்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள் தான் பிரபஞ்சத்துடன் உங்களுக்கான இணைப்பையும் நிராகரிப்பையும் ஏற்படுத்துகிறது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு இயற்கையோடு இணைந்து சிந்திக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரபஞ்ச தன்மை நம்முள் நிற்கும்

நமது வெற்றிக்கு நமது அக இயக்கம் மட்டுமல்ல புறவுலக சூழல்களும் காரணமாகின்றன என்பது நாம் ஆண்டாண்டு காலமாக படித்துகொண்டு வரும் ஒன்றுதான். நோபல் பரிசு பெற்ற டாக்டர் எரிக் கேண்டில் இதனை அறிவியல் பூர்வமாக நிருபித்து இருக்கிறார். யார் இந்த எரிக் கேண்டில் வியன்னாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். உளவியல் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொண்டவர். நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், நமது செயல்கள் வெற்றிகரமாக அமைவதற்கு நமக்குள் எழும் எண்ணங்கள்  மட்டும் காரணமல்ல, நம்மை சுற்றி நாம் அமைத்துகொள்ளும் விஷயங்களும் காரணம் என்கிறார் டாக்டர் எரிக். மோசமான நிலையில் இருக்கும் ஒருவன் தன்னை சுற்றிய தன்மையை மாற்றுவதின் மூலம் சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துகொள்ளமுடியும் என்பது அவரின் ஆய்வு முடிவு. டாக்டர் எரிக் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகுள் அடித்தால் வந்து தகவல்களை கொட்டுகிறது.

உங்களுக்கு வேண்டியதை அடைய நீங்கள் உங்களுக்குள் வைத்திருக்கும் வேண்டாததை அடையாளம் காணவேண்டும்.

நீங்கள் என்ன பெறவேண்டும் என்பதை பிரபஞ்சம் தான் முடிவு செய்கிறது.
ஆனால் எதை விடவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஒன்று வேண்டும் எனில் அதை தக்கவைத்துகொள்ள உங்களுக்குள் ஒரு இடம் வேண்டும் . அந்த இடத்தை உங்களுக்குள் ஏற்ப்டுத்திகொள்ள எதேனும் ஒரு இடத்தை காலியாக்க வேண்டும் அல்ல. அதற்கு என்ன செய்யவேண்டும். நம்மிடம் இருக்கும் தேவையானவற்றை நம்மிடம் இருந்து நீக்கவேண்டும்.

ஒரு ஷெல்பை உதாராணமாக எடுத்துகொள்வோம். அந்த ஷெல்ப் முழுவதும் புத்தகங்களால் அடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு புதிய புத்தகத்தை அதில் அடுக்கவேண்டும் என்றால் ஏற்கனவே இருக்கும் புத்தகங்களை எடுக்கவேண்டும்.

அது போல நாம் புதியன ஒன்றை நம்முள் அனுமதிக்கவேண்டும் என்றால் பழையன ஒன்றினை நம்மிடம் இருந்து நீக்கவேண்டும்.

நீங்கள் படித்திருக்கலாம். நான் தன்னம்பிக்கை நூல்களில் படித்திருக்கிறேன். மனம் என்பது அளப்பரியது. எத்தனை தகவல்களைகொடுத்ததாலும் அது கிரகித்துகொள்ளும். அப்படியிருக்க ஏன் நான் ஒன்றை நீக்கி இன்னொன்றை வாங்கவேண்டும்.

நல்ல கேள்வி. எனக்கும் இந்த கேள்வி எழுந்ததுண்டு. 

ஒரு பத்து மில்லி தண்ணீரில் நான்கு சொட்டு உப்பு நீரை போட்டால் உப்பு கரிக்கும். அதன் பின்னர் அந்த உப்பத்தன்மைய மாற்ற நாம் தேன் துளிகளை விடுகிறோம் என்று வைத்துகொள்வோம். அந்த உப்புத்தன்மையின் அடர்த்தி நான்கு சொட்டுக்கள் என்றால் அதே நான்கு சொட்டு தேன் துளிகள் மாறாது. ஆறாவது அல்லது எட்டாவது தேன் துளியில் தான் உப்பத்தன்மை மாறும்.

அதே இப்படி கற்பனை செய்துபாருங்கள். அந்த உப்புத்தன்மையை மாற்றிவிட்டு. நீரின் தூய்மையில் நான்கு சொட்டு தேனை போட்டால் தேனின் தன்மை வந்துவிடும். அது போல்தான் நம்மில் ஒரு நல்ல  பதிவை ஏற்படுத்த நம்மிடம் இருக்கும் தேவையற்ற பதிவுகளை நீக்குதல் அவசியம்.


நாம் நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க பிரபஞ்சத்துடன் இணைப்பு வேண்டும் என்பதை நாம் நம்புகிறோம்.

நம்மையும் பிரபஞ்சத்தையும் எது பிரிக்கிறது.

நமது பதிவுகள். நமது பதிவுகள் எனப்படுவது என்ன ? ஆண்டாண்டுகாலமாக மறைபொருளாகவும் வெளிப்படையாகவும் எண்ணற்ற குருமார்கள் இது குறித்து பேசிகொண்டே இருக்கிறார்கள்.  இந்த நூற்றாண்டில் வந்த குருமார்களில் மிகவும் எளிமையான முறையில் பாமரனும் புரிந்துகொள்ளும் விதமாக வேதாத்திரி மகரிஷி எனும் யோகா ஆசான் குறிப்பிட்டுள்ள ஒரு உதாரணத்தை பாருங்கள்.

GOD + Impurities = Man
MAN - Impurities = God

அகம் பிரமாஸ்மி என்கிறது தத்துவம் . நாமே பரிபூரணம். நாம் இறைவனின் வடிவம். நாமே பிரபஞ்சம். நம்மை எது பிரபஞ்ச நிலையில் இருந்து பிரித்தாளுகிறது என்றால் நமது பதிவுகள்

இதையும் மிக எளிமையாக சொல்லியிருக்கிறார்கள் . எண்ணத்தில் ஏற்படும் பதிவுகள் நம்மை வழிநடத்துகின்றன. சரி ! நம்மிடம் நல்ல பதிவுகள் இல்லையே என்று வருத்தம்கொள்ள வேண்டாம். ஏன் எனில் நம்மால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியுமே ? ஏன் எனில் நாம் தான் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். நாம் தான் பிரபஞ்சம்.

இப்பொழுது மீண்டும் நின்று நிதானித்து உங்களுக்கு பிடித்தமான அந்த 100 விஷயங்களை பட்டியலிடுங்கள். இன்று உங்களுக்கு இருக்கும் நிலைமையை கணக்கில் கொண்டு இவையெல்லாம் இப்பொழுது சாத்தியம், இவை ஒருவருடத்தில் சாத்தியம், இவை ஐந்து வருடத்தில் சாத்தியம், இவை இத்தனை நாட்களாகும், இவை முடியவே முடியாது என்பனவற்றை பட்டியலிடுங்கள். 

என்ன முடியவே முடியாதா ? பிரபஞ்சத்தால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு முடியவே முடியாது என்று சொன்னால் எப்படி என்று நீங்கள் கேட்கலாம். உண்மை பிரபஞ்சத்தால் முடியாதது எதுவுமே இல்லை. நாம் முன்பே சொன்னோம் இல்லையா எதையும் பெற தகுந்த பாத்திரமாக நாம் இருக்கிறோமா என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும்.

சிறந்த பயிற்சிகள் மூலமாக இவற்றை சாதிக்கலாம். பிரபஞ்சம் அதனையும் நமக்கு சொல்லிகொண்டேதான் இருக்கிறது. வரும் வாரங்களில் அவற்றை பார்ப்போம்..

( பிரபஞ்சம் பேசும் )




No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...